அத்தியாயம் 11
வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தது வெண்ணிலவு. வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த கல்யாணி, தன் மடியில் படுத்திருந்த சந்தியாவின் தலையை கோதி கொண்டிருந்தாள். சந்தியாவின் கண்களில் நீர் நின்றபாடில்லை. கல்யாணி எவ்வளவோ சமாதானப்படுத்தியும் விசும்பலும் கண்ணீரும் சந்தியாவை விட்டு விலகியபாடில்லை.
வீசும் வாடைக்காற்றினால் தன் பலமிழந்து உடைந்து விழுந்த பூசணி மரத்தின் பூக்களும், சந்தியாவை தீண்டி சமாதானம் செய்ய முயன்று தோற்று, மண்ணில் வீழ்ந்து கொண்டிருந்தது.
வீட்டு வாசலுக்கு வந்தான் ரங்கா. அவனை பார்த்தாள் கல்யாணி. ஏதோ ஜாடையில் கேட்டான். அவளும் ஜாடையில் பதில் சொன்னாள்.
ஏண்டி, இப்படியே அழுதுட்டுருந்தா, நடந்தது இல்லன்னு ஆகிருமாக்கு", கல்யாணி கேட்டாள்.
கண்ணீர் உதிர்த்து எழுந்தாள் சந்தியா.
பின்ன என்னக்கா!! நாந்தா சொல்லிட்டுருக்றேனல்ல!! எனக்கு கல்யாணம் வேணாம்னு. அங்க ஆஃபீஸ்ல கண்ட நாயிங்ககிட்டலாம் ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு, எம்புட்டோ அக்கினி பிரவேசத்தை தாண்டி வீட்டுக்கு வாரேன். வூட்டுக்குள்ள காலெடுத்து வைக்க பொறுக்கல, தரவன் வந்துட்டு போனான். ஊத்துக்குளியில மாப்பிளைங்குது அம்மெ. நல்ல படிச்ச பையன், பஞ்சு மில்லுல உத்தியோகங்குறாக அப்பா. எனக்கு எப்டி இருக்கும்னு யோசிச்சு பாரு. அதே கோவத்துல பட படன்னு பேசிப்புட்டேன். அதுக்கு போயி நாங்க சாவுறோம் நீ மட்டும் வாழுன்னு சொல்லுறாக. நீயே சொல்லு, அவுக ரெண்டு பேரும் சாகறதுக்கா நா இம்புட்டு கஷ்டப்படுறேன்?! முந்தா நேத்து வட்டிக்கடை கோயிந்த சாமி பொஞ்சாதி, சந்தையில அம்மாவை பாத்து இன்னும் இந்த மாசத்து வட்டி வர்லியேன்னு கேட்டுருக்கா. நா அவளுக்கு வட்டி குடுக்கறதுக்கு வழிய பாக்கவா?! இவுக பண்ற ரவுச பாக்கவா? ஒவ்வொரு நாளையும் தள்ளுறதுக்குள்ளார உசுரு போயி உசுரு வருது", பொறிந்து தள்ளினாள் சந்தியா.
என்னடி இது? பெரிய அநியாயமா இருக்குது?! பெத்த அப்பனாத்தான்னா புள்ளைக்கு வரன் பாக்க மாட்டாங்களாக்கும்?", கல்யாணி கேட்க,
அதான!!", தாளம் போட்டான் ரங்கா.
ரங்காவை முறைத்தாள் சந்தியா.
அங்ஙன என்னத்துக்கு மொறைக்கிறவ!! என்னய பாருடி", சொல்லி சந்தியாவின் முகத்தை திருப்பினாள் கல்யாணி.
நீ என்னத்தே குட்டிக்கரணம் போட்டாலும் ஒங்கப்பனும் ஆத்தாளும் வர்ற சித்திரையில் ஒனக்கு உறுதியா கண்ணாளம் பண்ணி போடுறதுன்னு முடிவுல இருக்காக. நீ தப்பிக்கவே முடியாது. மருவாதியா நாஞ்சொல்றத கேளு. செழியங்கூட ஓடி போயிரு", என்ற கல்யாணியின் கையை தட்டி விட்டாள் சந்தியா.
அக்காவா நீயி?",
அதான!!", ரங்கன் சொன்னான்.
ம் ", அவனை முறைத்தாள் கல்யாணி.
ஓ, தப்பான எடத்துல பேசிட்டேனோ", சொல்லி திரும்பிக் கொண்டான் ரங்கன்.
செழியனை தவிர நீ யாரய கண்ணாளங்கட்டிகிட்டாலும், வாழ்க்கை நிம்மதியா இருக்காதுடி. அவனால மட்டுந்தே ஒன்னய நல்லா பாத்துக்க முடியு",
ஒருத்தனும் என்னிய பாத்துக்க தேவையில்ல. என்னிய பாத்துக்க எனக்கு தெரியும். நா எந்த ஆம்பளையும் நம்ப தயாராயில்ல", சந்தியாவின் குரலில் கோபமும் வலியும் இருந்தது.
அடி செருப்பால", சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள் காவேரி, சந்தியாவின் தாய்.
சந்தியா திரும்பி பார்த்தாள்.
வேகமாக வந்த காவேரி மூலையில் கிடந்த துடைப்பத்தை கையில் எடுத்து தட்டினாள்.
மணி என்னாகுதுடி?! ஒனக்கு வூடுன்னு ஒண்ணு இருக்குன்னு நெனைவுருக்கா?! இல்லியா?!", சந்தியாவிடம் கேட்டாள் காவேரி.
போ, நா வூட்டுக்கு வர மாட்டேன். நீயும் ஒம்புருசனும் ஏர் புடிச்சு ஒழவோட்டி, ஒம்பையன் வாங்குன கடன அடைச்சிட்டு டூயட் பாடுங்க", சந்தியா சொல்ல, வாய் மூடி சிரித்தான் ரங்கன். வந்த சிரிப்பை அடக்கி கொண்டாள் கல்யாணி.
ஏல, என் தவிப்பு ஒனக்கு சிரிப்பா இருக்கால?", கேட்டு ரங்காவின் முட்டிக்கு கீழ் துடைப்பத்தால் ஒரு அடி போட்டாள் காவேரி.
இந்தேரு சித்தி, ஒமொவள சாத்துறதோட நிறுத்திக்க. எம்புருசன் மேல கை வைக்குற வேலை வச்சிக்கிறாத, ஆமா", கல்யாணி சொன்னாள்.
வாடி, இப்போ மட்டும் வரிஞ்சி கட்டிட்டு வா. அவ இங்க வந்த ஒடனே புத்திமதி சொல்லி அனுப்புறதுக்கென்ன? அவளை மடியில போட்டு ஆராட்டு பாடுனியாக்கு?!", சீறினாள் காவேரி.
இந்தா, எம்புட்டோ பேசியாச்சு. ஒமொவ யார் பேச்ச கேக்குறா?", கல்யாணி சொன்னாள்.
காவேரி சந்தியாவை பார்த்தாள்.
இந்தா வூட்டுக்கு வர்றியா இல்லியாடி?", மகளிடம் காவேரி கேட்டாள்.
கல்யாணப் பேச்சு எடுக்க மாட்டேன்னு சொல்லு, வர்றேன்", சந்தியா சொல்ல,
பேசல, வந்து தொல", என்றாள் காவேரி.
பேச்சு மாறப்புடாது",
ஏ வந்து தொலடி, ஒங்கப்பன் நீ வந்தாத்தே சாப்பிடுவேன்னு உண்ணா விரதமிருக்குறான்",
என்ன சித்தி பொசுக்குன்னு சித்தப்பனை மருவாதி இல்லாம பேசி போட்ட?!",
போதும் போதும், பெத்த புள்ளைய கரையேத்த வக்கில்லாத பையலுக்கு இம்புட்டு மருவாதி போதும்", சொல்லும் போதே காவேரியின் கண்களின் இமைக்கரை உடைந்து வெள்ளம் அலை மோதியது.
இந்தா இப்போ என்னத்துக்கு சீக்கா வடிக்கிற?! கல்யாணம் காட்சியெல்லாம் நடக்குறப்போ நடக்கும். அழுவுறத நிறுத்து", சமாதானத்துக்காக மட்டுமே சொல்லி தாயின் கண்ணீரை துடைத்தாள் சந்தியா.
கல்யாணிக்கோ சந்தியாவின் பேச்சு சந்தோஷத்தை கொடுத்தது. சந்தியாவை கவிழ்க்கும் ஆயுதம் ஒன்று அவளுக்கு புலப்பட்டது.
சரி வா, அப்பன் காத்து கெடக்கும்", சொல்லி தாயின் கையை பிடித்த சந்தியா,
நா வர்றேங்கா, வர்றேன் மாமா", சொல்லி முன்னால் செல்ல, காவேரி பின்னால் சென்றாள்.
கல்யாணியும் ரங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.
பாவமுடி இந்த சந்தியா புள்ள", ரங்கா சொன்னான்.
ம்ம் நாம என்னத்த செய்ய?!", சொல்லி பெருமூச்சு விட்டாள்.
கபின் தூங்கிட்டானா மாமா?", கேட்டாள்.
ஆமாண்டி, வா வந்து சோத்த போடு", சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றான் ரங்கா. பின்னால் சென்றாள் கல்யாணி.
கணினி முன் சிரத்தையோடு வேலை செய்து கொண்டிருந்த சுவாதிக்கு தேநீர் கொண்டு வந்து தந்தாள் கௌசல்யா.
வாங்கி குடித்தாள்.
சுவாதி",
ம்ம்?",
இந்த வேலைய விட்டுர்றி",
ம்மா, வெளையாடுறியா?! ஒனக்கும் அப்பாக்கும் என்னம்மா ஆச்சு?!",
அப்பாவுக்கு சந்தேகம் வந்துருச்சு சுவாதி. ஒனக்கும் செழியனுக்கும் எதாது இருக்குதுன்னு என்னையே கேட்டாக", கௌசல்யா சொல்ல முகம் மலர்ந்தாள் சுவாதி.
சூப்பர் மா, நீ ஆமான்னு சொல்ல வேண்டியதான?",
நீ நினைக்கிறது நடக்காது சுவாதி. அப்பா இதுக்கு சம்மதிக்க மாட்டாக",
சுவாதி கௌசல்யாவின் முகத்தை அர்த்தமாக பார்த்தாள்.
எனக்கு புரிலம்மா, காலையில வேலைக்கு போகாதன்னு சொன்ன அப்பா, எடிட்டர்கிட்ட என் புரொமோஷன்க்காக பேசிருக்காக. ஒங்களுக்கு எது பிரச்சினை? நா வேலைக்கு போறதா?! இல்ல, இந்த நியூஸ் கலெக்ட் பண்ற வேலைக்கு போறதா?", சுவாதி கேட்டாள்.
கௌசல்யா பேசவில்லை.
ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சு நியூஸ் கலெக்ட் பண்ற வேலைன்னு கேவலமா நெனைக்கிறீகளா?", சுவாதி கடு கடுப்பான குரலில் கேட்டாள்.
கேவலம் நீ ஊர் ஊரா அலைஞ்சு திரியிறதால இல்லடி. செழியன்கூட திரியிறதால", என்றாள் கௌசல்யா.
அதுவரை இயல்பாக கணினி திரை மீது கவனம் கலையாமல் பேசிக் கொண்டிருந்த சுவாதி அதிர்ந்து நிமிர்ந்தாள்.
ஒங்கப்பன் நீ நெனைக்கிற மாதிரியில்லடி. அநாவசியமா செழியன் உசுற காவு குடுத்துறாத", கனமான குரலில் சொல்லி சென்றாள் கௌசல்யா. கண்கள் சுருக்கிய சுவாதி தன் வேலையை தொடர மறந்து சிந்தனையில் ஆழ்ந்தாள்.
படுக்கை அறைக்குள் நுழைந்த கொடி சோஃபாவில் சிதறி கிடந்த துணிகளில் ஒன்றை கையில் எடுத்தாள். அவள் கையில் எடுத்த துணியை பறித்தான் துரை. திடுக்கிட்டு அவனது முகம் பார்த்து பின் தலை குனிந்தாள்.
மொதல்ல இத குடி", சொல்லி நீராவி பறக்கும் காஃபி டம்ளரை கொடுத்தான். அமைதியாக நின்றாள்.
வாங்கிக்க", சொல்லி நீட்டினான். வாங்கி கொண்டாள்.
இந்த வூட்ல இதெல்லாம் செய்ய ஆள் இருக்காக. இது உன் வேலையில்ல",
ம்ம்", தலையசைத்தாள். துரை கட்டிலில் அமர்ந்தான்.
ராத்திரில இருட்டுல நின்னுட்டுருக்குற!! பயமால்ல",
ம்ம்ஹும்", மீண்டும் தலையாட்டினாள்.
சரி, உன் ஃபோன் நம்பர் சொல்லு",
தன் வீட்டுக்கு வந்த நொடி முதல், இப்போது வரை, கொடி அலைபேசி உபயோகிக்காததை துல்லியமாக கவனித்த துரை கேட்டான்.
கொடி மிரண்டு விழித்தாள்.
என்ன அப்படி பாக்குற?! ஒரே வீட்ல இருக்கோம். நீ எம்பொஞ்சாதி. உன் ஃபோன் நம்பர் எனக்கு தெரிய வேணாமா?! சொல்லு, உன் ஃபோன் நம்பர் என்ன?!", அவளை ஆழம் பார்க்கவே கேட்டான்.
தினேஷின் மீதான கொடியழகியின் காதலை அறிந்து, ராஜவேலு கொடியின் அலைபேசியை நொறுக்கிய காட்சி கண் முன் வந்து நிலைக்குத்தி நின்றது.
மானங்கெட்டவள!! நீ எனக்குத்தே பொறந்தியா?!", சத்தமாக கேட்டு கொடியை கீழே தள்ளினார் ராஜவேலு.
கேவலம் நம்மூட்டு பொழக்கடையில நின்னு பொறுக்கி திங்குற பையல எனக்கு சம்மந்தியாக்கலாம்னு நெனைச்சியாக்கு!! நீ உசுரோட இருந்த நாளு போதும்டி. எங்கௌரவம் உசுரோட இருக்கோணும்ன்னா நீ சாவணும்", சொன்ன ராஜவேலு அருகில் இருந்த பித்தளை பூஜாடியை தூக்கி கொடியை அடிக்க வந்தார்.
அய்யோ, மாமோ, சொன்னா கேளுங்க மாமோ", சொல்லி ராஜவேலுவின் கையை பிடித்தாள் ஆண்டாள்.
ஏ, எந்த ஒலகத்துலருக்குற?", துரையின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிகழுலகம் திரும்பினாள் கொடி.
ஃபோன் நம்பர் தான கேட்டேன்?! என்னத்துக்கு இப்புடி அறுவாள கண்ட கெடா மாதிரி முழிக்கிறவ?", துரையின் கேள்வியில் நினைவு மீண்டவள், தேர்வு அறையில் பதில் தெரியாமல் தடுமாறும் பிள்ளை போல் நின்றாள்.
அடியேய் பொஞ்சாதி, உன் ஃபோன் நம்பரை சொல்லுடி", அவன் கொஞ்சல் மொழியில் காதல் கடத்த முயன்றான்.
என்கிட்ட ஃபோன் இல்ல",
இந்த காலத்துல, ஃபோன் இல்லாத காலேஜ் ஸ்டூடெண்டா?", சொல்லி அதிசயமாக பார்த்து சிரித்தான்.
என் ஃபோன் ஒடைஞ்சு போச்சு", ஏனோ அவனிடம் பொய் சொல்ல மனமின்றி சொன்னாள்.
எப்போ?! எப்படி?!",
கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடி, கை தவறி கீழே விழுந்து ஒடைஞ்சுருச்சு", வேறு வழியின்றி ஒரு பொய் சொன்னாள்.
ம்ம்,....... ", ஏதோ சிந்தனை செய்தவன்,
சரி, ஒங்க வீட்டுக்கு போக ஒனக்கு ஏன் விருப்பமில்ல?!", நேரடியாகவே கேட்டு விட்டான்.
எச்சில் விழுங்கினாள்.
சொல்லு, எல்லா பொண்ணுங்களும் அம்மா வீட்டுக்கு போகணும்னா ரொம்ப சந்தோசப்படுவாக. நீ,....", சொல்லி கண்கள் சுருக்கினான்.
அம்மாத்தே ஒரு வீட்டுக்கு உசுரு. அம்மா இல்லாத வீடு பொணந்தா", என்றவளின் பார்வை தரையில் நிலைக்குத்தி நின்றது.
சற்றே சிந்தித்தவன்,
ஒங்க சித்தி ஆண்டாள் எப்படி?",
புரியல, எப்படின்னா?!", கேட்டு அவனின் முகம் பார்த்தாள்.
இந்த கல்யாணம் முடிவான தேதிலருந்தே எங்கியோ ஏதோ தப்பு நடக்குற மாதிரி ஒரு உள்ளுணர்வு", சொல்லி நெஞ்சை தடவி, தரை பார்த்து சிந்தித்து பின் நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான்.
அவள் தனக்குள் சுதாரிக்க தொடங்கினாள்.
எனக்கென்னவோ, ஆரம்பத்துலருந்தே உங்க சித்தி ஆண்டாள் நடவடிக்கை எதுவும் திருப்தியா இல்ல. அவுககிட்ட ஏதோ பிரச்சினை இருக்குற மாதிரியே தோணிட்டுருக்குது. அவுக சரியில்ல", அவன் சொல்ல, அவள் அவனை ஆழமாக பார்த்தாள்.
நிமிர்ந்து பார்த்தான்.
ஒங்கம்மா சாகும் போது ஒனக்கு எத்தனை வயசு?",
எனக்கு தெரீல. நாலு வயசு இருக்கும்னு அப்பா சொல்லுவாக",
சரி எம்புட்டு நேரம் நின்னுட்டேருப்ப? உட்கார்ந்து காஃபி குடிச்சிட்டு, பொறவு கதை சொல்லு", முகத்தில் புன்முறுவல் சதிராட சொன்னான் துரை.
கதையா?",
ம்ம், உன் கதை, உன் லைஃப், நாந்தெரிஞ்சிக்க வேணாமா?",
உள்ளம் பயம் நிரம்பி சதிராடியது கொடிக்கு.
தினேஷ் பற்றி தெரிந்து கேட்கிறானா?" பயத்தில் உறைந்து கொண்டிருந்தது உள்ளம்.
சின்ன வயசுல உன் லைஃப் எப்படி இருந்துச்சு?! நீ படிப்புல நல்ல புள்ளையா? மக்கு புள்ளையா?! உனக்கு என்னென்ன புடிக்கும், புடிக்காது?! இதெல்லாந்தா கேக்குறேன். இந்த கேள்விக்கெல்லாம் கூட பதில் தெரியாதா?", அவன் பின்னால் சாய்ந்து, கட்டிலில் இரு கைகள் ஊன்றி, சிரிப்போடு கேட்டு புருவம் உயர்த்தினான்.
அவள் நிம்மதி பெருமூச்சு விட்டு கதையை துவக்கும் புள்ளியை நினைவு கூர்ந்தாள்.
அந்த பரந்து விரிந்த புளிய மரத்துக்கு கீழே, விரிக்கப்பட்ட கோணியில் தமிழ்நாட்டு டாஸ்மாக் பாட்டில்களும், மனித உயிர் வளர்க்க, உயிர்த்தியாகம் செய்த கோழிகள் இரண்டும் இருந்தது.
கண்ணாடி டம்ளரில் மதுபானத்தை ஊற்றினான், தனசேகர் கன்ஸ்டிரக்ஷன் கம்பனி வாசலில் காவல் காக்கும் வாட்ச் மேன்.
மனுசன் சார் நீயி?! எங்களையும் மனுசனா மதிச்சு எங்க கூட சரிசமமா உட்காந்து தண்ணியடிக்கிற பாரு. இதுத்தே சமதர்மொ", சொல்லிக் கொண்டே மது டம்ளரை நீட்டினான்.
அந்த டம்ளரை கையில் வாங்கிய கோபால், ஒரே மடக்கில் மொத்த மதுவையும் குடித்து முடித்து டம்ளரை கீழே வைத்தான்.
ஏலேய், சாருக்கு இன்னொரு டம்ளர் ஊத்தி குடுலே", என்றான் ஏற்கனவே போதையில் மூழ்கி விட்ட இன்னொருவன்.
ஊற்றிக் கொடுத்தான். குடித்தான்.
ஊற்றிக் கொடுத்தான். குடித்தான்.
ஊற்றிக் கொடுத்தான். காலியான டம்ளரை கோணி மீது வைத்தான்.
சக்கையா புழிஞ்சு தெருவுல போட்டா கூட கேக்க நாதியில்லாத பொட்டக்கழுத. என்னையே புடிச்சு கீழ தள்ளிஅசிங்க படுத்திட்டா. அவள வுடமாட்டேமுல", வெறியோடு சொன்ன கோபால் டாஸ்மாக் பாட்டிலை கையில் எடுத்து வாயில் கவிழ்த்தான்.
கீழே வைத்தான். உதடுகளையும் நாக்கையும் அசைத்து அவன் பேசிய வார்த்தைகளை கேட்க முடியாத குடிகாரர்கள் இருவரும் தங்கள் காதுகளை மூடிக் கொண்டனர்.
பணத்துக்காக தனசேகர் கூடால ஆட்டம் போடுற முண்ட, என்கிட்ட பத்தினி வேசம் போடுறா. அவளை வுட மாட்டேமுல",
யாருங்க சார்?", ஒருவன் கேட்டான்.
வேற யாரு?! அந்த அவுசாரி சிறுக்கித்தே, சந்தியா", கோபால் சொல்ல மற்ற இருவரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டனர்.
அந்த புள்ளையா?! அது அப்படிப்பட்ட புள்ளை இல்ல சார். அது பாவம், வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது", நாக்குழறினாலும் வாக்கியத்தை சரியாக சொன்னான் ஒருவன்.
ஒனக்கு தெரியாது வெங்கையா. சொசைட்டி பேங்க்ல அவன் அப்பன் வாங்குன பணத்துக்கே, அவ வூட்டையும், தோப்பையும் எழுதிற வேண்டியதா. அங்கங்கே ஊர சுத்தி கெடக்குற வட்டிக் கடன அடைக்க வழியில்லையல்ல. அதேன் அந்த்த்த வேலை செய்றா", கோபால் அழுத்தி அசிங்கத்தின் பொருள் பட சொன்னான். இருவரும் விழித்தனர்.
அவளையும் அந்த தனசேகரையும் ஆஃபீஸ் மத்தியில நிறுத்தி கேவலப்படுத்தல,.....", என்ற கோபால் வெங்கையாவின் நண்பன் கிருஷ்ணனின் கையில் இருந்த மதுவை பறித்து குடித்தான்.
கேவலப்படுத்துவேண்டி", சொல்லி டம்ளரை கீழே வைத்தான்.
வீட்டின் மொட்டை மாடியில் சந்தியாவை பார்த்துக் கொண்டிருந்த அதே வெண்ணிலவின் ஒளியில், தன் அலைபேசியை இயக்கி, தன் வாட்ஸ் ஆப் செயலியை திறந்தான் செழியன்.
அதில் சந்தியாவின் வாட்ஸ் ஆப் கணக்கை திறந்து,
என்னடி பண்ணிட்டுருக்க? சாப்டியா?", என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து அனுப்பினான்.
கால் முளைக்கும் வதந்திக்கு
காதலின் வேரை தீண்டும்
வல்லமை உண்டோ?!....
தொடரும்.......
விபச்சாரம் என்னும் வார்த்தையின் அனுபவ தத்துவத்தை கூர்ந்து கவனித்து பார்த்தால் விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதை காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை தானே தவிர வேறொன்றுமில்லை. ஏனென்றால், விபச்சார தோஷம் என்பதும், விபச்சாரம் செய்வதால் ஏற்படும் ஒழுக்க குறைவு என்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்கு தான் உண்டே தவிர, ஆண்களுக்கு கிடையவே கிடையாது.
ஆண்கள் விபச்சாரர்கள் என்று வைக்கின்ற வழக்கமும் கிடையாது.
- தந்தை பெரியார்....
'அவிசாரி' என்பது 'விபச்சாரி' என்ற சொல்லின் மருவல்....
சக்தி மீனா.....
Last edited: