• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அக்னி நட்சத்திரம் உருவான கதை

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
*அக்னி நட்சத்திரம் உருவான கதை!*

IMG_20220318_000335_208.jpg



இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிகிறது.

அக்னி தேவன் தர்மத்தின் வடிவினன் என்றும் சூரியனுடைய கதிர்களால் பிறப்பெருத்தவர் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.


ஒவ்வொரு வருடமும் தமிழ்ப்புத்தாண்டுக்குப் பிறகு 21 நாட்கள் இந்த அக்னி நட்சத்திரக் காலம் வந்து மக்களை வாட்டி வதைப்பதற்குக் காரணம் என்னப என்பதை ஒரு கதை மூலமாக அறியலாம்.

ஒரு சமயம் தீராத வயிற்றுப் பசியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் அக்னி பகவான். இவரது பசிக்குக் காரணம் தெரியாமல் தேவர்கள் திண்டாடினார்கள்.

இறுதியில் சுவேதகி என்ற அரசன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் நடத்திய யாகம்தான் காரணம் என்றும் அவர் யாகத்தீயில் இட்ட நெய்தான் அக்னிதேவனின் வயிற்றில் வலியை உண்டாக்கி விட்டது என்று அறிந்தனர்.

இதைப் போக்கிட வழி என்னவென்று பிரம்மாவிடம் கேட்டபோது இதற்கு உரிய மருந்து காண்டவ வனத்தில் உள்ள மூலிகைகள்தான் என்றார்.

தன்னுடைய கோரமான பசியும், வயிற்று வலியும் நீங்க வேண்டும் என்றால் ஒரு அடர்ந்த காட்டை விழுங்கியே ஆக வேண்டும் என்று உடனே காட்டைத் தேடி ஓடினார் அக்னி பகவான்.

எல்லா இடங்களிலும் தேடியவர் யமுனை நதி கரை ஓரமாக இருந்த மலர்கள் பூத்துக்குலுங்கிய காண்டவ வனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து நெருங்கினார்.

அதே சமயம், கானகத்தை விழுங்கிட நெருங்கிய அக்னிக்கு வந்தது ஒரு சோதனை. இக்காட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த தேவர் தலைவன் இந்திரன் கானகத்தைச் சுற்றிலும் அடர்மழையை பெய்யச் செய்தான்.

அக்னி பல வடிவங்கள் எடுத்து கானகத்தை விழுங்க முயற்சி செய்த போது தோற்றுப் போனார்.

கடைசியாக ஒரு முதியவர் வேடம் தரித்து யமுனை நதிக்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அங்கே கிருஷ்ணரும் அர்ஜூனனும் எதிரில் வந்தார்கள்.

முதியவர் வடிவில் இருந்த அக்னி பகவான்தான் மிகவும் பசியுடன் இருப்பதாகக் கூறி உணவு ஏதேனும் தரும்படி கேட்டார்.

யாசகம் கேட்பவருக்கு `இல்லை’ என்று சொல்லத் தெரியாத கிருஷ்ணர் வந்தது யாரென்று புரிந்து கொண்டு அக்னி தேவனே! உமக்கு பசி தீரும்படி உணவை இங்கேயே தருகிறேன் என்று கூற தனது சுய உருவை கொண்டு வந்தார் அக்னி.

காண்டவ வனமே! தான் சாப்பிட்டுப் பசியாற வேண்டிய பொருள் என்றும் இந்திரன் எதிர்த்து மழை பொழிந்து தான் பசி தீர்த்துக் கொள்ள வேண்டிய காலத்தைக் கெடுத்து விட்டார் என்றும் அக்னி தேவன் சொன்னார்.

அதற்குப் பரந்தாமன் எப்படிப்பட்ட பெரும் மழை வந்தாலும் உனக்கு உணவு உண்ண எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறேன்.

அதுவும் 21 தினங்களுக்குள் வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு விட வேண்டும் என்றார். உடனே, அர்த்தமுள்ள பார்வை ஒன்றை அர்ஜுனன் மீது செலுத்தினார்.

தன் வில்லை வளைத்த அர்ஜுனன் அம்புகள் ஆயிரக்கணக்கில் வீசி ஒரு கூடாரம் போல் அமைத்து அக்னியைக் காத்து அமரச் செய்தான்.

கிருஷ்ணர் சொல்லி விட்டதால் தனது ஏழு நாக்குகளையும் நீட்டியபடி காண்டவ வனத்திற்குள் புகுந்து கிடைத்த பொருட்கள் எல்லாவற்றையும் விழுங்கத் தொடங்கினார். அக்னி பகவான்.

இதைக் கண்ட இந்திரன் பெரும் மழையைப் பெய்ய வைத்தான்.

அங்கே ஒரு துளி மழைகூட அக்னிமேல் படாமல் அம்புக் கூரை காத்து வந்தது. அக்னி பகவான் 21 தினங்களில் முதல் ஏழு நாட்கள் பூமி கீழ்ப்பகுதியை உண்டார்.

அச்சமயம் வெப்பம் மெதுவாகப் பரவத் தொடங்கியது. அடுத்த ஏழு நாட்களில் வளர்ந்திருந்த அடர்காட்டை உண்டார்.

அந்த நேரத்தில் வெப்பம் மிகக் கடுமையாகப் பரவிச் சுட ஆரம்பித்தது. இறுதியாக ஏழு நாட்கள் சில பாறைகளை விழுங்கும் போது மெல்ல மெல்ல வெப்பத்தின் தாக்கம் குறைந்து முழுமையாகத் தணிந்து இளவெயில் மட்டும் வரத் தொடங்கியது.

இவ்வாறு அக்னி பகவான் காண்டவ வனத்தை முழுவதுமாக அழித்து விழுங்கிய அந்த 21 தினங்கள்தான் அக்னி நட்சத்திர நாட்களாகச் சொல்லப்படுகின்றன.

கத்திரி வெயில் என்று சொல்லப்படுகிற இந்த 21 நாட்களிலும் வெயில் மூன்று வகையாகப் பரவும். முதல் ஏழு தினங்களில் மெதுவாக அதன் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த ஏழு தினங்களில் அதிக அளவில் தெரியும்.

கடைசி ஏழு தினங்களில் படிப்படியாக குறையும். இதை நாம் அனுபவித்து உணரலாம். கோடை காலத்தின் உச்சகட்டமான நேரங்கள்தான் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில்.

அக்னி நட்சத்திர காலத்தில் அதிகாலை துயிலெழுந்து நீராடியபின் சூரிய பூஜையும், சூரிய நமஸ்காரமும் செய்வது சிறந்தது. முருகனையும், மீனாட்சியையும் வழிபடுவதுடன், பரணிக்குரிய துர்க்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு உரிய அக்னியையும் வழிபாடு செய்வதும் நல்லது.

சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும். கோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.

சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலசத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.

இந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது,விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு பணிகளைச் செய்யக்கூடாது. அதேபோல் நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும் என்பது இந்துக்களின் மரபு.

அக்னி நட்சத்திரத்தில் சூரியனை வணங்க ஆற்றல் பெருகும். வானுலகமாகிய சொர்க்கத்தில் சூரியன், இடைவெளியில் மின்னல், மண்ணுலகில் அக்னி என மூவுலகிலும் நிலைத்திருப்பது சூரியனே என்கின்றன ஞானநூல்கள்.

சூரியனை தேவாதிதேவர்களும் வழிபட்டு அருள்பெறுகிறார்கள். உதய நேரத்தில் இந்திரன், மதியப் பொழுதில் வாயு, அஸ்தமன நேரத்தில் வருணனும் சந்திரனும், அர்த்தஜாமத்தில் குபேரன், இரவின் முடிவில் மும்மூர்த்தியர் ஆகியோர் வழிபடுகிறார்களாம்.

அதேபோல் அஷ்டதிக்கிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபடுவதாகப் புராணங்கள் சொல்லும்.

இப்படி தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் பூஜிக்கப்படும் சூரியனை நாமும் நாளும் வழிபட்டு வந்தால், பிணிகள் நீங்கும், ஆயுள் பெருகும்.

சூரியனை வணங்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ரூசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:
ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர்மரீசிமான்
திமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்:


*பகிர்வு*
 
Top