• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் தீ நீயே 08

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 8
"இப்போ என்ன? உன்னோட டைம்ல பத்து நிமிசம் தான போயிருக்கு, ஆனா நம்மளை பார்க்க வரப்போற மிஸ்டர் கலைச்செல்வன் யாருனு உனக்கு தெரியுமா? அவருக்கும் மித்ரனுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா? இல்லேன்னா, அவரால நமக்கு கிடைக்கப் போற நன்மை என்னனு தான் தெரியுமா? "என்று கேட்ட பரத்தை புரியாமல் நோக்கினாள், லீஷா.

"என்ன சொல்லற? கொஞ்சம் தெளிவா சொல்லு பரத்"என்று,அதே புரியாத முக பாவனையுடன் அவள் கேட்க, மெதுவாய் சிரித்தவன்,"அவமானத்தால கருகி, நம்மள போலவே மித்ரனை சந்தர்ப்பம் பார்த்து மடக்க துடிச்சிட்டு இருக்கற ஒரு ஜீவன் தான் அவரு."என்று கூறினான்.


"ஹோ!!"என்று வாயை வளைத்து வெகு தூரம் வரை வார்த்தையை இழுத்தவள், எதையோ கேட்க வர, அவளை ' பேசாதே' என்பது போல் கரம் நீட்டித் தடுத்தவன், வெளியே வந்து நின்ற சிவப்பு நிற ஆடி காரைக் கண்களால் காட்டினான்.

'எதைக் காட்டுறான்?'என நினைத்துக்கொண்டே திரும்பிப் பார்த்தவள், கருப்பு கோர்ட்சூட் சகிதம் காரிலிருந்து இறங்கியவனைக் கண்டு,'எங்கயோ பார்த்திருக்கேனே இவரை.'என்று சிந்திக்க தொடங்க, அந்த காபி ஷாப்பை கண்களால் அலசிப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்,கலைசெல்வன்.

அவசரமாக எழுந்து அவரருகில் சென்ற பரத், அவரை தாங்கள் அமர்ந்திருந்த மேஜையருகே அழைத்து வந்தான்.

கோர்ட்சூட் மற்றும் தலைமுடியை தூக்கி நிறுத்த பயன்படுத்தியிருந்த ஜெல், கண்களில் கூலர்ஸ் எல்லாம், அவரின் நாற்பதைத் தாண்டிய வயதை சற்று குறைத்துக் காட்ட முயன்று கொண்டிருந்தது. அதைக் கண்டு லீஷாவுக்கு சிரிப்பே வந்து விட்டாலும், காரியம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக வாய்க்குள்ளே பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

இருவரும் தங்களை நெருங்கி வந்துவிட்டதும், வேகமாய் தன்னிருக்கையில் இருந்து எழுந்து நின்றவள், புன்னகைத்துக்கொண்டே தனக்கு முன்னால் இருந்த இருக்கையை இழுத்து அவரை அமருமாறு கூற, அவளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டது போல் லேசாய் தலையசைத்தவன் அமர்ந்து கொண்டான்.

ஜனாதிபதியே நேரில் வந்து விட்டாலும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தும் பண்பெல்லாம் அவளிடம் இல்லவே இல்லை என்றிருக்க,சாதாரண ஒருவனுக்காக இருக்கையை விட்டு எழுந்து நின்று மரியாதை கொடுப்பதை ஆச்சரியமாய் பார்த்தான் பரத்.

அவனைப்பார்த்து கண் சிமிட்டிய லீஷா, அவனையும் அமருமாறு கண்களாலே உணர்த்த, அவளின் எண்ணபோக்கை சரியாய் கணித்தவன்,'நினைக்கற காரியம் நடக்க என்ன வேணா பண்ணுவ கண்ணு நீனு." என்று நினைத்துக்கொண்டே, கலைசெல்வனுக்கு சற்று தள்ளி அமர்ந்து கொண்டான்.

"என்ன சாப்பிடறீங்க சார்? காபி ஆடர் பண்ணட்டுமா?"என்று பவ்யமாய் பரத் கேட்க,மறுப்பாக தலையசைத்தவன்,

"என்ன விஷயமா பேசணும்னு சொன்னீங்க பரத்?" என்று நேரடியாகவே விடயத்துக்கு வர, லீஷாவைப் தொட்டு விட்டு மீண்டது பரத்தின் பார்வை.

இருவரையும் மாறி மாறிப்பார்த்த கலைசெல்வன், இருக்கையில் சொகுசாய் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

"சார். உங்ககிட்டயிருந்து ஒரு ஹெல்ப் வேணும்.எதிரிக்கு எதிரி நண்பன்னு சொல்லுவாங்கல்ல சார். உங்களை நாடி வரதுக்கு ஒரே ரீசன் இதான்!"என்று ஆரம்பிக்க, 'தெளிவா சொல்லு' என்பது போல் பார்த்தார் கலை செல்வன்.

பெருமூச்சொன்றை வேகமாய் இழுத்து விட்டுக்கொண்டவன்,"சார் நான் டைரக்ட்டாவே மேட்டருக்கு வரேன்! எல்லார் முன்னாலயும், நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு லீஷாவை அவமானப்படுத்தின மித்ரனை சும்மா விடறதா இல்லை சார். அதுக்கு உங்க ஹெல்ப் எதிர் பார்க்குறேன். உங்களுக்கும் மித்ரனுக்குமிடைல பெரிய பகை ம்ம்கூம் வெடிப்பு இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சது தான? உங்களால மட்டும் தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும் சார்."என்று,'நான் பேசினால் கல்லும் உருகும்'என்ற ரீதியில் கெஞ்சும் குரலில் கூற,ஒரு நொடி கலைசெல்வனுக்கு மித்ரனால் அவர் பட்ட அவமானமும் கண் முன்னே தோன்றி மறைந்தது.

அத்தனை பேர் முன்னால் அவமானப்பட்டு நின்றது நினைவு வந்ததும்,முகம் இறுகிப் போனவர், மித்ரனையும் இதைப் போலவே அவமானத்தில் தலை குனிய வைக்க வேண்டும் என்ற பேராவலில், என்ன ஏதேன்று கேட்காமலே,"சுயர் பரத். என்னை நம்பி நிக்கிற உங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன். அன்ட், எனக்கும் அந்த மித்ரனுக்கும் இடைல இருக்கறது சாதாரணமான பகையில்ல, மானம் சம்பந்தப்பட்ட பகை. நானும் அதுக்காக தான் சந்தர்ப்பம் எதிர்பார்த்துட்டு இருக்கேன்!"என்று கூறி சம்மதித்து விட, லீஷாவுக்கும் பரத்துக்கும் குஷியாகிப் போனது.

கூடவே,'மித்ரனை அவமானப்படுத்த இவ்ளோ துடிக்கிறார்னா, மித்ரனுக்கும் கலைசெல்வனுக்கும் என்ன பகையாக இருக்கும்னு முதல்ல பரத் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும். இல்லேன்னா, என் தலையே வெடிச்சு போயிரும். "என்று நினைத்துக்கொண்டாள், லீஷா.

எடுத்தான் கவிழ்த்தான் என்பது போல், திடீரென்று முடிவு செய்து மித்ரனை அவமானப்படுத்த முடியாது என்ற உண்மையை அறிந்திருந்த கலைசெல்வன், முதலில் பரத்திடம் பேசி, அவனது மனைவியாகப் போகிறவளுக்கு நேர்ந்த அவமானம் என்னவென்பதை கேட்க, லீஷாவைப் பார்த்துக் கொண்டே நடந்ததை கூறி முடித்தான்.

அவன் கூறியதை எல்லாம் உள்வாங்கிக்கொண்ட கலைசெல்வன்,"உன் மனப்போக்கு சரியாதான் இருக்கு பரத். நீங்க நினைக்கற மாதிரியே, சந்தர்ப்பம் பார்த்து சிறப்பா மித்ரனை அவமானப்படுத்தி, எல்லாம் முன்னாடியும் குறுகி நிற்கிற மாதிரி பண்ணிடலாம்! "என்று கூற, பரத் புன்னகைத்தான்.

சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்த கலைசெல்வன், நேரமாவதை உணர்ந்து அவர்களிடம் கூறிக்கொண்டு அங்கிருந்து சென்று விட,

"ஆளைப் பார்த்தால் மித்ரன் மேல ரொம்ப கோபத்துல இருக்கிறது தெரியுது பரத்.நான் இவரை எங்கயோ பார்த்த மாதிரியே ஃபீல் ஆகுது."என்று, காரை நோக்கி சென்று கொண்டிருந்த கலைசெல்வனையே பார்த்த வண்ணம் கூறினாள் லீஷா.

"அவரும் ஒரு காலத்துல ஆட் பிலிம்ஸ் எடுக்கறதுல ரொம்ப பேமஸான டைரக்டர் தான் லீஷா. கண்டிப்பா நீ அவரைப் பார்த்திருப்ப. மித்ரனால அவருக்கு நேர்ந்த அவமானம் தாங்க முடியாமல் கொஞ்சம் நாள் ஏரியாவை விட்டே தலை மறைஞ்சு இருந்தவரு, இப்போ கொஞ்சம் நாள் முன்னாடி தான் வந்திருக்காரு.

அவரைப் பத்தி தேடி பார்த்தேன்!மித்ரன் மேல ரொம்ப வெறியில இருக்கிறது தெரிஞ்சுது. நமக்கு இதானே வேணும்னு அவரை மீட் பண்ணனும்னு அவரோட ஆசிஸ்டன்ட் கிட்ட சொல்லி அவரை மீட் பண்ணிட்டு வந்தேன்."என்று கூற,மானசீகமாய் தலையில் தட்டிக்கொண்டவள்,

"அது சரி.. கலை செல்வனுக்கும் மித்ரனுக்கும் இடைல என்ன நடந்துச்சுனு சொல்லு?"என்று வெகு சுவாரஷ்யமான மனநிலையுடன் கேட்க, நடந்ததில் தனக்கு தெரிந்ததை மட்டும் கூறத் தொடங்கினான், பரத்.

"சென்னைலயே பெயர் போன சோப்பு கம்பெனி உனக்கு தெரியும்ல? அதான், அந்த ரோஸ் சோப் கம்பெனி. அந்த கம்பெனி ஆரம்பிச்சு இப்போதைக்கு ஒரு டூ இயர்ஸ் தான் ஆகுது. அந்த கம்பெனி ஆரம்பிச்சப்போ, ரோஸ் சோப்க்கு அட்வெர்ட்டிஸ்ட்மெண்ட் பண்ண, அந்த நேரத்துல ஆட் பில்ம்ல பெயர் போன கலை செல்வனைத் தான் ஏற்பாடு பண்ணிருக்காங்க.

பட் அவரோட அட்வெர்டைசிங் கோர், ரோஸ் கம்பெனி ஓனருக்கு திருப்திகரமாக இருக்காததால, கலைசெல்வனுக்கு ஒப்படைச்ச பொறுப்பை மித்ரனுக்கு கொடுத்திருக்காங்க.

'வயசுலயும் சரி, அனுபவத்துலயும் சரி, நான் மித்ரன் முன்னால தோத்துட்டேனா?' அப்டிங்குற ஒரு எண்ணத்துல, மித்ரனுக்கு நம்பிக்கையான ஒருத்தனை வைச்சே, மித்ரன் அந்த ஆட்'க்காக ஐடியா பண்ணி வைச்சிருந்த ஐடியாஸ் எல்லாத்தையும் ஃபைலோடயே மொத்தமா திருடி, ரோஸ் கம்பெனி ஓனர் கைல, 'என்னோட ஐடியா தான்'னு சொல்லி எக்ஸ்பிளைன் பண்ணிருக்காரு." என்று கூற,அவனின் பேச்சில் இடை வெட்டிய லீஷா,

"எதே! அப்போ இந்த கலைசெல்வன் திருட்டு ஆபீஸரா பரத்? கோபத்துலயும், ஆத்திரத்துலயும், சண்டை போட்டு பாத்திருக்கேன். வாக்கு வாதம் பண்ணி பாத்திருக்கேன். பட் கலைசெல்வன், திருட்டு வேலை பார்த்திருக்காரு."என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டவன்,

"இப்போ இதான் மேட்டரா? திருட்டு வேலை பண்ணியோ, இல்ல கொலையே பண்ணியோ, மித்ரனை அவமானப்படுத்தி ஹாப்பியாகிற ஒன்னு மட்டும் நடந்தா பாத்தாதா?"என்று, முறைத்துக்கொண்டே கேட்டான்.

"ம்ம்கூம்! இது பத்தாது பரத். அந்த ஆருண்யா, பெரிய இவளாட்டம் என்னையே அத்தனை பேர் முன்னாடி அறைஞ்சிட்டா. அவளையும் விட மாட்டேன்."என்று லீஷா கூற,

"உன்னை அவமானப்படுத்தின யாரையும் சும்மா விட போறதில்ல லீஷா."என்று கூறி, அவளுக்கு ஆறுதல் கூறினான், பரத்.

"ஹ்ஹ்ம். மேல சொல்லு."

"அப்பறம்... ஆங்! அந்த ஆட் ஐடியாஸ் பத்தி ஏற்கனவே மித்ரன், ரோஸ் கம்பெனி ஓனர் கிட்ட பேசிருந்ததால, கலைசெல்வன் மித்ரன் கிட்ட இருந்து தான் அந்த ஐடியாஸை தூக்கியிருக்கார்னு அவருக்கு தெரிஞ்சு, ரொம்ப கேவலமாலாம் பேசிட்டாரு.

அந்த அவமானம் தாங்க முடியாம தான், கொஞ்சம் நாள் ஓரமா நின்னாரு. இவரு திருடி பிராடு தனம் பண்ண போனதுல தான் இவ்ளோவும் நடந்துச்சு. பட் அவரு எல்லாமே நடக்க மித்ரன் தான் காரணம்கிற மாதிரி அவன்மேல கொலை வெறியில இருக்காரு.

பட் இதுவும் ஒருவகைல நல்லது தான். இல்லேன்னா,மித்ரன் விஷயத்துல கலைசெல்வனோட உதவி கிடைச்சிருக்குமா என்ன?"என்று கேட்க,

"அதான!"என்று கூறி, அவனின் கருத்தை ஆமோதித்தாள், லீஷா.

•••°•°•••

ஆபீஸ் மேஜை மேல் தலை வைத்து கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் ஆருண்யா. மித்ரன் வந்துவிட்டு சென்றதிலிருந்து அவளால் தன் வேலையை கவனிக்க முடியாமல் இப்படித்தான் நின்றிருக்கிறாள்.

மனம் நிறைய மறைத்து வைத்திருக்கும் காதல், மித்ரனை கண்டதும் தன் அனுமதி இன்றியே வெளியே பாய்ந்து வந்துவிடத் துடிக்கும் மாயை என்னவென்று அவளுக்கு புரியவில்லை.

ஒரு வார்த்தைக்கு, ஆயிரம் வார்த்தைகள் பேசி, தன்னை சுற்றி இருப்பவர்களை என்றுமே புன்னகைக்க வைத்துக் கொண்டிருக்கும் அவளின் துடிப்புத் தனமும், எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு ஏழரையை கூட்டிவிடும் குணமும் மாறி, இன்று இந்தளவுக்கு சாந்தமாக மாறிப்போக காரணம், மித்ரன் தான்.

அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம், அவளின் பொன்நெஞ்சை வெகுவாய் தாக்கியதால் தான் இன்று வரை தன் சுயத்தை(சுய குணத்தை) மறைக்கப் போராடிக் கொண்டிருக்கிறாள் அவள். அவனைக் கண்டதுமே, சீண்டி வம்பிழுக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் மனமும், மனம் முழுதும் நிறைந்திருக்கும் காதலை விழி வழியே அவனுக்கு உணர்த்தி, இதழ் வழியே அவனுக்கு புகட்ட வேண்டும் என்றெல்லாம் தோன்றும் ஆவலும் இன்று வரை மறையவில்லை தான். அதையெல்லாம் மனதோடு கட்டுப்படுத்தப் பழகி இருந்தாள்.

ஆனால்,மித்ரனைப் பார்த்த கொஞ்சம் நேரத்திலே, அவளின் மறைந்து போன துடிப்புத்தனம் அவளை அறியாமலே வெளிப்பட்டு விட்டது.

சற்று நேரம் கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தவள், மொபைல் இசைக்க ஆரம்பித்ததும் சிந்தனை கலைந்து மொபைலைப் பார்த்தாள்.

ரிசெப்ஷன் பெண் காவ்யா தான் அழைத்திருந்தாள்.

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும், "மேடம், மித்ரன் சாரோட அசிஸ்டன்ட் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க"என்று கூறினாள் காவ்யா.

"ஓஓ! சரி காவ்யா அனுப்பி வைங்க"என்றவள், அழைப்பை துண்டித்து விட்டு,

'இப்போ மித்ரன் வந்துட்டு போய் மொத்தமா டூ த்ரீ ஹவர்ஸ் கூட ஆகலையே? அதுக்குள்ள அசிஸ்டன்டை அனுப்பி வெச்சுருக்காரு? ஒருவேளை நாம பேசுனதுல வெட்கம் ரோஷம்னு ஏதாவது வந்து ஒட்டிக்கிச்சோ என்னவோ?'என்று நினைத்துக்கொண்டிருக்க, கதவை தட்டி அனுமதி வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தான் மித்ரனின் அசிஸ்டன்ட்.

அவனைப் பார்த்து சினேகமாய் புன்னகைக்க,"மேடம், மித்ரன் சார் உங்க ஜுவல்ஸை கொடுக்க சொல்லி அனுப்பி வெச்சாரு"என்று கூறியவன்,

"ஆஃபீசுக்கு வெளிய தான்,சார் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கறதாவும் சொல்ல சொன்னாரு மேடம். "என்று கூறினான்.

உள்ளுக்குள் புசுபுசுவென்று கோபம் ஏறினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,"நீங்க ஜுவல்ஸ வெச்சுட்டு போங்க. உங்க சாரை இப்போ என்னால மீட் பண்ண முடியலைன்னு சொல்லிடுங்க, இப்போ எனக்கு நெறைய ஒர்க்ஸ் இருக்கு."என்று கூற, திருதிருவென்று முழித்தவன்,

"மேடம், என் என்கிட்ட ஜுவல்ஸ் கொடுக்கலை. உங்களை ஆஃபீசுக்கு வெளிய வர சொன்னாரு. ஜுவல்ஸ் வோட வெயிட் பண்ணிட்டு இருக்கறதாவும், நீங்க வந்தீங்கன்னா அவர் கையாலையே கொடுத்துருவாங்கனும் சொன்னாங்க."என்று கூற, பொங்கி வந்த கோபத்தை ஆழமாக மூச்சிழுத்து அடக்கிக் கொண்டாள் ஆருண்யா.

'உனக்கு பைத்தியமா? இல்லை என்னை பைத்தியமாக்கிறியா' என்று கேட்டு அவனை இரண்டு அறை அறைய வேண்டும் என்ற வெறியே வந்து விட்டது அவளுக்கு.

'மார்னிங் என்னன்னா, ஜுவல்ஸ் கொடுக்க வந்ததா சொல்லிட்டு, மறந்து வீட்டுலயே வெச்சுட்டு வந்ததா சொன்னான். சரி அடுத்த தடவையாச்சும் இவன் தொல்லை இல்லாம இருக்கட்டும்னு அவனோட அசிஸ்டன்ட் கைல கொடுத்து விடுன்னு சொன்னேன். இப்போ என்னன்னா, அசிஸ்டன்டை கூட்டிட்டு வந்து, அவன் கையால நகையை தர போறதாவும் வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கறதாவும் சொல்லுறான். இவன் என்ன லூசா? "என்று நினைத்தவள் வேகமாய் இருக்கையிலிருந்து எழுந்து நிற்க, அவளைப் பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரனின் அசிஸ்டன்ட்.

வேகமாக எழுந்து நின்றவள், "நோ! இப்போ நான் கோபமா எந்திரிச்சு போய் அவன்கிட்ட ரெண்டு கொஸ்டின் நல்லதா கேட்டுட்டேன்னா, அவனோட எண்ணம், அதான் என்னை கோபப்படுத்தி பார்க்கிறது நிறைவேறின மாதிரி ஆகிடும்ல. போக கூடாது!"என்று நினைத்து, எழுந்த வேகத்திலே மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

"ஐ திங்க், உங்க சார்க்கு என்னோட ஜுவல்ஸை திருப்பி கொடுக்கவே மனசு இல்லை போல. சோ அவரையே வெச்சுக்க சொல்லுங்க. இல்லேன்னா கேசவன் சார் கைல ஒப்படைக்க சொல்லுங்க.நானே கேசவன் சார் கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்."என்று கூற. சரியென்று தலை அசைத்தவன், வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் செல்லும் வரையே காத்திருந்தவள்,இருக்கையில் அயர்வாக அமர்ந்து கொண்டாள்.

'மார்னிங்லயே வந்து மூட் அப்செட் பண்ணான். அது பத்தலைன்னு இப்போ வந்து டென்ஷன் பண்ணுறான். ச்ச டிசைன் பண்ண யோசிச்சு வைச்சிருந்த ஐடியாஸே போச்சு போ!' என்று புலம்பியவள், பாதி வரைந்திருந்த நகை டிசைனை பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு, அதை மூடி மேஜையின் ஒரு ஓரமாய்த் தள்ளி வைத்தாள்.


உள்ளங்கைகளால் கன்னத்தைத் தாங்கி, கீழுதட்டை பற்களுக்குக் கீழ் சிறை செய்துகொண்டு இமைகளை மூடி கொள்ள, மூடிய இமைகளுக்குள் வந்தமர்ந்து நர்த்தனம் ஆடத் தொடங்கினான் மித்ரன்.

***

ஆருண்யாவிடம் பேசி விட்டு மித்ரனின் முன் வந்து நின்ற அவனின் அசிஸ்டன்ட், ஆருண்யா கூறியதை முழுவதுமாய் மூச்சு விடாமல் கூறி முடித்தான்.


'ஹா ஹா! அவள் கடுப்பாகித் தான் ஜுவல்ஸை கேசவன் அங்கிள் கைல கொடுன்னு சொல்லிருப்பா. ச்ச அழகிய தருணத்தை மிஸ் பண்ணிட்டேனே! கோபத்துல அப்புடியே சிவந்து போன ஃபேஸ் பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே!'என நினைத்தவன், வெளியில் சிறு புன்னகை ஒன்றை மட்டும் சிந்தினான்.

இருவருக்குமிடையில் நடந்து கொண்டிருக்கும் எதையுமே அறியாத அசிஸ்டன்ட், மித்ரனைப் பார்த்து பாவமாய் முழிக்க, லேசாக இதழ் விரித்துப் புன்னகைத்தவன், அவனை அனுப்பி வைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

'அச்சச்சோ! மிஸ் ஆருண்யா மேடமை ரொம்பத்தான் கடுப்பேத்திட்டோமோ?! இருந்தாலும்,இன்னைக்கு நான் பண்ணது எல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே தெரியுது.'என்று நினைத்து வாய்க்குள் சிரித்துக் கொண்டவன்,

"உன்னை பழைய ஆருவா மாத்தி காட்டுவேன்.அதுவரை ஓய மாட்டேன்."என்று வாய் விட்டே கூறிக்கொண்டு காரை வீட்டை நோக்கி செலுத்த தொடங்கினான்.

அடுத்த பதினைந்து நிமிடங்களிலே, வீட்டின் முன் காரை நிறுத்தியவன், புன்னகைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைய, அவனை எதிர் கொண்ட தென்றல்,

'என்னாச்சு அண்ணாவுக்கு? ஒரு மார்க்கமா தனியாவே சிரிச்சுட்டு போறாரு?'என்று நினைத்து, பலமான சிந்தனையுடன், "அண்ணா.."என்று கத்தி அழைத்தாள்.

அவளின் அழைப்பில் தெளிந்தவன், தென்றலின் ஆராய்ச்சிப் பார்வை கண்டு முழிக்க, அவள் அடுத்ததாக கேட்ட கேள்வியில், 'அச்சச்சோ!'என்று கூறி வாயில் கையை வைத்து அதிர்ச்சியில் கத்தியே விட்டான், மித்ரன்.
தொடரும்...
எழுத்தாளர் ஏஞ்சல் ஹில்லு

எழுத்தாளரின் பிற கதைகள்:
தொடர்கதைகள்:
 
Top