• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்- 6. சிவகாமியின் செல்வன்

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520
நீயே எந்தன் மகளாய்- 6. சிவகாமியின் செல்வன்

இராஜக்காள் பட்டியில் அவனது வீட்டில், கயல்விழி, கனிமொழி, இருவரும் அத்தை மகன் வரும் முன்பே, அப்பாக்களோடு அங்கே சென்றனர். வீட்டில் சிவகாமி தம்பிகளை வரவேற்க சிவசாமி மருமகள்கள் இருவரிடமும் மகனின் வீர விளையாட்டை கேட்டு மகிழ்ந்தார்.

சின்னவள் கனிமொழி தான் வாய் ஓயாமல் அத்தை மகன் வீரத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தாள். சிவகாமி அம்மாவுக்கு, மகனைப் பற்றிப் புகழுரை பிடித்திருந்தாலும் , அதனால் மகன் பெறும் வீரத் தழும்புகளைப் பார்த்தே மனம் வருந்துவார். அதே போல் கயல்விழியும், அவன் காயங்களை, கண்ணாலே கணக்கெடுத்து வைத்திருந்தவள், அவன் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்தாள்.

அறிவின் மனைவி சாந்தியை ஐந்து மாத ஆண்குழந்தையோடு நேற்று தான் பிறந்த வீட்டிலிருந்து அழைத்து வந்திருந்தனர், கைக்குழந்தையை பார்த்து வருகிறோம், என சகோதரிகள் இருவரும் வந்திருந்தனர்.

ஒரு பெண்ணுக்குச் சீர்வரிசை பொருட்கள் தருவது போல் அன்பு கொண்டு வந்து இறக்க, சாந்தி தான் கொழுந்தனுக்கு ஆராத்தி எடுத்து திருஷ்டி சுத்திப் போட்டாள். சின்னச்சாமியும் பெருமையாகவே பார்த்தார். வழக்கம் போல் சிவகாமியம்மாள் அடுப்படிக்குள் புகுந்து கொள்ள, மகன் நேராக அடுப்படிக்குள் சென்று அம்மாவைத் தான் தாஜா செய்தான்.

"சரி மாப்பிள்ளை நீ குளிச்சிட்டு ரெஸ்ட் எடு, நாளைக்கு பேசிக்குவோம்." என மகள்களை அழைக்க, அவர்கள் அத்தையம்மா முகத்தை பார்த்தனர்.

"சாந்தியும் பச்சை உடம்புக்காரி, எனக்கு ஒத்தாசை செஞ்சிட்டு வரட்டும். பெரியவனைக் கொண்டாந்து விடச் சொல்றேன்" என சிவகாமி சிபாரிசு செய்யவும்.

"பெரியவ இருக்கட்டும், சின்னவளைக் கூட்டிட்டுப் போறேன். பொம்பளைப் புள்ளைங்க காலையிலிருந்து வீடு தங்கலையின்னு, அவுக அம்மா ஒரே ஆட்டம்." என கனிமொழியை கந்தவேல் அழைத்துச் சென்றார். அன்பு அவசரமாக வெளியே வந்து குமரவேலிடம், அக்காவுக்காக பரிசு வந்த பட்டு புடவைகளில் இரண்டை கொண்டு வந்து நீட்டவும், “வேற வினையே வேண்டாம், உங்க அக்கா என்னை கொன்றுவா. நீயே வந்து அவளை தாஜா பண்ணி குடு. அக்காவாச்சு, தம்பியாச்சு.“ என தப்பித்து சென்றான் குமரவேல். மகளிடம் பயந்து ஓடும் மருமகனை பார்த்து சின்னசாமி சிரித்துக் கொண்டார்.

இராஜக்காள் பட்டியில் உள்ள சிவகாமி இல்லத்தின் அரசி சிவகாமி. ஐந்தரையடி உயரம் பூசிய உடல்வாகு , படர்ந்த முகம், எடுப்பான பல் வரிசை, முகவாய் ,அதில் மஞ்சள் பூசி காதிலும் மூக்கிலும் வெள்ளைக்கல் தோடு மூக்குத்தி டாலடிக்க, சிவப்பு வட்டப் பொட்டு, நெற்றி வகிட்டில் குங்குமம், முகப்புச் சங்கிலியில் கோர்த்த திரு மாங்கல்ய கொடி ,இரண்டு கையிலும் ஜோடி தங்கவளையல்கள் இலேசாகக் காதோரம் மட்டும் வெள்ளிக்கம்பி அழகு சேர்க்க, அளவான முடியைத் தளரப் பின்னி, எப்போதுமே ஒரு கன்னியாவது தலையில் பூ வைத்திருப்பார்.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் கணவரிடமும் செல்வாக்கு மிகுந்தவர். அதட்டியோ, ஓங்கியோ பேசவராது. ஆனால் அவரைப் புறந்தள்ளி விட்டு எந்தக் காரியமும் செய்யவும் இயலாது. மகன் ஜல்லிக்கட்டில் வென்று வருவது பெருமை தான், ஆனால் அவன் மேனியில் தாங்கி வரும் புண்களைப் பார்த்துத் தான் துடித்துப் போவார்.

இன்றும் வரிசையாக அவன் வென்ற செய்தி வரவர, விழுப்புண் எத்தனையோ எனத் தாய் மனம் அதைத் தான் கணக்கெடுத்தது. இதோ சின்னமகன் வந்து விட்டான். மருமகளைத் திருஷ்டி கழிக்கச் சொல்லி விட்டு, இவர் தயாராக வைத்திருந்த மஞ்சள் பத்தை எடுக்கச் சென்றார். அன்பு பின் தொடர, மாமனார் மருமகளிடம் , “போயி உன் அத்தை மகனைப் பாரு, காளையை அடக்கின காளை, அம்மாளை சமாளிக்கிறதுக்கு அவகிட்ட பாட்டு பாடி ஐஸ் வச்சு, செல்லம் கொஞ்சிகிட்டு கிடப்பான்.” என சொல்லவும், கயல்விழி, சிரித்துக் கொண்டு மெல்ல பூனை போல் பதுங்கி அடுப்படி வாசலை ஒட்டிய மறைவில் வந்து நின்றாள் .

அன்பு, அவன் அப்பா சொன்னது போலவே ,அம்மாவி முந்தானையை பிடித்துக் கொண்டே நேராக அடுப்படிக்கு வந்து, திரும்பி நின்றவரைக் கட்டிக் கொண்டு ,
" வெற்றி மீது, வெற்றி வந்து என்னைச் சேரும் .
அது வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்.
என தன பக்கம் அம்மாவைத் திரும்பியவன், அவர் முன் மண்டியிட்டு

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னையல்லவோ,
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
கையை நீட்டி புரட்சித் தலைவர் போல், தன் அம்மாவை அவன் ஆட்டிவைக்க, சிவகாமியால் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழை கண்டேன் … "

என , அதற்கு பிறகு வரிகள் தெரியாமல் ராகத்தை மட்டும் ஹம்மிங்க் செய்ய, ”போதும், போதும் நிறுத்து , இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வேணாம்.“ என அவன் தலை முடியை வருடவும், மண்டியிட்டவாறே அவர் வயிற்றோடு கட்டிக்கொண்டவன். " என்னாம்மா, முதல் பரிசு வாங்கிட்டு வந்திருக்கேன். பைக் அடிச்சிருக்கேன். ஒரு டிராக்டர் நிறையச் சாமான் இருக்கு, ஒரே உன் மகனை பாரட்டுது, நீ ஒரு வாழ்த்து சொல்லமாட்டியா?" என அவன் கேட்கவும்,

“ஊர்காரவுகளுக்கு என்ன, அது பொழுதுபோக்கு, சுத்தி நின்னு கை தட்டிட்டு போயிடுவாங்க, என் மகனுக்கு எங்க அடி பட்டருக்கு, எங்க கொம்பு குத்தியிருக்கு, தோல் வழண்டருக்குன்னு நான் தான பார்க்கணும்.” என அவன் சட்டையைத் தூக்கி ஆராய்ந்து பார்க்க,

அவரை விடுத்து எழுந்தவன், “இது தான வேணாங்கிறது , நான் என்ன சின்னப்ப பயலா, உன் மகனுக்கு ஏழு கழுத்தை வயசாச்சு.“ என அடுப்படி மேடையில் ஏறி உட்கார்ந்து,அம்மா வைத்திருந்த பஜ்ஜி, கேசரியை ஒரு கை பார்த்தவன், “ ஏய் மம்மி, நான் ஜெயிச்சிட்டு வருவேண்டு தான இதெல்லாம் செஞ்சிருக்க, அப்புறம் என்ன?” என்றான்.

"அன்பு, நீ ஜெயிச்சிட்டு வர்றது எனக்கு பெரிசில்லை, உன் சந்தோஷம் தான் எனக்கு பெரிசு. அதுக்காகதான் ஜல்லிக்கட்டுக்கு போறதுக்கு கூட எதுவும் சொல்றது இல்லை. ஆனால் அதுக்காக இப்படி உடம்பெல்லாம் ரணமாக்கிட்டு வர்ற பாரு. அதை பார்க்கிற தெம்பும் எனக்கு இல்லை . நான் சொன்னாலும் நீ கேட்க மாட்ட. சரி உன் திருப்திக்காக வந்து பார்க்கிறேன். ஆனால் வெந்நீர் விளாவி வச்சுருக்கேன். வா அம்மா ஊத்தி விடுறேன். அப்புறம் வந்து அதெல்லாம் பார்க்கலாம்." என அமர்த்தலான குரலில் சொன்னார்.

"என்னைப் பெத்த மகராசி, சண்டையில கிழியாத சட்டை எது. ஜல்லிகட்டுனா, நாலஞ்சு கீறல் விழத்தானச் செய்யும். அதுவும் உன் மவன், இருபத்தஞ்சு காளையை அடக்கி இருக்கேன், முப்பது, முப்பத்தஞ்சு காளைமாட்டு மேல பாஞ்சுருக்கேன், அதென்ன கொஞ்சவா செய்யும்?" என அம்மாவிடம் இடக்குப் பேசியவன், "மேலு கசகசன்னு இருக்கு, கட்டாயம் குளியல் போட்டுத் தான் ஆகனும். ஆனால் நீ வரவேண்டாம். நானே குளிச்சுக்குறேன்." என்றான் மகன்.

"மத்த நாள் நீயே குளிச்சுக்க, இன்னைக்கு நான் தான் ஊத்தி விடுவேன்." எனச் சிவகாமியம்மா பிடிவாதம் பிடிக்க.

"அம்மா, உன் மருமகள் வேற வெளியே நிக்கிறா, என் இமேஜ டேமேஜ் பண்ணாத தாயே, அப்புறம் என்னைப் பத்தி அவ என்ன நினைப்பா?" என அவன் சத்தம் குறைத்துக் கேட்கவும்,

"என்ன நினைப்பா. அம்மா புள்ளைன்னு நினைப்பா. அதில உனக்கு என்ன குறை, நீ என் மகன் தானே." என அவர் விடாப்பிடியாய் நிற்கவும்,

"குறை என்ன நிறை தான், சிவகாமியின் செல்வன்கிறதே, எனக்கு பெருமை தான் என்னைப் பெத்த ஆத்தா..." எனச் சினிமா வசனம் பேசிக்கொண்டு, அம்மாவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான் அன்பு.

"போதும், நீ எம்புட்டு ஐஸ் வச்சாலும், நான் தான் தண்ணீர் ஊத்திவிடுவேன். இன்னைக்கு நீ தப்பிக்கவே முடியாது." என்றார் சிவகாமி.

"அத்தை நீங்கச் சொன்ன மாதிரியே பாத்ரூம்ல எல்லாமே எடுத்து வச்சிட்டேன்." என அடுப்படிக்கு வெளியேவே நின்று குரல் கொடுத்தாள் கயல்.

"சிவகாமி... இதுக்கெல்லாமா அசிஸ்டென்ட் வச்சிருக்க?" என அவன் கேலி பேசவும், "ஆமாம்டா, எனக்கு அப்புறம் அவ தான உனக்குப் பார்க்கனும். அதுக்குத் தான் பழகிக்கிறா." என்ற படி மகனை வரச் சொல்லி விட்டு சிவகாமி முன்னே நடந்தார்.

அவர் நகரவுமே, அன்புவும் வெளியேறிய பின் அடுப்படிக்குள் வரலாம் என நினைத்து நின்ற கயலின் கையைப் பிடித்து உள்ளே இழுத்தான் அன்பு. கயல் சற்றும் எதிர் பாராதவள், "அம்மா!" எனக் கத்தியபடி வந்து அவன் மீதே மோதவும், அவசரமாக அவள் வாயைப் பொத்தியவன் கதவு மறைவுக்கு அவளை இழுத்துச் சென்றான்.

கயல்விழியின் கண்கள் கயல் போலவே துள்ள, அவளும் அவனிடமிருந்து விடுபடத் துள்ளினாள். அதை ரசித்தபடியே அவளை நெருங்கியவன், "உங்க அத்தை, நீ பழகிக்க வந்தேண்டு சொல்லுச்சு, வா பழகலாம், நீ வந்து குளிச்சு விடுடி." என வம்பிழுத்தான். “விடு மாமா...” என அவள் பொத்திய அவன் கைகளுக்குள் வாயை அசைத்து கயல் விழிகளில் கலவரத்தைக் காட்டவும், அவனுக்கு மேலும் சுவாரஸ்யமானது. "காளையை அடக்கிட்டு வந்துட்டேன், எனக்கு பரிசு எங்கே இந்தக் கன்னி ரெடியா?" என்ற கண்ணடித்தபடி படி அவள் வாயிலிருந்து கையை எடுத்து ஒரு கையால் சிறையெடுத்து அவளை அணைத்தபடி நின்று, மறு கையால் அவள் கன்னத்தை தட்டவும். முகம் சூடேற , உடல் நடுங்கியவள், "அத்தை..." என அலற முற்பட வெறும் காற்று மட்டுமே வந்தது.

ஆனால் சத்தம் போட்டுவிடுவாளோ என அவன் மீண்டும் அவசரமாக அவள் வாயைப் பொத்தியவனை " அன்பு" எனச் சிவகாமி அழைத்தார்.

"இந்தா வந்துட்டேன் மா." எனப் பதில் தந்தவன், "அடியேய் கையை எடுக்கப் போறேன், கத்தின கொன்றுவேன்.” என்றவன், அவள் அசந்த நேரம் அவசரமாக கன்னத்தில் ஓர் இதழொற்றலையும் தந்து அவளை அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டு, “இரு உன்னை வந்து வச்சுக்குறேன்." என மிரட்டி விட்டுச் சென்றான். கயல்விழி, “ஆத்தி!!!" என படபடக்கும் நெஞ்சை பிடித்தபடி நின்றாள் .

குளியலறையில் அம்மாவும், மகனுக்கும் வாத விவாதங்களும், சண்டையுமாகக் குரல் கேட்டுக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக அம்மாவை வெளியே அனுப்பி விட்டான்.

சிவகாமி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வெளியே அமரவும், அவரது கணவர் சின்னசாமி, " ஏத்தா, இளந்தாரிப் பயலுக்குப் போய், மேலுக்கு ஊத்துறேண்டு போறியே, அவன் விடுவானா. இதுக்குக் காலாகாலத்தில அவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செஞ்சு வை, மருமகள் வந்து பார்த்துக்கட்டும். உன் தம்பி, இவனுக்கு மேல தவ்விக்கிட்டு திரிஞ்சவன் தானே, இப்ப நம்ம கலைச் சொல்றதைக் கேட்டு வீட்டில் உட்காரலை." என வழி சொல்லிக் கொடுக்கவும், சிவகாமியின் முகம் பிரகாசமானது.

"சரியாச் சொன்னீங்க. நாளைக்கே கந்தன் கிட்ட பேசிடுவோம். இந்தத் தடவை கயல் வைக்கிறது தான் அவளுக்கு, கடைசிக் கன்னிப் பொங்கலா இருக்கனும். அடுத்த வருஷம் நம்ம வீட்டில் வந்து பொங்கல் வைக்கட்டும்." என வரிசையாகத் திட்டமிட்டார் சிவகாமி.

அன்பு குளித்து முடித்து வந்து, அம்மாவுக்குத் தெரியாமல் மறைவிடத்திலிருந்து உடலைப் பட்டும் படாமலும் துடைத்துக் கொண்டு இருக்கும் போதே, கயல் பயந்து, பயந்து மறைந்திருந்து அவனைப் பார்த்தாள். அவள் பார்ப்பதை அறிந்த அன்பு, "அடியே, குரவை குட்டி அம்புட்டு அக்கறை இருக்கவ, நேரா வந்து மருந்தைப் போட்டு விடு, இங்கிட்டு மறைஞ்சு நின்னு பார்த்துட்டு , அங்குட்டு உன் அத்தைகிட்ட போய் வத்தி வச்ச கொன்றுவேன்." என்றான்.

" ஐயோ!" என விரலைக் கடித்துக் கொண்டு நின்றவள், அமைதியாகவே மறைந்து நிற்கவும், அன்பு சுற்றும், முட்டும் பார்த்து விட்டு சத்தமின்றி வந்து மீண்டும் அவளை முற்றுகையிட்டான்.

"ஐயோ, மாமா விடு ப்ளீஸ், இப்படியே செஞ்சேனா நான் போயிடுவேன்." என மெல்லிய குரலில் அவள் கெஞ்சலாக மிரட்டவும், அவளை முறைத்தவன், “போறதுண்டா, உங்கப்பாவோடவே போயிருக்க வேண்டியது தானேடி , எதுக்கு இங்கன நிண்ட?" என எரிந்து விழுந்தான். அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

"கண்ணை மூடினாலும், உன்னைக் காளை குத்தினது தான் கண்ணு முன்னாடி வரும். அதுக்குத் தான் பார்க்க வந்தேன். நீ என்னடான்னா என்னை வையிற, உனக்காக எவ்வளவு சாமி கும்பிட்டேன் தெரியுமா?" என அவள் மெல்ல விசும்பவும்.

"ஏய் அழுவாதடி,நான் உன்னை என்னமோ செஞ்சிட்டேன்டு, எங்கம்மா என்னை வையும்." என்றவன், "ஆமாம், என்னைக் கட்டிக்கப் போறவ தான், இதுக்கெல்லாம் கவலைப் படனும், நீ எதுக்குச் சாமி கும்புடுற, கவலைப்படுற. உன் தாய்மாமன் வீடு, உனக்குக் குச்சுக்கட்டவே, எனக்கு உரிமையில்லையிண்டானுங்க. நீ என்னைப் பார்க்க வர்றது, உன் அம்மாவுக்கும், தாய்மாமன் வீட்டுக்கும் தெரியுமா, அப்ப என்ன செய்வ?" என அவள் பதில் என்ன, என அவள் வாய்மொழியாகவே அறிவதற்காக வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

கயலின் கண்ணில் குளம் கட்டி நின்ற நீர், மடை திறந்தது போல் முத்து, முத்தாகக் கன்னத்தில் வடிந்தது. அதைத் துடைத்துக் கொண்டவள், "அவுங்க சொன்னா, நீ காளைமாட்டையே அடக்குற வீரன் தானே, வந்து என் முறைப்பொண்ணுனு ,என்னைத் தூக்கிட்டு போ, அதை விட்டுட்டு என் மேல கோவத்தைக் காட்டாத." என மெல்ல பயந்தபடியே , அசட்டுத் தைரியத்தில் சொன்னவள் அங்கிருந்து அகல முற்பட, அவனுக்கும் லேசாக நகை அரும்பியது. அவளுக்கு முன் வந்து பாதையை அடைத்தவன், தன் காயங்களைச் சுட்டிக் காட்டி பட்டியலிட்டு, " இம்புட்டு தான் காயம், பார்த்திட்டேயில்லை, கிளம்பு" என்றபடி அவளைக் கடந்து தனது அறைக்குள் சென்று விட்டான்.

அவனது அறைக்குள், உடல் வலிக்கான மாத்திரை, மருந்து, ஸ்ப்ரே எனப் பஞ்சு, டெட்டால் என ஒரு சிறிய மருந்தகத்தையே கடைப் பரப்பி வைத்து விட்டு வந்திருந்தவள், சிவகாமியிடம் சென்று , "நான் கிளம்புறேன் அத்தை..." என்றாள்.

"அட இரு, அதுக்குள்ள எங்க கிளம்புறவ " என்றவர், அன்பு வாங்கி வந்திருந்த பரிசு பொருட்களில், ஐந்து பட்டுப் புடவைகளும் இருக்க, அதில் கயலுக்கு பொருத்தமான சேலையை எடுத்து பூவும் சேர்த்து, "நாளைக்கு இதைக் கட்டிக்கிட்டு பொங்கல் வை." என்றார்.

"எனக்கு ஒண்ணும் வேணாம். உங்க மகனை கட்டிக்க போறவளுக்கு குடுங்க." என அவள் மறுக்கவும், “அடியாத்தி, என் மகனை கட்டிக்கிற போற, என் மருமகளுக்கு தான் கொடுக்குறேன், நீ தான் இந்த வீட்டுக்கு சின்ன மருமக, அதில உனக்கு சந்தேகமா , அன்பு ஏதாவது வஞ்சான, வஞ்சாலும் கண்டுக்காத, அத்தை இருக்கேன்ல, நான் பார்த்துக்குறேன்.“ என மகனுக்கு கேட்காதது போல் பாவனையில் அத்தையம்மா ரகசியம் பேச,

இவள் மறுத்ததை மட்டும் காதில் வாங்கிய அன்பு, "அம்மா, அப்ப இந்த மாத்திரை, மருந்தையும் தூக்கிட்டுப் போகச் சொல்லு, அதை வாங்கக் கூடவா வக்கில்லாமல் இருக்கோம்." என கோபமாக மொழிந்தான்.

"டேய், சும்மா , என் மருமகளை, என்னமாவது சொல்லி, ஒரண்டை இழுத்துக்கே இருக்காத." என சின்னசாமியும், “கயல் உனக்காக அக்கறையா வாங்கிட்டு வந்துருக்கு, அதை குறை சொல்லாத அன்பு.” என சிவகாமியும் மகனை கண்டித்தனர்.

அதன் பிறகு ,கயல் என்ன சொல்லியும், கேட்காமல் இரவு உணவை இரண்டு மகன்கள், மருமகள்கள் என எல்லாருமாக சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு, அவளை சமாதானப்படுத்தியே சின்னச்சாமியோடு அனுப்பி வைத்தார் சிவகாமி.

 
Top