• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 27

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
மொழி: இருள் பாணி
அறத்துப்பால்
துறவறவியல்

தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (௨௱௬௰௧ - 261)

தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும் (௨௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் (௨௱௬௰௧)
—மு. வரதராசன்

பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம். (௨௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும் (௨௱௬௰௧)
—மு. கருணாநிதி

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. (௨௱௬௰௨ - 262)


தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே! (௨௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். (௨௱௬௰௨)
—மு. வரதராசன்

முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான். (௨௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும் (௨௱௬௰௨)
—மு. கருணாநிதி

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (௨௱௬௰௩ - 263)


துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்! (௨௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ (௨௱௬௰௩)
—மு. வரதராசன்

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும். (௨௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது (௨௱௬௰௩)
—மு. கருணாநிதி

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (௨௱௬௰௪ - 264)


பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும் (௨௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும். (௨௱௬௰௪)
—மு. வரதராசன்

பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும். (௨௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும் (௨௱௬௰௪)
—மு. கருணாநிதி

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (௨௱௬௰௫ - 265)


வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும் (௨௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
—மு. வரதராசன்

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும் (௨௱௬௰௫)
—மு. கருணாநிதி

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (௨௱௬௰௬ - 266)


தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர்; மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர் (௨௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. (௨௱௬௰௬)
—மு. வரதராசன்

தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர். (௨௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள் (௨௱௬௰௬)
—மு. கருணாநிதி

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (௨௱௬௰௭ - 267)


சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும் (௨௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும் (௨௱௬௰௭)
—மு. வரதராசன்

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும். (௨௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள் (௨௱௬௰௭)
—மு. கருணாநிதி

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (௨௱௬௰௮ - 268)


‘தான்’ என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவவலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும் (௨௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். (௨௱௬௰௮)
—மு. வரதராசன்

தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும். (௨௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும் (௨௱௬௰௮)
—மு. கருணாநிதி

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். (௨௱௬௰௯ - 269)


தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும் (௨௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் (௨௱௬௰௯)
—மு. வரதராசன்

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். (௨௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள் (௨௱௬௰௯)
—மு. கருணாநிதி

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (௨௱௭௰ - 270)


உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான் (௨௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். (௨௱௭௰)
—மு. வரதராசன்

பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம். (௨௱௭௰)
—சாலமன் பாப்பையா

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான் (௨௱௭௰)
—மு. கருணாநிதி.
 
Top