• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 06

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அன்றிரவு வரை மதியை வெளியே காணவில்லை. ஹாலில் அமரக் கூடத் தோன்றாமல் ரிஷி அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருந்தான்.

அடிக்கடி மதியின் அறையையும் அவனது பார்வை தழுவிச் சென்றது.

"ஏதாவது ஏடாகூடமாக பண்ணிக்கிட்டாளோ..?" என்று நினைத்த மாத்திரமே அவனது கால் ஓரெட்டு முன்னே வைத்து அடுத்த நிமிடம் பின் வாங்கியது..

"ச்சே ச்சே இந்த ராங்கி அப்படியெல்லாம் பண்ணமாட்டாள்.." என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் செய்வதறியாது நின்றிருந்தான்.

இதே திருமணமாகி இரண்டோ மூன்றோ நாட்கள் என்றால் எனக்கென்ன வந்தது என்று பேசாமல் போயிருப்பான். ஆனால் இன்றோ இரண்டு மாதங்களாகி இருந்தன.

அவனது ஆழ்மனதில் அவள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாள் என்பது உண்மை. ஆனால் அவன் உணர்ந்திருக்கவில்லை.

தானாக சென்று அவளது அறைக்கதவை தட்டவும் அவனது தன்மானம் இடம் கொடுக்காததால் தலையைத் தாங்கி அமர்ந்து விட்டான்.

எவ்வளவு நேரம் இருந்தானோ தெரியவில்லை திடீரென அவளது அறைக்கதவு திறந்ததும் சட்டென இருக்கையிலிருந்து எழுந்தான்.

அவள் அவனைக் கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை, ஆனால் முகம் அழுகையில் கசங்கி இருந்தது.

அதனைப் பார்த்தவனுக்கு ஏனோ வலிக்கத் தானே செய்தது...

நேராக சமையலறைக்குள் சென்றாள். கடகடவென எதையோ உருட்டும் சத்தம் கேட்டது.

சமைக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான். வாசனை வேறு அவனது பசியை மேலும் தூண்டி விட்டது. ஆம் அவனும் காலையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சாப்பிட்டிருக்கவில்லை.

சரி, இன்னைக்கு ஓவர் சீன் காட்டாம இவ சமைக்கிறத போய் சாப்பிடுவோம் என்று நினைத்தவனைப் பார்த்து மனசாட்சி காரித் துப்பியது. அதற்கு முறைப்பை பரிசளித்தவன் எனக்கு சாப்பாடு முக்கியம் என்ற ரீதியில் போய் டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டான்.

இருந்தும் கெத்தை மெயின்டன் பண்ணும் முகமாக ஃபோனினுள் தலையை நுழைத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் அவள் வரும் அரவம் கேட்டது. வந்தவள் தனக்கு மட்டும் உணவை எடுத்துக் கொண்டு வந்து அவனுக்கு எதிரில் இருந்து உண்ண ஆரம்பித்து விட்டாள்.

"என்னடா நம்ம பக்கம் தட்டைக் காணோம்" என்று நினைத்துக் கொண்டே ஓரக் கண்ணால் அவளைப் பார்க்க அவளோ சப்பாத்தியை வாயில் திணித்துக் கொண்டிருந்தாள்.

"இவ என்ன..
வழமையா நமக்கு வேண்டாம்னு இருக்கும் போது வம்பு பண்ணி சாப்பிட கூப்பிடுவா..? இன்னைக்கு நமக்கு வேணுங்குற போது ஒரு வார்த்தை கூப்பிடல..ராட்சசி.." என மனதில் வைது விட்டு சமயல் கட்டை நோக்கி நடையைக் கட்டினான்.

பாவம் அங்கே கழுவி அடுக்கி இருந்த வெற்றுப் பாத்திரங்களே அவனை வரவேற்றன..

திரும்பி அவளை முறைத்தவனுக்கு வெளிப்படையாக அவளை திட்ட முடியாமல் போய் விட்டது. அவன் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்த நேரம் கை கழுவ உள்ளே வந்தாள் மது.

சாரோ, சட்டென நீரை எடுத்து அருந்துவது போல பாசாங்கு செய்ய மதியோ அதே முகம் மாறாமல் வந்து தட்டை கழுவி விட்டு செல்ல எத்தணிக்க "சாப்பிடும் போது எதிரே இருக்கிறவன் சாப்பிட்டானானு கேட்கனும்..." என அவளுக்கு குத்தும்படியாக அவன் கேட்க அவளது நடை நின்றது.

திரும்பியவள் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு "சாப்பிட்டிங்களா சார்..?" என்றாள்.

அவளது நக்கலில் பல்லைக் கடித்தவன் எங்கோ பார்த்துக் கொண்டு இல்லை என தலையாட்ட, இத்தனை நாளும் வீராப்பாய் திரிந்தவனின் இந்த குழந்தைத் தனம் சிரிப்பை வரவழைத்தது. இருந்தும் அடக்கிக் கொண்டவள் "அப்போ போய் சாப்பிடுங்க.." என்று விட்டு திரும்பி விட்டாள்.

ரிஷியோ கடுப்பில் "அது தான் அவ்ளோத்தையும் நீயே கொட்டிக்கிட்டியே..." என்கவும்

சிரித்தவள் "நான் உயிர் வாழனும் என்றது எனக்கு விதிக்கப்பட்ட கட்டளை.. ஆக, சாப்பிடனும்ல.?" என்றாள் விரக்தியாய்..

அவளது பேச்சு அவனுக்கு புரியவில்லை. திரும்பி அவளது முகத்தைப் பார்த்தான். அதிலிருந்து எந்த உணர்சிகளையும் படிக்க முடியாமல் தான் போய் விட்டது இவனுக்கு.

இருந்தும் "நா..நானும் உயிர் வாழனும்ல.. அப்போ கொஞ்சம் சரி மிச்சம் வச்சிருக்கனும்" என்றான்...

அதற்கும் அதே சிரிப்புடன் "நீங்க தான் கண்டவங்க கையால சமைச்சத சாப்பிட மாட்டிங்களே.." என்று விட்டு சென்று விட்டாள்.

அது சரியாக ரிஷியின் மனதைக் குத்தி இருந்தது. கோபத்தில் ஃபோனை எடுத்தவன் உணவை ஆடர் செய்து விட்டு அதற்காக காத்திருந்தான்.

வந்து சோஃபாவில் அமர்ந்திருந்தவனின் காதில் மீண்டும் மீண்டும் அவள் சொன்ன வார்த்தைகளே கேட்டுக் கொண்டிருந்தன.

"நான் உயிர் வாழனும் என்றது எனக்கு விதிக்கப்பட்ட கட்டளை..." இதுவே அது.

"ஏன் அப்படி சொல்லிட்டுப் போறா..இதை சொல்லும் போது அந்தக் குரல் ஏன் ஒருமாதிரி இருந்தது..?"

"டேய் ரிஷி நீ இப்பெல்லாம் இவள பத்தி ஓவரா திங்க் பண்ண ஆரம்பிச்சிட்ட.. பேசாம இரு.." என தனக்குத் தானே கவுண்டர் கொடுத்து முடிய ஆடர் பண்ணிய உணவும் வந்து விட்டது.

வாங்கி உண்டவனுக்கு ஏனோ இன்று உணவு தொண்டைக்குள் இறங்கவில்லை.

அப்படியே கைகழுவி விட்டு உறங்க சென்று விட்டான்.

அவன் உண்ணும் வரை கதவின் நிலையருகே நின்று மதி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவன் பசி என்று தன்னிடம் வாய்விட்டு கேட்ட பின்னும் ஏனோ அவளுக்கு உறக்கம் வர மறுத்தது.

தானே செய்து கொடுப்போம். பரவாயில்லை எத்தனை திட்டு வந்தாலும் தாங்கிக் கொள்வோம் என்று நினைத்து எழுந்து வந்தவளின் கண்ணிலே அவன் ஆடர் செய்திருந்த உணவை டெலிவரி போயிடம் இருந்து வாங்கும் காட்சி தென்பட்டது.

அதனால் அப்படியே அங்கேயே தங்கி நின்று விட்டாள். அவன் சாப்பிட்டு முடித்த பின்னே அவளுக்கு மனம் திருப்தியானது. சந்தோஷத்துடன் போய் உறங்கி விட்டாள்.
ஏன் அவன் பசியுடன் இருந்தால் இவளுக்கு வலிக்கிறது...?
ஆம் அவள் ரிஷி என்ற அரக்கனை காதலிக்கிறாள்...

கடந்த பத்து வருடங்களாக தன்னுள் இறுகிப் போய் அமர்ந்திருந்தவளை ரிஷி என்பவன் உயிர்ப்பித்திருந்தான்.

அவன் திட்டும் போதெல்லாம் வலிக்கும் தான், இருந்தும் அதற்காக அவனுடன் மீண்டும் வாயடிக்கத் தோன்றியது அவளுக்கு. அதுவே அவளது இயல்பும் கூட..

தன்னியல்புக்கு உயிர்பூட்டிய அவனை இன்று மதிநிலா வெறித்தனமாக காதலிக்கிறாள்...

அவனுடன் வாழும் இந்த வாழ்வு நிலைக்குமா என்பது சந்தேகம்.. ஆனால் நிலைக்க வேண்டும் என்பது அவளது பேராசை...
அது நிராசையும் கூட என்பதை விதி அவளுக்கு புரிய வைக்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை...


தொடரும்...


தீரா.
 
Top