• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 08

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
வண்டி சத்தம் கேட்டு மூவரும் திரும்பிப் பார்க்க அங்கே மதியோ முகத்தில் பூத்த புன்னகையுடன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

இவளைக் கண்டவுடன் மித்ரனும் பவித்ராவும் நிம்மதி பெருமூச்சு விட்டனரென்றால் ரிஷிக்கோ அவளது சிரிப்பு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய்யை வார்ப்பது போல் தகிக்கச் செய்தது.

மதியோ ஒரு நிமிடம் இவர்கள் வெளியே நிற்பதைப் பார்த்து குழம்பிப் போனாலும் மீண்டும் உதட்டில் உறைந்த புன்னகையுடன் தன்னவனை நோக்கி வந்து "என்ன எல்லோரும் ஜாலியா வெளில நிற்கிற மாதிரி இருக்கு..?" என கண்சிமிட்ட பவித்ராவிற்கும் மித்ரனுக்கும் புஸ்ஸென்றிருந்தது. பின் நண்பனையறிந்தவனாக ரிஷியை திரும்பிப் பார்க்க அவனுக்கோ கோபத்தில் முகம் சிவந்திருந்தது.

"என்ன சார்.. ஆபிஸ் சாப்பாட்டுல காரம் ஜாஸ்தியோ..? முகம் கடுகடுனு இருக்கு.." என தன்னவனை கோபப்படுத்துகிறோம் என்பதையறியாமல் அவள்பாட்டிற்கு வழமை போல ரிஷியை வம்பிழுக்க அவனோ தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தான். ஆனால் கண்களில் அத்தனை ரௌத்திரம்..

"ம்ம் அது சரி..." என்றவள் அவர்கள் கேட்காமலே "இன்னைக்கு முக்கியமான வேலை இருந்துச்சு அது தான் லேட்..." என்றவளிடம் "ஓஓஓ மேடம் அப்படி என்னத்த வெட்டி கிழிச்சிட்டு வரீங்க...?" என கிண்டலடித்தான் ரிஷி.

அது கூட புரியாதவளாய் "வெட்டிக் கிழிக்கலங்க.. ஒட்டி ப்ரிண்ட் எடுத்துட்டு வரேன்..." என்று கண்சிமிட்டி சிரித்தவளாக பையிலிருந்த ஏதோ ஒன்றை எடுத்து நீட்டப் போக அடுத்த கணமே அவளுடன் போய் அந்தப் புத்தகமும் தரையில் விழுந்தது.

"டேய் ரிஷி.." என மித்ரன் அதிர்ந்ததெல்லாம் ஓர் வினாடியே என அவளது கற்றை முடியை கையால் பற்றி அவளை தூக்கி நிறுத்தியவன் மீண்டும் மதிக்கு கன்னத்தில் அறைந்த வேகத்தில் மென்மையான பெண்ணவளின் பட்டு உதடு கிழிந்து இரத்தம் கசிந்தது.

கண்களையிருட்டிக் கொண்டு வர அப்படியே தரையில் மயங்கி வீழ்ந்தாள் பேதை.

"டேய் பைத்தியகாரனே.. அறிவில்லையாடா..." என்று மித்ரன் திட்டியதெல்லாம் அவனது செவியில் விழவில்லை.

பவித்ராவிற்கு எழுந்து நிற்கக் கூட முடியாத நிலை. மதியை கண்கள் கலங்க பார்த்திருந்தவளுக்கு தன்னால் தானே அவளுக்கிந்த நிலை என குற்றவுணர்ச்சியும் மேலோங்கியது.

ஓடிச் சென்று மதியை தாங்கியது என்னவோ மித்ரன் தான். "மதி..மதி.." என கன்னம் தட்ட ம்ஹூம் அவளிடம் அசைவில்லை. அதைப் பார்த்துக் கூட மனம் இரங்காமல் அவளது கணவன் நின்றிருந்தது தான் வேதனைக்குரிய விடயம்..

அவசரமாக நீரெடுத்து வந்து அவளின் முகத்தில் தெளிக்க சிறு அசைவு அவளிடம். மங்கலாக தெரிந்த இடத்தை மீண்டும் கண்களை மூடித் திறந்து பார்த்தாள். எழுந்து கொள்ள முயற்சித்தவளுக்கு அது முடியாமல் போக மீண்டும் தடுமாறி விழப் போனவளை மித்ரன் பிடிக்கப் போக அவனை கையை நீட்டி தடுத்திருந்தவள் தானாக எழுந்து நின்றாள். சுவரை பிடிமானத்துக்காக பிடித்து நின்றவளுக்கு கன்னம் எரிந்தது. வலியில் முகத்தை சுளித்தவள் கன்னத்தை தொட அவளது வாயருகில் கசிந்திருந்த இரத்தம் விரலை நனைத்தது. அதைப் பார்த்து கசந்து புன்னகைத்தவள் தன்னவனை பார்க்க, அவளுக்கு இந்த வலியும் போதாது என நினைத்தானோ இத்தனை நாட்களும் தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் அங்கே ஓர் இதயம் துடிப்பதறியாது வார்த்தைகளால் பொசுக்கி விட்டான்.

அவளருகில் மின்னலென வந்தவனைக் கண்டு பயத்தில் ஓரெட்டு பின்னே சென்றவளிடம் "எங்கடி போன இவ்வளவு நேரமும்...?" என்றான்.

எதற்காக இந்த கோபமும் தண்டனையும் என்பதறியாதவள் "வெ.. வெளியே கொஞ்சம் வேலை இ..இருந்துச்சு.."என்றாள் அங்கே வீசப்பட்டு கிடந்த புத்தகத்தை வலியுடன் பார்த்தவாறு.

"அறிவில்லையாடி.. யூஸ்லெஸ் ஃபெலோ.. அங்க ஒருத்தி கர்ப்பமா முடியாம நிக்கிறா.. இவ என்னடான்னா அழகா அழங்கரிச்சிட்டு வெட்டியா ஊர் சுத்திட்டு வராலாம்..." என வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

அந்த வெட்டியில் சுருக்கென்று கோபம் வர மதியோ "நான் ஒன்னும் வெட்டியா ஊர் சுத்திட்டு வரல.." என முகத்தை கோபத்துடன் திருப்பியிருந்தாள்.

அதில் அவனோ "அப்படியே அறைஞ்சேனு வை..."என மீண்டும் புறங்கையை நீட்ட அவனை தடுத்திருந்தான் மித்ரன்.

தங்களுக்கு தீர்வைத் தராமல் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதில் கடுப்பானவன் ரிஷியிடம் "மொதல்ல உள்ள போய் பேசிக்கலான்டா .. அவ வேற முடியாம நிற்கிறா.." என பவித்ராவை பார்த்தான்.

ரிஷி மேலிருந்த கோபத்தில் "ஏன் அவங்களுக்கு உள்ள போகத் தெரியாதா..?" என்றதும் இப்போது மூவருக்கும் கோபத்தில் மூக்கு விடைத்தது.

அதில் அவனது வார்த்தைகள் தடித்தன.

"என்னடி செய்றதையும் செஞ்சிட்டு திமிரா வேற பேசுறியா. அது சரி உனக்கெல்லாம் இந்த மாதிரி நிலைமை வந்திருந்தா தானே அவட வலி புரியப் போகுது..." என பவித்ராவின் வயிற்றை சுட்டிக் காட்டிவனின் பேச்சில் இவ்வளவு நேரமும் வாயடித்தவளின் வாய் கப்பென மூடிக் கொண்டது.

என்ன சொல்லி விட்டான்..? தாலி கட்டியவனின் பழிச் சொல்லில் நெஞ்சு காந்தியது. பவித்ராவிற்குமே அவனது பேச்சு அதிகபட்சமோ எனத் தோன்றியது. மித்ரனை அழைத்து இருவரையும் கண்காட்ட அவனும் "மச்சி விடுடா " என தோய்ந்து போன குரலில் கூற "இல்ல மச்சான்.. வந்ததே லேட் இதுல எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி பேசுவா..!? படிப்பறிவு இருந்தா தானே இந்தப் பட்டிக்காட்டுக்கு அடுத்தவன்ட கஷ்டம் புரியப் போகுது.. இவளையெல்லாம் கல்யாணம் பண்ணின அன்னைக்கே தொறத்தி விட்டிருக்கனும்... " என்றவனை மித்ரன் தடுக்கத் தடுக்க மீண்டும் "என் அப்பா என்னடான்னா இவள என் தலைல கட்டி விட்டுடாறு.. இவளால தெனம் தெனம் நான் நரக வேதனைய தான் அனுபவிக்கிறேன்..என் ஃப்ரென்ஸ் கிட்டயும் இன்னைக்கு ஸ்டாப் முன்னாடியும் நான் அவமானப்பட்டு நின்னதெல்லாம் இவளால தான்..ச்சே..." என இன்னும் என்னவெல்லாம் பேசினானோ தெரியவில்லை. அதனைக் கேட்க முடியாமல் காதை இறுக மூடியவளுக்கு, இருந்த தெம்பெல்லாம் வடிந்த உணர்வு.

இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போலிருந்தது. இனி எத்தனை நாட்களுக்கு இந்த சுடு வார்த்தைகளையெல்லாம் கேட்டு வாழ வேண்டிய அவல நிலையோ என தன்னை நினைத்தே அவளுக்கு கழிவிரக்கம் தோன்றியது.

தாங்க முடியாமல் போக முகத்தை அழுந்த துடைத்தவள் கண்ணீருடன் காற்றை குவித்து ஊதினாள்.

பின் இவர்களைத் தாண்டிச் சென்று கதைவைத் திறக்க அது இன்னுமே பூட்டுடன் இருந்தது.

வலிகளை மறைத்தவளாக திரும்பியவளிடம் "சாவி உன்கிட்ட தானேம்மா.." என்றான் மித்ரன்.

அவனைப் பார்த்து வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டவள் "இங்க தானேண்ணா சாவியை வச்சிட்டுப் போனேன்..." எனறவளின் பதிலில் மூவரினதும் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய்..

"அதை சொல்லிட்டுப் போய்க்கனும்.." என இன்னும் அதே அழுத்தத்துடன் ரிஷி கூற, அவனைத் தவிர்த்தவள் மித்ரனிடம் "யாருண்ணா சொல்லாம போனா..? இதோ இவருக்கு கால் பண்ணினேன். ஆனால் சார் அதை அட்டன் பண்ணல்ல.. அண்ணி களைச்சுப் போய் வருவாங்க, சாவிய தேடுவாங்கனு தெரிஞ்சும் சொல்லாம போறது சரியில்லையேனு சாவியை இதோ இங்க வச்சிட்டுப் போறேனு மெசேஜ் அனுப்பிட்டுத் தான்ணா போனேன்.." என்றவள் சொன்னதுமல்லாமல் வைத்த இடத்திலிருந்து சாவியை எடுத்தும் தந்தாள்.

அப்போது தான் ரிஷிக்குமே நினைவில் வந்தது. காலையில் அவளது எண்ணிலிருந்து அழைப்பு வர வேண்டுமென்றே கட் பண்ணி விட்டான். ஃபோனில் பேசுமளவுக்கு அவர்களிடம் நெருக்கம் இருந்ததில்லை.

அவள் மெசேஜ் அனுப்பியும் இருந்த கடுப்பில் அந்த நொடிபிகேஷனை இக்னோர் பண்ணியவனாக வேலையில் மூழ்கியதன் விளைவு இதோ இங்கே ஒருத்தியின் இதயம் இரத்தம் வராமல் கிழிக்கப்பட்டது.

இவன் அந்த குறுஞ்செய்தியை பார்த்திருந்தால் இந்த தேவையில்லாத வாக்குவாதமும் சண்டையும் வந்திருக்குமா..?

அவளிடமிருந்து சாவியை வாங்கிய மித்ரன் வீட்டை திறந்து பவித்ராவை கை தாங்கலாக அழைத்துச் செல்ல பவித்ராவோ "சாரிம்மா.." என உணர்ந்து மன்னிப்பு கேட்க மதிக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தலையை சட்டென குனிந்து கொண்டவள் அப்படியே உள்ளே நுழைந்து கொண்டாள்.

இரத்தக் கறையுடன் உதடு கிழிந்து நின்றிருந்தவளின் அழுத்தம் முதன் முறை ரிஷியை பாதித்திருந்தது. தன்னிடமே தவறென உணர்ந்தவன் தலையில் தட்டிக் கொண்டே திரும்பிப் பார்க்க அங்கே அவளைப் போலவே அநாதரவாக கிடந்தது அவன் தட்டிவிட்ட புத்தகம்.

அதனை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனை வரவேற்றதோ மூடியிருந்த மதியின் அறைக் கதவு.

பெருமூச்சுடன் தனதறை வந்தவன் அந்த புத்தகத்தை திருப்பிக் கூட பார்க்காமல் மேசையில் வைத்தது விதி செய்த சதியோ..!?

...

உள்ளே வந்தவள் கதவு நிலையில் சாய்ந்து ஓர் பொட்டு அழுது தீர்த்து விட்டாள்.

ரிஷியோ கொஞ்சம் நிதானமாக சிந்தித்தான். அப்போது அவள் மேலிருந்த கோபம் அவளது அழுத்தத்தைப் பார்த்து முதன் முதல் விலகியதன் விந்தையை என்னவென்று சொல்வது. ரவியே தப்பாகப் பட்டான் இப்போது. ஆனால் இன்னுமே அவன் மேலிருக்கும் மொத்தத் தவறையும் அவன் உணர்ந்திருக்கவில்லை.

இங்கே மீண்டும் வெளியே வந்த ரிஷி அவளறையைப் பார்க்க அவள் வெளியே வருவதற்கான சுவடுகள் தெரியவில்லை.

வழமையாக தன்னைச் சீண்ட சரி வெளியே வருபவள் இன்று அறையே கதியெனக் கிடக்க ஏதோ போலிருந்தது அவனுக்கு. தான் பேசியது அதிகபட்சமோ என்று கூட யோசித்தான். பின் அவனும் சாப்பிட மனம் வராமல் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என தூங்கிப் போனவனுக்காக காத்திருந்ததோ அதிர்ச்சி...!


தொடரும்...


தீரா.
 
Top