• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்..

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
870
குற்றாலம் குற்றாலநாதர் கோவில்

குற்றாலநாதர் தலத்தின் சிறப்பு
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் எப்படி மலையாக இருக்கிறாரோ, அதே போல் குற்றாலநாதர் தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம்.

திருக்கயிலையில் சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தைக் காண மூவுலகத்தவரும் கூடி இருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. இதைக் கண்ட ஈசன், குறுமுனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி பணித்தார். ஒப்புக்கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘ஐயனே! நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென் திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்’ என்றார்.


தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம், ‘தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல். அங்குள்ள திரிகூட மலையில், எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்’ என்று ஈசன் வாக்களித்தார். அகத்தியர் தென்திசையை வந்தடைந்தார். பூமி சமநிலை அடைந்தது. ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர். திரிகூட மலை என்பது ‘திருக்குற்றாலம்’ ஆகும்.

இந்தப் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக சிவ தலம் ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். ஆனால் அருகில் எந்த சிவத்தலமும் இல்லை. எனவே சிவ வழிபாடு எப்படிச் செய்வது என்று வருத்தம் கொண்டார் அகத்தியர். இந்த நிலையில் திரிகூட மலையில் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. பெருமாளை தரிசிக்க எண்ணிய அகத்தியர் கோவிலை நெருங்கினார்.

உடம்பெல்லாம் திருநீறு தரித்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த அகத்தியரை சிலர் ஆலயத்திற்குள் அனுமதிக்கவில்லை. ‘சைவ மத அடையாளம் தரித்தவர்களை உள்ளே விடமுடியாது’ என்று தடுத்து விட்டனர். அகத்தியர் செய்வதறியாது திகைத்துப்போனார். தன் மனக்குமுறலை கொட்டுவதற்காக அருகில் இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தேடி வந்தார். திரிகூட மலையில் தனக்கு நடந்தவற்றை முருகப்பெருமானிடம் கூறி, தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

அகத்தியர் முன்பாக தோன்றிய முருகப்பெருமான், ‘வைணவ அடியவர் போல் சமயச் சின்னம் தரித்து கோவிலுக்குள் சென்று, பஞ்சாட்சரம் ஓதி விஷ்ணுவை, சிவலிங்கமாக்கி வழிபடுங்கள்’ என்று கூறி மறைந்தார்.

முருகப்பெருமான் கூறியபடி, தன் நெற்றியில் திருநாமம் இட்டு, மார்பில் துளசி மாலை அணிந்து வைணவ அடியவர் போல் திருக்குற்றாலத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் சென்றார் அகத்தியர். பின்னர் அங்கிருந்த அர்ச்சகரிடம், ‘பெருமாளுக்கு மானசீக பூஜை செய்ய வேண்டும். சிறிது நேரம் வெளியில் இருங்கள்’ என்று கூறி, கருவறைக் கதவை மூடினார். கருவறையில் நின்ற கோலத்தில் இருந்த பெருமாளின் தலையில் கை வைத்து அழுத்தி ‘குறுகுக... குறுகுக...’ எனக் கூறி சிவபெருமானை நினைத்து தியானித்தார்.

என்ன ஆச்சரியம்! பெருமாளின் திருமேனி குறுகிப்போய் சிவலிங்கமாய் மாறிப்போனது. சிவனை துதித்து வழிபட்டார் அகத்தியர். வழிபாடு முடிந்ததும் கருவறைக் கதவைத் திறந்து வெளியேறினார். அப்போது கருவறையில் பெருமாளைக் காணவில்லை. சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கோபம் கொண்டனர். அகத்தியரை வசை பாடினர்; தாக்கவும் முயன்றனர். அதற்குள் அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட்டார். அது அவர்களைத் தாக்கியது. இதனால் அவர்கள் அகத்தியரிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர்.

அவர்களிடம் அகத்தியர், ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்று கூறினார். அந்த விஷ்ணுவே இன்று, ‘நன்னகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இதையடுத்து அங்கிருந்தே ஈசனின் திருமணக் கோலத்தை கண்டு களித்தார் அகத்தியர். இத்தல சிவபெருமான் அகத்திய முனிவரால் ‘குற்றாலநாதர்’ என்று அழைக்கப்பட்டார். பெருமாளைச் சிவனாக மாற்ற, தன் கைகளால் தொட்டதால், குற்றாலநாதரின் தலையில் அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்துள்ளதை இன்றும் காணமுடியும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘திரிகூட மலை’ என்று அழைக்கிறார்கள். ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும். ‘கு’ என்பது பிறவிப்பிணி. ‘தாலம்’ என்பது தீர்ப்பது. மனிதனின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர் குற்றாலநாதர்.

இந்த ஆலயத்தில் தல மரம் குறும்பலா. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் எப்படி மலையாக இருக்கிறாரோ, அதே போல் இந்த தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். இங்கு குறும்பலா நாதருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. குறும்பலா பதிகம் பாடியுள்ளார் சம்பந்தர். இந்த பலா மரத்தின் கிளைகள், கனிகள், சுளைகள், வித்துக்கள் என யாவும் சிவலிங்க வடிவமாகவே உள்ளது. ‘சுளையெலாஞ் சிவலிங்கம்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி.

இந்த ஆலயத்தின் நான்கு வாசல்களும் நான்கு வேதங்களாக விளங்குகின்றன. சிறிய அழகிய கோபுரம். குற்றாலநாதர் நடுவே கோவில் கொண்டு விளங்க, அவருக்கு வலதுபுறம் குழல்வாய் மொழியம்மையும், இடதுபுறம் பராசக்தியும் கோவில் கொண்டுள்ளனர். ஆலயம் சங்கு வடிவிலானது. அம்பாளும், சிவனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று குற்றாலநாதருக்கும், குழல்வாய் மொழியம்மைக்கும் அகத்தியர் சன்னிதி அருகில் திருமணம் நடைபெறும். ஈசனும், அம்பாளும் அகத்தியருக்கு திருமணக் காட்சிக் கொடுக்கிறார்கள்.

இங்குள்ள பராசக்தியே உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பீடத்தை ‘தரணிபீடம்’ என்கிறார்கள். பராசக்தியின் சன்னிதியில் தாணுமாலயன் பூந்தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது. பராசக்தியே இங்கு எழுந்தருளுவதால் நவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். ஆலயத்தில் விநாயகர், முருகர், சூரியன், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, பஞ்சபூத லிங்கம், சனீஸ்வரர், சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், துர்க்கை, கயிலாசநாதர், அறுபத்து மூவர், நன்னகரப் பெருமாள் என பல சன்னிதிகள் உள்ளன.

நோய் தீர்க்கும் தைலம்

தலையைத் தொட்டு அழுத்தியதால் ஈசனுக்கு இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது. பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேகவைத்து, அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கிறார்கள். இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.

தினமும் அர்த்த ஜாம பூஜையில் குற்றால நாதருக்கு ‘குடுனி நைவேத்தியம்’ செய்யப்படுகிறது. அதாவது சுக்கு, மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து நைவேத்தியம் செய்கிறார்கள். அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும் இந்த கசாயத்தை வாங்கிக் குடித்தால் நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தென்காசிக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் குற்றாலம் உள்ளது.
 
Top