• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 06

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 06


ஆபிஸில் இருந்த ஆதவிற்கோ மனதில் பல குழப்பங்கள். அனைத்தும் அவளைப் பற்றித் தான்.

முதலில் அவனுக்குத் தோன்றியது என்னவோ நல்ல வசதியான குடும்பத்தில பிறந்தவள் தானே அவள். அப்படி இருக்க அவளின் நடத்தைகளில் அதன் வெளிப்பாடுகள் தெரிவதில்லையே.. என்று நினைத்த ஒரு மனமே மாறி "ஒருவேளை தன்னை ஏமாற்ற நினைக்கிறாளோ...?" என்றும் சிந்தித்தது. அதில் உடல் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

அதனை அவனால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அவளது முகத்தில் நடிப்பின் சாயல் இருப்பதில்லையே. உண்மையான வலி இருப்பதை நினைத்தவனுக்கும் மனம் ரணமானது. அவள் தன்னை ஏமாற்றக் கூடாது என ஆழ்மனம் கூச்சலிட்டது. அவனின் சிந்தனையை கலைத்ததோ விக்ரமின் சத்தம்.

"மே ஐ கம் இன் சார்...?"

"எஸ் யு கேன்.."

ஆதவ் தன்னையே பார்த்திருப்பதைப் பார்த்து "சார் இதுல சைன் பண்ணனும்.." என கோப்பொன்றை நீட்ட

"ம்ம் வச்சிட்டு போங்க.." என்றுவிட்டு தலைக்கு பின் கைகளைக் கோர்த்து அப்படியே ஆசனத்தில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டான்.

விக்ரமிற்குமே ஆச்சரியம் தான், வேலை விடயத்தில் இவன் இப்படியெல்லாம் தாமதிக்கமாட்டானே என்று. இருந்தும் அவனின் நிலையை புரிந்து கொண்டவனாக மனம் கணக்க வெளியே வந்து மற்றவர்களிடம் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி விட்டே சென்றான்.


...


தன் தாயின் மாதாந்த செக்கப்பிற்காக ஹாஸ்பிட்டல் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் அம்மு. மனதில் புது குதூகலம் பரவ பரவசமாக தயாராகிக் கொண்டிருந்தவளின் மனம் முழுக்க அவளவனைப் பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தன்னுள்ளே தவிக்கும் பெண்..!!

இறுதியாக தன்னவனைக் கண்ட நாளைச் சிந்தித்தவளுக்கு மனம் பாரமாகியது. இன்றுடன் ஒருமாதம் கடந்திருந்தது. மீண்டும் இன்று அவனைக் காணச் செல்லும் ஆர்வத்தில் இருந்தவளுக்கு சந்தோஷத்தில் கண்களும் கலங்கி விட்டன. திரும்பி ஒருமுறை கண்ணாடியில் தன்னை முழுவதுமாக பார்த்தவள் திருப்தியுடன் வெளியேறினாள்.

படியிறங்கி வந்து கொண்டிருந்தவளிடம் "கண்ணா சாப்பிட்டு போடா.." எனக் கூறிய தந்தையின் அருகில் வந்தவள் அவரை கழுத்துடன் கட்டிக் கொண்டு "வேணாம்பா..ஆல்ரெடி லேட்டாகிட்டு..." என்றவாறு தாயுடன் சிட்டென பறந்து விட்டாள்.

அவர்கள் வந்திருப்பதோ சென்னை சிட்டி ஹாஸ்பிட்டலிற்கு. வெகுநேரம் நடந்து வந்ததால் களைப்பான அவளது தாயார் அங்கிருந்த ஆசனத்தில் அமர இவளும் உடன் இருந்து கொண்டாள்.

திடீரென மனம் தடதடக்க திரும்பியவளின் கண்ணில் பட்டதோ அவசரமாக டாக்டர் கோட்டுடன் செல்லும் ஒரு ஆடவன்.

பெருமூச்சுடன் திரும்பியவள் சுற்றும் முற்றும் பார்க்க அங்கே சற்றுத் தூரத்தில் தாதியொருவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். சட்டென தாயைப் பார்க்க அவரோ வந்த களைப்பில் உறங்கி இருக்க, எழுந்து அவரருகில் சென்றாள்.

"எஸ்கியூஸ் மீ" என்ற சத்தத்தில் திரும்பிய தாதி அம்முவைப் பார்த்து புன்னகைக்க அவளோ "டா..டாக்டர் தீக்ஷன்..?" என கேள்வியாய் நிறுத்தியவளிடம் "அவரு இப்போ தான் ஒரு எமெஜென்சி கேஸ் வரவும் இந்தப் பக்கம் போனார்..." என இவ்வளவு நேரமும் அவள் பார்த்திருந்த திசையைக் காட்டி விட்டார்.

"ஓஓ தெங்ஸ்..." என திரும்பி நடந்தவளின் மனமோ "அப்போ நம்மாள் தான் இந்தப் பக்கம் அவசரமா போனதா..?" என சிரித்துக் கொண்டது.

பின் தாயை வழமையாக செக்கப் பண்ணும் காடியோலொஜிஸ்டிடம் அழைத்து சென்று பரிசோதித்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.


..


இதற்கு மேலும் ஆபிஸில் இருக்க முடியாமல் தன் கோட்டை எடுத்து சுட்டு விரலால் பிடித்து முதுகுப் பின் போட்டுக் கொண்டே கிளம்பி விட்டான் ஆதவ் க்ரிஷ்.

அவன் ஆபிஸில் இருந்து இடையில் வெளியேறுவது இதுவே முதற் தடவை. விக்ரம் உட்பட அனைவரும் அவனை கேள்வியுடன் பார்த்திருந்தாலும் அவன் ஒன்றையும் கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை.

இன்று ஏனோ அவனது மனம் நிலையில்லாமல் தவிக்க அவன் வந்தது என்னவோ தன்னில்லத்திற்குத் தான்.

வீட்டினுள் வந்தவன் முதலில் தேடியதோ தன் மனைவியை. பார்வையை சுற்றி அழைய விட்டவனின் கண்களில் தான் ஏமாற்றமோ...!? அவள் அவனின் விழிகளில் தென்படவில்லை.

படியேறி சென்றவன் ஆவலுடன் அவளறையைத் திறக்க அதுவும் வெறுமையாக அவனை வரவேற்றது. வேலை செய்பவர்கள் எல்லாம் பகல்வேளை என்பதால் தங்கள் இல்லங்களிற்கு சென்றிருக்க அவள் மட்டும் அவனது கண்களில் படவில்லை.

அவனுள்ளோ திடீரென பரபரப்பு தொற்றிக் கொள்ள வீட்டில் அனைத்து இடங்களிலும் ஒன்று விடாமல் தேடினான். ம்ஹூம் அவளைக் காணவில்லை. ஒருவேளை வீட்டை விட்டு சென்று விட்டாளோ என்பதை நினைக்கையிலே நெஞ்சம் அழுத்தியது. வலது கையால் இடது பக்க மார்பை தடவி விட்டவன் வெறி பிடித்தவன் போலத் தான் பரபரத்தான்.

இருந்த கலவரத்தில் அவன் ஒன்றை சிந்திக்க தவறி இருந்தான். அவள் ஓட வேண்டி இருந்திருந்தால் இவன் செய்த கொடுமைக்கு திருமணமான அன்றே சென்றிருக்க வேண்டுமல்லவா..?? அதுவும் அவனின் காவலாளிகளைத் தாண்டி..எப்படி சாத்தியம் இது..?

ஆவேசமாக ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்ச இறுதியாக தனதறை வந்து இடுப்பில் கைகுற்றி தலையைக் கோதியவாறு பால்கனி வந்து பார்த்த பின்னே அவனுக்கு சீராக மூச்சு வெளிவந்தது.

ஆம் அங்கே இருந்த தோட்டத்தின் கல்பெஞ்சொன்றில் இரு கால்களையும் கட்டிக் கொண்டு முழங்காலில் தலையை வைத்தவளாக அமர்ந்திருந்தாள்.

அவளின் பக்கவாட்டுத் தோற்றமே அவனிற்கு தெரிந்தது. இளம் சிவப்பு நிற சாரியணிந்திருந்தவள் குளித்திருப்பாள் போலும். அவளது பஞ்சு போன்ற அலையலையான கூந்தலோ கீழே புற்களை தடவிக் கொண்டிருந்தன. பார்க்க அப்படியே ஓவியம் போல் காட்சியளித்த தன் உடமையை முதன் முதல் ரசித்துப் பார்த்தான் வேங்கை.

பின் தடதடவென படியிறங்கி சென்றவன் தோட்டத்திற்கு வந்திருந்தான். சத்தம் எழுப்பாமல் அவளருகில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தவனின் கண்களிலோ மென்மை குடியேறி இருந்தது.

நேரம் செல்லச் செல்ல தனதருகில் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவளுக்கோ மயக்கம் வராத குறை. அவளிற்கு மிக மிக அருகில் அவன் நின்றிருந்தான்.

உடல் பயத்தில் வாரித் தூக்கிப் போட உதடு துடிக்க அமர்ந்திருந்தவளின் கண்களோ கண்ணீரை வெளியிட்டன.

ஆதவோ மனதில் "இவ ஒருத்தி எடுக்கெடுத்தாலும் டேம்ம தெறந்து விடுறா..." என்று சலித்துக் கொண்டு அடுத்து செய்ததெல்லாம் அதிகபடியே.

அமர்ந்திருந்தவளின் காலில் கை வைக்கப் போக அதுவோ சட்டென தரையிறங்கியது. அவன் நினைத்தது நடந்ததில் உதட்டுக்குள் சிரித்தவன் மெதுவாக அவளருகில் அமர்ந்து ஒன்றுமறியாத பாப்பா போல அவள் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான்.

உயர் மின்சாரம் தாக்கியது போல கண்களை அகல விரித்து உதடு பிரித்து அதிர்ச்சியில் உறைந்து போனாள் பெண்ணவள்.

இமை மூடியிருந்தாலும் அவளின் பாவனையை உணர்ந்தவன் அவளறியா வண்ணம் கடுகளவு உதட்டைப் பிரித்து சிரித்தவன் மேலும் அவளை சோதிக்க விரும்பாமல் எழுந்து சென்று விட்டான்.

நடப்பது கனவா நனவா என்பது புரியாது இருந்தது என்வோ அக்ஷய ப்ரியா தான்.

தனதறை வந்தவன் மீண்டும் பால்கனித் தடுப்பினூடாக அவளைப் பார்க்க அவள் அதே நிலையில் இருப்பது கண்டு தலையில் தட்டி சிரித்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஏனோ அவளை சீண்டிப் பார்ப்பதில் மனம் இலகுவானது.

...


குளித்து முடித்து விட்டு வந்த ஆதவோ லெப்டெப்புடன் அமர்ந்திருக்க அவன் நினைவுகளோ பின்னோக்கி சென்றன.

ஆபிஸில் அவள் நடிக்கிறாளோ என்று நினைத்து இறுகிப் போய் அமர்ந்திருந்தவனின் அதே உள்ளமே முதன் முதலாக அவளுக்கு சார்பாகவும் சிந்திக்கத் தொடங்கியது.

அவளுடைய தந்தை செய்த தவறிற்கு இவள் என்ன செய்வாள்?அது மாத்திரமின்றி இவளுக்கு அவனின் கொடூர செயல்கள் தெரியுமோ என்னவோ? அவனறிந்த மட்டில் இவள் இத்தனை காலமும் தன் தாத்தா பாட்டியுடன் பாரினில் வளர்ந்தவள் அல்லவா.. அப்படி இருக்க இவளுக்கு எதுவும் தெரியாது என உறுதியாக நம்பினான். இந்த நம்பிக்கை நாளை இருக்கப் போவதில்லை என்பதை பாவம் அவன் அறிந்திருக்க மாட்டான்.

ஏனென்றால் அவளின் நடத்தை அப்படி இருந்தது. தந்தை பணக்கார திமிரு பிடித்தவன் என்றால் இவளோ திமிரில்லாத சாந்தமானவள்.ஒருவேளை தாத்தா பாட்டியின் வளர்ப்பு இப்படித் தான் இருக்குமோ ?என அவளுக்காக வாதாடியது அந்த மனது...

இவ்வளவு நேரமும் கோபத்தினால் சிவந்திருந்த அவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலையை அடைய, அவளின் சிந்தனையில் மூழ்கி இருந்தவனுள் அனுமதியில்லாமல் நுழைந்து கொண்டார் அவனது தாயார். அவரும் இவளை மாதிரி தானே. வசதியானவர் எனினும் சாந்தமாக இருப்பவர். இன்று அவர் இல்லை என்பது நிதர்சனம். ஆனால் அவரின் குணத்தை ஒத்தவள் இருக்கிறாளே.அதனாலே அவளைப் பார்க்க வந்து விட்டான்.

குளித்து விட்டு வந்த ஆதவோ தன்னையறியாமல் பால்கனியை எட்டிப் பார்க்க அவளோ இன்னும் அதே போல் திக்பிரம்மை பிடித்து அமர்ந்திருந்தாள். அவளை உற்று நோக்கியவனுக்கு ஏதோ நெருட அவளிருக்கும் இடத்தை நோக்கி ஓடினான்.

அவன் விட்டுச் சென்ற போது இருந்த அதே வாக்கிலே இப்போதும் இருக்கிறாள். ஆனால் கண்கள் மட்டும் மூடிய நிலையில்.

நெற்றி யோசனையில் சுருங்க அவளின் தோளைத் தொட்டவனின் கைகளிலே சரிந்தாள் காரிகை. கையில் பிடிமானம் இல்லாமல் போக சட்டென தன்னில் அவளை சாய்தவன் அப்படியே தூக்கிக் கொண்டு தனதறை விரைந்தான். கதவை காலால் தள்ளித் திறந்தவன் கட்டிலில் கிடத்தி விட்டு கன்னம் தட்டி அவளை எழுப்ப அவளிடம் அசைவில்லை.

அவளது கன்னம் தந்த மென்மையில் கிரங்கி நின்றவன் பின் தன் எண்ணப்போக்கை நினைத்து தன்னையே கடிந்து கொண்டு நீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க சிறு அசைவு அவளிடம்.

விழிகளை திறந்தவள் முதலில் அறையை சுற்றி பார்வையைச் செலுத்தினாள். அரைச் சுற்று சுற்றி வந்தவளின் பார்வை ஓரிடத்தில் நிலைத்திருந்தது. அங்கே ஆதவின் புகைப்படம் பெரிதாக தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது தான் அது அவனது அறை என்பதே அவளுக்கு புரிய மறுபக்கம் திரும்பியவளை வரவேற்றதோ அவனின் வதனம். மூச்சை இழுத்துக் கொண்டவள் உடல் நடுங்க பட்டென கட்டிலை விட்டு துள்ளி எழுந்த வேகத்தில் விழப் போக, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவன் அவளது இறுதி செயலில் கை முஷ்டி மடக்கி தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கவும் அவள் கீழே விழப் போகவும் சரியாக இருந்தது.

ஆஆஆ என்று அலறிக்கொண்டே அவள் விழ சட்டென அவளது இடையில் கைகொடுத்து தாங்கி இருந்தான் காளை.

அவன் பிடித்த வேகத்தில் அவனின் தோளை இறுகப் பற்றி இருந்தவள் எங்கே விழுந்து விட்டோமோ என நினைத்து கண்களைத் திறக்க கண்ணீர் கோர்த்திருந்தது.

அக்கணம் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று சந்தித்துச் செல்ல முதல் சுதாரித்துக் கொண்டு விலகியது என்னவோ அக்ஷய ப்ரியா தான்.

அதற்குள் அவனை விட்டு அறையிலிருந்து வேகமாக வெளியேறி விட்டாள் மாது.

அவளது விலகலில் இன்னும் சினம் பொங்க நின்றிருந்தவனுக்கு தொலைபேசி அழைப்பு வர அட்டன் பண்ணியவாறு பால்கனிக்கு வந்திருந்தான்.

அங்கே அக்ஷய ப்ரியாவோ காரணம் தெரியாமல் ஒரு பொட்டு அழுது தீர்த்து விட்டாள். அப்படியே அழுதழுது ஓய்ந்தவள் கட்டிலிலே தலைசாய்த்து உறங்கியும் போனாள்.

...

தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் இறுதில் "வாட்..." என்று அதிர்ந்து சத்தம் போட்டான்.

"இதோ வரேன்" என பாதியில் அழைப்பை துண்டித்திருந்தவனின் முகம் ரௌத்திரத்தை தத்தெடுத்திருந்தது.



தொடரும்...


தீரா.
 
Top