• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 07

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 07


ஆதவின் ஆபிஸ்.


உயர் இரத்தக் கொதிப்பில் அமர்ந்திருந்தான் ஆதவ். அவனறிந்த மட்டில் அவனது முதல் தோல்வி. ஆம் அவனுக்கு கிடைக்கவிருந்த ப்ராஜெக்ட் ஒன்று இறுதிக் கட்டத்தில் கைமாறி தயாளன் குரூப்ஸ் ஒஃப் கம்பனிக்கு சென்றிருந்தது. எங்கே எப்படி தவறு நடந்தது என்பதை யோசிக்க யோசிக்க அவனுக்கு மண்டை சூடாகியதே தவிற தெளிவு கிடைத்த மாதிரி தெரியவில்லை. அனைத்தையும் பக்காவா ப்ளேன் பண்ணி அல்லவா செய்திருந்தான். அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்து போனது. தான் மதிப்பிட்டிருந்த கொடேசன் தொகை எப்படியோ தயாளனுக்கு தெரிந்து விட்டது என்பது.



விக்ரமுமே குழப்பத்துடனும் பயத்துடனும் தான் அமர்ந்திருந்தான். ஏனென்றால் வழமையாக விக்ரமுடன் இருந்து கொடேசன் தயாரிப்பவன் இந்தத் தடவை இது முக்கியமான ப்ராஜெக்ட் என்பதால் அவன் மட்டுமே களத்தில் இறங்கி தன் முழு உழைப்பையும் கொட்டி இருந்தான். அப்படி இருக்க இந்த விடயம் எப்படி வெளியே சிதறியது...?



இவன் மதிப்பிட்டிருந்த தொகையை விட சில மதிப்பெண்கள் தானே குறைவாக போட்டிருந்தார் தயாளன். ஆபிஸில் வேலை செய்பவர்கள் மீது அவனுக்கு துளியும் சந்தேகமில்லை. ஏனென்றால் இதற்கு முன் இப்படியான ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. அதுமட்டுமில்லாமல் இவனை மீறி எதுவும் நடந்து விடுமா என்ன...?



அப்போ, இடையில் ஏதோ கறுப்பாடொன்று தன்னிடம் விளையாடி இருக்கிறது என்பதை சிந்தித்தவன் பட்டென ஆசனத்தை விட்டெழும்ப விக்ரமுமே பயத்தில் எழுந்து கொண்டான்.



தலையைக் கோதி அங்கும் இங்கும் நடந்தவன் எல்லாவற்றையும் அசைபோட்ட படி அலசி ஆராய்ந்தவனுக்கு திடீரென கண்கள் மின் வெட்டினாற் போன்று பிரகாசித்தன. அடுத்த கணமே பாறையாய் இறுகிப் போன முகத்துடன் புயலென வெளியேறியிருந்தான்.



...





கோபம் அவன் கண்ணை மறைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். இதோ வாழ்வில் அடுத்த தவறை செய்ய தனதில்லம் வந்து விட்டான்.



அங்கே தன் கணவன் மிருகமாய் மாறி தன்னைத் தாக்க வருவதறியாது அக்ஷய ப்ரியா கண்மூடி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.



தடாரென கதைவை உதைத்துத் தள்ளியவனாக உள்ளே வந்தவன் கண்டதோ கண் மூடி இருப்பவளை.



"ஏய்..." என அந்த அறையே அதிர கர்ஜித்தவனின் குரலில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள் மாது.



பயத்தில் நடுங்கியவளாக அவனைப் பார்க்க அவனது முகமோ கோபத்தில் சிவந்து செந்தனலாய் மாறிப் போயிருந்தது.



"எழுந்திர்டீ..." என்றவன் ஓரெட்டில் அவளருகில் வந்து நிற்க உடல் வாரித்தூக்கிப் போட எழுந்து நின்றவளின் கால்கள் பயத்தில் கிடுகிடுத்தன.



அவளை அவன் நெருங்கி வர அவளோ அவனைப் பார்த்தவாறே எட்டுக்களை பின்னோக்கி வைத்துக் கொண்டே போனாள்.



ஒருகட்டத்திற்கு மேல் எட்டுக்களை எடுத்து வைக்க முடியாமல் போக சுவருடன் மோதி நின்றவள் திரும்பிப் பார்த்து விட்டு முன்னே திரும்புவதற்குள் அந்த அரக்கன் அவளை நூலளவில் நெருங்கி நின்றிருந்தான்.



அவன் கண்களின் சிவப்பும் உடலின் அனலுமே அவனது கோபத்தின் அளவைப் பறைசாற்ற இளகிய நெஞ்சம் கொண்டவளுக்கு இதயம் வெளியே தெரித்து விடுமளவு பயத்தில் நடுங்கியது.



ராட்சன் அவனோ அவளது தோள் புஜங்களை பிடித்து அழுத்தியவனாக "என்ன வந்த வேலையை பக்காவா முடிச்சிட்ட போல...?" ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.



அவளுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. அவனழுத்தியது வலிக்க உதடு துடிக்க தன் வேதனையை அடக்கியவளாக நின்றிருந்தவள்.."எ..என்ன்....?"என்று முடிப்பதற்குள்ளே ஓங்கி அறைந்திருந்தான் அவள் கன்னத்தில்.



வேங்கையவனின் வேகத்தில் சுருண்டு போய் கீழே விழுந்திருந்தாள் பெண்ணவள்.



என்ன நடந்தது என்பதை சிந்திக்க கூட முடியாமல் மூளை மரத்திருந்தது. தனக்கு அறைந்து விட்டானா..? என்ற நிதர்சனம் புரியவே அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன. புரிந்த நொடி கன்னம் ஊசி குத்தியது போல வலிக்க அழுகையில் நெஞ்சு காந்த கண்களை மூடித் திறந்தவள் அவனை கண்ணீருடன் பரிதாபமாக நிமிர்ந்து பார்த்தாள்.



அவளுக்கு இந்த வலியும் போதாது என நினைத்தானோ தன் கோபத்தை ஆற்ற அவளது மனதை உடைத்துக் கொண்டிருந்தான். அதில் அவன் மீதிருந்த காதலும் சில்லு சில்லாய் உடைகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.



மூக்கு விடைக்க அவளைப் பார்த்தவன் "யூ ப்ளடி சீப். இனி இப்படி என்னை நோட்டமிட்டு திருடி உன் அப்பனுக்கு போட்டுக் கொடுக்கிற வேலை பார்த்த, சாவடிச்சுருவன்..." என்றவன் ஓர் தடவை அவளை முறைத்து விட்டே வெளியேறினான்.



என்ன சொல்லி விட்டான் திருடியா?? நானா...?? நினைக்கையில் அழுகை வெடித்தது. வாயைப் பொத்திக் கொண்டு கதறியவளை தேற்றத் தான் யாருமில்லை. அவன் அறைந்ததில் கன்னம் சிவந்து கை தடம் பதிந்திருக்க அதில் உவர் நீர் பட இன்னும் காந்தியது. ஆனால் மனதில் பட்ட காயம் தான் அவளை வலிக்கச் செய்தது.



குழந்தை போல உதட்டைப் பிதுக்கி அழுதவளுக்கு என்ன நடக்கிறது?? எதற்காக இவன் இப்படி நடந்து கொள்கிறான்?? என்று தான் புரியவில்லை.



யாரோ என்றிருந்தாலும் இவளுக்கு மனமாரிப் போய் இருக்கும். தான் நேசித்தவன் தன்னை வதைப்பதைத் தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வேதனையில் துடித்தது. அவனுக்காக துடிக்கும் இதயம் இன்று அவனது செயல்களால் துடிப்பை நிறுத்த நினைக்கிறது...



கட்டுக்கடங்காத கோபத்துடன் வெளியேறிய ராட்சனோ அவளிடம் தொலைபேசி இல்லை என்பதையும் இங்கே வந்ததில் இருந்து அவள் வெளியே செல்லவில்லை என்பதையும் சிந்திக்கத் தவறிப் போனான்.



இதையெல்லாம் யோசித்து தன்னையே மன்னிக்க முடியாத நிலைக்கு அவனுள்ளாகப் போகும் நாளும் வெகு தூரமில்லை.



ஆபிஸிலிருந்து மதிய நேரமதில் வீட்டுக்கு வந்தவனுக்கு இன்னும் அவள் செய்த செயலை ஜீரணிக்க முடியவில்லை. இன்றைய சம்பவங்கவின் விளைவில் தாக்கப்பட்டிருந்தவனுக்கு தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு இன்று சம்பள நாள் என்பதும் மறந்து போனது.



உள்ளே அடியெடுத்து வைத்தவனை வரவேற்றதோ வீட்டு வேலைக்காரர்கள். நெற்றியை நீவி நிதானித்தவன் தனதறை சென்று வரும் போது கையில் வீற்றிருந்தன பணக் கற்றைகள்.



அனைவருக்கும் கொடுத்து முடித்தவனுக்கு தான் அந்த ஏடாகூடமான எண்ணமும் முளைத்திருந்தது.



மனதில் துள்ளலுடன் மரகதத்தை அழைத்து அக்ஷய ப்ரியாவை கீழே அழைத்து வரச் சொல்லி இருந்தான்.



அவளோ மறுபடியும் என்னவோ என விதியை நொந்தவளாக வந்து கொண்டிருந்தாள். முகத்தை அழுந்த துடைத்தவள் வெகுவாக தன் கன்னத்தை மரகதத்திடமிருந்து மறைத்திருக்க அதுவோ அவருக்கு படம் போட்டு காட்டி விட்டது. இருந்தும் தன் பெரியம்மாவிடம் வாய் விட்டு கேட்டு விடுவாரா என்ன..?



அக்ஷய ப்ரியா குழப்பத்துடன் வந்தாலும் ஆதவ்வை நிமிர்ந்து பார்க்குமளவுக்கு தைரியம் தான் இருக்கவில்லை. அச்சத்தில் மரகதத்தை ஒட்டி நின்றவளை ஆழ்ந்து பார்த்தான்.



அவளது பட்டுக்கன்னத்தில் அவனது ஐந்து விரல்களும் பதிந்து கன்றி சிவந்திருந்தது.



அவளது இந்த நடுக்கத்தை யோசனையோடு பார்த்திருந்தவன் பின் ஒரு தோள் குலுக்கலுடன் இதோ பணத்தை உறுவி அவளிடம் நீட்டி இருந்தான்.



அவள் புரியாமல் பணத்தைப் பார்க்க "மகாராணி வாய தெறந்து கேட்கமாட்டாளாமோ..." என அதற்கும் மனதில் வைது விட்டு "என் வீட்டுல இவ்வளவு நாளும் வேலைப் பார்த்திருக்கல்ல..அதுக்காகத் தான்..." என அவனது மனைவி என்ற ஸ்தானத்துக்கு விலை பேசி இருந்தவனைப் பார்த்து மரகதம் அதிர்ந்து விழித்தார் என்றால் அக்ஷய ப்ரியாவோ கண்களை மூடி தன்னை சமப்படுத்தியவளாக கையை நீட்டினாள்.



மரகதம் மனக்குமுறலுடன் அவனை பார்த்திருக்க மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவே இல்லை. அனைவரையும் பார்வையாலே போகும் படி கட்டளையிட்டவன் தன்னிடம் கையேந்தி நிற்பவளை ஆழ்ந்து பார்த்தவாறு பணத்தை வைக்க விரக்திச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள்.



அவனொன்று எதிர்பார்த்திருக்க அவள் கை நீட்டி தன்னிடம் பணம் வாங்கியது அவனுக்கு சுருக்கென தைத்தது.



அவளை காயப்படுத்த வந்தவனே காயப்பட்டு நிற்பதை ஏற்க முடியாமல் " என்ன போதுமா...?" என நக்கலாக கேட்டவனிடம் முதல் தடவை அவள் வாய் திறந்திருந்தாள்.



"நா..நான் வேலைப்பார்த்ததுக்கு இதுவே ஜா..ஜாஸ்தி தான்..." என்று சொல்லி விட்டு சென்றவளைப் பார்த்து அதிர்வது ஆதவ்வின் முறையாகியது.



"திமிர்..." என கோபத்தில் முனுமுனுத்தவன் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டான்.



இங்கே வந்தவளோ தன் நெஞ்சு சேலையை கையால் இறுகிப் பிடித்தவளாக சுவரில் சாய்ந்து அமர்ந்து இவ்வளவு நேரமும் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகையை ஆரம்பித்திருந்தாள்.



அனைத்து வேலையாட்கள் முன்பும் தானும் அவனுக்கொரு வேலைக்காரி என்பதை காட்டிவிட்டானே. மரண வேதனை அவளுள். "அம்மா" என கதறியவளுக்கு தாலி கையில் தட்டுப்பட அதனை எடுத்துப் பார்த்தவளுக்கு நெஞ்சு வெடித்து செத்து விடுவோமோ என்றிருந்தது.



எதற்காக இந்தத் தாலி..என எப்போதும் தன்னுள் கேட்பதை இன்று வாய்விட்டு கேட்டிருந்தாள். பின் கண்ணீரைத் துடைத்து விட்டு எழுந்து மேசையருகில் வந்தவள் அங்கிருந்த சல்லி முட்டியொன்றில் "என் தாலிக்கு கிடைத்த கூலி.." என்ற வாசகத்துடன் அதனுள் பணத்தை இட்டிருந்தாள்.



இப்படியே மாதங்கள் கடந்திருந்தன. வழமையாக அவனும் அவளைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக சம்பளம் வழங்க அவளும் தன் செலவு போக மீதியை சேமிக்கத் தொடங்கி இருந்தாள். தன்னிடமிருந்த இரண்டு சாரிகளையே மாறி மாறி உடுத்தி வந்தவள் கடைக்குச் சென்று தான் வழமையாக உடுத்தும் நார்மல் சேலைகளை வாங்கி வந்திருந்தாள். அவன் தான் அவளுக்கென்று இதைக் கூட செய்திருக்கவில்லையே. இருந்தாலும் அவள் வெளியே செல்லவெல்லாம் அவன் தடுக்கவுமில்லை. அப்போது தானே தன் ரணங்கள் ஆறும் என நினைத்திருந்தான். இவள் தயாளனிடம் தான் செய்யும் கொடுமைகளை சொன்னால் அவர் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்துவார் என்று அவன் நினைத்திருக்க மாறாக அவனுக்கு வந்த தகவலில் குழம்பித் தான் போனான்.



அக்ஷய ப்ரியாவிற்கென காட்ஸ் வைத்திருக்க அவர்கள் கூறியதோ இவள் இதுவரை தயாளனின் வீட்டிற்கு சென்றதில்லை என்றும் தான் தானமாக வழங்கிய ஆச்சிரமத்திற்கு சென்று வருவதாகவும் கூறி இருந்தனர்.



கண்களை சுருக்கி குழம்பியவனின் மனதில் ஏதோ தவறாய்ப்பட்டது.



***



அந்தப்பெரிய தெருவை, ஏதோ தனக்கு உடைமையான பாதை என நினைத்தாளோ, அங்கும் இங்கும் நெளிந்த வண்ணம் ஏதோ பாடலை வாயினுள் முனுமுனுத்துக் கொண்டு தனது ஸ்கூடியை ஓட்டிக்கொண்டு வந்தாள் அம்மு எனும் குறும்புக்கார பெண்.



வந்தவள் எதிரே வந்த இருசக்கர வண்டியை கவனிக்கவில்லை. அந்த வாகனத்தின் உரிமையாளனோ “இந்தாமா பொண்ணு வழி விடு..” என கூறிய ஒன்றும் அவள் செவிகளை தீண்டவில்லை போலும்.நேரே கொண்டு வந்து அவன் பைக் மீது தனது ஸ்கூடியை மோதி இருந்தாள். இவளோ சடுன் ப்ரேக் போட்டு “என்னாச்சு..?” என ஸ்டைலாக கூந்தலை ஒதுக்கிய வண்ணம் நடுவீதி என்பதையும் அறியாது அமர்ந்திருந்தாள் தன் ஸ்கூடியில்.



அப்போது தான் யாரோ முனங்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. கீழே குனிந்து பார்த்தவளை வரவேற்றதோ தரையில் நசுங்கிக் கிடக்கும் ஆடவனொருவன். அது வேறு யாருமில்லை. விக்ரமே தான்.



அவன் கிடந்த நிலையில் பக்கென சிரித்து விட்டாள் பெண்ணவள். பப்லிக் என்றும் பாராமல் வாய் வலிக்க சிரித்துக் கொண்டவளைப் பார்த்து கடுப்பானவன் “ராட்சசி கையை கொடுடி” என உரிமையுடன் தன் கையை நீட்ட அவனது பேச்சு சுவாரஸ்யமாக இருக்கவும் அவளும் கையை நீட்டினாள். அவளது கையைப் பிடித்து எழுந்து கொண்டவன் இடுப்பை பிடித்து அம்மா.. ஆஆஆ என தடவ அவளது உதடுகளோ இன்னும் விரிந்தன.


தொடரும்...



தீரா.
 
Top