• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 16

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 16

கண் பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்..
கன்பியூஸன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே..

சாரு பாட, 'ஓஹ் அதுவும் வேற பேசுதா..' என்ற பார்வை பார்த்து வைத்தான் மாரி.

"என்ன டா அப்படி பாக்குற?" சாரு கேட்க,

"பின்ன.. இவ்வளவு நாளும் நீ பேசுவ, பாடுவ, அண்ணா பதிலுக்கு முறைக்கும் திட்டும்.. எனக்கும் நல்லா நேரம் போகும்.. இப்ப திடிர்னு கண்லயே பேசிகிட்டா... மாரினாலே இளிச்சவாயன் தான?" என்று கேட்க,

"அடப்பாவி! உனக்கு நேரம் போக தான் நான் வந்து பேசிட்டு இருக்கேனா? வருஷகணக்கா தவம் இருந்து இப்போ தான் ஒரு லுக்கே கிடைக்குது.. அது பொறுக்கல இல்ல உனக்கு?" என்றாள் சாரு

ஆதி சம்மதம் கூறியதாய் சாரு வீட்டில் தெரிவித்து அது ஊராருக்கு தெரிந்து என ஐந்து நாட்கள் கடந்திருந்தனர்.

இந்த ஐந்து நாட்களிலும் ஆதியிடம் ஏற்பட்ட மாற்றதை சாருவுடன் உடன் இருந்த மற்றவர்களுக்குமே நன்றாய் புரிய ஆரம்பிக்க, இன்னும் சுருங்கத் தான் செய்தான் ஆதி சாருவிடம் பேசும் விஷயத்தில்.

அத்தனையும் கேட்டு தான் அமர்ந்திருந்தான் ஆதி. முன்பும் இப்படியான பேச்சுக்கள் இருக்கும்.. அதை முறைப்போடும் கோபத்தோடும் பல விதமாய் தான் கையாண்டிருக்கிறான்.

சட்டென்று அதை மாற்றி மாரி முன் அமர முடியவில்லை ஆதிக்கு. மாரி பேசி முடிக்கவும் ஆதி முறைக்க, பின் சாருவின் பதில் கேட்டு அதற்கு மேல் எப்படி முறைக்க?.. அவள்புறம் திரும்புவதே பெரும் பாடு அவனுக்கு.

சாருவை பார்க்கவும் முடியாமல் பார்க்காமல் இருக்கவும் முடியாமல் என அவன் அல்லாட, அதை எல்லாம் கவனிக்காமல் இருந்தது இவர்களின் வளவள பேச்சு.

"லொடலொடனு பேசாம வேலையை பாரு டா" ஆதி சொல்ல,

"எது நான் லொடலொடனு பேசுறேனா? அப்போ உங்க ஆளு?" என அங்கேயே வந்து நின்றான் மாரி.

"சபாஷ்! சரியான போட்டி!" சாரு சொல்லவும், ஆதி அவள்புறம் திரும்பியவன்,

"என்ன வேணும் உனக்கு?" என்று கேட்க, பேச்செல்லாம் காணாமல் போனது சாருவிடம்.

இதே கேள்வியை எத்தனை முறை கேட்டிருப்பான்? கேள்வியில் அத்தனை சூடு பறக்கும்.. கண்களில் கூட அவ்வளவு கண்டிப்பு இருக்கும்..

அதே கேள்வி இன்று இப்பொழுது அவ்வளவு மிருதுவாய் வர,

"ண்ணா உன் குரலுக்கு என்னண்ணா ஆச்சு? இது ஆதிண்ணா குரல் இல்லையே!" என்று மாரி கூறும் அளவுக்கு இருந்தது.

"இவனை வச்சுட்டு.." என்று முறைத்தவனால் சாதாரணமாய் பேசவும் முடியவில்லை.

தியாகுவுக்குமே ஆதியின் நிலைகண்டு அப்படி ஒரு சிரிப்பு வர, தன் வீட்டின் முகப்பிலேயே நின்றவன், ஆதி விழி பிதுங்கி நிற்கவும் அருகே வந்தான்.

"வாண்ணா!" மாரி தியாகுவை அழைக்க, அதில் தான் ஆதியைப் பார்ப்பதை நிறுத்தி நிஜம் வந்தாள் சாரு.

"என்ன டா பண்ணிட்டு இருக்குற?" மாரியை சிரிப்புடனே கேட்டான் தியாகு.

"நான் என்ன பண்ணேன்? இவங்க பண்றதை தான் பார்த்துட்டு இருக்கேன்" என்றான் மாரியும்.

"நாங்க மட்டும் என்ன பண்ணோம்? இல்ல என்ன தான் பண்ண விட்ட?" என்று சாருவே கேட்க,

"அடடா! ஆண்டவா!" என்றானது ஆதிக்கு.

"ஏ வாண்டு.. உனக்கென்ன வேலை இங்க?" சாருவையும் தியாகு கேட்க,

"ஹலோ! இன்னும் கொஞ்ச நாள் தான்.. அப்புறம் ஓனர் ஆப் த ஷாப்பு நானு.. என்கிட்டயே இந்த கேள்வியா?" என்றதில் ஆதி தான் பேச முடியாமல் மூச்சடைக்க நின்றான்.

"என்ன ஓனர்? சரி தானே? இனிமேல் உங்களோட முன்னேற்றதுல நான் ஏணியா தான் இருப்பேன்" என்றும் கூறிவிட, அதற்குமேல் முடியும் என்று தோன்றவில்லை ஆதிக்கு.

"நீ கிளம்பு முதல்ல.." என்று கூறியே விட்டான் அவளை நேராய் பார்த்து.. உதடு வரை வந்த புன்னகையை அடக்கியும் அடக்காமலுமாய்.

"ஏன் ஏன் ஏன்?" என வேகமாய் கூறியவள், சில நொடி யோசித்து,

"ஓஹ்! இவங்க முன்னாடி பேச ஷையா இருக்கா?" என்று கண்ணடித்து வேறு கேட்க,

"இப்போ நீ போறியா இல்ல நான் போகவா?" என்று விட்டான் நெஞ்சடைக்கும் அவள் கண் அசைவுகளில்.

"சரி சரி! இப்ப தான் ஏணின்னு சொல்லிருக்கேன்.. அதுனால போறேன்.. தியாகுண்ணா.. இந்த லுக்கு, சீனு, அப்புறம் முக்கியமா ரொமான்ஸ்ஸு அப்டிலாம் என்னனு இந்த மக்குக்கு எதாவது கிளாஸ் சேர்த்து விடுங்க.." என்றவள் மூவரும் சிரிப்பதை பார்த்து,

"இதுங்களோட இருந்து இருந்து மூளையும் தகர டப்பா ஆயிடுச்சுன்னு நினைக்குறேன்.. சாரு உன்னோட ட்ரீம்ஸ்லாம் இதை வச்சுக்கிட்டு எப்படி பலிக்க போகுதோ!" என தெளிவாய் உளறிக் கொண்டே சென்றாள் சாரு.

"என்ன டா கம்பளைண்ட் லிஸ்ட் ஓவராகிட்டே போகுது.." தியாகு ஆதியிடம் கேட்க,

"நீங்களுமா ண்ணா" என்றான் புன்னகை முகமாய் ஆதி.

"ப்பா! ஆதிக்கு இப்படிலாம் கூட சிரிக்க வருமா.. நான் பார்த்ததில்ல.. அழகா இருக்க டா" என்று தியாகு கூற,

"அய்யய்ய.. பொண்ணுட்ட பேச வேண்டிய டயலாக் எல்லாம் இங்க வந்து பேசுறியே ண்ணா.. கோர்ட்ல ஏதாச்சும் ஒரு பொண்ணுகிட்ட இந்த மாதிரி பேசி இருந்தின்னா இந்நேரம் உனக்கு கல்யாணமே முடிஞ்சிருக்கும்" என தியாகுவை வாரினான் மாரி.

"அடிங்.. என்னையே கலாய்க்குறியா? அதான் ரெண்டு பெரும் பேசுறாங்கனு தெரியுதுல்ல? டீ சாப்டு வர்றேன்னு டீசெண்டா எழுந்து போக தெரியாதா?" என்று தியாகுவும் கேட்க,

'அதை சொல்லு ண்ணா' மனதுக்குள் சொல்லிக் கொண்டான் ஆதி.

"ஏன் எழுந்து போனும்?" என்றான் அப்பாவியாய் மாரி.

"இதுக்கு நான் என்னனு பதில் சொல்றது.. வாய் நிறைய அண்ணா அண்ணானு வேற கூப்புடறீங்க.. உங்களுக்கு என்னத்த நான் விளக்க?" தலைகோதிய தியாகுவால் விளக்கவும் முடியவில்லை.

மாரி புரிந்து கொண்டானோ இல்லையோ தியாகு கூற வந்ததன் சாராம்சத்தை உணர்ந்த ஆதி திருதிருவென விழிக்க,

"இவனை முதல்ல கட் பண்ணு.. இவன்கூட மட்டுமே இருந்து உனக்கு நிறைய தெரியல" என்றான் ஆதியிடம்.

"ம்ம்க்கும்.. இல்லைனா மட்டும் என்னவாகி இருப்பாராம்" என்ற மாரியை விட்டு,

"பிரீ அட்வைஸ் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ.. சிங்கிளா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா எப்படி வேணா இருந்துட்டு போய்டலாம்.. கமிட் ஆகணும்னு முடிவு பண்ணிட்டா அதுக்கு ரூல்ஸ்ஸே வேற.. ரொம்ப முக்கியமானது பொண்ணுங்க எக்ஸ்பெக்டேஷன்.. இப்போ விட்ருவாங்க.. ஆனா கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆனாலும் பின்னாடி விட மாட்டாங்க.. நீ அவங்களுக்காக ஆயிரம் விஷயம் பண்ணி இருந்தாலும் நீ செய்யாத ஒன்னை நியாபகம் வச்சு.. உன் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாம பிள்ளைங்களோட பிள்ளைங்களுக்கு கூட சொல்லி காட்டுவாங்க.. சோ முழிச்சுக்கோ லைஃபை காப்பாத்திக்கோ.." தியாகு கூற, ஆதிக்கு என்னவோ மிகப்பெரிய சவாலை கேட்டுவிட்ட மலைப்பு.

"ண்ணோவ்.. நீ சிங்கிள் தான்னு சொன்னா உன்னை இனி சத்தியமா நான் நம்ப மாட்டேன்" மாரி ஆச்சர்யமாய் அதிர்ச்சி காட்டி சொல்ல,

"நீ நம்பலைன்னு தான் நான் சாப்பிடாம கிடக்குறேன் பாரு.. ஏதோ வயசு பையனாச்சேன்னு தான் உன் முன்னாடி அவனுக்கு சொன்னேன். அதுக்காக நாளைக்கே ஏதாச்சும் தப்பா உன்னை பத்தி நியூஸ் வந்துச்சு... மகனே ஏற்கனவே கேஸ் இல்லாம தான் வெட்டியா இருக்கேன்.. உன் மேல போட்டு ஒன்பது வருஷம் இழுத்துருவேன்" என்று மாரியை மிரட்டிக் கொண்டிருந்தான் தியாகு.

ஆதியின் கவனம் அதில் பதியவே இல்லை. இரண்டு கேள்வி.. ஒரு பதில் வேண்டி நின்றது.

பேசலாமா வேண்டாமா.. இன்னும் பூ வைக்கும் தினம் பற்றிய ஆலோசனையே முடிவு செய்யாமல் இருக்க என்ன பேச? என.

சாருவிடம் பேசுவது குறித்து தான்.. எவ்வளவு பேசுகின்றாள் அப்போதும் இப்போதும்.. இனியுமே அப்படி தான்..

'நீ என்ன செய்தாய்?' என்ற கேள்விக்கு பதில் நிச்சயமாய் அவனிடம் இல்லை.

குழம்பிய குட்டையில் கல்லை எறிந்திருந்தான் தியாகு. பேசுவதே கடினம் என்றளவில் இருந்த ஆதி, மாரி இல்லாமல் அவளிடம் பேசுவதை குறித்தே அவ்வளவு யோசித்திருந்தான்.

தியாகு பேசிவிட்டு வந்த வேலை முடிந்திருந்ததாய் கிளம்பி இருக்க, இரு முறை அழைத்தும் ஆதி பதில் தராததால் மாரியும் அடுத்து அவன்பக்கம் திரும்பவில்லை.

அடுத்து இரண்டு நாட்கள் முழுதாய் சென்றிருந்தது. ஒரு நாள் வம்பிழுத்து பேசுபவள் அடுத்த நாள் காதலாய் பார்த்து வைப்பாள்.

இதென்ன டா புது இம்சை என்று நினைத்துக் கொண்டாலும் சலித்ததில்லை.

இன்று தான் சாருவின் அன்னை தேவியும் மீனாட்சியும் நாள்பார்க்க சென்றிருந்தனர்.

அளவுக்கதிகமாய் ரோட்டைப் பார்க்கவும் வேலையைப் பார்க்கவுமாய் இருந்தான் ஆதி.

"சாருக்கா அப்பவே போய்டுச்சே.. பின்ன ஏன் ஆதிண்ணா உருண்டுட்டு இருக்கு" என்று மாரியும் கூட கேட்டுப் பார்த்துவிட்டான். ஒரு முறைப்பு தான். அதன்பின் என்ன கேட்டுவிட.

மலர்ந்த முகமாய் இருவரும் வர, தூரத்தேயே பார்த்துவிட்டான் ஆதி.

"டேய்! போய் ரெண்டு ஜூஸ் வாங்கிட்டு வா" என மாரியிடம் சொல்ல, சரி என சென்றுவிட்டான் அவனும்.

நேராய் ஆதியின் வீட்டிற்குள் தான் சென்றனர் இருவரும்.. எதுவும் ஆதியிடம் சொல்லாமல் செல்ல, அம்மாவை எண்ணி பல்லைக் கடிக்க தான் முடிந்தது அவனுக்கு.

"என்னனு சொல்லிட்டு தான் போனா என்னவாம்" என அமர்ந்திருந்தவன், பின் முடியாமல் உள்ளே செல்ல, மாரியும் உள்ளே நுழைந்தான் ஜூஸுடன்.

"நல்ல விஷயத்தை வாசல்லயா சொல்றது? அதான் உள்ள வந்துட்டோம் ஆதி" என்று அவரே ஆரம்பித்தார் மீனாட்சி.

விளைவு அடுத்த இரண்டு மணி நேரங்களில் தேடி தேடி வந்தவளை முதல் முறை தேடி சென்றிருந்தான் வண்டியை எடுத்துக் கொண்டு கணினி வகுப்பை நோக்கி..

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
ஆதியின் வெட்கம்
அழகாய் இருக்கு.....
அனைவரின் கிண்டலில்
அவஸ்தையில் இருக்க.....
அச்சோ அவ்வளவு
அழகு அழகு......
அன்னையிடம் இருந்து
அந்த நல்ல செய்தி கேட்டதோ.....
ஆதி பறந்து விட்டான்....
 
Top