• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 12

"என்னாச்சு மேம்" என்று விஜய் கேட்க அவளோ "ஏதோ ஒன்னு இதுக்குள்ள இருக்கு விஜய். கண்டுபிடிக்கணும்" என்று சொல்ல "கண்டுபிடிச்சுடலாம் மேம்" என்றான் அவன்.


"அந்த பொண்ணு கொலை பண்ணலை. ஆனா அவளும் ஸ்பாட்டுல இருந்துருக்கா... அப்போ வேற யாரோ கொலை பண்ணியிருக்கனும். அது யார்????" என்று அவள் நிறுத்த "கண்டுபிடிச்சுடலாம்" என்று விஜய் மீண்டும் அழுத்திச் சொன்னதும் யோசித்தவள் தன் மொபைலை எடுத்து மீண்டும் அந்த கதையின் முதல் அத்தியாயத்தினை வாசிக்கத் தொடங்கினாள்.

அந்த கடைசி வரியினை படிக்க படிக்க அவளுக்கு புரியாத பல விசயங்கள் புரிந்தது போலிருந்தது...
அது என்னவாக இருக்கும்???

-----------------------------------------


வெட்டவெளியினை வேடிக்கப் பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க அவளருகே வாசுவே வந்தமர்ந்தான்.


"நீ கொஞ்சம் வேற மாதிரியா இருக்க சுஜாதா"

"எப்படி VNA"

"சில விசயங்கள் நமக்குள்ள ஒத்துப் போகுதுதான்"

"நல்லது தானே"

"ஆனால் லவ்.. இதெல்லாம் என்னால அக்செப்ட் பண்ண முடியலை சுஜாதா"

"ஏன்???"

"எனக்குத் தெரியலை... நீ என் அருகே நெருங்கி வர முயற்சி பண்ணாத. இதேமாதிரி கஷ்டப்படுவ" என்று அவன் சொல்ல "கஷ்டத்துல பெரிசு சின்னதுன்னு ஒன்னுமே இல்லை. எனக்குப் பழகிடுச்சு... அண்ட் அதை நான் வரவேற்கிறேன். கஷ்டப்பட்டா உன் நினைப்பு அதிகமாகும் VNA... அதை நான் ரொம்ப ரசிக்கிறேன்..." என்றாள் அவள்.

"நீ ரொம்ப உணர்வுப் பூர்வமா இருக்க சுஜாதா. ஜஸ்ட் அதுல இருந்து வெளிய வா"

"அப்படிப் பார்த்தா நீங்கதான் அதுல இருந்து வெளிய வரணும் VNA..." என்றதும் "புரியலை" என்றான் இவன்.


"நீங்கதான் உணர்வுப்பூர்வமா அந்த சுஜாதாகிட்ட லாக் ஆகியிருக்கீங்க. அவ நிழல்னு உங்க புத்தி எடுத்துச் சொன்னாலும் அதைக் கேக்காம அவகிட்டயே ஒட்டிட்டு இருக்கீங்க. அதனால நீங்க மொத வெளிய வாங்க" என்றாள் அவள்.


"நீ பல நேரங்களில் அறிவு பூர்வமா பேசுற. ஆனா..."


"ஸ்டாப் VNA நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கட்டா..." என்று அவளுக்கே உரித்தான தொணியில் அவள் கேட்க "கேளு" என்றான் அவன்.

"உங்களுக்கு ஏன் அந்த சுஜாதாவை பிடிக்குது?"

"இப்படி கேட்டா என்ன சொல்லுறது..."

"ஏதாவது சொல்லுங்க. வேண்டும்னா அந்த கேள்வியையே மாத்தி என்கிட்ட கேளுங்க. நான் பதில் சொல்லுறேன். எப்படி சொல்லுறதுன்னு என்னைப் பார்த்து வேணும்னா கத்துக்கோங்க" என்று அவள் சொல்ல அவனோ "வேண்டாம்" என்றான்.

"அப்போ சொல்லுங்க"


'சுஜாதா' என்று தனக்குள்ளயே அழைத்தவனின் முகம் விகசித்தது. அதை கொஞ்சம் பொறாமையுடன் அவள் பார்த்தபடி இருக்க அவனோ பேசினான். அவனின் சுஜாதாவினைப் பற்றி...


"அம்மாவுக்கு அடுத்து நான் நெருங்கின ம்ஹூம் என்னை நெருங்கி வந்த பெண்... அவளை மாதிரி யாருமே என்னை கேர் பண்ணிக்க முடியாது. அவளோட அந்த லவ்... சிலசமயம் வேற உணர்வுகள் இதையெல்லாம் நான் அனுபவிக்கும் போது தான் என்னால இயல்பா மூச்சு விட முடியுது. இந்த வாழ்க்கை எனக்கு நிறைய அனுபவத்தினை குடுத்துருக்கு. சில நேரம் ரொம்ப மோசமான நாட்களை எல்லாம் நான் கடந்து வந்துருக்கேன். அப்போ எல்லாம் ஆறுதல் தருவது அவ மட்டும் தான். அவதான் என்னோட soulmate... நிச்சயமா அவ இல்லாம நானும் இல்லை.. என்னோட எழுத்தும் இல்லை..." என்று சொல்கையில் சுஜாதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.


"எதுக்கு சிரிக்குற" என்று அவன் கேட்க "இல்லை soulmate னு சொன்னீங்க அதான் சிரிச்சேன்" என்றாள் இவள்.


"ஏன் அதுக்கென்ன?.. அது உண்மைதானே" அவன் புரியாது வினவ "நீங்க மேக்சிமம் எத்தனை பொண்ணுங்க கூட பழகியிருப்பீங்க VNA" என்றாள் அவள்.


"அதான் சொன்னேனே அம்மா அப்பறமா இவ..."

"ஸ்கூல் காலேஜ் இங்கேயெல்லாம்..."

"படிச்சது பாய்ஸ் ஸ்கூல்... அப்பறம் காலேஜ்ல நான் ஹாஸ்டல்ல தான் தங்கியிருந்தேன். அதனால வெளிய கூட போனதில்லை. என்கூட படிச்சவங்க எல்லாரும் வெளிய போவாங்க பொண்ணுங்க கூடவே பேசுவாங்க. பட் எனக்கு அது எல்லாம் ஒத்து வரலை. சோ நான் தனியாக தான் இருப்பேன்... எழுதும் போதுதான் என்னைத் தேடி சுஜாதா வந்தா... என் உலகத்துக்கு, எனக்கு உயிர் குடுத்தா..."


"அப்போ அவ ஒன்னும் உங்க soulmate கிடையாது. வெயிட்...வெயிட் VNA நான் ப்ராக்டிக்கலா இதைப் பத்தி சொல்லுறேன். உங்களுக்கு அது புரியுதான்னு பாருங்க... சின்னவயசுல இருந்து உங்களுக்கு பொண்ணுங்க கூட பழகுறதுக்கே சந்தர்ப்பமே கிடைக்கலை. நீங்க பழகுன முதல் பெண் உங்க அம்மா. அவங்க ஸ்பரிசம் விட்டு வெளிய வந்த பிறகு பசங்க ஸ்கூல்.. அப்போ உங்களுக்கு பொண்ணுங்க எப்படி இருப்பாங்க அவங்களோட attitude character, அவங்களோட தோற்றம், அவங்க உடலமைப்பு, அவங்களுக்கான பிரச்சனைகள், அவங்க இப்படித்தான் நடந்துக்குவாங்க இப்படி எதைப்பத்தியும் உங்களுக்கு தெரியாது... அதே மாதிரி வெளிய போய் இதைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கவும் இல்லை. சோ உங்களுக்கு பொண்ணுங்களைப் பத்தியே தெரியலை... அந்த நேரத்துல உங்க மனசே உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை உருவாக்கி அவளையே லவ் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. இது ஆக்சுவலா லவ்வே இல்லை. நீங்க ஷேப்ஃபா பீல் பண்ணிக்க நீங்களே கிரியேட் பண்ணிக்கிட்ட உணர்வு...

மொத உங்க உலகத்தை விட்டு வெளிய வாங்க VNA.. சுஜாதா மட்டுமே உலகமில்லை. இங்க நிறைய பேர் இருக்காங்க... அவங்களைப் பாருங்க... அப்பறமும் உங்க மனசுல அந்த சுஜாதா தான் இருக்கிறா அப்படின்னா அப்போ சொல்லுங்க அவதான் உங்க soulmate ன்னு கர்வமா...

அதைவிட்டு ஆப்சனே இல்லாம ஒரே ஒருத்தியை மட்டும் அதுகூட உருவமா அவ இல்லை.. வெறும் கற்பனை... வேற வழியே இல்லாமல் அவளைப் பிடிச்சுட்டு soulmate ஆம்... இதுதான் உளறல் VNA... என்றாள் அவள்.


"சுஜாதா" என்று அவன் திடுக்கிட்டு அழைக்க "இதுதான் நிஜம் VNA.. இங்க நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க. அவங்களுக்கு வெளிய போற வாய்ப்பில்லாம யார்கூடயும் பழகிபார்க்காம அத்தை மக மாமன் மகன் அதே மாதிரி ஒரு ஸ்கூல் ஒரே காலேஜ் இப்படி வட்டத்தினை சுருக்கிட்டு அதுல கிடைச்ச நாலு ஆப்சன்ல ஒன்னை செலக்ட் பண்ணிட்டு அவங்கதான் நமக்காக பொறந்தவங்கன்னு ஒரு மாயையை கிரியேட் பண்ணிட்டு அவங்களுக்குள்ளயே வாழ ஆரம்பிச்சுடுறாங்க. உண்மையிலே அப்படி செலக்ட் பண்ணுறவங்க ஒன்னும் நமக்கான soulmate கிடையாது. இந்த பரந்த உலகத்துல பல பேரை தினமும் பார்க்கணும். நான் பார்க்குறேன் VNA. என்னோட வேலையில தினமும் நான் நிறைய பேரை பார்த்துட்டு இருக்கேன். அவங்க கேரக்டர் அவங்களோட உடல்மொழி இதையெல்லாம் தினம் தினம் உணர்றேன்... அவங்ககிட்ட பேசுறேன், பழகுறேன்... எனக்கு நிறைய நிறையவே ஆப்சன் இருக்கு. அண்ட் இன்னொரு விசயமும் இருக்கு... எனக்கே எனக்குன்னு ஒருத்தன் இரு..... ஷ்ஷ் அதெதுக்கு இப்போ. நாம அதை விட்டுடலாம் VNA... எல்லாத்தையும் கடந்துட்டு நான் உன்னை மட்டும் தான் இப்போ நினைச்சுட்டு வந்து நிக்குறேன். காரணம் உன்மேல நான் கொண்ட ஈடுபாடு, பக்தி, பாசம், அன்பு, காதல், whatever இன்னும் வேற எதாவது பேர் உனக்குத் தெரிஞ்சா அதையும் சேர்த்துக்கோ.... அது எனக்குன்னு இருக்குற கொள்கையையும் கோட்பாடுகளையும் கடந்து வெளிய வர்ற அளவுக்கு ஒரு சக்தியை எனக்குத் தருது...

நான் ஒரு சாதாரணமான சராசரியான பொண்ணா இருக்க விரும்பலை. நான் இங்க இருக்குற நிறைய ரூல்ஸை பிரேக் பண்ணத்தான் விரும்புறேன். அதுக்காக எந்த எல்லைக்கும் போவேன். அதனால நான் சொல்லலாம் you are my soulmate அப்படின்னு... அதுவும் பெருமையா கர்வமா...ஆனா நீ அந்த சுஜாதாவை சொல்லாத அது செட் ஆகலை... சாரி.... என்று அவள் சொல்லவும் சிலைபோல் அமர்ந்திருந்தான் வாசுதேவ நாராயண அநிருத்தன்.


"யோசிச்சுப்பாருங்க. உங்களுக்கே இது புரியும். அண்ட் கதையை எழுதி முடிங்க.. உங்க ரசிகர் ரசிகைகள் எல்லாம் காத்துட்டு இருப்பாங்க. அண்ட் உங்க சுஜாதாவும் உனக்காக காத்துட்டு இருக்கா.. அதையும் மறந்துட வேண்டாம். நீங்க மறக்காம இருக்க ஒன்னு சொல்லுறேன்....


வழிந்தோடும்
என் பெண்மை
உன் நெருக்கம் வேண்டி நிதானமிழந்து தவிக்க நிதானமாய் நகர்ந்து செல்கிறாய்
எனை தவிக்க விட்டு...!!!


அதிலென்ன
உனக்கவ்வளவு ஆனந்தம்...!
அதுசரி,
இதில் தவிப்பது இவள் தானே...
என்ற எண்ணமா???


உன்னைச் சுற்றி இரும்பாய் அரணமைத்துக் கொண்டாலென்ன...?
இல்லை,
உன்னையே இரும்பாய் மாற்றிக் கொண்டால்தான் என்ன...??
உனை இளக வைக்க
எனையே எரித்துக் கொள்வேன்...!!!


அவ்வெம்மையில் இளகி உருகி என்னோடு கலந்து விடுமந்த நாளுக்காய் எரிந்துக் கொண்டே காத்திருக்கவும் செய்வேன்...!!!


நிச்சயமாய் VNA நான் உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று அவனின் லேப்டாப்பை எடுத்து வந்து கைகளில் திணித்து "அடுத்த எபிசோட் சீக்கிரம் போடுங்க. உங்க எழுத்துக்களை நான் ரசித்து சுவைக்க வேண்டும். சீக்கிரம்" என்றவள் விலகச் சென்று விட்டாள்.


ஆனால் வாழ்க்கையில் முதன்முறையாக என்னயெழுத
எப்படியெழுத
எதையெழுத என்று தோன்றாமல் அவள் சொன்னவற்றையே அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் வாசுதேவன் நாராயண அநிருத்தன் (VNA)...

அவன் மனம் தடுமாறுகிறதா???
 
Top