- Joined
- Jul 30, 2021
- Messages
- 566
தங்கத் தாரகை
இந்த சிறுகதையில் எந்த கதாபாத்திரத்துக்கும் பெயர் இல்லை...
முதல் முறையாக ஒரு முயற்சி...
என்னடி சொல்லற நேத்தா அந்த மூனாவது வீட்டுக்காரிக்கு கொழந்த பொறந்துச்சா ..
ஆமா அதுவும் இராத்திரி 12மணிக்காம்... இப்பத் தான் நம்ம பால்காரன் சொல்லிட்டு போனான்..
என்னடி, இவ ஜாதகத்துல சனி ஜமக்காளம் போட்டு படுத்துருக்கும் போல..
இவ்வளவு நாளா பிரிஞ்சு இருந்த இரண்டும் இப்பதான் ஒன்னு சேந்திச்சிங்க.. இந்த நேரம் பார்த்து அம்மாவாசை அதுவுமா இவளுக்கு பொண்ணு பொறந்திருக்கு... அதும் அர்த்தராத்திரி 12மணிக்கு... குடும்பம் விளக்கிடும் போ
அது மட்டுமில்ல டி.. நேத்து மூல நட்சத்தரமாம். அதும் கன்னி ராசில தான் அந்த கொழந்த போறந்திருக்கு....
கிழிஞ்சுது போ..
ஏற்கனவே மூல நட்சத்திர பொண்ணுகளுக்கு கல்யாணம் தள்ளி போகும்.. இதுல கன்னி ராசி வேற...
காலம் பூர அது கன்னியா தான் கிடக்கணும் போல...ஹா ஹா ஹா
ஏம்மா... பச்ச கொழந்த இங்க அழுதுட்டு இருக்கு நீ என்னடானா அந்த பக்கமா திரும்பிட்டு இருக்க...
பிஞ்சு கொழந்தமா அது... அதுக்கு மொதல்ல பால் கொடுத்து பசி ஆத்து..
உனக்கு என்ன வந்துச்சு கெளவி இப்போ..
போய் உன் வேலையை பாரு..
மொத கொழந்தை ஆம்பள புள்ளையா இருக்கனும் னு எதிர் பாத்து கடைசியில இதான் வந்திச்சி..
அதும் ஆந்தை மாதிரி அம்மாவாச ராத்திரில பொறந்தாச்சு..
இன்னும் இதுக்கு சீர் செஞ்சு கல்யாணம் பண்ணி வைக்கிரத்துக்குள்ள எனக்கு பொழப்புப் போய்டும்..
அடிப்பாவி மவளே.. இப்ப தான் கொழந்தையே பொறந்திருக்கு இன்னும் பேருகூட வெக்கல அதுக்குள்ள கல்யாண கவலை வந்திடுச்சோ உனக்கு..
பச்ச கொழந்தைக்கு பால் தாறதுக்கு கூட மனம் வரல உனக்கு... நீயெல்லாம் எங்க கல்யாணம் பண்ணி வைக்க போற... எதனா குடிகாரனுக்கு தான் இவள ரெண்டாந்தாரமா கொடுக்க போற நீ..
எவனா நல்லவன் கண்ணுல இவ பட்டா அப்படியே இவளை இழுத்துட்டு ஓடட்டும்...
பரமசிவா.. நீதான்பா இந்த கொழந்தைய காப்பாத்தனும்.. இத பெத்தவ தான் இப்படி.. கட்டிக்கிறவனாவது இவள நல்லா வெச்சிக்கிட்டும்...
ஊம்ம்... வெச்சிப்பான் வெச்சிப்பான்.. நீ நடைய கட்டு...
எனக்கென்னடி வந்துச்சு கூறுகெட்டவளே... ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க..
பொறந்தது பெண்ணா போய்ச்சினு அழுவுறியே..
நீயும் பொண்ணு தான் உன்னை பெத்தவளும் பெண்ணுதான் ஞாபகம் வச்சிக்கோ..
அந்த ஏழைக் குடும்பத்தில் அவளுக்கு அடுத்தபடி வரிசையாக மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.. மூத்த பெண்ணை, நீ ஏன் பெண்ணாகப் பிறந்தாய், நீ பிறந்த பிறகுதான் எங்களுக்கு வறுமை வந்தது. நீ ராசி இல்லாதவள் என்று சொல்லி அவளது பெற்றோர்களே அவளை நோகடித்தனர்.
பெற்றோர்களால் நோகடிக்கபட்டவளுக்கு ஆறுதல் அந்த சிவன் கோவில் தான். ஒவ்வொரு சோமவார திங்களிலும் சிவனை தரிசிக்க சென்று விடுவாள். ஒரு நாளும் தன் மனக்குமுறலை அந்த பரமசிவனிடம் கூறியதில்லை. கோவில் நடை சாற்றும் வரை பசியும் இல்லறமும் நினைவில் இருக்காது.
மூத்தவளுக்கு திருமண வயதும் வந்தது. கூடவே பெற்றோர்களுக்கு கவலையும் வந்தது.
தினமும் இவளை சிவன் கோவிலின் கடைவீதியில் பார்த்த ஒரு நடுத்தர வாலிபன் இவள் மீது காதல்கொண்டு கண்ணியமான முறையில் பெண்கேட்டு சீதனம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள முன்வந்தான்..
இவள் ஒழிந்தால் போதும் என்று நினைத்த அவள் பெற்றோர்கள். இவளுடைய விருப்பமும் கேட்காமல் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டனர்.
வறுமையின் பிடியிலும் வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்ந்தவள் புகுந்த வீட்டில் எப்படி இருப்பாள்.
அடக்கமும் இறக்க குணமும் கொண்டவள் குடும்பம் என்றால் என்ன என நன்றாக அறிந்தவள் தன் கணவனுக்கு மட்டும் சொந்தமான உடலை வேறு ஒருவன் தவறாக பார்த்தால் ஒரு பார்வையிலேயே எரித்து விடுவாள்.
என்னதான் அவள் நல்லதொரு குடும்ப பெண்ணாக இருந்தாலும் புகுந்த வீட்டிலும் ராசி இல்லாதவள் என்ற பெயரும் அழியாமல் தொடர்ந்து.
கணவன் வேலைக்கு செல்லும்போது இவள் எதிரே நிற்க மாட்டாள். வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முன்னே சென்று நிற்க்க மாட்டாள்.
இதையெல்லாம் கவனித்த அவள் கணவன், நீ ஏன் இப்படி ஒதுங்கி விடுகிறாய்? நீ என் மனைவி. என் குடும்பத்தில் ஒருத்தி என்று கணவன் கேட்க அவன் தோளில் சாய்ந்து கொண்டு என்னை மன்னித்து விடுங்கள் நான் ராசி இல்லாதவள் என்று சொல்லி அழுகிறாள்.
அவள் கணவனும் சரியான நாளுக்காக காத்திருந்தான்..
அவன் எதிர்பார்த்த நாளும் விரைவில் வந்தது. பணியில் பதவி உயர்வு கிடைத்து அதிக சம்பளம் பெருகிறான். கூடியசீக்கறமே புதிதாக வீடு ஒன்றும் வாங்குகிறான்.
அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்திருந்தான்.
வந்திருந்த அனைவரும் அந்த வீட்டின் அழகை பிரம்மிப்புடன் கண்டார்கள்.
அப்போது அங்கு வந்திருந்த அவன் மனைவியின் தந்தை, தன் மருமகனிடம் கொஞ்சம் கிண்டலாகவே வினாவினார்.. ஏன் மாப்பள புதையல் ஏதாவது கிடச்சுதா..? என்று
இவனும் திமிராக பதில் கூறினான் ஆமாம்... உங்கள் பெண் எனக்கு மனைவியாக கிடைத்த நேரம் தான் எனக்கு அதிர்ஷ்டம் ஆரம்பித்தது... என் மனைவி தான் அந்த புதையல் என்றான் திமிராக.
எல்லோரும் சிரித்தனர் கதவு அருகே மறைவில் நின்றிருந்த தன் மனைவியை கண் ஜாடையால் அழைத்தான். ஆனால் அவள் வர மறுத்து விட்டாள். உடனே தன் மனைவியின் பெயர் சொல்லி சத்தமாக அழைத்தான்.
இங்கு வா என் தங்கமே...
அவன் அழைத்ததும் ஓடி வந்து அவன் அருகில் நிற்கிறாள் அவள் தோள் மீது கையை போட்டுக்கொண்டு உறக்க கூறினான் நான் இப்பொழுது நல்லா இருக்க காரணம் என் மனைவி வந்த ராசிதான் என்றான்.
இப்படி ஒரு வார்த்தை யாரும் சொல்லி கேட்காதவள் சடார் என்று அவனை பார்த்து அந்த வீடே அதிரும் அளவிற்கு ஓஓஓ... என கதறி அழுதாள்.
ஆமாம் அவள் மனதில் அப்படி ஒரு வலி இருக்கிறது.
மனைவி அழுவதை தாங்கிக்கொள்ள முடியாதவன் அவள் கண்ணீரை வேகமாக துடைத்து தன் மார்போடு அவளை அணைத்துக் கொண்டு என் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தான் அவள் என் தங்கத் தாரகை என்கிறான் இன்னும் சத்தமாக அங்கு இருந்தவர்கள் வியக்கும் வண்ணம்.
ராசி, ஜாதகம், நாடி ஜோதிடம், இது போன்ற மூடப்பழக்கத்தினால் இன்றும் நம் சமூகப் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது இன்று நாம் எப்படி இருக்கின்றோமோ அதுதான் உண்மை நாளை நாம் எப்படி இருக்கப் போகிறோம்..! என்பது அது நம் உழைப்பில் மட்டும் தான் இருக்கிறது நம் வாழ்க்கை ரகசியங்களை பற்றி எவனோ ஒருவன் சொல்ல அவன் என்ன கடவுளா...
***
நன்றி.