• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 11

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
அத்தியாயம் 11

மீனாட்சி மிகவும் பரபரப்பாக இருந்தார். மதியம் உணவு என்ன? யார் முதலில் செல்கிறீர்கள் போலப் பல கேள்விகளைச் சதாசிவத்திடமும் தேவாவிடமும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார். அவர்களது பேச்சு புரியாமல் ஆதிரை ராமைப் பார்க்கவும் ராம்

“என்ன ஆதிரை? அவர்கள் பேசுவதை அப்படிப் பார்க்கிறாயே?” என்று கேட்டான்.

“இல்லை. எங்கோ வெளியில் செல்கிறார்கள் போலவே! எங்கே என்று தெரியவில்லை அதுதான் பார்த்தேன்” என்றாள்.

“இன்று நம் வயலில் நாற்று நடுகிறார்கள். அதற்கான வேலைகளை பற்றிப் பேசுகிறார்கள் ஆதிரை” என்றான்.

ஆதிரை எதுவும் புரியாமல் முழித்துவிட்டு “அப்படியென்றால் என்ன?” என்று கேட்டாள்.

என்னதான் தாய் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஆதிரை மீதும் தேவா தன் கவனத்தை வைத்திருந்தான். ராமும் ஆதிரையும் பேசுவதைக் கவனித்து வந்தவன் ஆதிரையின் கேள்விக்கு ராம் பதில் கூறும் முன்பே

“இந்த முறை நம் வயலில் நெல் பயிரிடுகிறோம் ஆதிரை. அதற்கான தொடக்கம்” என்றான்.

“ஓ” என்றாள்.

ராம் “கேள்வி எனக்கானது என்றல்லவா நினைத்தேன்!” என்று வேண்டும் என்றே தேவாவைக் கிண்டல் செய்தான்.

அதற்குத் தேவா பதில் கூறுவதற்கு முன் சதாசிவம் ஆதிரையைப் பார்த்து “அம்மாடி, நீயும் வருகிறாயா? இங்கு வந்ததிலிருந்து எங்கும் வெளியிலும் செல்லவில்லை. நம் வயலிற்கும் வந்தது இல்லை அல்லவா?” என்றார்.

ஆதிரை மிகவும் தயக்கத்துடன் “நான் வருவது உங்களுக்குத் தொந்தரவாக இருக்கப் போகிறது” என்று அவள் முடிக்கும் முன்பே தேவா

“அதெல்லாம் ஒன்றும் இல்லை ஆதிரை. நீ தாராளமாக வரலாம்” என்றான்.

அவன் கூறிய வேகத்தில் ராம் கிண்டலாக சிரிக்கத் தொடங்கிவிட்டான். சதாசிவமும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தன் தொண்டையை செறுமிக்கொண்டவர்

“சரி. அப்படியானால் நான் முதலில் செல்கிறேன். தேவா ஆதிரையைக் கூட்டிக் கொண்டு வரட்டும்.” என்றவர் சிறிது நேரத்தில் வயலிற்கும் சென்று விட்டார்.

முதல் நாள் நடந்த நிகழ்வுகளால் ஆதிரை அனைவரிடமும் பழைய மாதிரிபேசவில்லை என்றாலும் யாரிடமும் பேசாமலும் இருக்கவில்லை. இப்போதைக்கு இதுவே பெரிது என அதை யாரும் கண்டும் காணாமல் விட்டனர்.

மதியம் உணவை முடித்து விட்டு தேவாவின் ஜீப்பில் வேலை செய்பவர்களுக்கும் மதிய உணவை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

இந்த ஊருக்கும் வந்த புதிதில் ஆதிரை ஒரே ஒருமுறை தான் ஊரைச் சுற்றிப் பார்க்கிறேன் என்று சென்றாள். அன்றுதான் அவளது வாழ்க்கை தலைகீழாக மாறியதும். அதன்பிறகு அவள் தன் கணவன் வீட்டைவிட்டு எங்கும் சென்றதே இல்லை. இன்றுதான் முதன்முதலில் தேவாவுடன் வெளியில் வந்துள்ளாள்.

அந்த ஊரில் ஆதிரைக்கு மிகவும் பிடித்ததே எந்த பக்கம் திரும்பினாலும் பச்சை வண்ணமாக காட்சி அளித்தது தான். இன்றும் அந்த அழகை வழியெங்கும் பார்த்து ரசித்து கொண்டே வந்தவளிடம் தேவா

“அப்படி அந்த மரங்களில் என்ன தெரிகிறது உணக்கு?” என்று கேட்டான்.

இயற்கை அழகில் தன் மனதைத் தொலைத்திருந்தவள் தேவாவின் கேள்வில் அதிலிருந்து கலைந்து அவன் புறம் திரும்பி

“என்ன?” என்று கேட்டாள்.

“எந்த உலகத்தில் இருக்கிறாய் ஆதிரை?” என்று மீண்டும் கேட்டவனிடம் ஆதிரை

“இந்த ஊர் மிகவும் அழகாக உள்ளது.” என்றாள்.

தேவா “சில நேரங்களில் உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆதிரை” என்றான்.

“அப்படியா? அப்படிப் பார்த்தால் என்னால் உங்களை இதுவரை புரிந்து கொள்ள முடிந்ததே இல்லையே! நான் என்ன செய்வதாம்?” என்றாள்.

“உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியவன் ஒரு சிறு புன்னகையுடன் ஜீப்பைச் செலுத்தத் தொடங்கினான்.

ஆதிரைக்குத்தான் அவன் கூறியதின் முழு அர்த்தம் புரியவில்லை.

‘உண்மையாக என்றால்? நாம் அப்படி நினைக்கவில்லை என்று கூறுகிறானா?’ என்று அவள் சிந்திக்கும் பொழுதே அந்த இடம் வந்தது.

அது அந்த ஊரின் ஆற்றங்கரை. முதன்முதலில் தன் தாயின் வீட்டிற்கு இரண்டு மாதங்கள் முன் வந்தபோது அங்கிருந்தவர்களுடன் வந்த முதல் இடம். அதைத் தேவாவிடம் கூற ஆதிரை வாயெடுக்கும் போதே தேவா

“நீ இந்த ஊருக்கு வந்தபிறகு முதலில் சுற்றிப் பார்க்க வந்த இடமல்லவா இது?” என்றான்.

ஆதிரை கண்களைப் பெரிதாக விரித்துத் தன் கணவனைப் பார்க்கவும் தேவாவிற்கு அவளைச் சீண்டி கோபம் படுத்த ஆசை வந்தது.

“உனக்கு ஆதிரையெனப்பெயர் வைத்ததற்குப் பதிலாக ஆந்தையென வைத்திருக்க வேண்டும்” என அவன் கூறவும் ஆதிரை

“ஏன் ஏனாம்?” என்றாள் பயங்கர கோபத்துடன்.

“அதிகப்படியான நேரங்களில் உன் கண்கள் விரிந்து விடுக்கின்றதே!” என்றான்.

ஆனால் ஆதிரைக்கோ இதைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. அவள் விழுந்து விழுந்து சிரிக்கவும் தேவா தன்னையும் மீறி ஆதிரையிடம்

“நீ சிரிக்கும் போதெல்லாம் மிகவும் அழகாக இருக்கிறாய் ஆதிரை. ஆனால் இந்த இரண்டு மாதங்களில் நீ சிரித்தே நான் பார்க்கவில்லை.” என்றான்.

அவன் கூறி முடிக்கும் போதே தேவாவிற்கு அவன் செய்த தவறு புரிந்துவிட்டது. இப்போது இவள் அதைக் கேட்டாள் என்ன செய்வது என்று யோசித்தவன் ஆதிரையை யோசிக்கவிடாமல்

“ஆதிரை அன்று இந்தக் கரையைக் கடந்து சென்றீர்களா?” என்றான்.

“இல்லை இங்கு தான் இருந்தோம் பிறகு.... கோவில்” என அவள் இழுத்துக் கொண்டே தேவாவைப் பார்த்தாள்.

‘ஒரு பிரச்சனையிலிருந்து இவளை திசை திருப்ப முயன்றால் அதைவிடப் பெரிதாக ஒன்றைப் பிடிக்கிறாளே’ என்று நினைத்தவன் ஜீப்பை மறுகரைக்குச் செல்லும் பாலத்தில் விடவும் ஆதிரையின் கவனம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அதில் சென்றது.

“நாம் இதைத் தாண்டிச்செல்கிறோமா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“ஆம் ஆதிரை. வயலுக்கென்று தானே கூட்டி வந்தேன்” என்றான்.

“ஆமாம். ஆனால் இங்கு என்று தெரியாது” என்றாள்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,939
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
ரெண்டு பேரும் சீக்கிரம் ராசியாயிடுவாங்கனு நினைக்கிறேன் ஆனா writer என்ன நினைக்குறாங்களோ 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Top