• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 5

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 5

உதயை பற்றி மஞ்சுவை விட யாருக்கு நன்றாக தெரியும்! 'சத்யாவை விட உதய் கண்டிப்பா நித்தியை நல்லா பார்த்துப்பான்' என்று தான் நினைத்தார்.

"உங்ககிட்ட என்னை போட்டு குடுத்தது அந்த குட்டி பிசாசு தானே? அவளுக்கு இருக்கு இன்னைக்கு" என்று கூறி கொண்டே வீட்டுக்குள் சந்தோசமா சத்யா ஓட, மஞ்சுவும் நிம்மதியுடன் அவன் பின்னே நடந்தார்.

உள்ளே நுழைந்து சத்யா நித்தியை தேட, அவள் குணசேகரனிடம் பாட்டியை போட்டி (botti) ஆக்கிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வீட்டிற்கு வந்த குணசேகரன் நித்தி சொல்வதை கேட்க கேட்க தன் அன்னை மேல் கோபம் ஏறியது.

"மாமா அந்த கிழவியை சும்மா விடக் கூடாது. பாவம் மாமா உதய்! எவ்வளவு பீல் பண்ணியிருப்பான்" எனக் கூற, அங்கு வந்த சத்யா அவள் தலையில் கொட்டி "ஏன்டீ பாட்டி மேலே இவ்வளவு கொலை வெறி உனக்கு? அதான் அவங்களை உண்டு இல்லைனு பண்ணிட்டல்ல?" என்றவன் அவள் பேசியதையும் அப்பாவிடம் கூறினான்.

நித்தி தலை குனிந்து அமர்ந்திருக்க, "நித்திமா மாமா என்னைக்காவது உங்களை எல்லாம் அப்படி நினைச்சிருப்பேனா டா?" என கண் கலங்கி அவர் கூற,

"சாரி மாமா! பாட்டிக்கு புரிய வைக்கணும்னு அப்படி பேசிட்டேன். இனி இப்படி செய்ய மாட்டேன்" என கூறி அவர் தோளில் சாய்ந்து கொள்ள, மஞ்சு அதை பார்த்து புன்னகையுடன் அருகில் வந்தார்.

"வளர்ந்துட்டா எல்லாரும் இப்படி தான் செய்வாங்க போல" என குணசேகரன் பொதுவாக கூறுவதை போல சத்யாவை பார்த்துக் கொண்டே கூற அவனும் இப்போது தலை குனிந்தான்.

"என் மருமகள் எப்படி இருக்கா டா" என பார்வதி மகன் உதயிடம் கேட்க,

"ஆறு மாசம் கழிச்சு உங்க அக்காவை பார்த்தேன். அவங்களை கேட்காமல் மருமகள கேட்கறீங்களே! ஹ்ம்ம் இருக்கட்டும்.. இருக்கட்டும்" என உதய் கிண்டலாய் கூற, "நான் கேட்டதுக்கு பதில் சொல்லு டா" என்றார் தாய்.

"அவளுக்கு என்னம்மா! அப்படியே தான் இருக்கா!" என ஒரு பெருமூச்சுடன் சொல்ல, அவனை கேள்வியாக பார்த்தார் பார்வதி.

பெரியம்மா வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினான். "அவ ஏன்மா இப்படி இருக்குறா? இத்தனை வருஷம் ஆகியும் அவளுக்கு அந்த வீட்டை அவளோட வீடா நினைக்கவே முடியலை" என அவன் வருந்தி கூற,

"இதுக்கு நீ வருத்தப்பட கூடாது உதய். அவளோட தன்மானம் அதை தடுக்குது அப்டினா அவ எவ்வளவு நல்ல பொண்ணுனு யோசி. இந்த இடத்துல வேற யாராச்சும் இருந்திருந்தா அங்கேயே எப்படி செட்டில் ஆகலாம்னு கூட நினைப்பாங்க. ஆனால் நித்தி வேற!. நீ அடிக்கடி சொல்வியே? அவளோட குணம் தான் உனக்கு ரொம்ப பிடிக்கும்னு. இதுவும் அவளோட குணம் தான். அவளை அப்படியே ஏத்துக்கோ! அப்போ தான் உங்க லைப் சந்தோசமா இருக்கும்" என்று அவன் நினைத்ததையே பார்வதி கூற அவரை அப்படியே கட்டிக் கொண்டான் உதய்.

சத்யா உதய் இருவருமே அவர்களின் அம்மாவின் அப்பா அதாவது தனது தாத்தாவின் குணத்தையும் சாயலையும் உடையவர்கள். அவர்கள் செய்யும் எந்த செயலிலும் ஒரு கம்பீரம் இருக்கும். பார்த்தவுடன் திரும்பி பார்க்க வைக்கும் அழகு பெண்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் உண்டு என்பது போல தான் இருவரும் இருப்பார்கள். ஆறடி உயரத்தில் எப்போதும் முகத்தில் சிரிப்புடன் இருக்கும் உதய், அதே போல சத்யா இருந்தாலும் கோபம் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் அவனுக்கு.

சொந்தமாக கம்பெனி அமைத்து கொள்ள வேண்டும் என்ற கனவு இப்போது நிறைவேற போகிறது. பணம் எந்த விதத்திலும் குறைவில்லை இருவருக்கும். ஆனால் அதற்கான நேரம் தேவைப்பட்டது. அதை உபயோகித்து இப்போது நிறைவேற்றி உள்ளனர்.

அடுத்து அவர்கள் கம்பெனி ஆரம்பிப்பதன் வேலைகள் துரிதமாக நடைபெற்றது. பத்திரிக்கை அடிப்பது முதல் பூஜைக்கான வேலைகள் செய்வது வரை எல்லாவற்றையும் சத்யா, உதய், நித்தி மூவருமே பார்த்துக் கொண்டனர்.

அழைப்பிதழ் குறைந்த விலையில் பார்ப்பதுமுதல் எதற்கு அதிக செலவு என அவள் பார்த்து பார்த்து அனைத்தையும் தேர்ந்தெடுக்க, அவளை முறைத்தே சரிகட்டி அனைத்தையும் சிறப்பாக செய்தனர்.

அழைப்பிதழ் அனைவருக்கும் கொடுப்பது மட்டுமே குணசேகரன் மஞ்சுவின் வேலை. ஹனி கல்லூரியில் தேர்வு என்பதால் இதில் அதிகமாக தலையிட முடியவில்லை ஆனாலும் அவளால் முடிந்ததை செய்து கொடுத்தாள்.

"வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.." என ஸ்டைலாக வாசலில் இரு கைகளையும் தோரணையாக பிடித்து நின்று, கண்ணாடியை சட்டைக்கு நடுவே மாட்டிக் கொண்டு தரையை பார்த்து டயலாக் பேசியவன் வீட்டின் உள்ளே பார்க்க, அங்கே அவனை வரவேற்க யாருமே இல்லை.

அதில் ஜர்க் ஆனவன் "அம்மாஆஆ" என்று கத்திக் கொண்டே உள்ளே செல்ல, சத்தம் கேட்டு சத்யா, நித்தி, குணசேகரன், பத்மா, மஞ்சு என அனைவரும் ஹாலிற்கு வந்தனர். உதய் கூட சத்யாவை அழைத்துச் செல்ல வந்தவன் அங்கே தான் இருந்தான்.

"டேய் இனியா எப்படி டா இருக்க? இன்னைக்கு வர்ரேன்னு ஏன் எங்ககிட்ட சொல்லவே இல்லை?" என அனைவரும் ஒவ்வொருவராக கேட்க, அப்போதுதான் தெரிந்தது அவனிற்கு, இதற்கு காரணம் ஹனி என்று. அவன் முந்தைய நாள் அப்பாவை அழைக்கும் போது அவள் தானே போனை எடுத்தது.

அவன் அவளைத் தேட, அங்கே இருந்த டிவியில் அவன் வாசலில் நின்று காட்டிய படம் ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அனைவரும் அவனை பார்க்க, இப்போது கொலைவெறியே வந்தது அவனுக்கு.

இதை தானே அனைவரும் எதிர்பார்த்தது. இனியன் என்ட்ரி இப்படி தானே இருக்கும். ஆக இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது. ஹாலில் இருந்து பேப்பர் படித்து கொண்டிருந்த குணசேகரனை ஹனி தான் உள்ளே அனுப்பினாள் ஏதேதோ காரணம் சொல்லி. அதன் பின்னும் யாரையும் ஹாலிற்கு வரவே விடவில்லை அவள். அதற்கான காரணம் இப்போது தான் அனைவருக்கும் புரிந்தது.

அனைவருக்கும் சிரிப்பு வந்தாலும் சிரிக்கவா வேண்டாமா என ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்திருக்க ஹனியின் சிரிப்பில் அனைவருமே சிரித்து விட்டனர்.

"அடியே உன்னை.." என்றவன் ஹனியை துரத்த, "டேய் குண்டா வேணாம். நீ எப்படியும் இப்படி மொக்கையா எதாவது பண்ணுவனு தெரியும். அதனால தான் இப்படி பண்ணினேன். ஆனாலும் நீ தலைவர் டயலாக கொலை பண்ணுவனு எதிர்பார்க்கல" என ஓடிக் கொண்டே அவள் கூற, அனைவரும் சிரிப்புடன் அவர்களை பார்த்திருந்தனர்.

இதற்குதானே இனியா வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தது. திறப்பு விழாவிற்கு விடுமுறை எடுத்து வந்திருந்தான்.

விரட்டியவன் நாலு கொட்டு கொட்டிய பிறகே சோர்ந்து போய் சோஃபாவில் சாய்ந்தான். "ச்சே எவ்ளோ மாஸ் என்ட்ரி! உன்னால தான் டீ" என்று மீண்டும் குஷனை தூக்கி ஏறிய, அவள் மாமாவிடம் போய் நின்று கொண்டாள்.

அப்போது தான் உதயை கண்டவன், "உதய் அண்ணா! எப்படி இருக்கீங்க? காங்கிரட்ஸ். எப்படியோ ரெண்டு பேரும் சாதிச்சுட்டிங்க. ரொம்ப ஹாப்பி அண்ணா" என அவனை பேசவிடாமல் பேசி அனைத்துக் கொண்டான்.

அவனருகில் வந்த சத்யா, "அது இருக்கட்டும் மகனே! அங்கே யார்கிட்டயோ கடலை போடுறதா எங்களுக்கு நியூஸ் வந்துச்சே! உண்மையா?" என அவன் கழுத்தை நெறிப்பது போல தோளை சுற்றி கை போட்டுக் கொண்டு கேட்க, 'இதுக்கும் இந்த குட்டி பிசாசு தான் காரணமா இருக்கும். உனக்கு இருக்கு டீ' என அவளை முறைத்தவன் அனைவரையும் சமாளித்து அறைக்குள் ஓடி போனான்.

அன்று கம்பெனியின் திறப்பு விழா பூஜை. முதலில் குத்து விளக்கு ஏற்றுவதற்கு மஞ்சுவையும் பார்வதியையும் சத்யா அழைக்க பார்வதி திட்டமாக மறுத்துவிட்டார். கணவரை இழந்தவள் என யாரும் கூறிவிட்டால் அதைத் தன்னால் தாங்க முடியாது என்பதை விட உதயால் தாங்க முடியாது என்பதுதான் பார்வதி மறுத்ததன் காரணம்.

உதய்க்கும் அது புரிந்ததால் எதுவும் சொல்லாமல் நின்றுவிட்டான். ஆனாலும் அவனுக்கு கவலையாகத்தான் இருந்தது. நல்ல நாளில் எதுவும் தன்னால் கெட்டுவிடக் கூடாது என முயன்று எப்பொழுதும் போலவே சிரிப்புடன் வளைய வந்தான்.

பின் மஞ்சுவிற்கும் கஷ்டமாகிவிட அதை எப்படி மறுப்பது என நினைத்தவர் அனைவருக்கும் பொதுவாக நித்தி மற்றும் ஹனியை விளக்கேற்ற வைத்தார்.

இதில் அனைவருக்கும் சந்தோசமே. அதுவும் ராஜம்மாள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். பார்வதி நினைத்தது போல யாரும் சொல்லிவிட முடியாது தான் குணசேகரனை மீறி. ஆனால் ராஜம்மாள் சும்மா விட்டிருக்க மாட்டார். இப்போது தன் மகளின் மகள்களே விளக்கேற்ற அவருக்கு அவ்வளவு சந்தோசம்.

திறப்பு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள், சிறியவர்களின் நட்பு, மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே.

மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்திருக்க, அனைவரும் அதில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த சத்யா யாரும் பார்க்காத வண்ணம் நித்தி ஜடையை பிடித்து இழுத்து தனியாக கூட்டி வந்தான்.

"மாமா மாமா வலிக்குது!" என அவள் அவன் பின்னேயே சென்றாள். இதனை உதய் ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே நகர்ந்தான். அவனுக்கு தெரியும் சத்யாவின் செயலுக்கான காரணம்.

"விளக்கேத்தும் போதே மது இங்க இருக்கணும். அது உன் பொறுப்புனு சொன்னேனா இல்லையா?. வரும்போது கூட நீ அவளை கூட்டிட்டு வானு தானே சொன்னேன். மூனாவது மனுஷங்க கூட வந்துட்டாங்க. இன்னும் அவளைக் காணும். நீ எனக்கென்ன வந்ததுனு சுத்திட்டு இருக்க!" என அவள் காதை பிடித்து திருகிக் கொண்டே பொரிந்து தள்ளினான்.

"அடேய் விடுடா விடுடா! அம்மா!!" என சத்தம் போட்டவள், அவன் பேச பேச கோபம் வர, "அடிங்.. விடுடா" என்று பேச, அவன் சட்டென விட்டு விட்டான் அவள் பேசிய வார்த்தைகளில்.

"உன் ஆளு வீட்டுக்கு போய் அவகிட்ட நான் கெஞ்சி கூத்தாடி கிளப்பினா.. கிளம்பினவ எங்க சித்தி கூட தான் வருவேன்னு என்னை அசிங்கப்படுத்தி அனுப்பிட்டா. நானும் உனக்காக இவ்ளோ நேரம் பேசாமல் இருந்தா என் வாயை கிளறுறியா நீ?" என அவள் பேச அசடு வழிந்து நின்றான் சத்யா.

"அவ வந்தாலும் வரலைனாலும் நீங்கள் ரெண்டு பெரும் என் முன்னாடி இன்னைக்கு வராதீங்க. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என கத்தி விட்டு சென்று விட்டாள்.

அதன்பின் யோசித்தவன் அவள் சித்தியின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்து கவலையையும் கோபத்தையும் முகத்தில் காட்டவும் முடியாமல் வீடு வரை சென்று விட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
அழகான குடும்பம்
அன்பான அம்மாக்கள்
அவர்களை புரிந்து கொள்ளும் அப்பா
ஆர்ப்பாட்டமான பிள்ளைகள்
அறுந்த வாலு ஹனி இனியா
அப்பப்ப தேள் பேச்சு பாட்டி
ஆக மொத்தம் சூப்பர்.... 💐💐💐💐
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அழகான குடும்பம்
அன்பான அம்மாக்கள்
அவர்களை புரிந்து கொள்ளும் அப்பா
ஆர்ப்பாட்டமான பிள்ளைகள்
அறுந்த வாலு ஹனி இனியா
அப்பப்ப தேள் பேச்சு பாட்டி
ஆக மொத்தம் சூப்பர்.... 💐💐💐💐
Thank u so much sia
 
Top