• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே!!! - முன்னோட்டம் 1

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அழகான காலை வேளையில், அந்த மண்டபத்தின் பெரிய வாசலை நிறைத்து நெருக்கமாக தென்னங்கீற்றுக்களை கொண்டு போடப்பட்ட பந்தலுக்கு, இரு புறமும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, பலவித தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மண்டபம் முழுக்க உறவுகள் நிறைந்திருந்தனர்.

உள்ளே அழகான மணவறை போடப்பட்டு, ஐயர் அமர்ந்து சடங்குகளுக்கான மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க, மணமகன் அமர்ந்து அதை வழிமொழிந்து கொண்டிருந்தான். பின்புறம் இருந்த சமையல் கூடத்தில் அசைவ விருந்துக்கு தேவையான அனைத்தும் ருசியாக தயாராகிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில், "பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ." என ஐயர் குரல் கொடுக்க, மணமகள் அறைக்குள் சென்ற மணமகனின் சகோதரி, கையை பிசைந்து கொண்டு தயக்கத்தோடு வெளியே வந்தாள். அவளது தயக்கத்தை கண்ட அவளது அன்னை, "என்னடி ஆச்சு. பொண்ணு எங்க?" எனக் கேட்க, அவளோ இல்லையென தலையாட்டினாள்.

உடனே அவரோடு பெண் வீட்டினரும் உள்ளே சென்று பார்க்க, நிமிடத்தில் அந்த இடமே அல்லோகலப்பட்டது. சற்று நேரத்தில் மணப்பெண்ணை காணவில்லை என்பது தெளிவாக, அடுத்து என்ன செய்வது என சிலர் யோசனை செய்து கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு வந்த இன்னும் சிலரோ, மணப்பெண்ணையும் அவளது வளர்ப்பையும் பற்றி தூற்றிக் கொண்டிருக்க, பெண்ணின் பெற்றோரோ தனது மகளை பற்றிய கவலையில் ஆழ்ந்தனர். அப்போது சில பெரியவர்கள் வழக்கம் போல, "சரி விடுங்கப்பா. நடந்தது நடந்திருச்சு. போனவளை நினைச்சு நேரத்தை வீணடிக்காம இளைவளை கட்டி வைங்க." என்றனர்.

அதுவரையில் அங்கு நடப்பது புரியாமல் பார்வையாளராக நின்று பார்த்துக் கொண்டிருந்த மணப்பெண்ணின் தங்கை, இப்போது அதிர்ந்து பார்த்தாள். அவளறிந்த வரையில் அவளது தமக்கைக்கு யார் மீதும் விருப்பம் இல்லை. திருமணம் கூட பிடிக்கவில்லை என கூறவில்லையே. ஒருவேளை தனக்கே தெரியாமல் எதுவும் நடந்திருக்குமோ என யோசித்தாள்.

அதுவே ஒரு மாதிரி இருக்க, இப்போது தன்னை அந்த இடத்தில் நிற்க சொல்பவர்களை நினைத்தால் கோபமாக வந்தது. "என்ன பேசறீங்க. அவுங்க எங்க அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை. நான் எப்படி கட்டிக்கறது. அதோட நான் இன்னும் படிச்சே முடிக்கல. அதுக்குள்ள கல்யாணமா?" எனக் கேட்டே விட்டாள்.

"ஏன்டி மீனாட்சி, மூத்தவதான் உன் மானத்தை வாங்கிட்டானா. இளையவளும் அதுக்கு குறைச்சல் இல்லாம இருக்கா. இப்ப என்ன எங்கிட்டும் நடக்காத முறையவா சொல்லிபுட்டாக. இந்த கல்யாணத்துக்கு சீர் செனத்தினு எம்புட்டு செலவு பண்ணீயிருப்பீக. அத்தனையும் வீணா போகனுமா?" என்றார் மூத்தவர் ஒருவர் அவளது தாய் மீனாட்சியிடம்.

அதன்பிறகு மீனாட்சியே தனது மகளை போய் மணவறையில் அமர சொல்லவும், அவளோ அதிர்ச்சியாகி மறுமொழி கூற வரும் முன்பே, "அம்மா மேல உனக்கு நிஜமாலுமே மரியாதை இருந்தா போய் உட்காரு." என்றுவிட, அதற்கு மேல் பேசாமல் சென்று அமர்ந்தாள். அதைக் கண்டு அதுவரையில் பேசாமல் இருந்த அவளது தந்தை வாய் திறந்தார்.

"வேணாம் கண்ணு. நீ எழுந்து அப்பாக்கிட்ட வா." என்றவர், "இதோ பாருங்க. இப்பவும் என் பெரிய பொண்ணு தப்பு பண்ணாளான்னு தெரியல. அதுக்குள்ள நீங்களா முடிவு பண்ணி என் சின்ன பொண்ணு வாழ்க்கையை முடிவு எடுக்காதீங்க. ஒருநாளும் இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்." என குரலை உயர்த்தி கூற, எழுந்து வந்து தந்தையைக் கட்டிக் கொண்டு அழுதாள் அவள்.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 37
Top