• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 28

தன்னைப் பார்த்து மலர்ந்த மனையாளின் முகத்தைக் கண்டு மனதிற்குள் மத்தாப்புக்கள் பூத்தன ஆராவுக்கு. தன் கைகளுக்குள் அவள் கைகளை உறுதியாக பிடித்துக் கொண்டு, தன் உள்ளம் கொண்ட மகிழ்ச்சியை அவளுக்கு கடத்தினான்.

ஆராவின் புரிதல் சங்கமித்ராவிற்கும் ஆனந்தமே. பார்த்தவுடன் ஆதிஷ் குப்தாவை எரித்துவிட்டு, தன் அன்னையின் இறப்பிற்கு நியாயம் தேடத்தான் சங்கமித்ராவின் மனம் துடித்தது.

ஆனால் சங்கமித்ராவின் இன்றைய நிமிர்ந்த நிலை ஆதிஷின் கண்களில் வன்மத்தை தூக்கிக் காட்டவே, அவனை வெறியேற்றி அவன் முக மாறுதல்களை ரசிக்கவே அவளின் உள்ளம் விரும்பியது. அவனின் உயிரை எடுப்பதை விட, கண் பார்வையிலேயே தன் அன்னையை அடக்கி வைத்திருந்தவனின் ஆணவத்தை அடியோடு தகர்க்க அவள் நெஞ்சில் உறுதி பிறந்தது.

இத்தனை நாள் தோன்றாத இந்த உறுதி, ஆராவின் அருகில் நெருங்கி வந்ததும் தோன்றியதால், பற்றியிருந்த அவன் கைகளுக்குள் விரும்பியே சரணடைந்தாள்.

ஆதிஷ், ஆராவமுதன் பற்றிய முழு தகவல்களை திரட்டினான் ஒரே இரவில். அவனின் உயரம் ஆதிஷை பிரமிக்க வைத்தது. தன்னை ஏமாற்றி ஓடிய சங்கமித்ரா, வாழ்க்கையில் தோல்வியை சந்தித்து இருந்தால் கூட பெரிதாக கவலைப்பட்டு இருக்க மாட்டான் ஆதிஷ். ஆனால் சங்கமித்ரா அவன் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் அமர்ந்திருந்ததைக் கண்டு அவன் உள்ளம் எரிந்தது.

அந்த உயர்ரக பாரில் தன் முன்னே கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த சிகப்பு நிற திரவத்தை உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிஷ். எத்தனை கோப்பைகளை அவன் உதடுகள் ஸ்பரிசித்தாலும், வலியால் துடித்த தன் பாதத்தை தடவிக் கொண்டே, சங்கமித்ரா தந்த அவமானத்தை மறக்க முடியாமல் திணறினான்.

அவன் அருகே வந்த வெயிட்டர், "சார்... சார்..." என்று பலமுறை அழைத்தும் கவனிக்காமல் இருந்த ஆதிஷின் தோளைத் தொட்டு உலுக்க, கண்மூடித்தனமான கோபத்தில் ஆதிஷ் அந்த வெயிட்டரை தாக்கினான்.

அவனை தாறுமாறாக தாக்கியதில் மேஜையில் இருந்த கோப்பை உடைந்து ஆதிஷின் கையைக் கீறியது. சத்தம் கேட்டு அங்கே வந்த மேனேஜர், ஆதிஷை சமாதானப்படுத்தி, கை காயத்திற்கு மருந்திட தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றார்.

மேனேஜர் கண் காட்டவே ஓர் அழகி அவன் அருகில் வந்தாள். அவனின் கை காயத்திற்கு மருந்திட்டவள், "இந்த வயதிலும் எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்? " என்று ஆதிஷிற்கு முதல் வலை விரித்தாள்.

போதையின் பிடியில் இருந்தவனும், "இஸ் இட்?" நெளிந்து குழைந்து சிரித்தான்.

" நீங்கள் மட்டும் ஏஜ் மிராக்கிள் ட்ரீட்மென்ட் எடுத்தால், டீன் ஏஜ் பையனாகவே மாறி விடுவீர்கள் " என்றவள் விரித்த வலையில் மொத்தமாக வீழ்ந்தான் ஆதிஷ்.

ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலையின் பெயரைச் சொல்லி, அங்கு சென்றால் அவன் அழகு பன்மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையை அவன் அதில் ஆழமாக விதைத்தாள். ஆதிஷின் கண்களில் பேராசை பளபளப்பதைக் கண்டு ஏளனத்துடன் சிரித்து விட்டு வெளியேறினாள்.

வீட்டிற்கு வந்து போதை தெளிந்த ஆதிஷ் என்ற அரக்கனுக்கு, அழகையே தன் மூலதனமாகக் கொண்டவனுக்கு, அந்த வைத்தியசாலைக்கு உடனே செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. என்னதான் நரைத்த முடிகளை கருமையாக்கினாலும், முகத்தில் ஏற்பட்ட தோல் சுருக்கம் அவனுக்கு ஓர் கவலையாகவே இருந்தது. மீண்டும் பெண்களை மடக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததும், அதை நழுவ விட மனம் வரவில்லை அவனுக்கு. ஆசை வெறியில், சங்கமித்ராவை பழி வாங்கும் வெறி கூட பின்னே சென்றது.

அந்த வைத்தியசாலைக்கு சென்று, ஏஜ் மிராக்கிள் ட்ரீட்மென்ட்க்கு முன்பதிவு செய்து கொண்டான். முகத்திலும், உடலிலும் சில கிரீம்களை தடவி, தனிப்பட்ட இருட்டு அறையில் வைத்து, பலவிதமான ஒளிக்கற்றைகளை அவன் மேல் படுமாறு ஒளிரச் செய்தனர். தொடர்ந்து இரண்டு வாரங்கள் வரும்படி அவனுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகச் சருமத்தில் ஏற்பட்ட வழவழப்புத் தன்மை அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை, திருப்தியைத் தந்தது. சந்தோஷமாகவே இரண்டு வாரமும் சென்றான்.

அமைதியாகவே இருந்த சங்கமித்ராவை ஆரா புயல் சுருட்டிக்கொண்டு அவள் அன்னையின் ஊரான, கன்னிராஜபுரத்திற்கு அழைத்துச் சென்றது.

தன் அன்னை வாழ்ந்த வீட்டின் முன் கார் நின்றதும், கலங்கத் துடித்த கண்களை மறைத்துக் கொண்டு கம்பீரமாகவே காரில் இருந்து இறங்கினாள் சங்கமித்ரா.

சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் இருந்த வீட்டைப் பார்த்ததும் அதிர்ந்த மகிழ்வுடன், ஆராவை திரும்பிப் பார்த்தாள். மென் புன்னகையுடன் தலையசைத்து, வீட்டிற்குள் செல்லும்படி சைகை செய்தான்.

தனலட்சுமியும், ஸ்வப்னாவும் வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. தேக்கு மரக் கதவுகள் எல்லாம் வார்னிஷ் அடிக்கப்பட்டு பள பளவென இருந்தது. வரவேற்பறைக்குள் நுழைந்ததும் மூச்சடைத்து நின்றாள். சுவர் முழுவதும் சங்கமித்ராவும், சுமித்திரையும் சேர்ந்த புகைப்படங்கள் நிறைந்திருந்தது.

அவள் அன்னையின் படத்திற்கு அணிவித்திருந்த புத்தம் புது மாலையும், புகைந்து கொண்டிருந்த ஊதுபத்தியும் தினம் தோறும் இந்த பணிகள் நடப்பதை எடுத்துக்காட்டின. தெய்வீகச் சிரிப்போடு சிரிக்கும் தன் அன்னையின் படத்தை சிரம் தாழ்த்தி, கரம் குவித்து வணங்கினாள். அவள் அன்னையின் படத்திற்கு முன் இருந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தாள். அவள் சித்தி தனலட்சுமிக்கு அவள் எழுதிக் கொடுத்த வீட்டு பத்திரங்கள் எல்லாம் இருந்தன.

அவள் அருகில் வந்த ஆரா அந்த பத்திரங்களை எல்லாம் எடுத்து கிழித்து வீசினான். " இனி இந்த வீட்டை உன்னைத் தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. உன் அம்மா உனக்கு மட்டும் தான் மித்ரா" என்றான்.

அவள் அருகில் நெருக்கமாக ஆரா வந்து நின்றதும், " தேங்க்ஸ்" என்றாள் அவனைப் பார்க்காமலேயே.

"ம்... வெறும் தேங்க்ஸ் தானா? நான் வேறு எதையோ எதிர்பார்த்தேன் உன்னிடம் மித்ரா" என்றவன் ஒருவிரல் நீட்டி அவளைப் பார்த்து குறும்புடன் சிரித்தான்.

தன் அன்னையின் நினைவுகளை மீட்டுக் கொடுத்தவனுக்கு எதையும் தரலாம். அவன் விரும்புவதோ அவளின் மெய் அல்ல. பொய்மை கலக்காத, மெய்யான அவளை. தன் கூட்டை உடைக்கத் தெரியாத பட்டுப்புழுவாய் அவள் நின்றாள்.

அவனை விட்டு விலகி, முற்றத்தில் வந்து நின்று வான் நோக்கிப் பார்த்தாள். செய்வதறியாத சிறு குழந்தையின் மனநிலையில், 'அம்மா' என்று சத்தம் இல்லாமல் அவள் உதடுகள் அசைந்தது. இது நாள் வரை அவள் உணர்வுகளைப் பூட்டி வைத்திருந்த பூட்டுக்களில் முதல் பூட்டு உடைந்து, கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.

கன்னம் தாண்டி வழிந்த அவள் கண்ணீரைக் கண்டதும், ஆரா தன் இரு கைகள் விரித்து, "வா..." என்று அழைத்தான். அழுத்தக்காரி அசையாமல் நின்று அவனைப் பார்த்தாள்.

சங்கமித்ராவை தாண்டி, "மாமா..." என்று கூவிக்கொண்டே அவன் கைகளுக்குள் வந்து நின்றாள் ஸ்வப்னா.

"நீங்கள் போனில் சொன்னபடியே நாங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டோம். நீங்கள் சொல்வதை நாங்கள் அப்படியே கேட்போம். இல்லம்மா.. " என்று வாசல் பக்கம் நின்ற தனலட்சுமியையும் கூட்டு சேர்த்தாள் ஸ்வப்னா.

கேட்டத் தொகைக்கும் மேல் அதிக பணத்தை தங்களுக்கு கொடுத்ததும் இல்லாமல், இரண்டே நாளில் பணத்தை தண்ணீராய் செலவழித்து வீட்டை மாற்றிய அந்த வித்தைக்காரனின் பணச் செழுமை அவரின் தலையை ஆட்ட வைத்தது. கையில் கிடைத்த சொர்க்கத்தை, சங்கமித்ராவிற்கு கைமாற்றிய தன் முட்டாள்தனத்தை நினைத்து நொந்து போனவருக்கு, 'இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது முயற்சி செய்து பார்க்கலாம்..' என்று மகள் கொடுத்த நம்பிக்கையில் பல்லை இளித்துக் கொண்டு நின்றார் தனலட்சுமி.

அசையாமல் நின்றிருந்த சங்கமித்ரா, நிதானமாக அடியெடுத்து வைத்து, ஸ்வப்னாவின் முன் சொடுக்கிட்டாள். அலட்சியமாகப் பார்த்தவளின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள்.

சுழன்று கொண்டு தூணில் முட்டிச் சென்று நின்றவளைப் பார்த்து, " மிஸ்டர் ஆராவமுதன் சொல்வதை மிஸஸ் ஆராவமுதன் கேட்டால் போதும். நீ கேட்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை" என்று கூறி கைகளை தட்டி விட்டு, இல்லாத தூசியை ஊதினாள்.

ஆத்திரத்தில் முன்னே ஒரு அடி எடுத்து வைத்த தனலட்சுமியை, சங்கமித்ராவின் நிமிர்ந்த தோற்றம் தடுத்து நிறுத்தியது.

தன்னவள் தன்னை பூட்டிக் கொண்ட பூட்டுக்கள் ஒவ்வொன்றாய் திறக்க, புன்னகை முகத்துடன் ஸ்வப்னாவை பார்த்து, விரித்திருந்த தன் கையை வாசல் நோக்கி நீட்டினான்.

இருவரும் சங்கமித்ராவை சபித்தபடி, கிடைத்தவரை லாபம் என்று வீட்டை விட்டு வெளியேறினர். ஆராவின் புன்னகை கேலியை சுமந்திருந்ததைக் கண்டு, " உங்கள் பரிகாசம் போதும் அமுதா. நான் கொடுத்த வாக்கிற்காக மட்டுமே. வேறு எதுவும் இல்லை... வேறு எதுவுமே இல்லை..." என்றாள் வேகமாக.

" நான் கேட்காத கேள்விக்கு பதில் எதற்கு?" என்றவனின் புன்னகை நீண்டு கொண்டே சென்றது.

சங்கமித்ரா தன் பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். சாகசக்காரனும் வாசலைப் பார்த்து, "வா ஸ்வப்னா..." என்றான் சத்தமாக.

மின்னல் வேகத்தில் திரும்பிய சங்கமித்ராவைக் கண்டு சத்தமிட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

பதட்டத்தில் சங்கமித்ரா தன் ஐவிரல் நகங்களை ஒன்றாகச் சேர்த்து கடிக்க ஆரம்பித்தாள். மெல்ல அவள் அருகில் வந்தவன், அவள் விரல்களை தன் கைக்குள் சிறை எடுத்துக்கொண்டு, " உன் இதழ் தாண்டி பற்கள் தரும் தண்டனைகள் உன் விரல் நகங்களுக்கு வேண்டாம்" என்றவன் தன் இதழ் கடித்து, அவளை ஓர் அர்த்தப் பார்வை பார்த்துவிட்டு, அவள் விரல்களை தன் உதட்டின் மீது பதித்துக் கொண்டான்.

மண்ணென்று இருந்தவளை பெண் என்று உணரச் செய்ய, அவன் அவளை நெருங்க, அவள் தனக்குள் பதுங்க, ஒரு காதல் சதிராட்டம் அங்கே அரங்கேறியது.

குளிர்ந்த காற்று சட்டென்று வீசி, முற்றத்தில் வான் தந்த மழைச்சாரல்கள் பொழிய ஆரம்பித்தது. ஆராவின் இதழ்கள் தந்த சத்தத்தில் உடலில் ஓர் நடுக்கம் ஏற்பட, தன் கையை உருவிக்கொண்டு, தூண் மறைவில் நின்று கொண்டாள் சங்கமித்ரா.


தன் முகம் மறைத்து, வழு வழுவென்று இருந்த தூணை, தன் தளிர்க்கரங்களால் பற்றிக் கொண்டாள். சாரல்கள் அவள் விரல்களில் பட்டு, துளித்துளியாய் அவள் விரல்களில் இருந்து உருண்டோடி, கீழே விழுந்து சிதறியது.

ஆராவின் மனதில் மோகவீணை ராகம் மீட்ட, அவள் மறைந்திருந்த தூணருகில் வந்தான். அவள் விரல் வழி வடிந்து கொண்டிருந்த மழைத்துளிகளை தன் உள்ளங்கையில் சேகரித்தான். ஒரு கை கொண்டு அவளை இழுக்க, விடாது தூணை பற்றிக் கொண்டு முரண்டு பிடித்தாள்.

அவன் கரம் தந்த அழுத்தத்தில், முகத்தில் மழைச்சாரல்கள் பட்டும், சிமிட்டா இமைகளுடன் அவனைப் பார்த்தாள். "கண்களை மூடு மித்ரா " என்றான் மோக வெள்ளத்தில் நீந்திக்கொண்டு.

சங்கமித்ராவின் தலை மறுப்பாக அசைந்தது. தன் உள்ளங்கையில் சேகரித்த நீருக்கு முத்தமிட்டான். தன் உள்ளங்கை சுமந்திருந்த முத்தமிட்ட நீரை, முன்நெற்றியில் இருந்து, அவள் முகத்தில் வழிய விட்டான்.

முகத்தில் வழிந்த நீர், தான் சுமந்த அவன் முத்தங்களை, அவள் முகம் எங்கும் பூச, கண்கள் மூடி சிலிர்ப்பை அடக்க நினைத்தாள்.

ஏகாந்தம் ஏழிசை பாட, தூணைப் பற்றி இருந்த அவள் கைகளுக்கு முத்தம் தந்தான். சங்கமித்ராவின் கைபிடி தளர்ந்து தூணை விட்டு அவள் விலக, தன் கரங்களில் அவளை அள்ளிக் கொண்டு தட்டாமாலை சுற்றினான்.


மூச்சு வாங்க நின்றவன், "மித்ரா மொத்தம் வேண்டாம் ஒரே ஒரு முத்தம் தா!" மோகநதி வெள்ளத்தில் மூழ்குபவனின் குரல் கரகரப்பாய் ஒலித்தது.

"நான்... எனக்கு... உங்களிடம்..." அவனிடம் விளக்க முடியாமல் தவித்தாள்.

"ம்... ஹூம்... உன் மாற்றத்தை மறைக்காதே மித்ரா!", அவள் முகத்தை தன் நெஞ்சத்தில் அழுத்தி, "உள்ளே துடிக்கும் என் துடிப்புகளுக்கு பதில் சொல் மித்ரா!" என்றான் ஓங்கிய குரலில்.


அவன் தவிப்புகளை உள்வாங்கியவள், தன் தலையை நிமிர்த்தி, அவன் உதடுகள் நோக்கி தன் உதடுகளைச் சுமந்து சென்றான். பாதை முடிவில், அவன் உதட்டருகில், " என்னால் முடியவில்லை அமுதா!" என்றாள் உதடுகள் நடுங்க.

ஆராவின் கைகள் மெல்ல அவளை கீழே இறக்கி வைத்தது. தன் வலது கையால் பக்கவாட்டில், தொடை மீது அடித்துக் கொண்டவன், "கிளம்பலாமா மித்ரா? " என்றான்.

தன் தாய் வாழ்ந்த வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்து பெருமூச்சு விட்டவள், அவனுடன் இணைந்து வெளியேறினாள்.

அடுத்தபடியாக, இருவரும் இணைந்து தேனம்மாவை பார்த்து, சிறிது நேரம் உரையாடி, அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அங்கிருந்து மும்பை கிளம்பினர்.

அமைதியை தத்தெடுத்த இருவரின் முகமும், தேனம்மாவிற்கு கவலையை கொடுக்க, நடுநாயகமாய் வீட்டில் வீற்றிருந்த முருகனை கையெடுத்து தொழுதார்.

ஏஜ்மிராக்கிள் ட்ரீட்மென்ட் முடிந்து, முதலில் சுருக்கங்கள் இன்றி, பளபளப்பாக மினுத்த தோல், பின் வரண்டு செதில் செதிலாக தோற்றமளிக்க ஆரம்பித்தது. ட்ரீட்மெண்ட் சென்டருக்கு சென்றவனுக்கு, மேலும் சில கிரீம்களை கொடுக்க, அதனை இடைவிடாது பூசினான். தோலில் மாற்றம் ஏற்பட்டு, புண்கள் அரிப்புடன் தோன்ற ஆரம்பித்தது. புண்கள் ஆறாமல் நீர் வடியத் தொடங்கியது.

தன் வைத்திய முறையில் ஏதோ தவறு என்று புரிந்து கொண்ட ஆதிஷ், வேறு மருத்துவரை சந்திக்க, அவர்கள் தந்த அறிக்கையில் அதிர்ந்து போனான். அதீத புற ஊதாக்கதிர்கள் சிகிச்சையினால், தோல் புற்றுநோய் உண்டாகி இருப்பதாக அறிக்கை சொன்னது. ஏஜ் மிராக்கிள் சென்டருக்கு சென்று, ஆதிஷ் மிரட்ட, புற ஊதாக் கதிர் சிகிச்சைக்கு சம்மதம் அளித்து, அவன் கையெழுத்திட்ட ஆவணத்தை காட்டினர்.

தான் ஏமாந்ததை உணர்ந்து கொண்டவன், தனக்கு இந்த வைத்தியத்தை பரிந்துரைத்தவளை பார்ப்பதற்காக அந்த பாரை நோக்கி விரைந்தான்.


தன்னைத் தடுத்தவர்களை கண்டு கொள்ளாமல் அந்தப் பெண்ணின் முன் வந்து நின்றான். ஆதிஷ் பேசத் தொடங்கும் முன் தடுத்து நிறுத்திய அந்தப் பெண், " இப்படி கோபமாக ஒரு நாள் நீங்கள் வந்தால், யாருக்கும் தெரியாமல், நீங்கள் லிப்டில் எடுத்த விசிட்டிங் கார்டில் உள்ள அட்ரஸுக்கு செல்லும்படி சொல்லச் சொன்னார்கள் " என்றாள்.

அவளை அடிப்பதற்காக கையை உயர்த்தியவனை பவுன்சர்கள் குண்டு கட்டாகத் தூக்கி பாரின் வெளியே எறிந்தனர்.

அவமானத்தில் முகம் சிறுத்தவன் அன்று தான் பத்திரப்படுத்திய அந்த விசிட்டிங் கார்டை, தன் வாலட்டிலிருந்து எடுத்துப் பார்த்தான். நடுவீதியில் "ஆரா..." என்று கத்தினான்.

ஆரா விமானத்திலும் கண்மூடி படுத்திருக்க, பேச்சற்ற அவனின் மௌனம் சங்கமித்ராவை அசைத்தது. மறுநாள், வெள்ளிக்கிழமை காலை உணவிற்கு வந்து அமர்ந்தவனுக்கு உணவு பரிமாற வந்த நாயகி அங்கே நின்றிருந்த சங்கமித்ராவை கண்டதும், உணவைப் பரிமாறாமல் சத்தமின்றி வெளியேறினார்.

உணவுப் பதார்த்தங்களை அவன் தேவை அறிந்து பரிமாறினாள் சங்கமித்ரா. தன் காலை உணவை முடித்துவிட்டு கைகளை துடைத்துக்கொண்டு, நாற்காலியிலிருந்து ஆரா எழும் முன் அவன் வாய்க்கு நேராக நீண்ட சங்கமித்ராவின் வளைக்கரம், சர்க்கரைப் பொங்கலை அவன் வாயில் ஊட்டியது.

தன் மௌனத்தை உடைத்து ஆரா, "தேங்க்ஸ்" என்றான்.

அன்று போல் அவன் தன்னை 'மித்ராம்மா' என்று அழைப்பான் என்று நினைத்தவளின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் மாற, அவனை இயல்பாக்கும் நோக்கில், "அடடா வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா? நான் வேறு எதையோ எதிர்பார்த்தேனே!" என்றாள் மென் முறுவலுடன்.

அடுத்த கணம் சங்கமித்ராவின் நாஅரும்புகள் சர்க்கரைப் பொங்கலை சுவைத்தது ஆராவின் அசுர முத்தத்தில்.


சிறை எடுப்பாள்...
 
Last edited:

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ஆதீஷ் 🤣🤣🤣🤣 இன்னும் அழகு வேண்டுமோ உனக்கு 😂😂😂😂 இந்த அழகினால் தானே எத்தனை பெண்களை ஏமாற்றினாய் 😡😡😡

தாயின் கனவுகளை கணவன் நிறைவேற்றிவிட்டான் 🥰🥰🥰 ஆனாலும் இன்னும் ஏன் பூட்டை உடைக்க முடியவில்லையாம் 🤔🤔🤔

ஆரா உனக்கு எல்லாவற்றிலும் அதிரடிதானா 😳😳😳
 
Top