• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 5

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 5

இரவு மதுவிற்கு பால் கலந்து கொண்டிருந்த ஆதி அருகே வந்த அபி அந்த பாலை கைகளில் எடுக்க,

"அது மதுவுக்கு!" என்ற சொல்லில் கீழே வைத்துவிட்டான்.

"ஏன்டா வேணுமானு எல்லாம் கேட்க மாட்டியா?" அபி கேட்க,

"நீ வேணும்னு சொல்லிட்டா பால் இல்லையே!" என்று நேராய் சொல்லிவிட்டான் ஆதியும்.

"இதுக்கு வீட்டுப்பக்கம் வராதனு என்னை நீ சொல்லி இருக்கலாம்!" என்றான் கடுப்பாய் அபி.

"சொல்லி இருக்கலாம்.. ஆனா நீ என்கிட்ட சொல்லாம தானே வந்த?" என்று கேட்க,

"என்ன மனுஷன் டா நீ? எங்கேருந்து தான் இப்படி எல்லாம் பேச வருதோ? உன்னை அப்படியே காபி பண்ணி வச்சிருக்குறா மதுவும்.." அபி சொல்ல,

"என் பொண்ணு என்னை மாதிரி தானே இருப்பா!" என்றவன்,

"இப்ப என்னனு இங்க சுத்தி வந்துட்டு இருக்க? அதான் சாப்பிட்டாச்சு இல்ல? மது தூங்குற டைம் வேற! நீ கிளம்பு! என் பைக் எடுத்துக்கோ!" என்றான் ஆதி.

"ஏன்டா தங்கிட்டு போனு கூட சொல்ல மாட்டியா?"

"சீதாம்மா போன் பண்றதுக்குள்ள கிளம்பிடு" என்று ஆதி கூற, வெளியே ஸ்கூட்டி சத்தமும் ஹார்ன் சத்தமும்.

"ஹ்ம்! அதானே பார்த்தேன்! ஏன் டா அவளுக்கு அறிவு இல்லைனா நீயும் சொல்ல மாட்டியா?" ஆதி அபியை திட்ட,

"ஹலோ! யாருக்கு அறிவு இல்ல? என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசுற?" என்று வந்தாள் சக்தி.

"சக்தி!" என்ற குரலில் அபி, சக்தியோடு ஆதியும் திரும்பிப் பார்க்க, அத்தனை கோபமாய் அழைத்திருந்தது மது.

"என்ன டி?" சக்தியும் கேட்க,

"அப்பாகிட்ட சாரி சொல்லு!" என்றவள் நின்ற அழுத்தமான விதத்தில் ஆதிக்கு தன் இதழில் ஒரு மென்னகை வர,

"பெண் தானே? பெண் சாப்ட்டா இருப்பானு நினைக்காத! மது அனதர் வெர்சன் ஆப் ஆதி!" அபி சக்தி அருகே வந்து கூறினான்.

"அட ச்ச! சும்மா இரு டா.. இதுக்கு தான் வர சொன்னியா?" என்று சக்தி மாட்டிவிட, ஆதி அபியை கூர்மையாய் பார்க்க,

"அடியேய்! பைக் இல்லைனு தான் பிக்கப் பண்ண வர சொன்னேன்!" என்று சத்தமாய் கூறியவன்,

"உனக்கு லீடு குடுத்தா என்னையே மாட்டி விட பாக்குறியா?" என மெதுவாய் சக்தி அருகே சென்று கூற,

"அபி! ஃபர்ஸ்ட் அப்பாகிட்ட சாரி சொல்ல சொல்லு!" என்று இன்னும் தீர்மானமாய் நின்றாள் மது.

"இல்லைனா! இல்லைனா என்ன பண்ணுவ?" இரண்டடி முன்னே வந்து சக்தி கேட்க,

"அபி!" என்றாள் அப்போதும் அழுதத்துடன் சத்தமாய்.

"ப்ச்! மதும்மா!" என்ற ஆதி மது அவள்புறம் திரும்பவும் வேண்டாம் என்பதாய் தலையாட்ட,

"அப்பா தான் ஸ்வீட் பாய்! போ! இனி நான் உன்கூட பேச மாட்டேன்!" என்று சக்தியிடம் கூறிவிட்டு உள்ளே செல்ல,

"நண்டு சைஸ்ல இருந்துட்டு பேச்சை பாரேன்!" சக்தி கூற,

அதை கண்டுகொள்ளாத ஆதி, "வெளி கேட்டை பூட்டணும்!" என்று பொதுவாய் கூற,

"கழுத்தை புடிச்சி வெளில தள்ளிடுவான் போல! வா போலாம்!" என்று இழுத்து சென்றான் அபி சக்தியை.

"ஆதி! ரொம்ப பண்ற! எல்லாத்துக்கும் சீக்கிரம் ஒரு முடிவு கட்டறேன்!" என்றபடி அபி ஸ்டார்ட் செய்த ஸ்கூட்டியில் சக்தி ஏற, ஆதியும் கூட அதே முடிவில் தான் இருந்தான்.

"ஸ்டாப் இட் அபி!" என்ற சக்தி பாதி வழியில் இறங்கி நின்று கைகளைக் கட்டிக் கொண்டு ஓரமாய் நின்றுவிட, பாவமாய் இருந்தது அபிக்கு.

"என்ன சக்தி!" என்றான் தன்மையாய்.

"ஏன் டா இப்படி இருக்கான்.. இவனை போய் எப்படி புடிச்சு தொலைச்சுதோ எனக்கும்.. கொஞ்சமாவது அசையுறானா பாரு! எனக்கென்னவோ எதுவும் சரியா நடக்குற மாதிரி தெரியல" சக்தி அலைபாயும் மனதோடு கூற,

"என்ன சக்தி! நீயே இப்படி பேசலாமா? ஆதி பக்கமும் சில கேள்விகள், குழப்பம்னு இருக்கு இல்ல? எல்லாத்துக்கும் மேல அவன் ஒரு குழந்தைக்கு அப்பா! அவன் உனக்காக கூட யோசிக்கலாம் இல்ல? நினச்சு பாரு! அவன் சரின்னு சொன்னா அடுத்து பூகம்பம் நம்ம வீட்டுல தான் வெடிக்கும்.. இல்லைனுவியா நீ? இதெல்லாம் நிறைய இருக்கு.. சிக்கலான முடிச்சை கொஞ்சம் கொஞ்சமா தான் அவிழ்க்கனும்.. மொத்தமா வெட்டி எரிய நினைக்க கூடாது!" அபி எடுத்து கூறவும் ஓரளவு நிதானத்திற்கு வந்திருந்தாள் சக்தி.

காலை அவளை அவன் கண்டு கொள்ளாமல் நின்றதும் அபியுடன் அனுப்பி வைத்ததும் என மனதில் ஒரு பயத்தை விதைத்திருக்க, இப்படி வீட்டிற்கு வந்து நிற்கும் பொழுதும் இப்படி பேசுபவனை நினைத்து மனம் கலக்கம் கொண்டு கண்டதையும் யோசித்து குழப்பமடைந்தது.

இப்படி பேசியபடி அதே இடத்தில் சில நிமிடங்கள் நின்றிருக்க, ஆதி அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது அபிநந்தனுக்கு.

"இவன் எதுக்கு கூப்பிடுறான்?" என்று கூறியபடியே அழைப்பை ஏற்றவன்,

"சொல்லு டா!" என்று கூற,

"அபி! மதுக்கு வீசிங் டா.. கொஞ்சம் சீக்கரமா வாயேன்!" என்று படபடத்த ஆதி குரலில் திட்டுகிட்டவன் நொடியும் தாமதிக்காது சக்தியுடன் ஆதி வீட்டிற்கு சென்றான்.

வாய் மூலம் மதுவிற்கு ஆதி மருந்தினை புகுத்திக் கொண்டிருக்க, மதுவின் நிலைக்குத்திய பார்வையிலும் அவள் நெஞ்சம் ஏறி இறங்கியதிலும் என முதல்
முதலாய் இப்படி நேரில் பார்த்த சக்தி சில நொடிகள் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

ஓரளவு கட்டுக்குள் வந்த பின்பும் ஆதியின் முகத்தில் இருந்த பயம், பதட்டம், படபடப்பு என அபி ஆதியை கவனித்து,

"ஒன்னும் இல்லை டா!" என்று கூற, அவன் முகத்தை எல்லாம் பார்க்கவில்லை ஆதி.

"ஹாஸ்பிடல் போய்டலாம் அபி!" என்றவன் மதுவை கைகளில் ஏந்திக் கொள்ள, சக்தி உடன் வர, அபி ஆட்டோவை அழைக்க சென்றுவிட்டான்.

மருத்துவமனை செல்லும் வழியில் மது அப்பா... அப்ப்பா என்றே நீண்ட மூச்சுக்களோடு சொல்ல, மொத்தமாய் துவண்டு போனான் ஆதி.

மருத்துவர்கள் மதுவை பரிசோதனை செய்ய, ஆதியின் கைகளை இறுக்கமாய் பற்றி இருந்தாள் மது.

"ஒன்னும் இல்லை டா மதும்மா!" என ஆதியும் தலைகோதி நிற்க, சக்தி கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.

"டாக்டர்!" என்று ஆதி அழைக்க,

"ஒன்னும் பிரச்சனை இல்லை!" என்றவர்,

"ரூம்க்கு வாங்க!" என்று கூறி செல்ல, மருத்துவத்தின் மூலம் உறக்கத்திற்கு சென்றிருந்தாள் மது.

"என்னாச்சு டாக்டர்! மது ஏன் இப்படி?" குழப்பம், பயம் என கலந்து ஆதி கேட்க, அருகே சக்தி, அபிநந்தன்.

"மது இன்னும் தான் பார்த்த அந்த தாக்கத்துல இருந்து வெளிவரல ஆதி! இரண்டு வயசுல அவங்க பார்த்த அந்த விஷயம் அவங்க ஆழ் மனசுல ரொம்ப ஆழமா அவங்களே அறியாமல் பதிஞ்சு போயிருக்கு!"

"டாக்டர்!"

"மருத்துவம் இதுல எவ்வளவு முக்கியமோ அவங்க மனநிலையும் அதே அளவுக்கு முக்கியம்.." என்ற மருத்துவர்,

"வீட்டுல, ஸ்கூல்ல எல்லாம் மது எப்படி?" என கேட்க, அமைதி என்பதே அவன் பார்த்த, கேட்ட வரைக்குமான பதில்.

இப்படியான சூழ்நிலை வாழ்நாளில் ஒருமுறை கூட வந்திராத சக்தி இன்னும் திகைப்பு அடங்காமல் தான் அங்கே நின்றிருந்தாள்.

அபி கூறி இருக்கிறான் மதுவுக்கு பிரச்சனை என. என்ன என தெரிந்தவளுக்கு அதை நேரில் பார்க்கும் தைரியம் எல்லாம் இல்லை. நெஞ்சம் இன்னும் அடித்துக் கொண்டு இருக்க, தான் பார்த்தது இப்பொழுது மருத்துவர் மது குறித்தான பேச்சும் என விழி விரித்து நின்றவள் மனம் கலங்கி போனது அந்த குழந்தையின் துயரங்களில்.

அபி மட்டுமே மொத்த கவனத்தையும் மருத்துவரிடம் வைத்திருந்தான் என்றால் அது மிக சரியே! ஆதியின் மனம் மகளுக்காய் துடிக்க, அவரின் பேச்சுக்கள் இவனுக்கு மனத்துள் எவ்வளவு சென்று புரிந்தது என்று அறிய முடியவில்லை.

அபி புரிந்து கொண்டான் அவர் சொல்ல வந்ததை சொல்ல வருவதை. எப்படி ஆதி அவனைப் போலவே மதுவை வளர்த்து வைத்திருக்கிறான் என இவன் நினைத்து இருந்தானோ அது மது அவளுக்கு அவளே அவளறியாமல் ஏற்படுத்தி இருந்த மாற்றம் என புரிந்தது மருத்துவர் பேச்சில்.

அபியிடம் வந்தபின் மது எளிதாய் அவனிடமும் ஒட்டிக் கொண்டாளே தவிர குழந்தையாய் மகிழ்ச்சியாய் சிரித்து விளையாடி இது வேண்டும் அது வேண்டும் என அடம்பிடித்து என எதுவும் இல்லாமல் மற்ற குழந்தைகளில் இருந்து தனித்து இருந்ததை தந்தையாய் தனியாய் அவன் வளர்த்த விதம் என நினைத்திருக்க, அது தானாய் மது ஏற்படுத்தி இருந்தது என இப்பொழுது தான் தெரிந்தது.

"சோ! அவங்க சந்தோசமா இருக்கனும்.. அவங்க அடி மனசுக்கு இது தான் நிஜம்னு ஒரு வாழ்க்கையை நீங்க காட்டணும்" என்று கூறி இருக்க, வெளி வந்த ஆதி தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.

"ஆதி! என்ன டா?" அபி கேட்க,

"எனக்கு ஒன்னும் புரியல அபி! என்ன சொல்றாங்க? நான் மதுவை நல்லா பார்த்துக்கலையா?" ஆதி மொத்தமாய் கலங்கி உடைந்து தான் போயிருந்தான்.

"ப்ச்! உனக்கு சரியா புரியல ஆதி! நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு.. அப்புறமா பேசலாம்.. வா மதுவைப் பார்க்கலாம்" அபி அழைக்கவும் தான் முகத்தை அழுந்த துடைத்தவன் எழுந்து மகளிடம் வந்தான்.

"சக்தி! நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்.. மது, ஆதி நம்மோட வரட்டும்.." மது உறக்கத்தில் இருக்கவும் அபி சக்தியிடம் கூற, ஆதி அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையில் எல்லாம் இல்லை.

தொடரும்..
 
Top