- Joined
- Jul 30, 2021
- Messages
- 566
சான்றிதழ்
மேகங்கள் சூழ்ந்த வானத்தை தான் வள்ளி வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். சுந்தரம் மற்றும் மீனாட்சியின் மகள் தான் இந்த வள்ளி. இந்த ஐப்பசி பிறந்தால் அவளுக்கு இருப்பத்து ஒன்பது அகவைகளாகி விடும்.
அவள் வயது பெண்கள் எல்லாம் திருமணமாகி குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்க, தங்களின் பெண்ணிற்கு அந்த வரம் கிடைக்குமா என்ற பதில் இல்லா கேள்வியுடன் சுந்தரம் மீனாட்சி தம்பதியர் தங்கள் வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
வள்ளியின் திருமணம் இவ்வளவு காலங்கள் தள்ளிப் போக ஒரே காரணம் அவளின் வாழ்வு சில கயவர்களால் பறிக்கப்பட்டது தான். அந்த சம்பவம் நடந்து பதினைந்து வருடங்களாகி விட்டன. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவளின் பதினான்காம் வயதில் வள்ளிக்கு அந்த துயரம் நேர்ந்தது.
************
பல வருடங்களுக்கு முன்பு,
வள்ளியின் கிராமத்தில் உயர்ந்த குலத்தை சார்ந்த மனிதர்களுக்கு மட்டுமே படிக்க அனுமதி. பிற வகுப்புகளை சார்ந்த மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட ஒன்று தான்.
"எல்லாரும் பல்லாக்குல ஏற ஆசைப்பட்டா பல்லாக்கை எவன்ல தூக்குவான்... " என்று கூறி உயர்குடி மனிதரான சதுரங்கன் அந்த எளியவர்களை நகையாடுவார்.
சதுரங்கனின் இந்த குணத்தை கண்டிக்கவும் தட்டி கேட்கவும், அந்த எளியவர்களுக்கு பயம் என்றால் மற்ற உயர்குடி மக்களுக்கு இந்த விஷயத்தில் அலட்சியம் தான்.
"நீங்க படிச்சா என்ன... படிக்காமல் போனால் எங்களுக்கு என்ன... நாங்கள் நல்லா இருந்தா போதும்..." என்னவொரு உயர்ந்த எண்ணம் வாய்ந்த மனிதர்கள் பாருங்கள்.
அச்சம், அலட்சியமும் கலந்த அந்த மண்ணில் அருந்தியாய் தோன்றியவள் தான் வள்ளி. வள்ளியும் தன் தாய் தந்தையுடன் ஒரு அழகான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் மூன்று பேருக்கான தனி உலகம் அது. வள்ளி தான் அவர்களின் மகாராணி. அவளின் பெற்றோர்களிடம் இல்லாத பிடிவாதக்குணம் அந்த சிறு பெண்ணிடம் அளவுக்கு அதிகமாகவே காணப்பட்டது. அதிலும் வள்ளி தன்னுடைய ஆறாவது வயதில், பள்ளிக்கூடம் செல்வேன் என்று அடம் பிடித்த சம்பவம் அந்த சிறு பெண்ணுக்குள் இருந்த வைராக்கியத்தை அவர்களுக்கு உணர்த்தியது. அவளின் பெற்றோர்கள் அப்போது அறியவில்லை, அது வெறும் ஆரம்பம் மட்டுமே இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்று.
ஒரு முறை அவள் அன்னையுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது வள்ளி ஒரு புத்தகத்தை கண்டு எடுத்தாள். மண்ணுக்குள் புதைந்து காணப்பட்ட அப்புத்தகம் பாதிக்கு பாதி சிதைந்த நிலையிலிருந்தது.
"அடியே வள்ளி ஆடுகளை பார்க்காமல் மண்ணுல என்னடி தேடிக்கிட்டு இருக்க..." அவளின் அம்மாவின் குரல் வள்ளியின் செவியில் விழுந்தாலும் அவள் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அந்த புத்தகத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
ஆடுகளை சற்று நேரம் மேய விட்ட மீனாட்சி, ஒரு மரத்தில் அவர்களுக்கு சொந்தமான மூன்று ஆடுகளையும் கட்டி போட்டு விட்டு மகள் அருகில் வந்தார். அவர் வரும் வரை வள்ளி அந்த புத்தகத்தை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
"இன்னும் என்னடி பண்ணுற..." என்று கூறிய மீனாட்சி தன் மகள் கையில் இருக்கும் புத்தகத்தை வாங்கி பார்த்தார். அவருக்கும் அதில் உள்ள எழுத்துகள் புரியவில்லை. ஆனால் அதில் இருந்த படங்கள் அவருக்கு அது என்ன வகை புத்தகம் என்பதை புரிய வைத்தன.
வள்ளி கரத்தில் இருந்த புத்தகத்தை பறித்து கீழே எறிந்த மீனாட்சி அவளை தன்னுடைய வலது கரத்திலும், ஆடுகளை இடது கரத்திலும் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
"வள்ளிமா... நீ எதுவும் பார்க்கல... அந்த புத்தகத்துல பார்த்தது எல்லாம் மறந்துட்டு இந்த பொம்மை வச்சு விளையாடுடி கண்ணு..." என்று மகளுக்கு சொன்ன மீனாட்சி தன் கலங்கிய கண்களை மகளுக்கு காட்டாதவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
பொம்மை கையிலிருந்தாலும் வள்ளியின் மனம் மட்டும் அந்த புத்தகத்திலிருந்த படங்களை பற்றி தான் எண்ணி கொண்டிருந்தது. தந்தை வந்தவுடன் அதை பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்த பெண்ணவள் சற்று நேரத்திலேயே கண் அயர்ந்து விட்டாள்.
பண்ணையிலிருந்து வீட்டிற்கு வந்த சுந்தரம் தன்னை சுத்தம் செய்து கொண்டு மகள் அருகில் சென்று அமர்ந்தார். மகள் தூங்கும் அழகை ரசிக்க ஆரம்பித்தவரை, "ஏனுங்க தூங்குற புள்ளைய ரசிச்சிட்டு இருக்காதிங்க... முதல்ல எந்திரிங்க... " என்ற மீனாட்சியின் குரல் கலைத்தது.
அன்னையின் குரலில் தூக்கத்திலிருந்த வள்ளியும் துயில் கலைந்து தந்தை மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
"அப்பா... அப்பா... அப்பா..." என்று விடாமல் அழைத்த வள்ளியை, "என்னடா கண்ணு... ஏன் அப்பாவ அழைச்சிட்டு இருக்கீங்க..." என்று மென்மையான குரலில் கேட்டார் சுந்தரம்.
"அப்பா நானும் பள்ளிக்கூடம் போகவா..."
"..."
"அப்பா... உங்கக்கிட்ட தான் கேட்குறேன்..."
சுந்தரம் அப்போதும் அமைதியாகவே இருக்க மீனாட்சி தான் வள்ளியை அடிக்க கரத்தை ஓங்கினார்.
"அடி வாங்கப் போற வள்ளி... என்ன பேச்சுடி இது எல்லாம்... யாரு உனக்கு இப்படி எல்லாம் பேச கத்து தந்தா..."
மீனாட்சிக்கு ஈரக்குலையே நடுங்கி விட்டது. அவரால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த ஊரின் சட்டதிட்டங்களை மீறினால் குழந்தை என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி சவுக்கடிகள் வழங்குவர். சில குழந்தைகள் வலி தாங்காமல் வலிப்பு வந்து இறந்த சம்பவங்கள் வேறு அந்த நேரத்தில் மீனாட்சிக்கு நினைவில் வந்து வயிற்றுக்குள் புளியை கரைத்தன.
மீனாட்சியின் சிந்தனை இவ்வாறு இருந்தது என்றால் சுந்தரத்தின் சிந்தனையோ ஏன் மகளின் ஆசையை நிறைவேற்றக் கூடாது என்று எண்ணியது.
"சரிம்மா... நீ பள்ளிக்கு போ..."
"நிஜமாவா... "
"ஆமாடா நிஜமா..."
"அம்மா... அப்பா சொன்னதை கேட்டீங்களா... நான் பள்ளிக்கூடம் போக போறேன்... நானும் அந்த புத்தகத்துல இருக்குற குழந்தைங்க மாதிரி படிச்சு பெரிய ஆளாகுவேன்..." என்று சொல்லி தன் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள் வள்ளி.
காலையில் வள்ளி கண்டு எடுத்த புத்தகத்தில் நிறைய குழந்தைகள் கையில் புத்தகம் படிப்பதை போலவும், அடுத்த படத்தில் அவர்களுள் ஒரு பெண் தங்கப்பதக்கம் பெற்றுக் கொள்வது போலவும், அந்த புத்தகத்திலிருந்த பெண்ணின் கண்களில் இருந்த ஏதோ ஒன்று வள்ளியை பாதித்தது. அந்த சிறு வயதில் அந்த பெண்ணின் கண்கள் சொல்லும் செய்தி வள்ளிக்கு புரியவில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதுள் வேர் ஊன்றி போனது. அந்த ஆசையை தான் தன் தந்தையிடம் வள்ளி கேட்டாள். தந்தை சம்மதம் தெரிவித்து விட்டால் போதும் என நினைத்த வள்ளியின் நினைப்பை அவளின் அன்னை தரப்பிலிருந்து வரப்பட்ட மறுப்பு, அவளை பிடிவாதம் பிடிக்க செய்தது.
"என்ன அப்பனும் பொண்ணும் விளையாடுறீங்களா... அந்த சதுரங்கன் நம்ம குடும்பத்த வெட்டி புதைச்சுடுவான்... அவள் தான் சின்ன பொண்ணு விவரம் தெரியாம பேசுறா... உங்களுக்கு எங்க போச்சு புத்தி... இருக்குற ஒரே பொண்ணையும் பலி குடுக்குற எண்ணம் எதுவும் இருக்கா... போங்க போய் வேற வேலைய பாருங்க... வந்துட்டாரு ஊர்ல இல்லாத பெரிய அப்பா... மகள் கேட்டால் தலைய கூட வெட்டி கையில தருவாரு போல..." சொல்லி விட்டு சமையல் வேலையை பார்க்க சென்று விட்டார் மீனாட்சி.
வள்ளியின் முகமோ, அன்னையின் சொற்களை கேட்டதால் சுருங்கி விட்டது. சுந்தரத்திற்கும் தற்போது சதுரங்கனை பற்றி நினைக்கும் போது பயம் வரத்தான் செய்தது.
"மகளோட உயிரா... மகளோட ஆசையா... " என்று பார்க்கும் போது
வள்ளியின் தந்தைக்கு மகளின் உயிர் தான் பெரிதாகப்பட்டது.
"பெரிய ஐயா... நம்ம ஜனங்க படிக்க அனுமதிக்கமாட்டாருடா கண்ணு... நமக்கு படிப்பு எல்லாம் வேண்டாம்... நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட்டா நம்மள இருக்குற இடம் தெரியாமல் அழிச்சுடுவாங்க சாமி... சொன்னா புரிஞ்சிக்கோ கண்ணு... அம்மா சாதம் வடிச்சிட்டா போய் சாப்பிட்டு தூங்கு கண்ணு..." சுந்தரம் சொல்லி விட்டு மகளின் முகம் கூட பார்க்காமல் கொல்லைப்புறம் சென்று விட்டார்.
"நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட்டா நம்மள இருக்குற இடம் தெரியாமல் அழிச்சுடுவாங்க சாமி... " என்ற தந்தையின் சொல் வள்ளியை பயமுறுத்தவில்லை. மாறாக படித்தே தீர வேண்டும் என்ற ஆசையை அவளுள் வலுப் பெற செய்தது.
"பெரிய ஐயா பொண்ணுக்கும் என்னோட வயசு தானே அவள் மட்டும் பள்ளிக்கூடம் போகலாமா... நான் போகக் கூடாதா... நான் போவேன்... நான் பள்ளிக்கூடம் போவேன்... " என்று நினைத்த வள்ளி பள்ளிக்கூடத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
சமையலை முடித்து விட்டு வந்து பார்த்த போது மகளும், கணவனும் வீட்டில் இல்லை என்பதை அறிந்த மீனாட்சி, "இந்த சின்னக் கழுதைய சமாதானம் செய்ய கடைக்கு கூட்டிட்டு போயிருக்காரு போல... இதே நம்ம எல்லாம் கோபிச்சிட்டு போனா... நம்மள ஒரு தடவை கூட சமாதானம் செய்துருக்காரா... இன்னைக்கு வரட்டும் அந்த மனுஷனை பார்த்துக்கிறேன்... ஊரு உலகத்துல இவரு தான் பொண்ணு பெத்துவச்சுருக்குற மாதிரி பவுசு காட்டுறாரு..." தன் கணவனை மனதுக்குள் சலித்துக் கொண்டு வீட்டை பெருக்குவதற்கு துடைப்பத்தை எடுக்க கொல்லைப்புறம் போனார்.
கொல்லைப்புறத்தில் கணவனை கண்ட மீனாட்சி, "வள்ளி எங்க..." என்று அவரிடம் கேட்க, "உள்ளே தானே இருந்தா என்கிட்ட கேட்குற..." என்ற சுந்தரத்தின் பதிலில் வள்ளி அடித்து விழுந்து மகளை தேடி வீட்டிற்குள்ளே ஓடினார்.
சுந்தரமும் மனைவியின் இந்த ஓட்டத்தை பார்த்து அவரும் வீட்டிற்குள் விரைந்து வந்து பார்த்தார்.
"ஏங்க... வள்ளிய காணோம்... வேகமா வாங்க..." என்ற மனைவியின் குரலில் மனம் பதறினாலும், "இங்க தான் வெளியில விளையாடிக்கிட்டு இருப்பா... நான் போய் அழைச்சிட்டு வர்றேன்..." கையில் கிடைத்த சட்டையை போட்டுக் கொண்டு சுந்தரம் வெளியில் ஓடினார்.
சுந்தரம் கண்ணில் தென்பட்ட மனிதர்களிடம் எல்லாம் தன் பெண் வள்ளியை பற்றி விசாரித்துக் கொண்டு பள்ளிக்கூடம் அருகே வந்து விட்டார்.
பள்ளிக்கூட மைதானத்தில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்கவும், சுந்தரமும் அந்த இடத்தை நோக்கி விரைந்தார். மைதானத்தின் நடுவில் வள்ளி அமர்ந்திருக்க அவளை எழுப்ப தான் அனைவரும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். சதுரங்கனும் வள்ளியை தான் பார்த்து கொண்டிருந்தார்.
"இந்த சின்ன வாண்டு என்னை எதிர்த்து நிற்குதா... நான் ஊதுனாலே பறந்துடுவா இவள் இந்த அளவுக்கு அட்டூழியம் பண்ணுறாளா... இந்த குட்டிப்பிசாசுக்கு எல்லாம் குளிர் விட்டு போச்சுடா சதுரங்கா... இன்னைக்கு இந்த சின்ன வாண்டு ஆரம்பிக்குறா நாளைக்கு இன்னொருத்தன் ஆரம்பிப்பான்... இதை எல்லாம் முளையில கிள்ளி எறியனும்...." சதுரங்கனை பொறுத்தவரை இது அவனது கௌரவப் பிரச்சனை. நேற்று வரை சதுரங்கன் வைத்தது தான் சட்டம் என்று இருந்த மண்ணில், இன்று இந்த சிறு பெண் அதை கேள்விக்குறியாக்கி விட்டாள்.
சதுரங்கன் அருகில் இருந்த அவரின் பெண் குணவதியும் வள்ளியைத் தான் பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் கண்களில் சிநேக உணர்வு காணப்பட்டது. தந்தையின் கரத்தை பற்றி இழுத்த குணவதி,
"அவளும் என் கூட படிக்கட்டும்பா..." கண்களால் கெஞ்சி கேட்டாள்.
"இது என்னடா புதுதலைவலி..." என்று நினைத்தாலும் மகளுக்க்காக வள்ளியை அந்த பள்ளியில் படிக்க அனுமதித்தார் சதுரங்கன். அங்கு இருந்த எவராலும் இதை நம்ப முடியவில்லை. சுந்தரத்திற்கு தன் மகள் என்ன செய்தாள் என்று இன்று வரை புரியவில்லை. ஆனால் அவள் நினைத்ததை சாதித்து விட்டாள் என்பது புரிந்தது.
சதுரங்கன் சம்மதித்தாலும் அவரின் கண்களில் தெரிந்த பளபளப்பு தன் மகள் படிக்க பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை அந்த தந்தைக்கு அறிவுறுத்தியது.
சதுரங்கனை இருகரம் குவித்து வணங்கி விட்டு , தன் மகளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டார் சுந்தரம்.
"என்னாச்சு... "என்று கேட்ட மனைவியிடம் வள்ளி உறங்கிய பின் சொல்வதாக கூறிய சுந்தரம், அன்று இரவு மீனாட்சியிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்.
"இது எங்கப்போய் முடியப்போகுதோ..." என்று மனதுக்குள் எண்ணிய மீனாட்சி எதுவும் சொல்லவில்லை.
வள்ளி தினமும் பள்ளிக்கூடம் சென்று வந்தாள். பள்ளிக்கூடத்தில் எந்தளவு அவமானப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு சில புல்லுருவிகள் வள்ளியை தொந்தரவு செய்தாலும், சில நல்ல உள்ளங்கள் அவளிடம் அன்பு செலுத்தத்தான் செய்தனர்.
தேர்வுகளில் அவளுக்கு தான் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. எதையும் பொருட்படுத்தாமல் வள்ளி தன் கல்வியை தொடர்ந்தாள். குணவதியையும் அவளிடம் பேச சதுரங்கன் அனுமதிக்கவில்லை.
வள்ளியின் சொந்த ஊரில் அவளின் பள்ளிக்காலம் தனிமையில் தான் கழிந்தது. அவர்கள் ஊரில் இருந்த பள்ளியில் எட்டாவது வரை மட்டுமே இருந்ததால் வள்ளி மேற்படிப்பிற்கு வெளியூர் பள்ளி ஒன்றில் சேர்ந்தாள்.
வள்ளியை தவிர்த்து அவர்கள் பிரிவில் யாரும் கல்வி கற்க முயலவில்லை.
"என்னைக்கு இருந்தாலும் சதுரங்கனின் சட்டங்களை மீறியதற்கு வள்ளியை அவன் சும்மா விட மாட்டான்... உன்னோட பொண்ணு நிலைமை யாருக்கும் வர வேண்டாம்னு நம்ம எல்லாரும் நினைக்குற அளவுக்கு அவன் செய்வான்... அந்த சதுரங்கன் செய்வான்... உம் பொண்ணு சூதானமா பார்த்துக்கோ அப்பு..."
என்று ஒரு பெரியவர் சுந்தரத்திடம் சொல்லி விட்டு சென்றார். அந்த பெரியவர் சொன்னதை சுந்தரம் தன் மனைவி மற்றும் மகளிடம் சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை.
வள்ளி எப்போதும் போல் அரசுப் பேருந்தில் பள்ளிக்கூடம் சென்று விட்டு வீடு வந்து விடுவாள். அன்று ஒரு நாள் பள்ளி சென்ற வள்ளி கிழிந்த ஆடைகளுடனும், உடல் முழுதும் காயங்களுடனும் அன்று மாலை வீடு வந்து சேர்ந்தாள்.
அவளின் நிலையை நிறைய பேர் வேடிக்கை பார்த்தனர்.
அவளிடம் என்னவென்று விசாரித்த யாருக்கும் அவள் பதில் அளிக்கவில்லை. அவளின் பெற்றோர்களால் கூட அவளிடம் நெருங்க முடியவில்லை. நேராக வீடு வந்து சேர்ந்தவள் குளித்து விட்டு வேறு உடை உடுத்திக் கொண்டாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என சில நிமிடங்கள் சிந்தித்த வள்ளி, அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவளின் பெற்றோரை அழைத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றாள். பெண் மருத்துவரை அழைத்து தனியாய் என்ன பேசினால் என்று தெரியவில்லை. அதனை அடுத்து அவளுக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. இறுதியாய் ஒரு தடுப்பூசி அவளுக்கு செல்லுத்தப்பட்டு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது.
வள்ளியின் நிலையை பார்த்த அவளின் பெற்றோர் ஊமையாய் கண்ணீர் வடித்தனர். அந்த கண்ணீர் கூட வள்ளியிடம் இல்லை. எதையோ சிந்தித்த வண்ணமே இருந்தாள். இரண்டு நாட்கள் மருத்துவமனையிலிருந்து விட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினர் அவளின் பெற்றோர். வள்ளி கிளம்பும் முன் தான் சந்தித்த அந்த பெண் மருத்துவரிடம், கவுன்சிலிங் பெற ஒரு நல்ல மனநல மருத்துவரை பரிந்துரைக்குமாறு கேட்டு அவரின் விசிட்டிங் கார்டையும் மறக்காமல் பெற்றுக் கொண்டாள்.
சதுரங்கனோ இந்த தருணத்திற்காக பல வருடம் காத்திருந்தவராயிற்றே, ஊர் பஞ்சாயத்தை கூட்டி விட்டார்.
"ஒழுக்கம் கெட்டவள இன்னும் இந்த ஊருல வச்சுருக்கனுமா... நம்ம வீட்டு பிள்ளைங்க எல்லாம் இவளை பார்த்தால் கெட்டு போயிடும்... மானம் உள்ள பொண்ணாயிருந்தா நாண்டுக்கிட்டு செத்துருக்கும்... ஆனால் இது வேற ரகம்..." சதுரங்கனின் அல்லக்கை ஒன்று வள்ளியின் அமைதியை சாதகமாக்கி உரத்த குரலில் கூவி கொண்டிருந்தது.
வள்ளியின் பெற்றோரால் என்ன செய்ய முடியும். அவர்களுக்கே நடந்தது என்னவென்று தெரியவில்லை. ஆனால் மகள் தவறு செய்திருக்க மாட்டாள் என்று உறுதியாய் நம்பினர். அவளிடம் பேசக் கூட நேரம் கொடுக்காமல், மகளின் மனதை மேலும் நோகடிப்பதை அந்த பெற்றோர் தங்கள்
கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வள்ளி தொடர்ந்து அமைதியாகவே இருக்கவும் சதுரங்கன் பேச ஆரம்பித்தார்.
"யாரு உன்னை என்ன பண்ணாங்க சொல்லுமா..."
"..."
"அப்போ நீ தான் தப்பு பண்ணியா..."
"..."
"உன்னோட தரப்பு நியாயம் ஏதாவது இருந்தா சொல்லு..."
"..."
"பேசாமல் இருந்தா உன்னையும் உன் குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைப்போம்... நீ நடந்தது என்னனு சொல்லுற வரை நீயும் உன் குடும்பமும் ஊர் எல்லைக்குள்ள வரக் கூடாது..." என்று சதுரங்கன் பேச்சை நிறுத்த அவள் தன் தந்தை மற்றும் தாயை அழைத்துக் கொண்டு அவளின் சொந்த மண்ணை விட்டு வெளியேறினாள்.
சுந்தரமும், மீனாட்சியும் எவரின் உதவியையும் எதிர்பாராமல் தங்கள் குடிலை ஊரின் எல்லையில் அமைத்தனர். வள்ளியின் மனம் உள்ளுக்குள் ஓலமிட்டு கொண்டிருந்தது. பதினான்கு வயது குழந்தை மேல் பலி சொல்ல இவர்களால் எவ்வாறு
முடிந்தது.
மது அருந்திய இருவர் ஒரு குழந்தையிடம் தவறாக நடக்கும் போது அவர்களிடமிருந்து அந்த குழந்தையை மீட்க நடந்த போராட்டத்தில் அவளின் உடைகள் கிழிந்து முட்புதருக்குள் விழுந்து அடித்து ஓடி வந்திருந்தாள்.
"நடந்ததை சொன்னால் நம்பி விடுவார்களா?, அந்த கயவர்கள் கண்டிப்பாக வேற மாநிலத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்... போதையில் உளறிய போது வேறு மொழியில் பேசினார்களே... அந்த குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்பது கூட தெரியாது... நடந்த சம்பவத்திற்கு ஒரே சாட்சியான என் மேலே இங்கு நடத்தை கெட்டவள் என்ற பழி வேறு... நான் யாரை சாட்சி சொல்ல கூட்டி வருவேன்... அந்த குழந்தையையா... இல்லை அந்த கயவர்களையா..."
"ஒரு வேளை எனக்கு இவர்கள் சொல்லியது போல் யாரோ என் உடலை தீண்டி விட்டால் நான் இறந்து விட வேண்டுமா... இது என்ன வகை சட்டம்... எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை என் மரணத்தின் மூலம் சரி செய்யும் முயற்சியோ... பாதிக்கப்பட்ட பெண் இறந்து விட வேண்டும் என்று நியாயம் பேசும் இவர்கள் அந்த கயவர்களை விட மோசமானவர்கள்... நல்லவர்கள் வேஷம் போடும் வெறியர்கள்... நான் இறந்து விட்டால் என் தாய் தந்தையை யார் பார்த்து கொள்வார்கள்... எனக்காக வாழும் உயிர்களுக்காக நான் வாழ வேண்டும்... வாழ வேண்டும்..." என மனதுக்குள் சொல்லிக் கொண்ட வள்ளி தன் கல்வியை தொடர்ந்தாள்.
வள்ளி பத்தாவதில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம், பன்னிரெண்டாவதில் மாநில அளவில் இரண்டாம் இடம், கல்லூரியில் சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
அவளின் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் ஜூனியராய் சேர்ந்தவள் கடந்த இரு வருடங்களாக தனியாக வழக்குகள் எடுத்து நடத்தி வருகிறாள்.
வள்ளியின் இந்த வளர்ச்சி அவளை வசைப்பாடிய உள்ளங்களுக்கு சவுக்கடியாய் இருந்தது.
வள்ளி அன்றைய சம்பவத்தை பற்றி பின்னொரு நாளில் அவளின் பெற்றோர்களிடம் கூறினாள்.
"நல்லது செய்துட்டு பழியும் சுமக்குறது இந்த நாட்டுல நடக்குறது தான்... நீ மனசை போட்டு குழப்பிக்காத... "
"சரிப்பா..."
"ஏங்க அவகிட்ட சொல்லுங்க..."
"என்னமா சொல்லனும்... சொல்லு கேட்குறேன்..."
"கல்யாணம்..."
"உங்களுக்கு பிடிச்ச மாப்பிளைய பாரு பண்ணிக்கலாம்..."
வள்ளிக்கு பார்த்த வரன்கள் எல்லாம் அவளிடம் வேண்டுவது ஒன்று தான் கன்னித்தன்மை சான்றிதழ். வள்ளியால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் என்ன தான் வழக்கறிஞராய் இருந்தாலும் அவளால் இதை துளியளவு ஜீரணிக்க முடியவில்லை.
"யாருக்கும் நான் சுத்தமானவள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..." அவளின் பெற்றோரிடம் காய்ந்து விட்டு மேகங்களை வெறித்து கொண்டிருந்தாள் வள்ளி.
"சரி விடு... நீயா ஒருத்தர பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்க சொல்லுற வர... உன்கிட்ட இதை பத்தி பேச மாட்டோம்... வந்து சாப்பிடுடா..." என்று கூறிய அவளின் தந்தை ஒரு வழியாக அவளை சமாதானம் செய்தார்.
**********
ஒரு வாரத்திற்கு பிறகு,
வள்ளியின் அலுவலகத்தில் அவளை சந்திக்க திரவியன் வந்திருந்தான்.
"சொல்லுங்க சார்..."
"நன்றி மேடம்..."
"எதுக்கு சார்..."
"இதுவே ரொம்ப தாமதம் தான்... பதினைந்து வருஷம் முன்னாடி என்னோட தங்கையை நீங்க தான் ஒரு விபத்துல காப்பாத்துனிங்க... அதுக்கு தான் இந்த நன்றி..."
"..."
"அப்புறம் ஒரு மன்னிப்பும் கேட்கனும்... எங்களால நீங்க ரொம்ப இழந்துட்டிங்க... அதுக்கு தான் இந்த மன்னிப்பு..."
"..."
"போன மாசம் என் தங்கை கல்யாணமாகி வெளிநாட்டுக்கு போகும் போது தான் உங்களை பத்தி சொன்னாள்... இந்த ஒரு மாசமா உங்களை தேடி கடைசியில கண்டுபிடிச்சுட்டேன்... எல்லாத்துக்கும் நன்றிங்க..."
"சரிங்க நான் உங்க நன்றிய ஏத்துக்கிட்டேன் போய்ட்டு வாங்க..."
"ஏங்க இன்னும் ஒன்னு மட்டும் சொல்லிட்டு போகவா..."
"..."
"நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா... எனக்கு எந்த சான்றிதழும் தேவையில்ல... உங்க அம்மா அப்பாக்கிட்ட கூட பேசிட்டேன்... அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்காம்... என் வீட்டுலையும் உங்கள வரவேற்க ரெடியா இருக்காங்க... இப்போ நீங்க தான் சொல்லனும்..." திரவியன் கண்ணிலிருந்த உண்மையை வள்ளியும் கண்டு கொண்டாள்.
"ம்ம்... யோசிச்சு சொல்லுறேன்..." என்று கூறி அவனை பார்த்து புன்னகைத்தாள் வள்ளி.
***
நன்றி.