• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நண்பனின் சாமர்த்தியம்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
நண்பனின் சாமர்த்தியம்


KuttiChutties.png



பொன்னியூர் என்ற ஊரில் ஜனா, சுருதி என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். ஜனா திறமையாகச் சம்பாதித்துக் கொண்டு வருவான். சுருதி அதை வாங்கி நிம்மதியாகச் சாப்பிடுவான்.

உள்ளூரில் பஞ்சம் ஏற்பட்டது. கட்டுபடியாகவில்லை. ஆதலால் வெளியூர் சென்று வியாபாரம் செய்து பிழைக்க இருவரும் முடிவு செய்தனர்.

இருவரும் குதிரையில் ஏறிக் கொண்டு பல ஊர்களையும் கடந்து ஏமலூர் என்ற ஊரை அடைந்தனர். ஊர் எல்லையில் உள்ள சத்திரம் ஒன்றில் தங்கினர். ஜனா சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டான்.

“சுருதி நான் இங்கே ஓய்வெடுக்கிறேன். நீ ஊருக்குள் சென்று வியாபாரம் செய்து விட்டு வா!'' என்று கூறி நண்பனை அனுப்பி வைத்தான்.

சுருதி மிகவும் வெகுளி. யார் எதைச் சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவான். இக்கட்டில் மாட்டிக் கொண்டு விழிப்பான். இருந்தாலும் அவனிடம்தான் காசு இருந்தது.




ஆயிரம் பொற்காசுகளை குதிரையின் சேணத்தில் மறைத்துக் கொண்டு குதிரையில் ஏறி நகரை நோக்கிச் சென்றான்.

ஊருக்குள் சென்றதும் வீதியில் எதிரே ஒருவன் வந்தான்.

“இந்தக் குதிரை விலைக்குக் கிடைக்குமா?'' என்று கேட்டான்.

“விலைக்குத் தரத் தயார். விலை மிக அதிகம். உன்னால் கொடுக்க முடியுமா? நீ என்ன தொழில் செய்கிறாய்?'' என்று வினவினான் சுருதி.

“என் பெயர் கந்தன் . ஆடுகளை வெட்டி இறைச்சி விற்கும் கசாப்புக்கடை நடத்துகிறேன். விலையைக் கூறு?'' என்றான் கந்தன்.

“இதன் விலை ஐந்நூறு பொற்காசுகள்!''

“உயர்தரமான அரேபியக் குதிரைகளே இருநூறு பொற்காசுகளுக்குக் கிடைக்கின்றன. உன் குதிரை பெரிய அதிசயக் குதிரையா? சரி பரவாயில்லை. இதோ நீ கேட்ட ஐந்நூறு பொற்காசுகள். குதிரையைக் கொடு'' என்றான். ஐந்நூறு பொற்காசுகளை எண்ணியும் கொடுத்தான்.

பொற்காசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுருதி குதிரையை விட்டு இறங்கினான். பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டான். பிறகு குதிரையின் சேணத்தில் தான் வைத்திருந்த பணப்பையை எடுக்கச் சென்றான்.

“இந்தக் குதிரையைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். இப்போது குதிரை எனக்குச் சொந்தம். குதிரையோடு உள்ள பொருட்கள் யாவும் எனக்கே சொந்தம்'' என்று கூறிவிட்டு குதிரைமேல் ஏறிச் சென்றுவிட்டான்.

ஆயிரம் பொற்காசுகளை இழந்த சுருதி மிகுந்த ஏமாற்றத்துடன் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தான். நடந்தவற்றை நண்பனிடம் கூறினான். . அவனுடைய சோகக் கதையைக் கேட்ட ஜனா ஏளனமாகச் சிரித்தான்.

“இந்த ஊரினர் பயங்கர எத்தர்களாக இருப்பர் போலும். இருக்கட்டும். உன்னிடம் குதிரையை வாங்கியவனின் பெயர் என்ன?'' என்று கேட்டான் ஜனா.

“கசாப்புக்கடை கந்தன்!'' என்றான்.

உடனே நண்பனிடம் இருபத்தி ஐந்து பொற்காசுகளை வாங்கிக் கொண்டு வில்லனின் கசாப்புக் கடையின் முன்பாகப் போய் நின்றான். கடையில் நான்கைந்து ஆட்டுத் தலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைத் திண்டில் வில்லனின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

“ஒரு தலையின் விலை என்ன?'' என்று கேட்டான்.

“ஒரு தலை ஒரு பொற்காசு.''

“எத்தனை தலைகள் வேண்டுமானாலும் கிடைக்குமா?''

“ஆகா.... தாராளமாகக் கிடைக்கும்!''

“இதோ இருபத்தி ஐந்து பொற்காசுகள். இருபத்தி ஐந்து தலைகள் கொடு!''

“இப்போது இங்கே இருக்கும் தலைகளை எடுத்துப் போ. மீதியை நீ இருக்குமிடத்தைச் சொல். அங்கே அனுப்பி வைக்கிறேன்.''

“அதெல்லாம் முடியாது. இங்கு தொங்கும் தலைகளுடன் கடையில் உள்ள உன் குழந்தைகளின் தலையையும் வெட்டிக் கொடுக்க வேண்டும். தலைகள் என்றுதான் பேசினோம். ஆட்டுத்தலைகள் என்று கூறவே இல்லை. எனக்குக் குழந்தைகளின் தலைகளையும் கொடுக்க வேண்டும்!'' என்றான்.

கசாப்புக்கடைக்காரன் அதிர்ச்சியில் நடுங்கினான். "இவன் நம்மைவிடக் கில்லாடியாக இருக்கிறானே! எக்கச்சக்கமாக வாக்குக் கொடுத்து வசமாக மாட்டிக் கொண்டோமே!' என்று மிகவும் பதறிப் போனான்.

“ஐயா! ஏதோ முட்டாள்தனமாக வாக்குக் கொடுத்து விட்டேன். மன்னித்துக் கொள்!'' என்று கெஞ்சினான்.

“சேச்சே.... நீ கூறுவது எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலில் தலைகளைக் கொண்டு வா!'' என்று கடுமையாகக் கூறினான் ஜனா.

அப்போதுதான் தான் காலையில் குதிரையை ஏமாற்றி வாங்கியது நினைவிற்கு வந்தது. ஏமாந்தவனின் நண்பன் இவன் என்பதை புரிந்து கொண்டான். இவனிடம் தனது ஜம்பம் பலிக்காது என்பதைப் புரிந்து கொண்டான்.

“ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். வெளியூர்க்காரர் தானே என்று நினைத்து குதிரைக்காரரான உமது நண்பரை ஏமாற்றிவிட்டேன். குதிரையையும் சேணத்தில் இருந்த ஆயிரம் பொற்காசுகளையும் தந்து விடுகிறேன். என்னை இத்துடன் விட்டு விடுங்கள்'' என்று மன்றாடினான்.

சரியெனச் சம்மதித்து குதிரை மற்றும் பணப்பையுடன் ஜனா சத்திரத்திற்குத் திரும்பினான். நண்பனின் ஆற்றலை எண்ணி வியந்தான், தானும் ஜனாவைப் போல் புத்திச்சாலியாக மாற தீர்மானித்தான் சுருதி.
 
Top