• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 13

"உள்ள வா!" என்றவன் வேக எட்டுக்களுக்கு தானும் பழக முயற்சிக்காமல் மெதுவாய் வாசுவின் அலுவலகத்தினுள் நுழைந்தாள் திக்ஷிதா.

"நல்லா இருக்குல்ல!" என்று தோன்றினாலும் கண்கள் நாலா பக்கமும் சுழன்றது தான் தேடி வந்தவளைத் தேடி.

ரொம்பவெல்லாம் காக்க வைக்காமல் வாசுதேவன் அறைக்கு வெளியில் நின்று அவனை தான் பார்த்தபடி நின்றிருந்தாள் ப்ரீத்தா.

"குட் மார்னிங் சார்!" என்றவள் எதுவோ சொல்ல வர அதை கவனிக்காமல் தன் அறைக்குள் சென்றுவிட்டான் வாசு.

"என்னவாம்?" என்ற எண்ணம் திக்ஷிக்கு தோன்றவும் ப்ரீத்தா வாசு அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்திருக்க,

"போறாளே! போறாளே!" என்ற மனதுடன் கிட்டத்தட்ட ஓடினாள் திக்ஷிதா.

"டேட்டாஸ் கலெக்ட் பண்ற வேலையை விஷ்வாகிட்ட கொடுத்துட்டு கிளம்புங்க!" என்று வாசு கூற,

"ஓகே சார்!" என்ற ப்ரீத்தா அங்கிருந்த இன்னொரு கணினிக்கு திரும்பி இருக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தா திக்ஷிதாவைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

அதற்கு பதில் அசைவு கொடுக்கும் நிலையில் இல்லாமல் இருந்தவள் வாசுவையும் அவளையுமாய் மாறி மாறி பார்க்க,

"நான் விஷ்வாகிட்ட பேசிக்குறேன்.. அவனை உள்ள வர சொல்லிட்டு நீங்க கிளம்புங்க" என்றிருந்தான் வாசு.

அவள் தலையசைத்து செல்ல, வாசு தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் சுய அலசலிலும் தான் அசடாய் செயல் பட்டதிலும் வெளிப்படையாய் தலையில் அடித்துக் கொண்டு நின்றிருந்தாள் திக்ஷிதா.

"இதுக்கு தான் வந்தியா?" நேராய் வாசு கேட்க, ஆமாம் என்று தலையசைத்தவள் உடனே இல்லை என்றும் தலையசைக்க,

"எல்லாம் அவன் வேலை தானே? வரட்டும் அவன்!" என்றான்.

"சொதப்பிகிட்டே இருக்குற திக்ஷி!" சொல்லிக் கொண்டவள்,

"நான் கிளம்புறேன்!" என்று கூற, விஷ்வா உள்ளே நுழைந்தவன்,

"குட் மார்னிங் பாஸ்!" என்று கூற, திக்ஷிதா படுகோபமாய் அவனை முறைத்து நின்றாள்.

"சிஸ்.. டர்..!" விஷ்வா இழுக்க,

"தலைவலி சரியா போச்சா?" என்றான் வாசு.

"போச்சு பாஸ்!" என்று சாதாரணமாய் கூறினான் திக்ஷிதா கூறி இருக்க மாட்டாள் என்று நம்பி.

"ப்ரீத்தாவை பார்க்க வந்திங்களா?" மிக மெல்லிய குரலில் திக்ஷிதாவிடம் விஷ்வா கேட்க,

"இல்ல! விச்சு தலைவலி எதனாலனு அவர்கிட்ட சொல்லிட்டு போக வந்தேன்!" என்றாள் அவளும்.

"என் வேலைக்கு பங்கம் வந்துச்சு.. நீங்க தான் காரணம்னு எழுதி வச்சுட்டு பே!" என்று நாக்கை வெளியே ஒரு பக்கமாய் நீட்டி விஷ்வா செய்து காண்பிக்க,

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்ற வாசுவின் கோபமான சத்தத்தில்,

"பாஸ்! கிளையண்ட் வெய்ட் பன்றாங்க.. நான் முடிச்சிட்டு வர்றேன்!" என ஓடி விட்டான் விஷ்வா.

"எல்லாம் நீ குடுக்குற இடம்.." என திக்ஷிதாவை வாசு சத்தம் போட,

"இப்படிபட்ட படுபாவியா இவன் இருப்பான்னு நான் என்ன கனவா கண்டேன்!" என திக்ஷிதா முணுமுணுத்தாள்.

"அடுத்த வாரம் அவளோட வளைகாப்பு!" என அழைப்பிதழ் ஒன்றை வாசு டேபிளில் இருந்து எடுத்து மேலே வைக்க,

"அதான் தெரிஞ்சதே வயிறைப் பார்த்ததும்!" மனதுக்குள் மட்டுமே சொல்லிக் கொண்டாள் அவன் பார்வைக்கு பயந்து.

வாசுவின் தனிப்பட்ட அறைக்குள் நுழைந்த திக்ஷிதாவிற்கு அப்போது தான் தெளிவாய் தெரிந்தது ப்ரீத்தாவின் மேடிட்ட வயிறு.

அதில் தன்னையே நொந்து கொண்டவள் வாசுவையும் ப்ரீத்தாவையும் மாறி மாறி பார்க்க, வாசுவும் அவள் பார்வையை கண்டு தான் ப்ரீத்தாவை வெளியில் அனுப்பி இருந்தான்.

அதிகம் யோசிக்க தேவை இல்லாமல் நேற்று விஷ்வா வீட்டிற்கு வந்தது, இன்று திக்ஷிதா அலுவலகம் கிளம்பியது, திக்ஷிதாவின் ப்ரீத்தா மீதான பார்வை என வாசுவிற்கு எல்லாம் ஒன்றுக்கு ஒன்று இணைப்பாய் இருக்க, விஷ்வாவின் வேலை என புரிந்தாலும் மனைவி மேல் அத்தனை கோபம் வந்தது.

"சத்தியமா நான் சந்தேகம் எல்லாம் படலை!" என்றவள் கை குறுக்காய் இரண்டு காதுகளையும் பிடித்திருக்க,

"இவனை இனி நான் நம்பவே மாட்டேன்.. ப்ளீஸ் சாரி!" என்றாள் உட்கார்ந்து எழுந்தபடி வாசுவிற்கு தெரிந்து விட்டது என தெரிந்து.

"நீ கிளம்பு!" என்று கோபமாகவே கூறியவன் பார்வை தனக்கு முன் இருந்த கணினிக்கு திரும்ப,

"நிஜமா ஏதோ ஒரு வேகத்துல வந்துட்டேன்.. சாரி!" என்றாள் அவன் கோபம் புரிந்து.

அவனுக்கும் புரியாமல் இல்லை.. கல்லூரி தானே படிக்கிறாள்.. சிறு பெண்.. விளையாட்டாய் என்றாலும் என்னவெல்லாம் விஷ்வா கூறினானோ.. அதனால் வந்த பயம் தான் அவளுடையது என புரிந்தாலும்,

"நேராய் என்னிடம் கேட்காமல் அதென்ன பார்வை அப்படி?" என்றும் தோன்றி இருக்க, முகத்தில் இறுக்கம் பரவி இருந்தது.

"வீட்டுக்கு வந்த அப்புறம் பேசிக்கலாம்.. நீ கிளம்பு!" என்றவன் விஷ்வாவிற்கு அழைத்து,

"திக்ஷியை அழைச்சுட்டு போய் விட்டுட்டு வா!" என்று அவள் முன்னேயே கூறி கார் சாவியையும் கொடுத்திருக்க, அவனின் இந்த கோபத்தில் கண்கள் கலங்கிவிட்டது பெண்ணுக்கு.

கலங்கி சிவந்த கண்களுடன் அவள் அறையில் இருந்து வெளியேற, உஃப் என ஊதித் தள்ளி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான் வாசு.

"முதல் முதல்ல ஆபீஸ் வந்துட்டு என்ன பண்ணிட்டு போறா பாரு.. இவளை எப்படி இன்ட்ரோ பண்ணனும்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்.." என நினைத்தவன்,

"சேட்டை! என்கிட்ட சொல்லாம என்னையே உளவு பார்க்க வர்றியா? இனி இப்படி நடந்துப்ப?" என்று தனக்கு தானே பேசியவன் முகத்தில் சிறிய புன்னகை.

அவளைப் போலவே தனியே பேச வைத்து விட்டாளே என்ற எண்ணத்தில்.

"சாரி சிஸ்டர்! நீங்க இவ்வளவு தூரம் ப்ரீத்தாக்காக வருவீங்கனு நான் நினைக்கல.. ப்ரீத்தா ப்ரொபோஸ்..." என்று விஷ்வா கூற வர,

"பேசாத விச்சு... அப்புறம் உன் லவ்வுக்கு எதாவது சாபம் குடுத்துருவேன்!" என்றவள் மிரட்டலில் வாயை நன்றாய் ஒட்டி வைத்துக் கொண்டான் விஷ்வா.

நிஜமாய் எதாவது சொல்லி வைத்துவிட்டால்? என்ற பயம் இல்லாமல் இல்லை.

"ஐஸ்வர்யாவை கூட்டிட்டு சிஸ்டர் அப்படின்னுட்டு வீட்டுக்கு வருவ இல்ல.. அப்ப இருக்கு உனக்கு.." என்றும் கூற,

"நிஜமா நீங்க இவ்வளவு சீரியஸ் பார்ட்டின்னு நான் நினைக்கல ப்பா!" என்றான் விஷ்வா வருத்தமாய்.

"என்ன? பீலிங்கா? அதான் செஞ்சுட்டியே அப்புறம் என்ன? ஆனா உன்னையும் ஒரு நாள் வச்சு செய்யல!" என்று திக்ஷிதா கூற,

"அப்போ என்கிட்ட பேசாம இருக்க மாட்டிங்க தானே?" என்றான் எங்கே கோபத்தில் பேச கூடாது என முடிவெடுத்து விடுவாளோ என நினைத்து.

"உன் லவ்வுக்கு என்னென்ன பண்ணணுமோ எல்லாம் பண்ணுவேன் பார்த்துட்டே இரு" என்றவள், வெளியே செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டிற்கே வந்து விட்டாள்.

விஷ்வா ஐஸ்வர்யாவிற்கு அழைத்து நடந்ததை சொல்ல,

"ஏன் டா இப்படி பண்ற? பொண்ணுங்களுக்கு போசசிவ்நெஸ் கொஞ்சம் அதிகம்.. அதுவும் புதுசா கல்யாணம் ஆனவங்க.. இன்னும் காலேஜ் கூட முடிக்கல.. இதெல்லாம் அவங்களுக்கு புதுசு.. எவ்வளவு பயந்துருப்பாங்க.. இனி இப்படி விளையாட்டெல்லாம் வச்சுக்காத விஷ்வா.. ப்ரீத்தா விஷயம் வாசு அண்ணா எப்ப சொல்லணும்னு தெரியாமலா சொல்லாம இருப்பாங்க?" என ஐஸ்வர்யாவும் விஷ்வாவை பிடித்து நன்றாய் திட்டிவிட்டாள்.

"கோபமா இருந்தா வெளில போனு சொல்லுவாங்களாமா?" என்று திக்ஷிதாவிற்கும் கோபம் வந்தாலும்

அவன் 'என்னை இவ்வளவு தான் தெரியுமா உனக்கு' என்று பார்த்த பார்வை தான் இன்னும் கண்களுக்குள் இருந்து மறைய மாட்டேன் என்று நின்றது.

"நீ என்ன டி அவசரக்குடுக்கை? கொஞ்சம் வெயிட் பண்ணி அவங்ககிட்ட கேட்ருக்கணும் தானே? அதான் அவங்களுக்கு கோபம்" என மனமும்,

"என்ன இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சாஃப்டா சொல்லி இருக்கலாம்" என மூளையும் கூற, தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.

மதியம் வரை நேரம் சென்றதே தெரியாமல் முழுதாய் வாசுவையும் அவன் கோபத்தையும் நினைத்து ஒரே இடத்தில் திக்ஷிதா அமர்ந்திருக்க, நேரம் இன்னும் கொஞ்சம் வேகமாய் நகர்ந்து அவன் வந்துவிட்டால் என்ன என்று தான் தோன்றியது.

தன் எண்ணத்தில் இருந்தவளுக்கு அழைப்பு வர, நண்பர்கள் தான் வகுப்பிற்கு ஏன் வரவில்லை என அழைப்பார்கள் என நினைத்து மொபைலை எடுத்துப் பார்க்க, அழைத்தது சங்கமித்ரா.

"இவ என்ன இந்நேரத்துல?" என நினைத்தபடி,

"ஹெலோ!" என்றாள்.

"திக்ஷி!" என்றவள் அழுகையில்,

"அக்கா! என்னாச்சு?" என்று திக்ஷி பதற, சங்கமித்ரா கூறியதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு எரிச்சலும் சேர்ந்தது.

"அதுக்கு எதுக்கு எனக்கு கூப்பிட்ட?" என்று கேட்க, சங்கமித்ரா அமைதியாகிவிட்டாள் திக்ஷிதா குரலில்.

"எனக்கு போன் பண்ணாதன்னு சொன்னேன் தானே? வீட்டுல சேர்த்துக்கலனு அழுதா எல்லாம் ஆச்சா? ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள என்ன நம்பிக்கைல சேர்த்துப்பாங்கன்னு நீ வீட்டுக்கு போன? நீ போனா சரினு விட்டுடனும்.. வந்தா உடனே சேர்த்துக்கணுமா? இதுல நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு வேற எனக்கு கால் பண்ணி இருக்க.. அன்னைக்கே நான் உன்கிட்ட சொன்னேன் தானே?" என மொத்தமாய் கொட்டிவிட்டாள்.

"அப்பா என்ன முடிவெடுக்குறாங்களோ அது தான் என் முடிவும்.. இனி எனக்கு கூப்பிடாத" என்றவள் வைத்துவிட்டாள்.

"நானே என் வாழ்க்கைக்கு என்னனு தெரியாம புலம்பிகிட்டு இருக்கேன்.. இதுல இவ வேற!" என்று நினைத்துக் கொண்டு இருக்க, அழைப்பு மணி சத்தத்தில் வாசு தான் வந்துவிட்டான் என நினைத்து ஓடினாள்.

கதவை திறந்ததும் நின்றவர்களைப் பார்த்து "மாமி!" என்றவளுக்கு அழுகை வரப் பார்க்க, கலங்கிய கண்களுடன் சிவகாமியை அணைத்துக் கொண்டாள்.

"அம்மு!" என்ற சிவகாமி அவள் கலங்கிய விழிகளைப் பார்த்ததும் என்னவோ என பதறிவிட,

"ம்மா! அண்ணிக்கு வீட்டு நியாபகம் வந்துடுச்சுன்னு நினைக்குறேன்.." என்று விஷ்வா கூறவும் தான் அவனைப் பார்த்தவள் சிவகாமியிடம் இருந்து பிரிந்து மெதுவாய் கண்களை துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

"அவ்வளவு தானே? வேற ஒன்னும் இல்லையே? பயந்தே போய்ட்டேன்.. நீ ஏன் வந்தன்னு கேட்டு வாயாடிட்டு இருப்பன்னு இப்ப தான் இவன்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்.. நீ என்னன்னா கண்ணுல தண்ணியோட வந்து நிக்குற.. பக்குன்னு ஆகிப் போச்சு!" என்று சிவகாமி கேட்க,

"அம்மா போன் பண்ணினாங்க மாமி.. அதான் தேடிடுச்சு.. அப்ப நீங்களும் வந்திங்களா" என்று சமாளித்தாள் திக்ஷிதாவும்.

"மாமா வரலையா?" என்று கேட்டு மூவருமாய் உள்ளே வர,

"விஷ்வாக்கு காலேஜ் லீவ்னு சொன்னான்.. அதான் பார்த்துட்டு வருவோம்னு கூட்டிட்டு வந்தேன்.. மாமா வரலைன்னு சொல்லிட்டாங்க" என்றபடி அமர, திக்ஷிதா தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அன்று இரவே மீண்டுமாய் ஒரு புது வாசுவையும் அவன் கோபத்தையும் பார்த்து பயந்து நின்றாள் திக்ஷிதா.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
விளையாட்டு புள்ளைய ரெம்ப தான் மிரட்டுறான் வாசு 😁😁😁😁😁😁😁😁😁
 
Top