• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 23

படுக்கையில் கையில் ஜூஸுடன் கால்களை ஆட்டியபடி பருகிக் கொண்டு இருந்த திக்ஷிதா வாசுவின் முறைப்பில் அவனுக்கு எதிர்பக்கமாய் திரும்பிக் கொண்டாள்.

திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் திக்ஷிதா.

"போதும் வாசு! அதான் அவ்வளவு பேசி இருக்கியே! அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்து போச்சு அவளுக்கு.. இன்னும் ஏன் முறைச்சுட்டு இருக்குற?" என உண்மை தெரியாமல் சிவகாமி கேட்க,

"நீங்க இவ்வளவு இடம் குடுக்காதீங்க அண்ணி! அவர் பண்ணினது தான் சரி.. இது தேவையா இவளுக்கு?" என்ற உமாவிற்கு இன்னுமே பதட்டம் குறைந்தபாடில்லை.

"ப்ச்! சும்மா இருங்க! அவனே சலங்கை கட்டாத குறையா நிக்குறான்.. நீங்க வேற!" என்று உமா அருகே சென்று மெதுவாய் சிவகாமி கூற, வாசு பார்வை எல்லாம் மனைவி மீது தான்.

முதுகை துளைத்து வரும் கதிர்களை பார்க்காமலே உணர்ந்தவள் அவன் புறம் திரும்பவே இல்லை. நிச்சயம் அன்பான பார்வையோ காதலான பார்வையோ இல்லை என்பதை உணர்ந்தவளுக்கு அவன் கோபம் புரியாமலும் இல்லை.

அவ்வளவு பேசிவிட்டாலும் அவன் கோபம் தீராமல் இருப்பதிலேயே அவன் பயமும் தவிப்பும் என புரிந்திருந்தாலும் இப்படி எதுவும் இல்லை என்று தெரிந்த பின்பும் ஆசுவாசம் அடையாமல் உருமி பொருமிக் கொண்டிருக்கிறானே என கவலையாய் தான் இருந்தது.

"எவ்வளவோ சொன்னேன்.. நானும் வர்றேன்னு.. எனக்காக நீங்க ஏன்ப்பா அலையனும்னு சொல்லிட்டு இப்ப எல்லாரையும் அலைய விட்ருக்க அம்மு!" என்ற கதிர் குரல் கோபத்தை விட ஆதங்கமாய் வர, நிமிரவே இல்லை அவள்.

"அட என்ன ஆளாளுக்கு அவளை பேசிகிட்டு.. புள்ளைக்கு எதுவும் இல்லைனு சந்தோஷப்படுறதை விட்டுட்டு.. சும்மா நசநசனு.. அம்மாடி! நீ கொஞ்ச நேரம் படுத்துக்கோ.. இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் ஒருக்க பார்த்துட்டு தான் டாக்டர் வீட்டுக்கு போக சொல்லி இருக்கார்.. நீங்க எல்லாம் கொஞ்சம் வெளில வாங்க.. அவ கொஞ்சம் சாஞ்சு எந்திக்கட்டும்" என்று ரத்தினம் மருமகளை காப்பாற்றி அனைவரையும் வெளியே அழைத்து வந்தார்.

"மாமனாரே! புலிங்ககிட்ட காப்பாத்தி சிங்கத்துக்கிட்ட மாட்டிவிட்டுட்டு போறிங்களே!" என்று அவளின் மூளை அலறியது அனைவரும் வெளியேறிய பின்பு அங்கே சாவகாசமாய் அமர்ந்த வாசுவின் இறுகிய உடல்மொழியில்.

ஊரில் இருந்த திக்ஷிதாவிற்கு அழைத்து வாசு பேசிய அடுத்த நாள் அலுவலகத்தில் வேலைகள் குவிந்திருக்க, அப்படியும் திக்ஷிதாவை தவிக்க வைக்காமல் மதியம் ஒரு முறை அழைத்து இரவு தாமதமாகும் என பேசிவிட்டான்.

அன்றுமே இரவு பதினோரு மணிக்கு மேல் பேச ஆரம்பித்து நேரம் தாண்டிக் கொண்டே செல்ல, வாசுவின் முகத்தில் களைப்பையும் மீறிய அவனின் சோர்வை கண்டு கொண்டவள் முகம் யோசனையுடன் சுருங்க, அவளை வருத்த விரும்பாத வாசுவும் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் வந்துவிடுவதாய் கூறி இருந்தான்.

அனைத்திற்கும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தவள் அடுத்த நாள் காலை உமாவிடமும் கதிரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

"நானும் வர்றேன் டா.. உன்னை எப்படி தனியா அனுப்புறது?" என்ற கதிர் அவள் கல்லூரி விடுதியில் இருக்கும் பொழுதுமே முடிந்த வரை உடன் சென்று அவளை சேர்த்துவிட்டு தான் வருவார்.

"நான் என்ன சின்ன குழந்தையா ப்பா? இனி இதெல்லாம் நான் பழகிக்கணும் தானே? டிக்கெட் பஸ்ல தான் புக் பண்ணி இருக்கேன்.. ஒன்னு பிரச்சனை இல்லை.. அதுவும் இல்லாம உங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத அலைச்சல்.. நீங்களும் அம்மாவை கூட்டிட்டு ரெண்டு நாள் தங்குறது போல வாங்க" என்று கூறி தந்தையை மறுத்துவிட்டாள்.

பேருந்தில் ஏறிய பின்பு தான் திக்ஷிதா சிவகாமிக்கு அழைத்ததே.

"அவன் திட்ட போறான் பாரு.. என்கிட்ட சொல்லி இருந்தா கூட வந்திருப்பேன்ல?" என சிவகாமி கூற,

"மாமி! நான் என் புருஷனை பார்க்க போறேன்.. கூட உங்களையும் கூட்டிட்டு போக முடியுமா?" என கேட்டு சீண்டிவிட்டு இனிதாய் தான் ஆரம்பித்தது திக்ஷிதாவின் விருதுநகர் நோக்கிய பயணம்.

திருச்சி பேருந்து நிலையம் அருகே எதிர்பாராத விதமாய் எதிரே வந்த பேருந்தில் திக்ஷிதா வந்த பேருந்து மோதவிருக்க, நிலையை உணர்ந்த எதிர் பேருந்தின் டிரைவர் வண்டியை ஒடித்து திருப்பியதில் ஒருப்பக்கமாய் சாய, திக்ஷிதா வந்த பேருந்து ஓட்டுநர் சட்டென நிறுத்தியதில் பின்னால் வந்த லாரியில் மோதி சில அடிகள் தள்ளிக் கொண்டு வந்து நின்றது பேருந்து.

பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது கடவுளின் அருள் என்றாலும் லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் பின்னால் அமர்ந்திருந்த சிலருக்கு காயங்கள் அதிகம் தான்.

அதில் பின்னால் இருக்கையில் அமர்ந்து வந்த திஷிதாவும் மாட்டி இருந்தாள்.

தனது இருக்கையின் கீழ்பக்க கம்பியில் வலது கால் மாட்டியதோடு வண்டி குலுங்கி அதிர்ந்து நின்றதில் கம்பியின் அடியில் கால் பாதம் முழுதும் மாட்டிக் கொண்டது.

உடைந்து வளைக்கப்பட்டிருந்த கம்பியை பார்க்காமல் விட்டிருந்ததை அறியவில்லை அவள். திக்ஷிதா இழுத்த வேகத்தில் கணுக்காலில் அடித்துவிட வலியில் துடித்துவிட்டாள்.

அலறித் துடித்தவளை அங்கிருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்க, திக்ஷிதா கூறியதின் பெயரில் தகவல் முதலில் உமா கதிரவனுக்கு தான் சென்றடைந்தது.

உமா பயத்தில் கதறி பரிதவித்து அழுதுவிட, கதிர் மனைவியை தேற்றவும் முடியமல் பதட்டத்தை மறைக்கவும் முடியாமல் தடுமாறியவர் பின் ஒருநிலைக்கு வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

"முதல்ல வாசுக்கு தெரியுமானு தெரியல.." என்றவர் சிவகாமிக்கு அழைத்து கூற விக்கித்து போனார் சிவகாமியும்.

கணவனிடம் சொல்வதற்குள்ளே வியர்த்து வர, ரத்தினம் தான் சமாதானம் செய்து அவருக்கு நீரை கொடுத்தவர் வாசுவிற்கு அழைத்தார்.

"ப்பா கொஞ்சம் பிஸி! அப்புறம் கூப்பிடுறேன்" என்றவன் வைக்க போக,

"திக்ஷிதா விபத்துல மாட்டிக்கிட்டா ப்பா!" என்றவர் குரலில் நொடியில் உலகமே நின்ற உணர்வு வாசுவிற்கு.

"ப்பா!" என்றவன் குரலில் என்ன உணர்ந்தாரோ,

"ஒன்னும் இல்ல வாசு.. பதறாத! கால்ல அடினு தான் சொல்லி இருக்காங்க.. நீ கொஞ்சம் கிளம்பேன்.. உனக்கு பக்கம் தான்" என்று கூறுவதற்கு முன்பே காரில் ஏறி இருந்தான் வாசு.

"திருச்சியா? அங்கே எப்படி திக்ஷி?" என்ற கேள்வியை கேட்க கூட தோன்றாமல் நிலைமையை உணர்ந்து செயல்பட்டவன் மூளையில் மனைவி மட்டுமே!

"சொல்ல சொல்ல கேட்காம போனியே டி.. அவன் வந்ததும் போன்னு சொன்னேனே!" என்ற அன்னையின் புலம்பல்
கேட்காமலே அனைத்தையும் கூறி இருந்தது வாசுவிற்கு.

"விஷ்வா சமயபுரத்துல தான்ங்க இருக்கான்" சட்டென நியாபகம் வந்தவராய் கூறிய அன்னையின் அழுகுரல் காதில் கேட்க, நொடியில் கட் செய்தவன் விஷ்வாவிற்கு அழைத்து கூற, விஷ்வா கதிர் மூலம் மருத்துவமனையை கேட்டு அங்கே சென்றிருந்தான் அனைவருக்கும் முன்பாக.

மதுரையில் இருந்து திருச்சிக்கு செல்ல எடுத்த அந்த இரண்டரை மணி நேரங்களில் வாசு கைகளில் கார் அத்தனை வேகத்தில் இருக்க, தடுமாறிய மனதினை மனைவிக்காய் நெறிப்படுத்தி இருந்தான்.

வழியில் பாதியில் விஷ்வா அழைத்துவிட்டான். அவன் வந்து சேர்ந்த தகவலோடு திக்ஷிதா பயத்திலான மயக்கத்தில் இருப்பதாய் கூறி இருந்தான்.

"நிஜமா வேற ஒன்னும் இல்லையே விஷ்வா?" என்று கேட்ட அண்ணன் குரலில்,

"ண்ணா! டென்ஷன் ஆகாத.. பிராக்சர் கூட இல்ல.. ரத்தம் கட்டி இருக்கு.. அவ்ளோ தான்.. நான் வர்றதுக்கு முன்னாடியே டிரீட்மென்ட் முடிஞ்சிடுச்சி போல.. டாக்டர்கிட்ட இப்ப தான் பேசினேன்.. ஒரு வாரம் பத்து நாள்ல சரியா போய்டும்னாங்க.. இன்னொரு டைம் செக்கப்க்கு வர்றதா சொன்னாங்க" என்று கூற, நேரில் பார்க்கும் வரை வாசு மனம் அமைதியாகவில்லை.

அன்னைக்கு விஷ்வா அழைத்த போது உமா, கதிரோடு தாங்களும் வந்து கொண்டிருப்பதாய் கூறிவிட, அனைவரின் பயமும் புரிந்த விஷ்வாவும்,

சரி தான்! நேரில் பார்த்தால் தானே அவர்கள் பயமும் நீங்கும் என விட்டுவிட்டான்.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
ஆத்தி பிள்ள புருஷன பார்க்க ஆவலா சீக்ரட்டா கிளம்பினா சதி நடந்துடுச்சே 🙄🙄🙄🙄🙄😄😄😄😄😄
 
Top