• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்- 3 கயல்விழி

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

அத்தியாயம் -3

கன்னிமயில் கயல்விழி

பாலமேடு மேலத் தெருவில் உள்ள "வேல்" இல்லம். வடிவேல்,கனகம்மாள் என்ற தம்பதியர் சிறப்பாகப் பல காலம் குடும்பம் நடத்திய வீடு. பழைய கம்பீரத்தோடு ஒரு வீடும், அருகிலேயே கண்ணைப் பறிக்கும் பளீர் ஊதா, மஞ்சள் என வண்ணங்கள் பூசப்பட்ட புதிய அழகோடு ஒரு வீடும் என அண்ணன் தம்பிகளைப் போல் இரண்டு இருந்தது.

முந்தைய வீட்டில் அண்ணன் கந்தவேல் ,பிந்தைய வீட்டில் தம்பி குமரவேலும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சின்னசாமியின் மனைவி சிவகாமியின் உடன் பிறந்தவர்கள் . சிவகாமி தனது மகள் கலைச்செல்வியை, பதினெட்டு வயது ஆன உடனேயே தனது தம்பிக்கு மணமுடித்துக் கொடுத்து, கடமையை முடித்திருந்தார்.

கந்தவேலுக்கு, கயல்விழி, கனிமொழி என்ற இரண்டு பெண்மக்களும், குமரவேலுக்குப் பள்ளிச் செல்லும் இரண்டு மகன்களும் உண்டு. தாயார் கனகம்மாள் இவர்களோடு தான் வசிக்கிறார்.

வாய்க்கால் கரையிலிருந்து, மகள் கலைச்செல்வியும், மருமகள் கயல்விழியுமாகச் சின்னச்சாமியோடு பேசியபடியே வீடு வரை நடந்து வந்தனர்.

"மாமா, இந்த வருஷமும் எங்க வராமல் போயிடுவீகளோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். நீங்க வந்த ராசி, பூஎருவாட்டி சூடமும் நல்லா எரிஞ்சுக்கிட்டே போனது. என் வேண்டுதல் நிறைவேறின மாதிரி தான். எனக்கு ரொம்பச் சந்தோஷம்." எனக் கயல் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க

"உன் வாக்கே பொன்னாகட்டும்மத்தா. நான் நினைச்சு வந்த காரியம் ஜெயமாகட்டும். ஆமாம் அதென்ன நீ மட்டும் வந்திருக்க, உன் தங்கச்சி கனிமொழி எங்க, அது காணும் பொங்கல் வைக்கலையா?" என விசாரித்தார்.

"நல்லா கேட்டீங்க போங்கப்பா. கயல் ஒருத்தி வைக்கிறதுக்கே அத்தை புலம்பிக்கிட்டு இருக்கு. இரண்டு பேரும் பொங்கல் வச்சாலுங்கன்னா பெரிய மாமா ஒரு வழியா ஆகிடுவார்." என்றாள் கலைச் செல்வி .

"உமா கவலைப் படுறதில என்னத்தா தப்பு இருக்கு. உங்கம்மா உனக்குப் பதினெட்டு வயசு எப்ப ஆகுமுண்டு, பார்த்துக்கே இருந்து தன் தம்பிக்குக் கட்டிக் கொடுக்கலையா. ஒரே வீட்டில இரண்டு பொண்ணுங்களும் கல்யாண வயசில நிண்டா, பெத்தவளுக்குக் கவலை ரொம்பத் தான் இருக்கும். அதை நினைச்சு தான் சின்ன மருமகள் பொங்கல் வைக்கிறது இல்லையோ என்னமோ." எனக் கனிமொழியின் சாமர்த்தியத்தைப் புகழ்ந்தார்.

"மாமா, கனிக்கு இதுல எல்லாம் எப்பவுமே இன்ட்ரெஸ்ட்டும் இல்லை, நம்பிக்கையும் இல்லை. அவ வேற தினுசு. இந்தா குமாரப்பாவோட சேர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போயிருக்கா பாருங்க." எனக் கயல் சொல்லவும், போராட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே வீட்டை அடைந்தனர்

இவர்கள் வீட்டை அடையவும், கலைச்செல்வியின் மகன்கள், ஐந்தாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் சரவண வேல், செந்தில் வேல் இரண்டு வேல்களும் வந்து தாத்தாவைக் கட்டிக் கொண்டனர்.

"அடேய் வாங்கடா, வாங்கடா!!!" என்றவர் தனது டிவிஎஸ் பிப்டி வாகனத்திலிருந்து தின்பண்டங்களை எடுத்துப் பேரன்களுக்குக் கொடுத்துவிட்டு, தூக்கிலிருந்த திரட்டுப் பாலை எடுத்து மருமகள் கயல் கையில் கொடுத்தார்.

"லட்சுமி கன்று போட்டுச்சே, அதோட சீம்பாலா மாமா?" என ஆவலாகக் கேட்டாள் கயல்.

"ஆமாம்மா, சின்னக் கன்றா வந்தது அது கூடக் கன்று ஈன்டுடுச்சு." என ஆரம்பித்தவரைக் கயல் ஒரு ஆட்சேபனை பார்வையிலேயே அவர் பேச்சை நிறுத்த வைத்தவள், " மாமா, இதே மாதிரி பேசினீங்கன்னு வைங்க, எங்கம்மா எசப் பாட்டை ஆரம்பிச்சிடும். உங்களுக்குப் புண்ணியமா போகுது பேசாமல் வாங்க." என்ற அன்புக் கட்டளையோடு மருமகள் அவரை வீட்டுக்குள் அழைத்து விட்டு , தன் கையிலிருந்த கூடையை வைக்கப் பின்கட்டுக்கு சென்றாள்.

சின்னச்சாமி மகளோடு பெரிய மச்சினன் வீட்டுக் கூடத்திலேயே அமர்ந்தார். அவர் கயல் விழி சொன்னதை வைத்து மகளைப் பார்க்கவும், "அவள் உள்ளதை தான்பா சொல்றா. காலையில கன்னிப் பொங்கல் வைக்கையிலேயே உமா அத்தை ஆரம்பிச்சிடுச்சு. அதுக்குத் தான் அறிவுகிட்டச் சொல்லி உங்களை வரவழைச்சேன்." என ரகசியமாகச் சொன்னாள் கலைச்செல்வி.

அதே நேரம் உள்ளிருந்து கூடத்துக்கு ,"அண்ணேன், வாங்கண்ணேன். நாங்களே உங்களைப் பார்க்க வரலாமின்னு இருந்தோம்." என வரவேற்றார் கயல்விழி அம்மா உமா.

" நானும் பேசி முடிச்சிடனுமுண்டு தான்மா வந்தேன். மாப்பிள்ளை எங்க?" என வினவினார் சின்னச்சாமி

" வயக்காடு வரைக்கும் போனாங்க அண்ணேன். இந்தா வர்ற நேரம் தான், போன் அடிச்சிட்டு வாரேன்." என்றவர், "கயலு மாமாக்கு காபிக் கொண்டா." என அழைக்கும் போதே, கயல் விழி இரண்டு தட்டுகளில் ஒன்றில் தான் வைத்த பொங்கலையும் மற்றதில் காரப் பணியாரமுமாகக் கொண்டு வந்தாள்.

கயலுக்குப் பின்னாடியே மெல்ல வந்த அவளது அப்பத்தா,கனகம்மாள் "வாங்கய்யா." என மருமகனை வரவேற்று விட்டு, மருமகனுக்கு நேராக நிற்காமல் மறைவாகச் சென்று , அவர் பேச்சுக் காதில் விழும் இடத்தில் அமர்ந்து கொண்டார்.

சின்னச்சாமி, மருமகள் கொண்டு வந்ததை ருசிப் பார்த்தவர், " உங்க அத்தை கைப்பக்குவம் அப்படியே இருக்குது ஆத்தா..." எனப் பாராட்டியவர், மகளை நோக்கி, "செல்வி, சின்ன மாப்பிள்ளையும் வரச் சொல்லுமா. முக்கியமான விசயம் பேசனும்." என்றார்.

அதே நேரம் பால் கொண்டு செல்லும் வண்டியை விடுத்து, பைக்கில் வந்து இறங்கிய அறிவு, அவன் மனைவி சாந்தி, மகன் கதிர் ஆகியோரைப் பார்க்கவுமே, ஏதோ முக்கியமான பேச்சு வார்த்தை என யூகித்த கயல்விழி, அது தங்கள் சம்பந்தமானது என்பதையும் இவர்கள் என்ன பேசினாலும், தன் முடிவிலிருந்து மாறக் கூடாது என மனதில் உறுதிக் கொண்டாள்.

"வாங்க மாமா, வாங்க அக்கா..." என வரவேற்றவள், ஐந்து வயதான கதிரையும் அழைத்துக் கொஞ்சினாள். கலைச்செல்வியும், தம்பியையும், அவர் மனைவியையும் வரவேற்றவள், " இன்னைக்கு எப்படி வீட்டை விட்டுட்டு வந்துட்ட?" எனத் தம்பி மனைவியைக் கேலி பேசினாள்.

"பட்டம்மா அக்கா இருக்கு. அதை வச்சிட்டு தான் வந்தேன். சம்சாரி வீடு அப்படியே போட்டுட்டு வர முடியுமா. தோட்டத்துக்கும் மாத்து ஆள் ஏற்பாடு பண்ணிட்டு தான வரணும். வீட்டில் இம்புட்டு ஆளுங்களை வச்சுக்கிட்டு நீங்களே வரமாட்டேங்கிறீங்க?" என்றாள் சாந்தி.

"பொம்பளைகளுக்கு ஓயாத வேலை இருந்துக்கிட்டு தான இருக்கு. தோட்டத்துக்கு எதுக்கு மாத்து ஆளு. ஏன் உங்க செவிடன் என்ன ஆனான்?" எனப் பண்ணைக்காரனைப் பற்றி விசாரிக்கவும், "நேத்து மாட்டுப் பொங்கல் முடிச்சிட்டு ஊருக்கு போயிருக்காப்ல. மூணூ நாள் செண்டு தான் வருவாரு." என்றாள் சாந்தி.

"அடேங்கப்பா அத்தனை நாள் லீவாக்கும்." எனக் கயல் பேச்சில் கலந்து கொள்ளவும்,

"அட நீ ஒருத்தி, அப்படிச் சொல்லிட்டுத் தான் போவாப்ல. நாளைக்கு வந்து நிக்கலையிண்டா என்னான்னு கேளு." எனச் சிரித்தாள் சாந்தி. செவிடன் என்பது, அவனின் புனை பெயர், நான்கு வருடமாக அவர்களிடம் வேலை பார்க்கிறான்.

"இப்படிப் பண்ணைக்காரன் கிடைக்கவும் கொடுத்து வச்சிருக்கனுமே. எல்லாம் சிவகாமியம்மா கருணை தான்." என்றாள் கயல்விழி.

"அதைச் சொல்லு..." எனக் கலைச் செல்வியும் ஆமோதிக்க, “அவனாவது அன்னைக்கு நேரத்துக்கு வந்திருந்தா அம்மாளை காப்பாத்தி இருப்பான். அந்த குற்ற உணர்ச்சியிலே செவிடன் அங்கேயே கிடக்கிறான், என் கூடப் பிறந்தவன் எங்கிட்டு திரியிறான்னே தெரியலை?“ என கலைச்செல்வி குறை படவும், “மதினி, அதுக்கு மனசில எம்புட்டு சங்கடமோ, எல்லாரும் முகம் திரும்புனீங்க, அது என்ன செய்யும் பாவம்!!!“ என சாந்தி கொழுந்தனுக்கு வக்காலத்து வாங்கவும்.

“சும்மா அவனுக்கு வக்காலத்து வாங்காத, ஆகாத வேலையா செஞ்சு, இவளையும் நட்டாத்துல நிறுத்திட்டு போயிருக்கான்.“ என தம்பியை வழக்கம் போல் திட்டவும் ,கயல்விழிக்கு மனம் பொறுக்காமல் கண்ணீர் வடித்தாள் . கனகம்மாள் தான், மருமகளும் பேத்தியான கலைச்செல்வியை அடக்கினார்.

அடுத்தடுத்து, கந்த வேல், குமரவேல் என அண்ணனும் தம்பியும் வந்து சேர்ந்தனர். குமரவேலோடு கல்லூரி இறுதியாண்டு படிக்கும் கயல்விழி தங்கை கனிமொழியும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலங்காநல்லூர் சென்று வந்தாள்.

"வாங்க மாமா, மாப்பிள்ளை வாயா, வாம்மா சாந்தி..." என முறையாக வரவேற்றனர். எல்லாருமாகக் கூடத்தில் அமர சிறிது நேரம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றியே பேச்சு ஓடியது.

"நாளைக்குப் போராட்டம் இன்னும் பெரிய லெவல்ல போகப் போகுது மாப்பிள்ளை. காலேஜ் பசங்களும் களத்தில் குதிச்சிட்டாய்ங்கே. நம்ம அலங்காநல்லூர் போராட்டம் டீவில லைவ் ரிலே ஆகுது. தமுக்கத்தில கூட்டம் அள்ளுதாம். காலேஜ் பயலுக ரயில் மறியல் எல்லாம் ப்ளான் பண்றாய்ங்கே. போராட்டம் செமையா போகுது." என ஆர்வமாகப் பேசினான் குமரவேல் கலைச் செல்வியின் கணவன்.

"மாமா, கம்ப்யூட்டர் இன்ஜினியர் தனுஷ் மாமாவே, போராட்டத்தில் இறங்கியிருக்காரு. மாட்டுப் பண்ணை வச்சிருக்கிறவர் நீங்களும் வந்து போராட்டத்தில் கலந்துக்குங்க." என அறிவை போராட்டத்துக்கு அழைக்கவும்,

"வரலாம் தான், அப்புறம் மாடு கன்றை யார் பார்த்துக்குவா. அதுகளையும் நாம தான பார்க்கனும், செவிடனும் இல்லை." என அறிவு பேச்சில் இழுக்கவும்,

"இந்நேரம் அன்பு மாமா இருந்திருந்தா, அது தான் எல்லாருக்கும் முன்ன நிண்டுருக்கும். இன்னைக்கு அவுக கூட்டாளிங்க எத்தனை பேர் கேட்டாய்ங்கேத் தெரியுமா?" எனக் கனிமொழி அன்பு இல்லாததை வருத்தமாகச் சொன்னாள்.

"அவனுக்கென்ன, மைனர் கணக்கா திரிஞ்சான். நம்ம அப்படியா குடும்பஸ்தன், வீட்டுப் பொறுப்பையும் பார்க்கனுமுல்ல. நேரத்தை ஒழிச்சுகிட்டு நாளைக்கு வர பார்க்குறேன்." என்றான் அறிவு. குரலைச் செருமிக் கொண்டார் சின்னச்சாமி .

"என்னங்க மாமா. ஏதோ பேசனமுன்னு சொன்னீங்கலாம். அன்பு இருக்க இடம் தெரிஞ்சிடுச்சா. காண்டேக்ட் பண்ணாப்லையா?" என ஆர்வமாகக் கேட்டார் கந்தவேல். உமாவும் சின்னச்சாமி என்ன சொல்லப் போகிறார் என ஆர்வமாகவே பார்த்திருந்தார்.

எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தவர் பார்வை கயல்விழி மீது வந்து நின்றது. அவள் முகத்தையைச் சில கணங்கள் ஊண்டிப் பார்த்தவர்,

"நம்ம கயல் அப்படியே சாயல்ல என் சிவகாமி தான். சின்னதில இருந்ததையும் விடவும், இந்த மூணு வருசத்தில ரொம்பவுமே மாற்றம். நான் சிவகாமியைக் கல்யாணம் கட்டையில எப்படி இருந்துச்சோ அது மாதிரி தான் கயல் இப்ப இருக்கு." என நெகிழ்ந்தவர்,

"சிவகாமியை பிடிக்காதவுக யாருமே இருக்க மாட்டாக. அம்புட்டு பதிவிசு, லட்சுமி கடாட்சமா, மஞ்சள் பூசி, பொட்டு வச்சு அப்படி இருக்கும்." என மனைவியின் நினைவுகளில் ஓரிரு நிமிடங்கள் தொலைந்தார். அவரைப் போலவே அங்கிருந்த அத்தனை பேருக்கும் சிவகாமி நெருக்கமானவர் தானே, எல்லார் கண்களிலும் குளம் கட்டியது.

சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டவர், "சிவகாமியைக் கோயில்ல வச்சு பார்த்தப்பவே, ஒரு காலத்திலையும் அதைக் கண் கலங்க விடக் கூடாதுண்டு முடிவு பண்ணேன். அதுனால தான், என் அப்பன், ஆத்தா போகவுமே, சாதிசனத்தை விட்டுட்டு உசிலம்பட்டியிலிருந்து குடும்பத்தோட இங்க குடி வந்தேன்." என நிறுத்தியவர். "இப்ப எதுக்கு இதையெல்லாம் சொல்றேண்டு பார்க்கிறீகளா?" என வினவியவர், வேறு யாரும் பேச இயலாத நிலையிலிருக்கவும், தானே தொடர்ந்தார்.

"நான் ஆரம்பிக்கும் போதே, கயலு அப்படியே அவுங்க அத்தை சாயலுண்டு சொன்னேன்ல, எப்படிச் சிவகாமி சங்கடப் படுறதைப் பார்க்க முடியாதோ, அதே மாதிரி கயல் கஷ்டப்படுறதையும் என்னால பார்க்க முடியலை. அதுனால ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்." என அவர் சொல்லவுமே அவரை எல்லாரும் உற்று நோக்க

"மாமா, இல்லை நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். இன்னைக்குப் பூ எருவாட்டி எனக்கு நல்ல சகுனத்தைக் காட்டிக் குடுத்திருக்கு. நீங்க எதாவது அச்சாணியமா சொல்லீடாதீங்க." எனப் பதறினாள் கயல்விழி.

"பூவாட்டிக் கொடுத்த நல்ல சகுனத்துக்கு ஏத்த விசயமாத் தான் நான் சொல்லப் போறேன்." எனத் தன் குரலில் கடுமையைக் கூட்டியவர்

"ஒரு அப்பன், தன் மகனுக்காக எத்தனை வருஷமுண்டாலும் காத்திருக்கலாம். ஆனால் கன்னிப் பொண்ணு காலகாலத்தில கல்யாணம் காட்சிண்டு செட்டில் ஆகனும். அது தான் எல்லாருக்கும் நல்லது." என்றவர்,

பெரிய மச்சினனனைப் பார்த்து, "கந்தா... நான் உன் மகளுக்கு நல்லதைத் தான் செய்வேண்டு நம்புனேனா, நான் சொல்ல வரதை நல்ல விதமா எடுத்துக்க." என்ற முஸ்தீபுகளோடு ஆரம்பித்தவர், பிரம்ம அஸ்திரமாக அதைச் சொல்லியே விட்டார்.

"என் சின்ன மகன், இந்த ஊரை விட்டுப் போயி மூன்றரை வருசத்துக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் ஒரு தாக்கல் தகவல் இல்லை. அவனுக்குப் பரிசம் போட்டோமுண்ட ஒரே காரணத்துக்காகக் கயல் வாழ்க்கை பாதிக்கக் கூடாது. நான் தான சம்பந்தம் பேசினேன், நானே அந்தப் பந்தத்திலிருந்து உங்களை விடிவிச்சு விடுறேன். நீ கயலுக்கு வேறப் பக்கம் மாப்பிள்ளை பார்த்துக்க." என்றார்.

மற்றவர் எதுவும் பேச இயலாமல் மௌனம் காக்க, கயல்விழி கண்ணில் நீர் பெருக, "நீங்க எப்படி மாமா அப்படிச் சொல்லுவீங்க. அப்படியெல்லாம் உங்க நோக்கத்துக்கு என் மனசை மாத்திக்க முடியாது. அன்பு மாமா, இந்தச் செயினை என் கழுத்தில போட்டப்பவே, நான் அதுக்குப் பாதிப் பொண்டாட்டி ஆயிட்டேன். இனி இதைத் திருப்பிக் கேக்குற உரிமை, என் மாமாவைத் தவிர வேற யாருக்குமே கிடையாது." என அவள் கரகரத்த குரலோடு சொல்லவும்.

"ஆத்தா கயலு சொல்றதைப் புரிஞ்சுக்க, உனக்கு அப்புறம் உன் தங்கச்சி வேற இருக்கு. குடும்பச் சூழலை அனுசரிச்சு நடந்துக்க." என்றார் சின்னச்சாமி.

"கனிக்கு வேணுமுன்னா, முன்னாடி கல்யாணத்தை முடிங்க. நான் இப்படியே இருந்துக்குறேன்." என்றாள் கயல்.

"இந்தா மாமா சொல்றாகல்ல, பதிலுக்குப் பதில் பேசாத. அவுக நல்லது கெட்டது எல்லாம் பார்த்தவுக. அவுங்க சொல் பேச்சு கேட்டு நடந்துக்க." என்றார் உமா.

இந்நேரம் அண்ணன் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தாலும் அமெரிக்கா சென்று வந்திருப்பாள். புள்ளைக் குட்டி என்று ஆகியிருக்கும். ஊரில் இல்லாத மாட்டை அடக்கிறவனை கட்டுறேன் என பரிசம் போட்டு, நாத்தனாரும் செத்து, அவர் மகனும் மாயமானது தான் மிச்சம் என மனதில் நொந்துக் கொண்டார் உமா.

"உனக்கு எப்படா, என்னை ஓட்டிவிடுவோம்னு இருக்கும். இந்த வீட்டில இருந்தா தானே பிரச்சனை." என கயல் அம்மாவிடம் பாய்ந்தவள், மாமாவிடம் திரும்பி, "என்னை நம்ப வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க மாமா. அங்க உங்க மருமகளா வந்து இருந்துக்குறேன்." எனக் கேட்கவும். உணர்ச்சி வயப்பட்டுப் போன சின்னசாமி.

"ஆத்தா, உன்னை என் மருமகளா, என் வீட்டுக்கு கூட்டிட்டு போறதை விட, எனக்கு என்ன பெரிய சந்தோஷம் இருந்திடப் போகுது. ஆனால் என் மகன் உசிரோட இருக்கானா இல்லையாண்டே தெரியாமல் நான் எப்படி உன்னைக் கூட்டிட்டுப் போவேன்." என்றவர், சில நேரங்களில் சில வார்த்தைகளை உதிர்த்தால் தான் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில், "அவன் அம்மா போன சோகத்தில அவனும் முடிவைத் தேடிக்கிட்டு இருந்திருந்தான்னா?" என அவர் சொல்லும் போதே,

"இல்லை, அப்படிச் சொல்லாதீங்க, என் மாமா உசிரோடாத தான் இருக்கும்." என வீறிடக் கயல்விழிக்கு அந்த நினைப்பே கூடக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. நிற்க முடியாமல் மெல்ல மயங்கிச் சரிய, அருகேயிருந்த குமரவேல் அண்ணன் மகளைத் தாங்கிக் கொண்டான்.

"செல்வி, தண்ணீர் எடுத்துட்டு வா." எனக் குமரவேல் கத்தவும், அவள் செம்பிலிருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க, "கயலு, கயலு..." என ஆளாளுக்குப் பதறினர். ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு அவள் மயக்கம் தெளிய, கலைச்செல்வியும், சாந்தியுமாகக் கைத்தாங்கலாக அவளது அறைக்கு அழைத்துச் செல்ல, கனிமொழி வேகமாகச் சென்று அக்காவின் படுக்கையைத் தட்டிப் போட்டாள். அதில் படுக்க வைத்துப் பெண்கள் அவளுக்கு மயக்கம் தெளிய வைத்தனர்.
 
Top