• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 18

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 18

மேலும் ஆறு மாதம் கடந்தது. ஹேமா சிவா உறவில் எந்த மாற்றமும் இல்லை. கார்த்திக் அன்னை ரேகாவை போனில் அழைத்து திட்டியே விட்டார். ஆனாலும் அவன் எதுவும் சொல்லாமல் ரேகாவிடம் மட்டும் மன்னிப்பு கேட்டு இங்கேயே சுத்துகிறான்.

அவன் வேலையையும் அம்போ என விடவில்லை. உலகின் எந்த மூலையையும் இணைக்கும் சக்தியை தான் கடவுள் உருவாக்கியுள்ளானே!

சுஜிக்கு இது நான்காவது மாதம். அர்ஜுன் ரேகா எல்லாம் சுஜியை விழுந்து விழுந்து கவனிக்கவும் தான் ஹேமாவிற்கு மூச்சு முட்டும் அன்பில் இருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது போன்ற உணர்வு.

ஆனாலும் சிவாவிடம் இருந்து மட்டும் அவளால் தப்பவே முடியவில்லை. அதற்காக சிவா சுஜியை கவனிக்காமலும் இல்லை.

அன்று தீபாவளிக்கு என அனைவரும் ஷாப்பிங் செல்ல முடிவெடுக்க அர்ஜுன், சுஜி, கார்த்திக், ரேகா, ராஜ் குமார், சிவா அனைவரும் கிளம்பியிருக்க, ஹேமா வழக்கம் போல வர மறுத்து விட்டாள்.

ஹேமா எப்போதும் செல்லும் மாலுக்கே வந்திருக்க, அர்ஜுன் சுஜியுடன் தனியே சென்றுவிட, ராஜ் குமார் ரேகாவுடன் கார்த்திக்கும் சிவாவும் சுற்றிக் கொண்டிருந்த நேரம் சிவாவை மட்டும் காணவில்லை.

கார்த்திக் தான் சிவாவிற்கு இந்த மாதிரி இடங்களுக்கு வந்து பழக்கம் இருக்காதே என எல்லா பக்கமும் தேட, அவன் கிடைத்தபாடு தான் இல்லை.

சிவா சென்ற இடம் முன்பு ஒருநாள் ஹேமாவுடன் சென்ற அதே துணிக்கடை.

அன்று அவள் தேர்ந்தெடுத்த துணிகளின் ரகம், விலை எல்லாம் அவன் பார்த்து வைத்தது இன்று உதவ, அவளுக்காக அவனே தேர்ந்தெடுத்தான்.

உடை மட்டும் இன்றி அதற்கு ஏற்றார் போல அவள் அணியும் அனைத்தும் தேர்ந்தெடுத்தவன் எல்லாருக்கும் முன் காரில் வந்து அமர்ந்து கொண்டான்.

"டேய்! எங்க டா போன? நீ தொலைஞ்சு போயிட்டனு இப்ப தான் போலீஸ்ல ஒரு பச்ச புள்ளய காணும்னு கம்பளைண்ட் பண்ணலாம்னு வந்தேன்.நல்லவேளை நீயே வந்துட்ட" கார்த்திக் பயந்தது போல நடித்து சொல்ல,

"எப்படி, 30 வயசு பச்ச புள்ளன்னா?" என்று கிண்டல் செய்தான் அர்ஜுன்.

"பேசினது போதும் வண்டிய எடுங்க" என்ற சிவா, தான் கொண்டு வந்த அந்த பையை மறைத்து வைத்தான். பின் அதற்கும் அல்லவா கலாய்ப்பார்கள்.

வீட்டிற்கு வந்ததும் அதை ரேகாவிடம் கொடுத்து ஹேமாவிற்கு கொடுக்க சொல்ல, அவரும் அதில் என்னவெல்லாம் இருக்கிறது என ஆராய்ந்தார்.

"சிவா, இதெல்லாம் நீயேவா செலக்ட் பண்ணின? ஆமா அதெப்படி ஹேமா என்னல்லாம் வாங்குவான்னு கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்க?" ரேகா கேட்க,

"அதான பார்த்தேன்! என்னடா மவுஸ்ஸு டிரஸ்ஸு இல்லாம போகுதேன்னு" குரலிலேயே தெரிந்து கொண்டான் சிவா அது யார் என்று.

எவனுக்கு தெரியக் கூடாது என நினைத்தானோ அவனே தான்! கார்த்திக்.

"அத்தை அதை குடுங்க பார்க்கலாம்" கார்த்திக் கேட்க,

"டேய் அவன் கட்டிக்க போற பொண்ணுக்கு அவன் வாங்கிட்டு குடுக்குறான். அதை ஏன் டா நீ பாக்கணும்? அதெல்லாம் குடுக்க முடியாது. ஒழுங்கா ஊருக்கு ஓடி போய்டு" என்றவர் ஹேமா அறைக்கு செல்ல, அவர் பின்னேயே வாசல் வரை சென்றான் சிவா. அவனை தொடர்ந்து சென்றான் கார்த்திக்.

"ஹேமா இந்தா உனக்கு தீவாளிக்கு எடுத்தது" என ரேகா கொடுக்க, அதை ஒரு ஓரம் வைக்க சென்றவள் கதவிடையில் தெரிந்த சிவாவினை பார்த்துவிட்டு கண்களை சுருக்கி அதை திறந்து பார்த்தாள்.

அவள் நினைத்தது போலவே தான் இருந்தது. கண்டிப்பாக அம்மாவிற்கு இத்தனையும் வாங்க தெரியாது என நினைத்தவள் அதை ரேகா கையில் கொடுத்தார்.

"இப்ப என்னடி? ஆமா சிவா தான் வாங்கிட்டு கொடுத்தான். ஏன் இதை எடுத்துகிட்டா என்னவாம்? தினமும் அவனோட தான போற? அவன் கொண்டு வர்றத தான வயித்துக்குள்ள தள்ளுற? அப்புறம் என்ன? கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கா உனக்கு? அந்த 2 புள்ளங்க பத்தி கொஞ்சமாவது நினச்சு பார்த்தியா? ஒரு அம்மாவா என் மனச பத்தி நினச்சு பார்த்தியா? அந்த விபத்தோட நீ போய் சேர்ந்திருந்தா கூட நாலு நாள் அழுதுட்டு விட்ருப்பேன்" என பேச்சை அதிகப்படுத்த,

"அத்த!" என உச்ச குரலில் கத்திக் கொண்டே சிவா உள்ளே வர, அதற்குள் கண்ணீரோடு அமர்ந்து விட்டாள் ஹேமா.

"என்னத்த நீங்க?" ஸ்ருதி இறங்கிய குரலில் அவன் கேட்க,

"சும்மா இரு சிவா! இப்ப சொல்றேன் நல்ல கேட்டுக்கோ. டேய் உனக்கும் தான்" என கார்த்திக்கையும் சொல்ல, அவனும் உள்ளே வந்தான்.

"என் விதி! இவளை கடைசி வரைக்கும் நான்தான் பாத்துக்கணும்னு கடவுள் எழுதிட்டான் போல. நீங்க போய் உங்க வாழ்க்கையை பார்த்து தொலைங்க டா. உனக்கு நானே நல்ல பொண்ணா பார்க்குறேன்" என சிவாவை பார்த்து சொல்ல, அவனுக்கும் இப்போது கோபம் வந்தது.

அவன் பேசும்முன் "எல்லாப் பிரச்சனைக்கும் நீ தான் காரணம்" என கத்தி அழுதாள் ஹேமா.

"ஹேமா ஒன்னும் இல்ல. நீ ஏன் டென்ஷன் ஆகுற?" என அவளை சிவா தொடவர,

"ஏன் இப்படி பண்ற? ஏன் என்னை பாடா படுத்துற? அப்ப வராத காதல் இந்த முகத்தை பார்த்தும் உனக்கு என்மேல வந்ததா? உனக்கு நான் வேண்டாம். யாரை வேணா கட்டிக்கோ.. சந்தோசமா இரு.. உனக்கு நான் வேண்டாம்" என அவள் அழ, அனைவர் கண்களுமே கலங்கியது.

அவள் முகத்தில் கண்ணாடி குத்திய இடத்தில் போடப்பட்டிருந்த தையல் மார்க்கையும் கடந்து அவள் வேதனையில் முகம் சுருங்கி போனது. அவளின் இரண்டாவது பிரச்சனையே இந்த முகம் தானே?

"என்ன அத்த நீங்க? இப்ப என்ன! அவளுக்கு இது வேண்டாம். அப்படித்தான? குடுங்க அதை. ஏன் தேவையில்லாம பேசி அவளை கஷ்டப்படுத்துறீங்க? டாக்டர் சொன்னது மறந்து போச்சா? நானே பயந்து பயந்து அவகிட்ட பேசிட்டு இருக்கேன்" என சொல்லிக்கொண்டு திரும்பி ஹேமாவை பார்க்க, அவள் மூச்சுகாற்றிற்கு ஏங்கிக் கொண்டு கண்களை உருட்டி தரையில் விழுந்து கிடக்க, அதற்குள் சத்தம் கேட்டு வந்த அர்ஜுனும் அவளிடம் ஓடினான்.

தூக்கி அவளை கட்டிலில் கடத்தியவன் அவளை செக் செய்ய, பதறி போய் நின்றனர் அனைவரும். ஒருவருடம் ஆக போகிறது ஆனாலும் அவளால் அதிர்ந்த சத்தத்தை தாங்க முடியவில்லை. இது இரண்டாவது முறை. முதலில் வந்தபோதே அர்ஜுன் அவளை பள்ளி செல்வதை நிறுத்திவிட சொல்ல, அவள் கேட்பாளா என்ன?.

"ப்ச், இப்ப என்னம்மா பிரச்சனை? அவளை கஷ்டப்படுத்தாதீங்கனு சொன்னா உங்களுக்கு புரியாதா?" அர்ஜுனும் கத்த,

"தெரியாம ஏதோ கஷ்டத்துல உளறிட்டேன் பா" என அவரும் அழ, கார்த்திக் அவரை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து சென்றான்.

“உனக்கு பொறுமையே இல்ல ரேகா. இப்ப என்ன? அவளை கொஞ்ச நாள் அவ போக்குல தான் விட்டு பிடிக்கனும். சிவா அவளை புரிஞ்சி வச்சிருக்க அளவு கூட நமக்கு புரியல” ராஜ் குமார் தன் பங்கிற்கு திட்டி செல்ல, கார்த்திக் தான் பெரியவர்களை சமாதானம் செய்தான்.

"மாமா சுஜியை வெளியில கூட்டிட்டு போங்க" என சொல்ல, சுஜியின் கவலையால் வயிற்றில் இருக்கும் குழந்தையும் வாடும் என அவளை வெளியே அழைத்து சென்று உட்கார வைத்துவிட்டு சிவா மீண்டும் ஹேமாவிடம் வர, அவளை ஊசி மூலம் சிறிது நேரம் தூங்க வைத்தான் அர்ஜுன்.

அவள் அருகில் அமர்ந்து அவளையே சிவா பார்த்துக் கொண்டிருக்க, சிவா மனமோ அன்றைய நாள் அதாவது ஹேமா ஹாஸ்பிடலில் இருந்த நாளுக்கு சென்றது.

ஒவ்வொருவராய் உள்ளே சென்று ஹேமாவை பார்த்து ஆறுதல் சொல்லி, அழுது புலம்பி வர, இறுதியாய் உள்ளே சென்றான் சிவா.

ஹேமா அவனை பார்த்தவள் பார்த்தபடி இருந்தாள். ஆனால் அந்த பார்வை அவனை நேசிக்கும் ஹேமாவாய் இல்லாமல் தெரிந்த ஒருவனை பார்க்கும் பார்வையாய் இருந்தது.

"ஏன் ஹேமா இப்படி பண்ணின? வாழ்க்கை முழுக்க என்னை அழ வைக்க பாத்துட்டியே? ஏன் என்னை இவ்வளவு காதலிச்ச? என்னால உனக்கு எப்பவும் தொல்லை தான்" அவள்முன் அழக் கூடாது, தைரியமான வார்த்தைகளை தான் பேச வேண்டும் ஏன டாக்டர் சொல்லியிருக்க, பிரிந்த அவளை சேர்ந்த நிம்மதியில் பேசிக் கொண்டிருந்தவன் சுதாரித்து அப்போது நிறுத்தினான்.

ஆனால் அவள் அவனிடம் மட்டும் இல்லாமல் யாரிடமும் ஹாஸ்பிடலில் வைத்து பேசவில்லை.

எல்லோரும் பேசிப்பேசி பார்த்தும் அவள் அமைதியாய் இருக்க, அப்போதே சிவாவிற்கு உறுத்தியது ஒன்று தான். ஒருவேளை டாக்டர் அவளிடம் அவள் பிரச்சனையை சொல்லியிருப்பாரோ என்று.

விபத்தில் அவள் முகத்தில் பல இடங்களிலும் கண்ணாடி துண்டுகள் கீற்றி விட்டிருக்க, அதை பார்த்து பார்த்து நொந்து போயினர் அவள் வீட்டினர்.

ஆனால் சிவா அதற்கும் அசையவில்லை. அவள் பிழைத்து தன்னிடமே வந்ததே போதும் என நினைத்து ஹேமாவின் முகத்தை பற்றி ஏன் அவள் முகத்தை பார்க்கும் போதும் அவனிடம் சின்ன சுனக்கம் கூட இல்லை.

அவள் எப்படி அவனை பார்த்ததும் முகம் மலர்ந்து படபட பட்டாசாய் பொறிவாளோ அது போலவே அவனும் அவளுக்காக மாறினான் ஹாஸ்பிடலில் இருக்கும் போதே!

வீட்டிற்கு வந்ததும் கார்த்திக்கும் அவனுடன் சேர்ந்து எல்லா சேட்டைகளும் செய்து அவளை மாற்ற நினைக்க, அவள் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டே போனாளே தவிர கூட்டைவிட்டு வெளிவர தயாராய் இல்லை.

அதேபோல தான் அன்று ரேகாவிடம் சிவா துணிவாய் பேசியதும்.

அன்று ஒரு மாதம் கழித்து ஹேமாவை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர, அனைவரும் வீட்டிற்குள் வரவும் சிவா சத்தமாய் ரேகாவை அழைத்தான்.

"ஒரு நிமிஷம் அத்த!" அவன் அழைப்பில் ஹேமாவும் அங்கு தான் நின்றாள்.

"சொல்லு சிவா"

"அத்த நான் ஹேமாவ விரும்புறேன். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண உங்க சம்மதம் வேணும்" தெளிவாய் கேட்டான்.

"நீ சம்மதம் கேட்குறீயா இல்ல கட்டளையா சொல்றியா?"
ராஜ் குமார் கேட்க,
"நீங்க எப்படி வேணா வச்சுக்கோங்க.. ஆனா ஹேமாவ நான் யாருக்கும் விட்டு குடுக்குறதா இல்ல" உறுதியாய் கூறினான் சிவா.

"உன் இஷ்டத்துக்கு நான் தலையாட்ட முடியாது" உடல்நலம் தேறிய பின் ஹேமா முதலில் பேசியது இதுதான்.

"ஹேமா??" சிவா புரியாமல் நிற்க, எல்லோர் பார்வையும் அவள் மீதே!

"யாரும் என்கிட்ட பேச வராதீங்க.. ஒவ்வொரு நாளும் உன் பின்னாடி சுத்தினேன். ஆனால் உனக்கு இப்ப தான் என்னை கல்யாணம் பண்ணனும் தோணிச்சா?" விழிநீர் கண்களை மறைக்க பேசியவள், உள்ளே ஓடியே விட்டாள். சிவாவும் அவள் பின்னே ஓடினான்.

"ஹேமா என்ன சொல்ற நீ?” சிவா கேட்க,

"வேண்டாம்.. கிட்ட வராத! இனி என் வாழ்க்கைல சிவா கிடையாது. நான் சுத்தி வரும்போது என் அன்பு உனக்கு தெரியல.. இப்ப நான் நானா இல்லாம, என் முகம், என் மனசு, என் வாழ்க்கைனு எல்லாம் போனதும் ஏன் என்கிட்ட வர்ற? ஒஹ்ஹ்ஹ் வாழ்க்கை பிச்ச குடுக்குற? அப்படிதானே?" ஹேமா நிறுத்தி ஒவ்வொன்றாய் கேட்க, இது முற்றிலும் சிவா எதிர்பாராத கோணம்.

"என்ன பேசுற ஹேமா? நான்.. நான் உன்ன..விரும்பி தான்..."

"வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!" என காதை மூடிக் கொண்டவள், "அந்த வார்த்தையை சொல்லாத, அப்போ வராத நேசம் இப்ப வருதுன்னா... பாவம் பார்த்து வருதா?" அவள் கேள்வி ஒவ்வொன்றிற்கும் விடை இருந்தாலும் அதை விளக்க, இப்போது ஹேமா உடல்நிலை ஒத்துழைக்காதே!.

வார்த்தைகள் இருந்தும் பேச முடியாத நிலை! கொடுமையானது தான். அவள் நலன்முன் எதுவும் பெரிதாக தெரியவில்லை.

"போயிரு.. இந்த ஹேமா உனக்கு இனி யாரோ தான். இதுக்கு மேல நான் உன்கிட்ட பேச விரும்பல, போ" அவள் கதறிவிட, அதற்குமேல் அவன் நிற்கவில்லை. அதற்கும் அவள் உடல்நிலை தான் காரணம்.

அவள் யோசிப்பதே தவறு. அவன் நேசம் அவளுக்கு புரியும். இப்போது இல்லை அவன் காதலை ஒத்துக்கொள்ளும் முன்பே புரியும். இப்போது அவள் மறுக்க காரணம், தான் தெரிந்தே அவன் வாழ்க்கையை பாழாக்க கூடாது என்று தான். இதுகூட தெரியாமலா அவன் அவளை விரும்புவான். பைத்தியக்காரி!

ஏதேதோ எண்ணங்களில் அவன் இருக்க, மயக்க மருந்தின் வீரியத்தில் உளற ஆரம்பித்தாள் ஹேமா.

"உனக்கு நா வேண்டாம் டா.. நீ உன் குழந்தை உன் குடும்பம்னு நல்லா இருக்கனும்.. உனக்கு நான் இப்ப தகுதியானவ இல்ல.." என உளறியவளை பார்த்து இவளை எப்படி விட முடியும் என அவள் முகம் பார்த்திருந்தவன், அடுத்தடுத்த உளறல்களில் அவளை மடியில் தாங்கி கண்ணீர் விட்டான்.

"ஏன் பிளாக்மேன் எனக்கு இப்படி ஆச்சு..உன்ன மாதிரியே அந்த கடவுளுக்கும் என்ன புடிக்கல..அதான் உன்கூட நான் வாழ தகுதி இல்லன்னு இப்படி பண்ணிட்டான் இல்ல? நான் எவ்வளவு கனவு வச்சிருந்தேன் தெரியுமா? உன்ன மாதிரியே ஒரு பையன் என்ன மாதிரியே ஒரு பொண்ணு.. அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் கூட நீ இல்லாம நான் இல்லனு உன்கூடவே ஒவ்வொரு நொடியும் இருந்துறனும்னு.... கனவு எல்லாம்... அம்மாவே நீ செத்து போயிருக்கலாம்னு... " பாதிப்பாதி வார்த்தைகளில் அவள் திணற, இவன் அவளை மடி தாங்கியதும் நிம்மதியாய் உறங்கினாள், அவனின் வருடலில்.

அடுத்தது என்ன? இது யாவரும் கடந்து செல்லும் பிரச்சினை இல்லை. கல்யாணம் ஆனதும் எல்லோரும் கேட்கும் முதல் கேள்வியே குழந்தையை தான். குழந்தை இல்லாத பெண்களின் மனநிலையை யாரும் அவ்வளவு எளிதில் விளக்கிட முடியாது.

அப்படி இருக்கும் போது ஹேமா? எப்படி தெரிந்தே இன்னொருவனின் வாழ்வை அவளால் கெடுக்க முடியும்? அவன் முன்பே இவள் காதலை ஏற்றிருந்தாலும் இந்த முடிவை தானே எடுத்திருப்பாள்?

ரேகா இனி சிவாவின் முடிவை மாற்ற முடியாது என்பதற்காகவா ஏற்று கொண்டார். தன் மகளின் வாழ்வு இப்படியே முடிந்து விட கூடாது என்பதற்காகவும் தானே?

சிவாவை போல எத்தனை மனிதர்கள் இருப்பார்கள்? அவனின் பொறுமையை முன்பே அறிந்த அனைவரும் ஹேமாவை இந்த நிலையிலும் புரிந்து கொள்ள இவனால் மட்டும் தான் முடியும் என நம்பினார்கள்.

அன்றைய நாள் அப்படியே முடிய, அடுத்த நாள் எப்போதும் போலவே சிவாவுடன் கிளம்பினாள் பள்ளிக்கு.

ஆனால் பாதியிலேயே பாதையை மாற்றி அன்று கூட்டி சென்ற அதே கோவிலுக்கு அழைத்து சென்றான்.

ஏன் என்று கேட்கவும் இல்லை, வேண்டாம் என்று சண்டை போடவும் இல்லை அவள்..

கோவிலின் உள் இவன் செல்ல, நேற்று நடந்த அனைத்தும் கண்களில் வலம் வர இவளும் இறங்கி உள் சென்று சாமி கும்பிட்டு அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தாள். ஆனால் ஏனோ கண்களில் கண்ணீர் வரும்போல இருக்க, கண்மூடிக் கொண்டாள்.

"ஹேமா" அழைப்பது அவன் தான். தெரிந்துதான் அசையவில்லை.

"கோபப்படாம நான் சொல்றத கேளு டா" இவ்வளவு கனிவாக பேசுவானா?

"உன்னை யாரும் எதுவும் இனி சொல்ல மாட்டாங்க. அது என் பொறுப்பு" என்றவன் சில நிமிட அமைதிக்கு பின்,

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் டா" என சொல்ல, கண் விழித்து அவனை பஸ்பமாக்கினாள்.

"தோ பாரு நீ கோபப்பட கூடாது. எதுவா இருந்தாலும் பேசு. ஆனால் கோபப்படாத! உனக்கு ஆகாது.. நான் சொல்ல வர்றத கேளு" குழந்தைக்கு சொல்வது போல தான் சொல்லிக்கொண்டு இருந்தான்.

"நீ யாரும் வேண்டாம்னு ஒரு முடிவுல இருக்க சரி.. ஆனா என்னையே சுத்தி வந்து பட்டாம்பூச்சியா இருந்த உன்னை விட்டுட்டு நான் எப்படி இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன்னு நினச்ச?" ஒரே கேள்வியில் சொல்லிவிட்டான், நீ இன்றி அந்த இடத்தில் யாரும் இல்லையென.

"நீ ஒன்னும் என்னை விரும்பலயே?" வேகமாய் பறந்து வந்தது அவள் கேள்வி. உள்ளத்தில் அவ்வளவு பயம். இவன் என்ன சொல்கிறான் என.

"நீ அன்னைக்கு கார்த்திக்கூட வீட்டுக்கு வந்த அப்போ என்ன சொன்னன்னு நியாபகம் இருக்கா?" அவள் யோசனையில் புருவம் சுருக்க, அவளை அவ்வளவு யோசிக்க விடாமல் அவனே பதில் கூறினான்.

"என் மனசு உனக்கு தெரியும்னு சொன்ன டா. என் காதல் உனக்கு தெரியும்னு சொன்ன. நீ இன்னும் என்மேல கோபமா இருக்க மாதிரி நடிக்காத டி. என்னால எவ்வளவு நாள்... ஏன் இந்த ஜென்மம் முழுக்க இப்படியே உன்னை பத்திரமா பாத்துக்க முடியும் தான். ஆனால் இப்படியே உன் மனசு கஷ்டப்படுறத பாத்துக்க முடியாது. என்கூட என்னை நம்பி வா ஹேமா. எனக்கு குழந்தை எல்லாம் வேண்டாம் எனக்கு என் ஹேமா போதும். உன்னோட குழந்தைதனத்த நான் எவ்வளவு விரும்புனேன் தெரியுமா? அதை எவ்வளவு இழந்து நிக்குறேன் தெரியுமா? உனக்கு முன்ன குழந்தை எல்லாம் எனக்கு தேவையே இல்ல டி. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. ஆனால் இதுதான் என்னோட முடிவு. நீ எப்படி யாரும் வேண்டாம்னு இருக்கியோ அதேமாதிரி என்னாலயும் கடைசி வர இருக்க முடியும். இருப்பேன். நீ இல்லாத இடத்துல யாரையும் நிரப்ப எப்பவும் என்னால முடியாது. இப்பவும் எப்பவும்"

அவள் விழி விரித்து அவனையே பார்த்து நிற்க, முழு நீளமாய் பேசிவிட்டான். அவள் மனதில் இருப்பதுடன் அவன் மனதில் இருப்பதையும் சேர்த்து. இந்த உலகத்தில் உன்னைவிட எதுவும் எனக்கு முக்கியம் இல்லை என்று.

"இப்படி பண்ணாத! என்னை அழ வைக்காத! நான் இப்ப உன் ஹேமா இல்ல.. நீ வேற..."

"ஹேமா.. ஹேமா நீ உணர்ச்சிவசப்பட கூடாது. ஆனாலும் இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா எனக்கும் உன்னை மாதிரியே நீ இல்லாம யாரும் தேவையில்லை. நீ டென்ஷன் ஆகாத! நீ யோசி! ஆனால் உன் மனசுக்கு கஷ்டம் குடுக்காம உன் மனசுல எனக்கு என்ன இடம் குடுத்துருக்கனு யோசி! இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம். நீ எப்பவும் நீயா இருக்கணும். இந்த குழந்தை, உன் முகம், அந்த விபத்து...எதையுமே நினைக்காத பழைய ஹேமாவா முடிவெடு. இப்ப கிளம்பலாம் வா" என்றவன் நிற்காமல் செல்ல, மொத்தமாய் குழம்பி அவன் பின்னே சென்றாள்.

ஆனால் அவள் மறந்து அவன் உணர்ந்து சந்தோசம் அடைந்தது என்னவென்றாள் அவள் அவனிடம் பேசிவிட்டாள்.

கோபமோ குழப்பமோ.. இவ்வளவு நாள் தவிக்கவிட்டு தவித்த அவள் அவனிடம் பேசிவிட்டாள். இதை உணர்த்தி அவளை சங்கடப்படுத்த மனமில்லை.

முன்னே சென்றவன் பின்னே அவள் செல்ல, அவன் பள்ளி செல்லாமல் திரும்ப வீட்டிற்கே கூட்டிவர காரணம் கேட்காமல் வீட்டினுள் சென்றாள் ஹேமா.

அவள் மனதை வருத்திக் கொள்ளாமல் அவள் யோசிக்க வேண்டும் என பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டவன் திரும்பி சென்றான்.

மாறிடுவாளா? அவன் மனதையும், அவன் முடிவையும், அவளின் காதலையும் நினைத்து முடிவெடுப்பாளா? இருவரும் தனித்தனியேவே இருந்து விடுவார்களா?

பார்க்கலாம் இறுதி அத்தியாயத்தில்....
 
Top