• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அத்தியாயம் – 6


“மணி ஒன்பது ஆச்சு.....வீட்டுக்குள்ள இப்படி எல்லாம் பரப்பி போட்டுட்டு அங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க…… பள்ளிகூடத்துக்கு நேரமாகலையா ...ஏண்டி உமா நீயும் அவனுகளோட சேர்ந்து கூத்தடிச்சுகிட்டு இருக்க...உனக்கு காலேஜ் பஸ் வந்திரும்டி” என கற்பகத்தின் சத்தம் கேட்டதும்

இங்கு “அச்சோ அம்மாவேற சத்தம் போடுது ...... என்னண்ணா நீ மட்டும் விளையாடற எனக்கு கொடுக்க மாட்டேன்கிற” என மாதேஷ் கேட்க

‘நீ சின்ன பையன் உனக்கு வீடியோ கேம் எல்லாம் விளையாட தெரியாது...சும்மா வேடிக்கை பாரு “ என்றபடி மோகன் விளையாண்டு கொண்டிருந்தான்.

உடனே அவனுக்கு ரோஷம் வந்துவிட “போ எனக்கும் தெரியும்.....அதான் இப்போ நீ விளையாடும்போது பார்த்தேன்ல...நானும் விளையாடுவேன்” என மாதேஷ் அடம் பிடிக்க

“டேய் சும்மா இருடா ...இதெல்லாம் சின்ன பசங்க விளையாட கூடாது “என அவனை அடக்கியபடி விளையாட்டில் கவனமாய் இருந்தான் மோகன்.

“நீ சூப்பரா விளையாடற மோகன்....எங்கடா கத்துகிட்ட” என அவனின் தமக்கை உமா அவன் விளையாட்டின் வேகத்தை பார்த்து வியந்து கேட்க

‘“எல்லாம் நம்ம பாஸ்கர் அண்ணா வீட்ல தான்...அவங்க வீட்ல இதைவிட பெருசு வச்சிருக்காங்க...டிவியில போட்டு விளையாடுவோம்...இது பழசு ...அதான் எனக்கு கொடுத்திட்டாங்க”....என்றான்.

“நீ அவங்க வீட்டுக்கு படிக்கதான போறேன்னு சொன்ன ...இப்போ அங்க போய் விளையாண்டுட்டு வரியா ...இரு அம்மா கிட்ட சொல்லி வைக்கிறேன்” என மாதேஷ் இடையில் புகுந்து மிரட்ட

உடனே விளையாடுவது நிறுத்தி விட்டு அவனை திரும்பி முறைத்தவன் “ நீ மட்டும் அம்மாகிட்ட சொன்ன ...நான் இத எப்பவும் உனக்கு தரமாட்டேன்...அப்பாகிட்டையும் சொல்லகூடாது” என அவனை எச்சரிக்க மாதேஷின் முகம் சுருங்கிவிட்டது.

“போடா எப்போ பார்த்தாலும் சின்ன பையனு எனக்கு ஏதும் கொடுக்க மாட்டேங்கிறீங்க...மிரட்றீங்க” என வாய்க்குள் முணுமுணுத்து கொண்டே அங்கே நின்று கொண்டிருந்தான் மாதேஷ் ‘

அப்போது கற்பகத்தின் குரல் மீண்டும் கேட்கவும்..... உமா வேகமாக எழுந்து ஓடிவிட...... மோகன் அந்த வீடியோ கேம்மை எங்கு மறைத்து வைப்பது என இடம் பார்த்து கொண்டிருந்தான். மற்றவரிடம் பொருளை வாங்குவது மோகனின் தந்தைக்கும் ஏன் கற்பகதிற்குமே பிடிக்காது.அதனால் அவருக்கு தெரியாமல் மறைத்து வைக்க அவன் இடம் தேட

“டேய் அண்ணா அதை என்கிட்டே கொடு நான் பத்திரமா வச்சிருக்கேன்.... யாருக்கும் சொல்ல மாட்டேன் .....சாயந்திரம் வந்ததும் இரண்டு பேரும் விளையாடலாம்” என மாதேஷ் கேட்கவும்

“போடா உன்னை பத்தி எனக்கு தெரியாது......நீ அப்பாகிட்ட சொல்லிடுவ.......... நானே பத்திரமா வச்சுக்கிறேன்” என தம்பியின் புத்தி அறிந்து தமையன் சொன்னான்.

அதற்குள் மறுபடியும் கற்பகம் சத்தம் போடவும் மாதேஷ் ஓடிவிட மோகன் அதை மறைத்து வைத்துவிட்டு தான் பள்ளிக்கு கிளம்பினான்.

நாட்கள் அதன் வேகத்தில் செல்ல எல்லா விஷியங்களிலும் மோகன் அவனை விட பெரிய பையன் என அவனுக்கு முன்னுரிமை கொடுக்க பட அது மாதேஷிற்கு எரிச்சலை உண்டு பண்ணியது. தந்தையின் செல்லமும் தாயின் அரவணைப்பும் அவனுக்கு அதிகம் கிடைத்த போதும் அவன் மனம் என்னோவோ மோகனுடனே போட்டி போட்டு கொண்டிருந்தது.அவனுக்கு தான் எல்லாமே செய்யறீங்க என்று எப்போதும் புலம்பி கொண்டே இருப்பான்.

அந்த சமயத்தில் தான் ஒரு நாள் இருவரும் பள்ளிக்கு கிளம்பி வெளியே வர எதிரில் புது சைக்கிளோடு சாமிநாதன் உள்ளே வந்தார்.

“ஐய்ய்யய்ய்ய்யி புது சைக்கிள்.....நம்ம சைக்கிளாப்பா “ என கத்திகொண்டே அவரை நோக்கி ஓடியவன் அந்த சைக்கிளை இரண்டு முறை சுற்றி சுற்றி வந்தான் மாதேஷ் .

“ம்ம்ம் ஆமாண்டா தங்கங்களா உங்களுக்குதான் சைக்கிள்” என்றவர் “டேய் மோகன் நீ சொன்ன மாதிரி சைக்கிள் வாங்கி கொடுத்திட்டேன். நல்ல படிச்சு நல்ல மார்க் எடுக்கணும்” என்றார்.

“அப்போ இந்த சைக்கிள் எனக்கு இல்லயா” என மாதேஷின் முகம் தொங்கி போக

உடனே அவன் அருகில் வந்து” நீ சின்ன பையன்டா.....உனக்கு எதுக்கு சைக்கிள்...அண்ணன்தான் பத்தாவது போக போறான். அவனுக்கு தான வண்டி வேணும்.....அண்ணன் ஓட்டி முடிச்சதும் நீ இத எடுத்துக்கோ” என்றார்.

“ம்கும் எனக்கு ஒன்னும் வேண்டாம்...எல்லாமே அவனுக்கே கொடுங்க.....ஏன் தான் சின்ன பையனா பிறந்தனோ ...பெரிய பையனாவே பிறந்து இருக்கலாம்...அவனும் எனக்கு வீடியோ கேம் கொடுக்க மாட்டேன்கிறான் ..நீங்களும் இப்படியே சொல்றிங்க” என கோபத்தில் அவன் மோகனின் கள்ளத்தனத்தை தந்தையிடம் போட்டு கொடுக்க

அவனது தந்தையோ “என்னது வீடியோயவா” என இழுக்க

உடனே மோகன் “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா....அவன் உளறான்...சைக்கிள் நல்லா இருக்கு...எனக்கு ஸ்கூல்க்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்” என சொல்லிகொண்டே வேகமாக சைக்கிளை எடுத்தான்.

உடனே அவர் “எங்கடா நீ மட்டும் போற...தம்பியும் கூட்டிட்டு போ.....இரண்டு பேரும் ஒரே ஸ்கூல் தான....இனி தினமும் அவனையும் கூட்டிட்டு போ” என்றவர் திரும்பி மாதேஷை பார்த்து “இனி நீ அண்ணன் கூட ஸ்கூல்கு போ” என சொல்லவும்...... மோகன் திரும்பி மாதேஷை முறைக்க....... ஆனால் அவனோ மோகனை பார்த்து “ஐய்ய் அப்பா நானும் புது சைக்கிள்ள போலாம்னு சொல்லிட்டாரே” என குதூகலித்தபடி பின்னால் ஏறி அமற அண்ணன் தம்பி இருவரும் புது சைக்களில் தங்களது பள்ளியை நோக்கி பயணமானார்கள்.

அண்ணன் தம்பி இருவரும் புது சைக்கிளில் சந்தோஷமாக பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது.... “டேய் மோகன் என்னடா புது சைக்கிளா” என அவனது வகுப்பு தோழன் கேட்க

“ஆமாண்டா எங்க அப்பா இன்னைக்கு தான் வாங்கிட்டு வந்தாரு” என பெருமையுடன் சொன்னவன் “வண்டி சூப்பர் பாஸ்ட் தெரியுமா?” என பெருமை பேசவும்

“அப்படியா என்னோடதவிட உன் வண்டி பாஸ்டா போகுமா ...அதயும் பார்க்கலாம்” என அவன் போட்டி போட

அந்த வயதும் பருவமும் போட்டியை ஏற்று கொள்ள செய்ய..... செல்லும் வேகத்தை அதிகபடுத்தினான் மோகன்.

“டேய் அண்ணா பயமா இருக்குடா மெதுவா போ” என மாதேஷ் கத்த மோகன் அதை கேட்கவில்லை. புது வண்டி, முதல் நாள் சைக்கிள் பயணம்,அதிக வேகம் என சென்று கொண்டிருந்தவன் ஒரு சமயத்தில் வண்டி அவனது கட்டுபாட்டில் இருந்து சற்று தடுமாற சாலையின் ஏற்ற இறக்கத்தில் ஓரிடத்தில் இருவரும் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டனர்.

“ஹே பார்த்து...... பார்த்து....” என கத்தியபடியே அங்கு வந்த பாஸ்கர் ...”என்ன மோகன் இப்படிதான் வேகமா வருவியா...மெதுவா வர மாட்டியா” என அவனை தூக்கிவிட்டு கடிந்து கொள்ளவும் அதற்குள் மாணவர்கள் கும்பல் கூடிவிட்டது. ”எப்படிடா விழுந்த” என அவர்கள் விசாரித்து கொண்டிருக்க

அப்போது “அந்த அண்ணாவ இவங்கதான் பின்னாடி இருந்து தள்ளி விட்டாங்க” என அருகில் குரல் கேட்கவும்

அனைவரும் திரும்பி பார்க்க “இந்த அண்ணா தான் அவங்களை பிடிச்சு தள்ளி விட்டாங்க” என மாதேஷை நோக்கி தனது கைகளை நீட்டி கொண்டிருந்தாள் மலர்விழி.

மோகன் திரும்பி மாதேஷை முறைக்க

“அவன் எங்க தள்ளிவிட்டான் மலரு...இவன் தான் வேகமா வந்து பாலன்ஸ் பண்ண முடியாம கீழே விழுந்தான்” நடந்ததை விளக்கினான் பாஸ்கர்.

ஆனால் மலரோ “இல்லண்ணா இந்த அண்ணா தான் தள்ளிவிட்டாங்க” என மீண்டும் அவன் மீதே குற்றம் சுமத்த

அதற்குள் அருகில் இருந்த மீனா “ஏய் மலரு நீ சும்மா இரு” என அதட்டவும் அந்த ஏழு வயது சிறுமியோ “ இல்லக்கா இந்த அண்ணா இப்படி பிடிச்சாங்களா அந்த அண்ணா” என விளக்கம் சொல்லி கொண்டிருக்க ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை.

மோகன் வேகமாக வந்ததால் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு கத்திக்கொண்டே வந்த மாதேஷ் கீழே விழாமல் இருக்க அவனை இறுக்க பிடிக்க அதை பார்த்து கொண்டிருந்த மலர்விழி அவன் தான் தள்ளிவிட்டான் என நினைத்து கொண்டாள்.

“நீ எதுக்குடா சின்ன பையனை எல்லாம் வண்டில ஏத்திட்டு வர” என அவனது கூட்டாளிகள் அவனிடம் பேசிகொண்டிருக்க கீழே விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டு அந்த வலி, மேலும் தன் மீது குற்றம் சொன்ன மலரை பார்த்ததும் எரிச்சல் அதிகமாக அவளை வன்மமாக பார்த்தபடியே நின்று இருந்தான் மாதேஷ் .

பின்னர் அவர்களை அனுப்பிவிட்டு பாஸ்கர் மலரை கூட்டி கொண்டு பள்ளிக்கு வந்தான். அந்த ஊரில் பத்தாவது வரை தான் பள்ளிக்கூடம் இருந்தது. இதில் பாஸ்கர் பத்தாவது ,மோகன் ஒன்பாதவது மாதேஷ் மீனா இருவரும் ஏழாவது மலர்விழி இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.

பின்னர் மாலை வரும்போது மோகன் மாதேஷை ஏற்ற மறுக்க அழுது அடம்பிடித்து அவனுடன் சைக்கிளில் வந்தான் மாதேஷ். வீட்டில் வந்ததும் நேராக கற்பகத்திடம் சென்று “அம்மா நீ அன்னைக்கு ஒரு முட்டகண்ணிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்தில...இனிமேல் அத கூட்டிட்டு வந்த அப்புறம் நடக்றதே வேற” என தன் கோபத்தை அவர் மேல் காட்டினான்..

“யாரடா சொல்ற” என புரியாமல் கற்பகம் முழிக்கவும்

மோகனோ “அதான்மா நம்ம அந்த மளிகை கடைகாரர் பொண்ணு ...அன்னைக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தில அந்த குட்டி பொண்ணு மலர்விழி அத சொல்றான்” என விளக்கமாக சொன்னான்.

“ஏண்டா அந்த பொண்ணுக்கு என்ன......அமைதியான பொண்ணு.....ராசியான பொண்ணு” என அவர் சிலாகிக்க

“ஐயோ அம்மாஆஆ...வேண்டாம்...அது பொண்ணு இல்ல...குட்டி சாத்தான் “ என மாதேஷ் கத்தவும் ..

உடனே கற்பகம் பதறி “இவன் ஏண்டா திடீர்னு இப்படி கத்தறான்....நல்லத்தான இருந்தான்...ஆத்தா மாரியாத்தா..... பள்ளிகோடத்துக்கு குறுக்கு வழில போகாதேன்னு சொன்னா கேட்கிறீங்களா..... இப்போ பாரு சின்ன பையன் ஏதோ பயந்திட்டான் போல” என சொல்லிகொன்டே மாதேஷை கைபிடித்து இழுத்து சென்று சாமி படத்திற்கு முன் நிறுத்தி திருநூறு வைத்து விட்டார் .

அதை பார்த்தும் மோகனுக்கு சிரிப்பு வர வாயை மூடிக்கொண்டு அவன் சிரிக்கவும்

அதை பார்த்ததும் அவனது கோபம் உச்சிக்கு ஏற “ டேய் அண்ணா எல்லாம் உன்னாலதாண்டா ......ச்ச்சே அந்த முட்டை கண்ணினால எல்லாருக்கும் முன்னாடி அவமானமா போய்டுச்சு..... இப்போ நீ வேற இதை பூசி ஏன்மா என்னை கடுப்பு ஏத்தறீங்க எல்லாரும்” என புலம்பியபடியே நெற்றியில் இருந்த திருநூறை அழித்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

அதன் பின்னர் மோகன் கற்பகத்திடம் காலையில் சைக்கிளில் இருந்து விழுந்ததை சொன்னவன் “அதனாலதான் அந்த பிள்ளை மேல கடுப்பில இருக்கான்” என்றான்.

“ஏண்டா நீ பார்த்து போகமாட்டியா என அவனை திட்டிய கற்பகம் அது சின்ன பொண்ணுடா...பாவம் தெரியம சொல்லி இருக்கும்...இவனுக்கு ஒருத்தர் குறை சொல்லகூடாது...மூக்குமேல கோபம் வந்திடுமே ” என தன் மகனை செல்லமாக கடிந்த படியே வேலையை பார்க்க சென்றார் அவர். .

பின்னர் ஒருமுறை மோகனோடு பாஸ்கரின் வீட்டிற்கு விளையாட சென்றவன் கேரம் போர்டு விளையாட தெரியாது என்ற சொல்ல ... “என்னது உனக்கு விளையாட தெரியாதா?” என உடன் இருக்கும் நண்பர்கள் கேலி பேசவும், மோகனோ அவன் படிப்புல மட்டும் தான் புலி...மத்ததுல எலி தான் என காலையில் அவன் கணக்கு பாடத்தில் பெயில் ஆனதை அவன் தந்தையிடம் சொல்லி அடிவாங்கி வைத்துவிட்டான் என்ற ஆத்திரத்தில் மோகனும் அவர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்தான்.

அங்கு இருப்பவர்கள் எல்லாம் சிரிக்க அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மலர்விழி அவன் அருகில் வந்து “ அச்சசோ உனக்கு கேரம் போர்டு விளையாட தெரியாதா....நான் வேணா உனக்கு சொல்லிகொடுக்கட்டுமா” என குழந்தைதனம் மாறாமல் கேட்கவும்

ஏற்கனவே நண்பர்கள் கேலி செய்து கொண்டிருக்க அதற்கு ஏற்றார் போல் மலரும் இப்படி வந்தது கேட்டதில் அவனது கோபம் இன்னும் அதிகமாக “போடி” என அவளை திட்டியவன் வேகமாக அங்கிருந்து எழுந்து சென்றான்.

நாட்கள் செல்ல மோகன் பதினொன்றாம் வகுப்பிற்கு வேற பள்ளிக்கு செல்ல, அதுவரை தமையனின் கட்டுபாட்டில் இருந்தவன் அதன் பின்னர் தான் மாதேஷ் சுயமாக இயங்க ஆரம்பித்தான்.

ஒருமுறை ஊர் திருவிழாவில் ஓவிய போட்டி நடக்க அதில் மாதேஷ் மற்றும் மலர்விழி இருவருமே சேர்ந்து இருந்தனர். அதில் மாதேஷ் வெற்றி பெற மலர் தோல்வி அடைந்தாள். அவளால் தோல்வியை தாங்க முடியாமல் அழுது காய்ச்சல் வரவும் உடனே விழா நடத்தியவர்கள் அவனிடம் பேசி அவள் தான் வெற்றி பெற்றதாக அவனிடம் இருந்த பரிசுபொருளை அவளிடம் வாங்கி கொடுத்தனர். இது மாதேஷின் வெறுப்பை இன்னும் அதிகபடுத்த அவளை பார்த்தாலே ஒதுங்க ஆரம்பித்தான்.

ஆனால் மலருக்கோ இதை பற்றி எதுவும் தெரியாது. மாதேஷை பற்றி தனிப்பட்ட முறையில் வெறுப்போ விருப்போ அவளுக்கு இல்லை. அந்த சிறுவயதில் அவள் செய்த காரியமும்,... இப்போது அவனது பரிசுபொருளை அவள் தட்டி பறித்து இருப்பது அவனை எந்த அளவு காயபடுத்தி இருக்கிறோம் என்பதை பாவம் அந்த பேதை அறிந்திருக்க வில்லை.

ஒருமுறை மாதேஷ் ரெகார்ட் நோட் எழுதி கொண்டிருக்க அங்கு வந்து நின்றான் மோகன்.

“என்னடா மாதேஷ் பண்ற” என அக்கறையாக கேட்க .

“ பச் போடா அண்ணா...அந்த மைதிலி டீச்சர் இத்தனை ஹோம் வொர்க் கொடுத்து நாளைக்கே எல்லாம் முடிக்கணும்னு சொல்லிடுச்சு...அதான் வரைஞ்சுகிட்டு இருக்கேன்” என சலிப்புடன் சொல்லியாவறு தனது வேலையில் கவனமாக இருந்தான்.

“நீ தான் நடத்தின பாடத்தை உடனுடக்குடன் படிச்சு முடிச்சிடுவியே அப்புறம் இன்னைக்கு ஏன் இவ்ளோ தாமதாம் ஆகுது”.... என அவன் கேட்கவும்

“ம்ம்ம் கிட்டத்தட்ட எல்லாம் முடிச்சுட்டேன் ...இந்த டிராயிங் மட்டும் தான் இருக்கு” என சொன்னவன் எழுத்து வேலையை நிறுத்தி விட்டு நிமிர்ந்து தமையனை பார்த்தவன் “நீ என்ன இன்னைக்கு இவளவ்வு அக்கறையா விசாரிக்கிற...இது நல்லதுக்கு இல்லையே” என சொல்லிகொண்டே அவனை சந்தேகமாக பார்த்தான்.

“டேய் என்னடா தம்பி .....சுறுசுறுப்பா சுத்திகிட்ட இருக்க பையன் காலையில இருந்து ஆளே காணோம்னு கேட்டா அதுக்கு போய் என் மேல சந்தேகபட்ற ...என்னடா போடா” என கர்சனத்துடன் பேசவும்

“இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு.....ஆமா எதுக்கு நீ இவ்ளோ பாசத்தை பொழியற” என மீண்டும் கேட்டவன் “உண்மைய சொல்லு உனக்கு என்ன வேணும்”...என அவன் பாயிண்டுக்கு வர

“அது வந்து..... வந்து...” என இழுத்து பின்னர் “ இந்த ரெகார்ட் நோட் முடிச்சதும் எனக்கு வேணும்டா” என்றான்.

“உனக்கு எதுக்கு இந்த ரெக்கார்ட் நோட்” என சொல்லி சட்டென நிறுத்தி அவனை நிமிர்ந்து பார்த்தவன் “யாருக்கு அந்த வாயாடி மீனாவுக்கா” என கேட்கவும்

“ஹிஹிஹி என வழிந்தவன் இல்லடா தம்பி நான் பாடத்தில சந்தேகம் கேட்க பாஸ்கர் அண்ணா வீட்டுக்கு போய் இருந்தனா ...அப்போ பாவம் மீனா அழுதுகிட்டு இருந்திச்சு..என்னனு கேட்டேன்...இரண்டு நாளா உடம்பு சரியில்லை...அதனால ரெகார்ட் நோட் எழுத முடியலை.....யாராவது எழுதி இருந்தா வாங்கி காப்பி பண்ணிக்கலாம்...ஆனா எனக்கு யாரு கொடுப்பா அப்டின்னு சொல்லுச்சு” ....என அவன் சோகமாக சொல்ல

“ம்ம்ம் அப்புறம்” என தலையாட்டி மாதேஷ் கேலியாக கேட்க

“என்னை நம்புடா தம்பி....எனக்கு உடனே உன் நியாபகம் தான் வந்திச்சு...என் தம்பி தான் படிப்புல புலி ஆச்சே.....எப்படியும் எழுதி முடிச்சிருப்ப ...அதான் உன்கிட்ட வாங்கிட்டு போய் அவகிட்ட கொடுக்கலாம்னு” என வர வர அவன் குரல் தேய

உடனே மாதேஷ் வேகமாக “போடா நான் தரமாட்டேன்...போன முறை அப்படிதான் ஜாமண்ட்ரி நோட்ல வரஞ்சு கொடுன்னு சொல்லி வாங்கிட்டு போன...ஸ்கூல் போய் அவ வரைஞ்சதா சொல்லி நல்ல பேர் வாங்கிட்டா” என மாதேஷ் மறுக்கவும்

“டேய் அது வந்து அவ தங்கச்சி மலரு இருக்காளா...அதான் நீ முட்டை கண்ணினு திட்டுவியே அவதான்...அது சரியான வாலு...இவ ஜாமென்ட்ரி நோட்ல தண்ணிய ஊத்திடுச்சு...அதுனால பாவம் அவளுக்கு உதவி பண்ணேன்” என தகுமனம் சொன்னான் மோகன்.

“அப்போ அன்னைக்கு நான் ரெடி பண்ணி வச்சிருந்த கேள்வித்தாளை என்னோட பேக்ல இருந்து எடுத்திட்டு போய் அவகிட்ட கொடுத்திட்ட...அவளும் அத படிச்சு என்னைவிட அதிக மார்க் எடுத்திட்டா ..அதுக்கு என்ன சொல்ற” என சரமாரியாக குற்றம் சுமத்த

“ஹே அத கண்டுபிடிச்சுடியா....விவிரமானவண்டா” என கேலியாக சொல்லவும்

“பேச்சை மாத்தாத ....எதுக்கு அப்படி பண்ண?” என மாதேஷ் தமையனிடம் சீறிக்கொண்டு நின்றான்.

“அது வந்து என தடுமாறியவன் “ம்ம்ம் இதும் அந்த மலர் புள்ள பண்ணது தான்.....அவளை படிக்க விடாம மருதாணி போட்டு விடுன்னு தொல்லை பண்ணிடுச்சாம். பாவம்டா மீனா அழுதாளா அதான்” என அதற்கும் விளக்கம் சொன்னான் மோகன்.

உடனே அவனது கவனம் மலரின் மேல் திரும்ப “அந்த புள்ள எப்பவும் இப்படிதான் .....நான் தான் ஆரம்பத்தில சொன்னேன்... அது புள்ளை இல்லை குட்டி சாத்தான்னு .......எங்க கேட்கீறீங்க ?......அம்மா தான் நல்ல பிள்ளைன்னு சொல்லி கிட்டு இருந்தது” என அவளின் மீது இருந்த வெறுப்பு வார்த்தைகளில் வெளிப்பட்டது.

உடனே மோகன் “ஆமாண்டா அது யார் சொன்னாலும் கேட்காது...பிடிவாதம்......மீன்வாவும் அதான் சொல்லி புலம்புவா...பாவம்டா மீனா ....அந்த புள்ள எல்லாருக்கும் செல்லம் வேற...இவனால திட்டவும் முடியலை.....என்கிட்ட தான் சொல்லி புலம்புவா என ஒரு பெரிய கதை வசனத்தை அவன் உருக்கமாக தம்பியிடம் சொல்லி கொண்டிருந்தான்.

ஆனால் உண்மையில் அது போல் எதுவும் கிடையாது. பள்ளி படிப்பை முடித்து மோகன் கல்லூரிக்கு சென்றுவிட்டான்.மோகனுக்கு மீனா மேல் விருப்பம். பாஸ்கர் வீட்டிற்கு செல்வதே அதற்காக தான். மீனாவிடம் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அவனுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் மாதேஷ் தான். ஏனெனில் இருவரும் ஒரே வகுப்பில் படித்து கொண்டிருந்தனர். அதனால் மாதேஷை பற்றி மீனாவிடம் விசாரிப்பதும் அப்படியே சில மணி நேரம் அவளிடம் கடலை போடுவதுமாக போய் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பேச்சின் நடுவே மீனா “ஹோம்வொர்க் இருக்கு” என்று சொல்லவும் உடனே “நீ கவலைபடாத என் தம்பிகிட்ட சொல்லி நான் உனக்கு உதவி பண்றேன்” என சொல்லிவிட்டு இங்கு வந்து மீனாவுக்கு உடல்நிலை சரியில்லை, மலர் இப்படி செய்தால், அப்படி செய்தால் என அவள் மீது குறை சொல்லி தனது காரியத்தை சாதித்து கொண்டிருந்தான் அவன். இப்படியாக சிறுவயதிலே மலரை பற்றிய ஒரு தவறான எண்ணம் மாதேஷ் மனதில் பதிந்து விட்டது.
 
Top