• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"ஆமா டி, செத்துப் போயிட்டான். உன்ன மாதிரி ஒரு பொண்ணோட சாபம் அவனை கொன்னுடுச்சு.... இப்போ சந்தோஷம் தானே... போயிரு இங்கே இருந்து..." என்று தாராவைத் தள்ளிவிட்டான் கபிலன்.

கபி கோபமாக உரைத்த போதும், அவன் வார்த்தைகள் உண்மை என்று அவன் கண்களும், அதில் நண்பனுக்காக தேங்கியிருந்த கண்ணீரும் கூறியது.

ஒன்றும் செய்யத் தோன்றாமல் மெத்தையில் சென்று அமர்ந்திருந்த கபியின் அருகில் சென்று, அவன் முன் மண்டியிட்டு "என்ன சொல்றிங்க கபி? எப்படி?" என்று அதிர்ச்சியாக வினவினாள் தாரா.

"அவன் வெளிநாட்டு ஆசைல தான் பாரிஸ் போனான். ஆனா அம்மாவையும் கூட கூட்டிட்டு போக எவ்வளவோ ட்ரை பண்ணினான். ஷாக்கிங் சர்ப்ரைஸ் பண்ண நெனச்சு அம்மாகிட்ட இதை சொல்லாம வெச்சிருந்தான். ஆனா அம்மாவுக்கு விசா கெடைக்கலே. கடைசில அவன் மட்டும் போக வேண்டியதாகிடுச்சு...

அங்கே இவன் கூட வேலை பார்த்த பொண்ணு இவனை லவ் பண்ணுறதா சொன்னப்போ இவன் ரெண்டு பேருக்கும் செட் ஆகுதுனு சொல்லி ஒதுங்கிருக்கான். ஆனா அந்த பொண்ணு 'எனக்கு இந்தியா பிடிக்கும், இந்தியன்ஸ் பிடிக்கும், இந்தியன் கல்ட்சர் கத்துக்கப் போறேன்' அப்படி இப்படினு இவன் கூட இன்னும் கொஞ்சம் க்லோசா பழகவும், அவனுக்கும் அந்த பொண்ணை பிடிச்சது.

என்கிட்ட பேசும்போதெல்லாம் நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணுனு சொல்லுவான். அவன் அம்மா மேல பாசமா இருக்குறதை பார்த்து அந்த பொண்ணு பல தடவை பெறுமையா சொல்லுமாம், 'எங்க வீட்ல இவ்ளோ க்லோசா அம்மாகிட்ட நான் பேசினது இல்லே, சொல்லப் போனா நெறைய நாள் என் அம்மாகிட்ட பேசினதே இல்லே... இதுக்காகவே உன்னை இன்னும் இன்னும் லவ் பண்ணலாம் போல இருக்கு'னு. ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவு செய்தப்ப தான் ப்ரச்சனை ஆரம்பிச்சது.

அவங்க நாட்ல கல்யாணம் ஒருவரோட தனிப்பட்ட முடிவு. சோ அவங்க வீட்ல ஜஸ்ட் இன்பர்மேஷன் தான் சொல்லுச்சாம். இவன் அம்மா முன்னாடி தான் கல்யாணம் நடக்கனும்னு சொல்லி, திருமணத்தை தள்ளி வெச்சுட்டு அம்மாவை கூப்பிட வந்திருந்தான். அம்மா சம்மதிக்கலே... வேற வழியில்லாம திருமணத்தை முடிச்சிட்டு அம்மாவை சமாதானம் செய்யலாம்னு நெனச்சு, அந்த பொண்ணுகிட்ட சென்னை ட்ரான்ஸ்பர் கேட்டு அப்ளை பண்ண சொன்னதுக்கு, என் நாட்டைவிட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்-னு சொல்லி மறுத்துடுச்சு...

கிறுக்கன், அந்த நாட்டு ரூல்ஸ் தெரியாம ரெம்ப சின்சியரா லவ் பண்ணிட்டான். திரும்ப திரும்ப போய் அந்த பொண்ணுகிட்ட கொஞ்சிருக்கான். 'ஒருமுறை என் கூட வா, கண்டிப்பா என் அம்மாவுக்கு உன்னை பிடிக்கும்... 3 to 6 மன்த்ஸ்ல என் அம்மாவை சமாதானம் செய்து அவங்களையும் இங்கேயே கூட்டிட்டு வந்துரலாம்'னு...

அந்த பொண்ணு 'உன் அம்மா ஏன் உன்னை கன்ட்ரோல் பண்றாங்க? மேரேஜ் உன் விருப்பம்... உனக்கு என்னை கல்யாணம் செய்துக்க விருப்பம் இருந்தா சொல்லு நாளைக்கே செய்துக்கலாம். உன் அம்மாவை சம்மதிக்க வைக்க என்னை கூப்பிடாதே, இனிமே இப்படி பின்னாடி வந்து தொல்லை பண்ணினா அசிங்கபட்டு சாவ'னு சொல்லி மிரட்டிருக்கு...

அப்பறம் ரெம்ப நாள் கழிச்சி அந்த பொண்ணை ஏர்போர்ட்ல பாத்திருக்கான். கடைசியா ஒருக்க கேட்டுப் பாப்போம்னு நெனச்சி ஏர்போர்ட்டுனு கூட பாக்காம பின்னாடியே போய் கெஞ்சிருக்கான். அங்கே இருந்த போலிஸ் என்னனு கேட்டதுக்கு அந்த பொண்ணு 'எனக்கு விருப்பம் இல்லேனு சொல்லியும் என்னை செக்ஸ் டார்ச்சர் பண்ணுறான்'னு கம்ப்ளைட் பண்ணிடுச்சி... போலிஸ் அரஸ்ட் பண்ணிட்டு போயி, அவனை அடுச்சி ஆமானு சொல்லவெச்சு, ஜெயில்ல பத்து நாள் இருந்திருக்கான். வேலை போயிடுச்சி.

அழுதான்... ஏமாந்துட்டேன் டா மச்சினு... கத்தினான். இங்கே இருந்து என்னால ஒன்னும் செய்ய முடியலே... என்னால முடிஞ்சது எல்லாம், ஃபோன்ல அவனுக்கு ஆறுதல் சொல்றது மட்டும் தான். அந்த டைம்ல தான் என் அப்பாவும் இறந்தாங்க... அதனால அவன்கூட ஒரு நாலு அஞ்சு நாள் பேசமுடியலே. ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணினா நாட் ரீச்சபில்னு வந்தது. ஆபிஸ் மூலமா விசாரிச்சப்பா தான் சூசைட் பண்ணிக்கிட்டானு தெரிஞ்சது.

செக்ஸ் டார்ச்சர் கேஸ் என்றதுனால போலீஸ் ரெம்ப கேவலமா நடந்திருக்காங்க... அசிங்கம் ஒரு பக்கம், அவமானம் ஒருபக்கம், அம்மாவை பார்க்க பயம் ஒருபக்கம்... 'பாராசூட் ஜம்ப்' கடைசி வரை பாராசூட் ரிலீஸ் பண்ணவே இல்லையாம். மலைகளுக்கு நடுவுல உடலை கண்டுபிடிக்க கூட முடியலேயாம்." என்று முழுதாக கூறி முடித்து கண்களைத் துடைக்கத் துடைக்க பெருகிக் கொண்டிருக்கும் கண்ணீரை தடுக்க வழியறியாமல் அமர்ந்திருந்தான்.

"தப்பு பண்ணிட்டிங்க கபி... டெத் இஸ் எ நேட்சுரல் திங்... அதை அம்மாகிட்ட மறச்சிருக்கக் கூடாது. அப்பவே சொல்லிருந்திங்கன்னா அம்மா இப்போ அதை ஏத்து ஜீரணித்து வாழ ஆரம்பிச்சிடுப்பாங்க... ஒவ்வொரு நாளும் இன்னைக்காவது என் பையன் என்கிட்ட பேசுவானானு, எதிர்பார்த்து ஏங்கிட்டு இருந்திருக்கமாட்டாங்க. இரண்டு வர்ஷமா அவங்க மனசை நீங்க தான் கொஞ்ச கொஞ்சமா சாவடிச்சிட்டு இருந்திருக்கிங்க..." என்றிட,

"இல்ல ம்மா... நான் இப்படி யோசிக்கலே... தான் இருக்கும் போது தன் பையன் இறந்துட்டான்ற விஷயம் எந்த பேரண்ட்சுக்கும் எவ்வளவு வலியைத் தரும்னு தான் யோசிச்சேன். அதுவும் அவன் சூசைட் வேற பண்ணிக்கிட்டான். அதை கேக்கும் போது அம்மாவுக்கு இன்னு எவ்வளோ கவலையா இருக்கும்... அதான் நான் அவங்க பையனா இருந்து அவங்களுக்கு எல்லாம் செய்து கொடுக்க நெனச்சேன்..."

"நீங்க அவங்க பையனா ஆக முடியாது கபிலன்... உங்களையும் அவங்க பையனா நெனைக்க முடியுமே தவிர, அவங்க பையனை மறந்துட்டு உங்களை அவங்களால ஏத்துக்க முடியாது... அதுவும் இல்லாம அம்மா சிங்கில் பேரண்ட்-ஆ, தன் பையனை வளர்த்தவங்க, சோ அவங்க மனசளவுல நிறையவே பக்குவம் அடைஞ்சிருப்பாங்க... நிசர்சனத்தை ஏத்துக்க கண்டிப்பா முயற்சி பண்ணுவாங்க... இனியாவது அம்மாகிட்ட உண்மைய சொல்லுங்க... ப்ளீஸ்" என்று கூறிட,

"ஆனா இனிமே எப்படி...?" என்று தன் கேள்வியை பாதியில் நிறுத்தினான்.

"சொல்லி தான் ஆகனும்... உண்மைய ரெம்ப நாள் மறைச்சி வெக்க முடியாது... உங்களுக்கும், அம்மாவுக்கும் துணையா நான், மிரு, இந்தர் ப்ரோ எல்லாரும் இருக்கோம்..." என்று அவனுக்கு ஊக்கமளிக்க,

"இன்னைக்கு வேண்டாமே... இன்னொரு நாள் சொல்லட்டா?" என்று அவளின் அனுமதி வேண்டி காத்திருந்தான்.

"நானும் இன்னைக்கே சொல்லுங்கனு கட்டாயப்படுத்தலேயே!!!" என்று கூறி முறுவளிக்க, இருவரும் கொஞ்சம் சகஜமாகினர்.

"தாங்கஸ் தாரு..." என்றிட, இவ்வளவு நேரம் அங்கே இருந்த வீரப்பெண்மணி தாரணி காணாமல் போனாள். அவனின் தாரு என்ற அழைப்பில் அவளின் கண்கள் தான் மறைத்து வைத்திருந்த அச்சத்தை, நாணத்தோடு சேர்த்து வெளிப்படுத்திட, அதில் அவனும் தடுமாறத்தான் செய்தான்.

அவனை விட்டு விலகிச் செல்ல எத்தனித்த போது தான் கவனித்தாள் இருவரின் கைகளும் ஒன்றுக்கொன்று ஆறுதலாக அணைத்திருப்பதை. அவசரமாக கைகளை விலக்கிக் கொண்டு அவனறையைவிட்டு வெளியேறினாள்.

'என்ன காரியம் செய்யிறே தாரணி!!! அவர் கையப்போய் பிடிச்சிக்கிட்டு நிக்கிறே? இனி எப்பவும், எந்த சூழ்நிலைனாலும் அவரை விட்டு தள்ளியே இரு...' என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு ருக்கு படுத்திருக்கும் அறைக்குள் நுழைய, அங்கே கண்ட காட்சி அவளை அதற்கு மேல் அதிர்ச்சியடையச் செய்திருந்தது.



-தொடரும்​
 
Top