• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - காலாவதி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India

மழை

காலாவதி


கருமேகங்கள் இன்னும் சில நொடிகளில் மழை வரப் போவதைக் கட்டியம் காட்டியது.

திலக் தன் பைக்கை செலுத்தியபடி இருந்தான். அவன் முன்னே பல வண்டிகள் புகையை கக்கியபடி மாசு ஏற்படுத்தியது.

முன்னேசெல்லும் ஸ்கூட்டி வண்டியை கவனித்த வண்ணம் இருந்தான்.

சிக்னல், வண்டிகளுக்குத் தற்காலிக நிறுத்தத்தைக் கொடுத்தது.

திலக் கண்கள் மட்டும் பத்தடி தூரத்தில் நின்றிருந்த ஸ்கூட்டியிலிருந்து விலகவில்லை. ஸ்கூட்டியில் வண்டியை ஓட்டுபவளும் ஐந்து வயது சிறுமியும் இருந்தார்கள். சிறுமி பார்க்க அழகாக இருந்தாள்.

தனக்கு முன் வண்டியில் செல்லும் சிறுமியின் பிஞ்சு முகம் மனதை வாட்டியது.அவனுக்கும் ஸ்கூட்டிக்கும் நடுவே நிறைய வண்டிகள் நின்றிருந்தன. ஆதலால் அதை எளிதில் அடைய முடியவில்லை.

அப்போது ஸ்கூட்டி அருகே மஞ்சள் சேலை உடுத்திய பெண் வந்தாள். இருவரும் எதையோ பேசினார்கள். மஞ்சள் சேலை பணத்தைக் கொடுத்தாள். வண்டியில் இருந்தவள் சிறுமியைக் கொடுத்தாள்.

மஞ்சள்சேலை வேகமாகச் சிறுமியைத் தூக்கியபடி சாலையைக் கடந்து நின்றிருந்த காரை அடைந்தாள். காரில் சிறுமியை அமர்த்திவிட்டு வண்டியைக் கிளப்பினாள்.

சட்டென மழை தொடங்கி வலுத்தது.

திலக் காரை பின் தொடர்ந்தான். அவனுக்கும் காருக்கும் இடையே நீர் திரையாய் மழை.

“சின்ன குழந்தையைக் கடத்தி இப்படி செய்றீங்களே” திலக் ரத்தம் கொதித்தது.

கார் ஒரு வீட்டை அடைந்தது. இறங்கியவள் சிறுமியை உள்ளே அழைத்துச் சென்றாள்.

திலக் வேகமாக “ நில்லுங்க” என்றபடி உள்ளே சென்றான்.

“யாரு என்ன வேணும்?” அவள் கேட்டாள். இன்னும் அவள் கைகளைப் பிடித்தபடி சிறுமி நின்றிருந்தாள்.

அவளிடம் திலக் “அது யார் குழந்தை?” ஆவேசமாகக் கேட்டான்.

அவனை சந்தேகமாகப் பார்த்தபடி “என்னோட குழந்தை” என்றவள் “ஸ்ருதி நீ பாட்டிகிட்ட போ” என சிறுமியை அனுப்பினாள்.

அப்போது வீட்டினுள் இருந்து வயதான பெண்மணி ஒருவர் எட்டிப் பார்த்தார். “சரி அம்மா” என குழந்தை அவரிடம் ஓடிச் சென்றது.

“ம்ம் குழந்தைய திருடி விக்கிற கூட்டம் தானே நீ, ஏன் பொய் சொல்ல மாட்ட” திலக் கொதித்தெழ

“ஹலோ யார் நீ? உனக்கு என்ன வேணும்?” முகம் சிவக்க அவள் குரலும் உயர்ந்தது.

“இங்க பாரு” என தன் போனில் வாட்ஸ்அப்பை காட்டினான் திலக்.

அதில் ஒர் விளம்பரம் “காணவில்லை என அந்த சிறுமியின் புகைப்படமும் அவளின் விவரங்கள் மற்றும் அணுகவேண்டிய தொலைப்பேசி எண் இருந்தது”.

அதை பார்த்ததும் அவள் முகத்தில் புன்னகை விரிந்தது “இதுவா போன வருஷம் காணும் பொங்கல் தினம் மெரினா பீச் போயிருந்தோம், ஒரே கூட்டம் அதுல என் பொண்ணு காணாம போயிட்டா”

“போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்தோம். வாட்சப்புல இந்த விளம்பரம் கொடுத்தது என் தங்கை. ரெண்டு மணி நேரத்துக்குள்ள குழந்தை கிடைச்சிட்டா. ஒரு வருஷமாவா விளம்பரம் சுத்திட்டு இருக்கு?” எனக் கேட்டவள் முகத்தில் விவரிக்க முடியா உணர்வு.

திலக் எதையும் நம்பவில்லை “இப்ப அந்த ஸ்கூட்டி பெண்ணுக்கு எதுக்கு பணம் குடுத்தீங்க?” உஷ்ணமாய் வினவ

இவன் எதற்கு இதெலலாம் கேட்கிறான் என சிந்தித்தவளாக “அது என் தங்கை,அவள் பொன்னுக்கு இன்னிக்கு பொறந்த நாள் அதான் பரிசா பணம் கொடுத்தேன். கேக் வெட்டி கொண்டாடினாங்க அதுக்குதான் என் பொண்ணை கூடிட்டு போயிட்டு வந்தாள். எனக்கு போக நேரமில்ல ஆபீஸ் வேலை இருக்கு” என விளக்கவுரை கொடுத்தாள்.

திலக் கண்கள் தற்செயலாக வீட்டினுள் இருந்த புகைப்படங்களை வளம் வந்தன. ஒரு புகைப்படத்தில் சிறுமி தன் பெற்றோருடன் சிரித்தபடி இருந்ததைக் கண்டான் திலக்.

அடுத்தில் அவளின் கணவன் உயிருடன் இல்லை என்பதை ரோஜா மாலை அணிந்த புகைப்படம் சொல்லாமல் சொல்லியது.

திலக் அவளிடம் “சாரி உங்கள தப்பா நினைச்சிட்டேன்” என சங்கடமாய் கூற

“பரவாயில்லங்க . . சமூக வளைதலங்கள்ல வர இந்த மாதிரியான விளம்பரங்கள் சிலது போலி, சிலது காலாவதியான விளம்பரங்கள். உண்மையான விளம்பரங்கள் சொற்பம்தான்.” என்றாள்.

“உண்மைதான் . . .” என்றவன் தன் போனில் இருந்த சிறுமியின் விளம்பரத்தை அழித்தான்.

“என் கணவருக்கு அறுவை சிகிச்சை நடந்த சமயம் ரத்தம் தேவைப்பட்டது. இதே மாதிரி விளம்பரம் கொடுத்தோம். சரியானவங்க கைக்கு கிடைச்சி யாராவது உதவியிருந்தால்??? ம்ச் இந்நேரம் அவர் எங்களோடு இருந்திருப்பார்” என்றவள் தொண்டைக் குழி மேலும் கீழுமாய் உருண்டது. அவள் கண்களில் மழை.





சுபஸ்ரீ