- Joined
- Jul 30, 2021
- Messages
- 566
நின்ற பொழுதில்
இன்றிலிருந்து ரங்கம்மாளுக்கு யாரும் வேலை தரக்கூடாது. என எல்லா பண்ணையார்களும், முடிவு செய்தார்கள்.
சாணி சட்டியில் கரைத்து வைத்திருந்த சாணியைக் கந்த துணியால் நனைத்து ரங்கம்மாள் அவள் வீட்டின் மண் சுவரிலும் தரையிலும் மொழுகி கொண்டிருந்தாள். தாயின் அம்மாவிற்கு இனிமேல் பண்ணையில் வேலை கிடைக்காது என்பதைச் சொல்வதற்காக மூச்சிரைக்க ஓடி வந்தாள்.
“எம்மோய் ! எம்மோய்”
“என்னேலே?”
“மேல கரைச்சல் பண்ணையார் இருக்காகல்ல! அவுங்க, மடத்துல உட்காந்துகிட்டு பேசிகிட்டு இருந்தாங்க. நான் என்னவா என்னென்னு, பம்பர ஆடிக்கிட்டே அவுகள பாத்தேனா!
அந்த மேல்தள பண்ண இருக்காருல்ல அதே, தலப்பாகட்டி இருப்பாருல்ல. அந்த அவுக இனிமே ஒனக்கு பண்ணையில வேலையே போடக்கூடாதுன்னு பூரா பண்ணயார் கிட்டயும் சத்தம் போட்டாங்கம்ம. அவுங்கெல்லாரும் செரி, செரின்னு சொன்னாங்கம்மா.”
ரங்கம்மாளிடமிருந்து எதுவும் பதில் வரவில்லை. தாயி சொல்வதைக் கேட்டுக் கொண்டே சட்டியிலிருந்த சாணி கரைசல்களை வீடு முழுவதையும் தொய்து எடுத்தாள். கர தொட்டியில் இருந்து தண்ணீரை மொண்டு சட்டியைக் கழுவி, துணியையும் அலசி குளிப்பதற்கு மறைவாகக் கட்டி வைத்திருந்த பனையோலை தட்டியின் மீது காயப் போட்டாள்.
செய்தியை வெடுக்காகச் சொல்லிவிட்டு பம்பரம் சுற்றுவதற்கு கையில் வைத்திருந்த சாட்டியை மண்ணோடு பொறட்டிக்கொண்டே, நொண்டி அடித்தபடி மடத்தின் எதிரே இருக்கும். வேம்புக்குச் சென்றாள் தாயி.
*****
காட்டுப் பண்ணையில் கூலி வேலைக்குச் சென்ற சூலப்பன் பருவம் அடைந்திருந்த ரங்கம்மாளை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஓர் இரவில் ஆசூருக்கு அழைத்து வந்தான். ரங்கம்மாள் வெளி உலகம் தெரியாமலேயே அந்த காட்டுப் பண்ணையில் ஒரு சித்தார்த்தைப் போல வளர்க்கப்பட்டால்.
தாய், தந்தை இல்லாமல் தனிமையில் அடிமை வாழ்க்கையிலிருந்த ரங்கமாளுக்கு, சூலப்பனே கதிமோட்சம். என,அவனை நம்பி. . அவனுடன் வந்தாள்.
எல்லா ஊரின் ஒதுக்குப்புறத்திலும், கூரையில்லாமல், நிலை கதவுடன் மண்சுவர் மழையால் பாதி கரைந்த நிலையில் ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டை மீண்டும். மண்ணை குழைத்து சுவர் எழுப்பி அதனைச் சுற்றி பனை ஓலையால் விட்டம் அமைத்தான், கொட்டாரம் தயாரானது.
அங்கே இருந்த லாந்தர் விளக்கில் எஞ்சியிருந்த மண்ணெண்ணெய்யால் சிறிது வெளிச்சம், அந்த வீட்டினுல் நிரம்பியிருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் இவன் ராங்கமாளை பார்த்தான்.
ஊசியானா உடம்பு, பருவத்தின் பூரிப்பு, கோதுமை நிறத்தில் தோல். கூர்மையான பார்வை, என மற்ற பெண்களிடம் இருந்து அவளை அடையாளப்படுத்தியது.
தன்னுடைய வாழ்வில் இனி எல்லாம் வசந்தம் என்று நம்பி சூலப்பன்னுடன். அந்த இரவு; அவள் விளக்கை அணைத்தாள். வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருந்த சூலப்பன். அவளை, அந்த ஊரிலேயே விட்டுவிட்டு எங்கோ தேசம் சென்றுவிட்டான்.
மீண்டும் தனிமை ஆக்கப்பட்டாள். வைத்தியக்கார கிழவியின் துணையுடன். அந்த ஊரில் புகலிடம் கொண்டாள்.
அந்த இரண்டு நாட்கள் அவன் தங்கி இருந்ததனால் தன் தாயி பிறந்தாள். ஒரு ஊர்ப் பெயரைக் கூட முழுசாகத் தெரிந்து கொள்ளாத அவளுக்கு, வேறு இடத்திற்குச் செல்வதற்கு வழியே தெரியவில்லை வேறு வழியில்லாமல். அந்த ஊரிலேயே கிடைத்த பண்ணை வேலைகளைச் செய்து வந்தாள்.
ஒரு எருது காளையின் பகல் பொழுது வேலையை விட இருமடங்கு வேலை செய்தால். பொட்டல் காட்டின் உச்சி வெயிலில் அவள் சீலையில் இருக்கும் வேர்வையைப் பிழிந்தால்.அந்த கருத்த மண் இரண்டு அடிக்கு நனைந்து விடுமளவிற்கு உழைத்திருப்பாள்.
இத்தனை உழைப்பிற்கும் அவளுக்கு ஒரு நாள் கூட கூலியாகக் காலணாவை, கையில் தந்ததே இல்லை.
கூலு பானையில் மிஞ்சியிருக்கும் கஞ்சியை பனையோலை கட்டி ஊற்றி விடுவார்கள்.
“சரிதாயீ சரிதாயீ” என மண்டியிட்டு அதைக் குடித்துக் கொள்வாள். மகள் பிறந்த பின்பு அவளுக்கும் அதே போலக் கஞ்சி ஊற்றப்பட்டது.
பண்ணையார் அம்மாக்கள் சூதகம் கரை ஏற்படும் சீலைகளைக் குப்பையில் எறிவார்கள். அதை எடுத்துத் துவைத்து இவள் கட்டிக் கொள்வாள்.
இந்தப் பத்தாண்டுகளில் இப்பொழுது அவள் ரவிக்கை எல்லாம் அணிந்து கொண்டாள். அவள் வயதுடைய செல்லத்தாய் சீக்கால் இறந்த பின்பு அவள் துணிமணிகளை, இடுகாட்டின் ஓரம் வீசப்பட்டதிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டாள். தேவையில்லாததெல்லாம் யாருக்காவது தேவையாகத்தான் இருக்கிறது.
பேசாத கடவுள் சிலை கணிகை கேட்க ஆரம்பித்து விட்டால் யாரும் கோவில் பக்கமே போக மாட்டார்கள். கேட்காத இவள் கூலிக்காக வரிசையில் நிற்பதைப் பார்த்தும். படி தந்து கொண்டிருந்த பண்ணையாரின் கை நின்றது. ஆத்திரம் கண்ணை மூட்டிட உப்புக் கரைசலைக் குடித்தவன் கொப்பளிப்பது போல
“சிரிக்கீயுல எங்க வந்து நிக்கிற பாரு; போடி முண்ட அங்கூட்டு. ஒன்னைய இந்த பக்கமே பாக்கக்கூடாது, அடிச்சு பத்துடா அவள;” என்றதும் அதற்காகக் காத்துக் கொண்டது இருந்தது போலவே பண்ணை தடியர்கள் பழம்பு கட்டையால் அவளை வெளுத்து அனுப்பினார்கள்.
அவள் ரவிக்கை அணிந்து அங்கங்களை மறைத்துக் கொண்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அன்று கஞ்சி கூட ஊற்றாமல் விரட்டி அடிக்கப்பட்டாள். அவளுக்கு இனிமேல் பண்ணைகளில் வேலை தரக்கூடாது என்பதும் முடிவானது.
வாழ்க்கையில் ஆயிரம் சலிப்பு வந்தாலும். பசி மட்டும் சலிப் அடைவதே இல்லை. அவை மீண்டும் புதிதாய், புதிதாய் உருப் பெற்றுக்கொண்டே இருக்கிறது, அடிவயிற்றினுல்.
உள்ளங்கைகளை தடவிப் பார்த்தாள். அவை உணர்ச்சிகள் இல்லாமல் மரத்துப் போய் இருந்தது. பசியும் உணர்ச்சிகள் இல்லாமல் மரத்து போகாதா?! என்று எண்ணிப் பார்த்தாள். மூச்சை இறுக்கிக் கொண்டு பலமாய் உளறினாள்.
“இவனுங்க வேலை தள்ளைனா?, நம்ம என்ன கஞ்சிக்கு இல்லாமல் செத்தா போவோம்!” தாழ்வான அவள் கூரையின் வாசலில் உட்கார்ந்து. அவள் மகள் தாயிக்கு ஜடை பின்னிக் கொண்டிருந்தாள். கோபத்தில் ஜடையை ஒரு இறுக்கு இறுக்கினாள்.
“அம்மா மொல்ல..” என்று கத்தினாள்.
வேலை இல்லாமல் இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிறது. தினமும் கிடைத்த படையல் சோறு, பொங்கச் சோறும். இனி இல்லை காளியம்மாள் கோயில் திருவிழாவும் முடிந்த ஆயிற்று.
செட்டியாரிடம் அரிசி மட்டுமாவது கடனாகக் கேட்கலாம் என முடிவுசெய்து.
சரலைகற்களும், ஓடை மணலும் பரப்பிக்கிடந்த வேம்பின் கீழே தாயை உட்கார வைத்துவிட்டு. இவள் கடை வாசலை நோக்கி நகர்ந்தாள்.
ஊர் மத்தியில் இருக்கும் தொந்தி செட்டியார் கடையில் தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் மளிகை சாமான்கள் வாங்குவார்கள். கெடா பற்கள் அனைத்துமே கொட்டி மேல் வரிசையில் நான்கு பற்களும் கீழ் வரிசையில் நான்கு பற்களும்மட்டுமே வாயில் இருக்கும். வாயில் எப்பொழுதும் உரலில் இடித்த வெற்றிலையை மென்று கொண்டே இருப்பார். யாராவது மளிகை சாமான்கள் வாங்க வந்தால்கூட தலையை விட்டத்தை நோக்கி உயர்த்தி
“ம்… ம்…” என வாயிலிருந்து எச்சி ஒழுகும் அளவிற்கு வாய் முழுவதும் அடைத்து வைத்திருப்பார்.
சிரிக்கும் போதெல்லாம் அந்த பெரிய தொந்தி குலுங்கி நிற்கும். அவ்வப்போது போக்கு, போக்கு என செருமி கொள்வார்.
கூட்டம் கொஞ்சம் சேர்ந்துவிட்டால் கடை வாசலின் ஓரமாகக் கடைக்குள் இருந்து ரத்த வாந்தி எடுப்பது போல அங்கிருந்து ‘பொலிச்....’ என உமிழ்வார். அந்த பிதுங்கிய உதட்டின் ஓரங்களில் வழியும் வெற்றிலை பாக்கின் சிகப்பு எச்சிலை ‘ஸ்சக்..’ என உறிஞ்சிக் கொள்வார் மீதியை கையின் மணிக்கட்டை வைத்துத் துடைத்துக் கொள்வார்.
இவள் கடையின் வாசலில் ஓரமாகத் தூக்கிக் கட்டிய கண்டாங்கி சேலையுடன் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள். சேருமானம் இல்லாத ரவிக்கை அவள் தோளிலிருந்து கழன்று கொண்டே இருந்தது. அதை மீண்டும், மீண்டும் இழுத்துச் சரிசெய்துகொண்டாள். இவளைக் கவனித்த செட்டியார். எல்லோரும் போன பின்பு அவளை உள்ளே வருமாறு தலை அசைத்தார்.
“என்ன வேணும்?” என அதட்டும் தோரணையில் கேட்டார்.
“அரிசி….” என அவள் இழுத்தாள்.
“ரூவா வச்சிருக்கியா?”
“ரூவால்ல செட்டியாரே!”
“ரூவா இல்லாம எதுக்குடி வந்த?”
“புள்ள பட்டினியா கெடக்கு”
“ஒம்புள்ள பட்டினியா கெடந்தா எனக்கு என்ன? கிடந்து சாகட்டும். நீ என்ன எனக்கா பெத்த”
“ஒனக்குத்தே பண்ணை வேலயில்லைல, என்கிட்ட எல்லாம்…, நீ கெஞ்சணும்டி.”.”
“பிள்ள பெத்தவ மாதிரியா இருக்க? சிக்குன்ணு தானடி இருக்க. பத்து வருஷத்துல ஒருத்தே கூட ஒன்ன தொடாம இருந்துருப்பானா?!”
என்று செட்டியார் கேட்டுக் கொண்டிருக்கையில். வாடைக் காற்று வீச ஆரம்பித்தது. அவள் மேனி சூடேறியது. சட்டென மழை தொடங்க வெளியிலிருந்த தாயி இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டே அன்னாந்து பார்த்தவாறு மழைத்துளியில் நனைந்து கொண்டே மண்டபத்திற்குள் ஓடினாள். ரங்கம்மாள் மழையை கவனித்துக் கொண்டே.
நினைவலைகளில் நனைய தொடங்கினாள். ரங்கம்மாள் பண்ணையிலிருந்து விரட்டப்பட்ட அன்று, கம்மங் காட்டில் மேல்தள பண்ணையார் அவளை இடுப்போடு சேர்த்து அணைத்த போது. அவள் பண்ணையாரைக் கீழே தள்ளி நின்றுகொண்டே பண்ணையாரின் வாயிலேயே மூத்திரம் பெய்தாள்
“இந்தேகுடி. ., இந்தேகுடி”
***
நன்றி