• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
யாழ் கோட்டைப் பகுதியின் பின்புறமாக அமைந்துள்ள பண்ணைக் கடற்கரையில், ஜனநடமாட்டம் ஆஹா ஓஹோ என்று இல்லாமல் போனாலும் ஓரளவுக்கு ஜே ஜே என்றே இருந்தது.

பண்ணைக் கடலோரமாக செங்கற்களைப் பதித்துப் போடப் பட்ட நடைபாதையிலும், அதோடு ஒட்டிப் பக்கத்தில் போடப் பட்ட கல் இருக்கைகளிலும், நீள் வரிசையாக இடம் விட்டு நாட்டப் பட்டிருந்த மரங்களின் கீழும் இருந்த மக்கள் கடலையும் அதோடு சேர்த்துப் போவோரையும் வருவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடலை ஊடறுத்துப் போவது போல குறிக்கட்டுவானுக்கு செல்லும் தார்ச்சாலை அமைந்திருக்க, சிவப்பு நிறப் பெரிய அரச பேருந்துகளும் மஞ்சள் நிறப் பார ஊர்திகளும் அந்தச் சாலையில் போவதும் வருவதுமாக இருந்தன.

அந்த நேரத்தில் தமிழும், இசையும் தங்கள் நண்பர்கள் கூட்டத்தோடு பண்ணைக் கடற்கரையில் வந்திறங்கினர். அவர்களை வரவேற்பது போல கடற்கரைக் காற்று வேகமாக வீச, அற்குத் தோதாக மரங்களும் அசைந்தாடின.

தமிழோடும் இசையோடும் வந்த எட்டு நண்பர்களும், இவர்கள் கிளிநொச்சியில் இருக்கும் போது பாடசாலை நண்பர்களாக இருந்தவர்கள்.
தமிழுக்கும் இசைக்கும் ஒவ்வொரு வயது தான் வித்தியாசம் என்பதால், சேரும் நண்பர்கள் அனைவருமே இருவருக்குமே நண்பர்களாகி விடுவார்கள்.

இசையும், தமிழும் இடையில் வெளிநாடு சென்ற பின்னர் கூட அவர்களின் நண்பர்கள் சமூகவலைத்தளத்தின் ஊடாக மீண்டும் தொடர்பினை ஏற்படுத்தி இதோ இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள்.
அதனால் தான் தமிழும் இசையும் இலங்கை வந்ததுமே தங்கள் நண்பர்கள் அனைவரையுமே நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தனர்.
அதன்படி இன்று அனைவருமே ஒன்றாகக் கூடி, பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்த சந்தோஷத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வேளையில் தான் தமிழுக்குத் திடீரென ஒரு நினைவு வந்தது.

கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு முன்னால், அவனும் வான்மதியும் கவிவாணனும் இங்கே இந்தப் பண்ணைக் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.
அப்போது தள்ளு வண்டியில் மணி அடித்தபடி முறுக்கு, சுண்டல், மாங்காய், பஞ்சுமிட்டாசி போன்ற சிற்றுண்டிகளைத் தள்ளிக் கொண்டு தள்ளு வண்டிக்காரர்கள் வருகை தருவார்கள்.
இப்போதும் ஆங்காங்கே தள்ளு வண்டிகள் நின்றிருந்த போதும் அன்றைக்கு இருந்த பரபரப்பும் சுவாரஷ்யமும் இப்போது அவனிடம் அவ்வளவாக இருக்கவில்லை.

தமிழுக்கு அப்போது இங்கே வந்த நேரம் வயது பதினான்கு, வான்மதிக்கு வயது பன்னிரண்டு. இருவரும் வளர்ந்த குழந்தைகள் என்றாலும் சுண்டலையும் முறுக்கையும் சண்டை போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள்.

அவ் வேளை ஒரு வித்தியாசமான தள்ளுவண்டி வரவே அந்த வண்டிலை ஆர்வமாக எட்டிப் பார்த்தாள் வான்மதி.

ஒரு அளவில் பெரிதான கண்ணாடிப் போத்தல்கள் வண்ண வண்ண நிறத்தில் அந்தத் தள்ளுவண்டியினுள் கிடந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்ததும் அதன் மீது ஆசை கொண்டு, சுண்டல் சுருளை அப்படியே தமிழின் மடியில் போட்டு விட்டுத் தள்ளுவண்டிலை நோக்கி ஓடினாள் அவள்.

அவள் செய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்பரிதி
"அம்பூ... எங்கே ஓடுகிறாய்... ஒரு இடமாக இருக்க மாட்டாயா நீ..."
என்றபடி அவள் பின்னாலேயே ஓடினான்.

கவிவாணன் சற்றுத் தள்ளி நின்று தனது யாழ் நண்பர் ஒருவரோடு நாட்டு நடப்புகளை அளவளாவிக் கொண்டிருந்தாலும் பிள்ளைகள் மீது ஒரு கண்ணை வைத்தேயிருந்தார்.

தள்ளுவண்டில் முன்னால் நின்று அதைச் சுற்றிச் சுற்றிப் பார்த்த வான்மதி வண்டிக்காரனை அண்ணாந்து பார்த்து
"அண்ணா... இது என்ன... இது என்ன விலை... எனக்கும் தருவீர்களா... இது ரொம்ப அழகாக இருக்கிறதே... இதை வைத்து என்ன செய்வது... சூரிய வெளிச்சம் பட்டு சும்மா மினுங்குகிறது... இரவிலும் மினுங்குமா..."
என அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க அவளுக்கு மூச்சு வாங்கியதோ இல்லையோ தமிழுக்கு மூச்சு வாங்கியது.

"இரு... இரு... ஒவ்வொரு கேள்வியாகக் கேள் அம்பூ... அவசரப் படாதே... அவரும் பாவம் தானே... இத்தனை கேள்விகளுக்கு எப்படி ஒரேயடியாகப் பதில் சொல்ல முடியும்..."
என்று சொல்லியபடி
"அண்ணா... இது என்ன..."
எனக் கேட்டான் தமிழ்பரிதி.

"இது அதிஷ்ட அலங்காரப் போத்தல் தம்பி... இதோ இங்கே இருக்கும் ஓலையில் ஜோடியாகப் பெயர்களை எழுதி இந்தப் போத்தலுக்குள் போட வேண்டும்... அதை நாங்கள் மரத் தக்கை வைத்து இறுக்கமாக மூடி, கயிற்றால் கட்டி அதோ தெரிகிறதே அந்தப் பகுதியில் இருக்கும் பெரிய படகில் இருக்கும் கம்பிகளோடு பிணைத்துக் கடல் நீரில் விட வேண்டும்... அதற்கு முதல் கண்ணை மூடிக் கொண்டு ஜோடியாக நீங்களே ஒரு வர்ணப் போத்தலை எடுக்க வேண்டும்... போத்தலின் வர்ணத்தைப் பொறுத்து இருக்கும் பெயர் எழுதிப் போட்டவர்களின் உறவு முறை..."
என்று நீண்டதொரு விளக்கம் கொடுத்தார் அந்தத் தள்ளு வண்டிக்காரர்.

வர்ணத்தைப் பொறுத்தே பெயர் எழுதிப் போடுகின்ற நபர்களின் உறவுமுறை இருக்கும் என்று வண்டிக்காரன் சொன்னதை வான்மதி சரியாகக் கவனிக்கவில்லை.
அவளது பார்வை முழுவதும் அந்த வர்ணப் போத்தல்களிலும், பக்கத்தில் கிடந்த ஓலைகளிலுமே பதிந்திருந்தது.

"அண்ணா... ஒவ்வொரு வர்ணத்திற்கும் என்ன அர்த்தம் என்று சொல்லுங்களேன்..."
என்று அடங்காத ஆர்வத்தோடு கேட்டான் தமிழ்.

"பச்சை நிறம் காதல் திருமணம் தம்பி... மஞ்சள் நல்ல நட்பு...சிகப்பு வண்ணம் எதிரிகள்...ஊதா வர்ணம் சகோதரர்... நீல நிறம் பிரிவு தம்பி..."
எனப் பதில் சொன்ன வண்டிக்காரர் வண்டியின் கண்ணாடியை திறந்து சில வர்ணப் போத்தல்களை எடுத்து வெளியே வைத்தார்.

தமிழின் வலது கையை இறுகப் பற்றிக் கொண்டு, அவனையும் கண்களை மூட வைத்து, தானும் கண்களை மூடிக் கொண்டு ஒரு போத்தலை எடுத்தாள்.

இருவரும் கண்களை மூடிக் கொண்டு போத்தல்களை எடுக்க முயன்ற வேளை இருவரின் கரங்களும் நீல நிறப் போத்தலின் மீது விழவே, அவர்கள் அறியாமல் அவர்களது கைகளுக்குள் பச்சைப் போத்தலைத் தள்ளி விட்டார் வண்டிக்காரர்.

இதனை எதேச்சையாகக் கண்களைத் திறந்த தமிழ் பார்த்து விட்டான்.

அப்போது அவன் அதனை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போதோ அந்த நீல நிறப் போத்தலைத் தொட்டதால் தான் தானும் தன் அம்பூவும் பிரிந்தோமா என யோசிக்கத் தொடங்கி இருந்தான்.

அதன் பின்னர் அந்தப் பச்சை வண்ணப் போத்தலினுள் தமிழ், அம்பூ என்று எழுதிய ஓலையைப் போட்டு அதைக் காற்றுப் புகாதபடி இறுக மூடி, கயிற்றால் கட்டிக் கடல் தண்ணீருக்குள் போட்டனர்.

அந்த நாளுக்குப் பின்னர் இதோ இப்போது தான் அவன் அந்தப் பண்ணைக் கடற்கரைக்கு வந்திருக்கிறான். இடையில் பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடி இருப்பதை இப்போது தான் அவனே கணக்குப் பார்த்துச் சரி பார்த்துக் கொண்டான்.

பக்கத்தில் நின்றிருந்த இசையும் நண்பர்களும் ஏதேதோ கதைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, தமிழ்பரிதியின் பார்வை மட்டும் அந்தப் படகையே தேடியது.
தமிழை அதிகம் ஏமாற்றாமல் சில நொடிகளிலேயே அவன் பார்வைக்கு, அந்தப் படகு தட்டுப் படவே இசையிடம் சொல்லி விட்டு, அந்தப் படகு நின்றிருந்த திசையை நோக்கி ஓடினான்.

பல வருடங்களுக்கு முன்னால் அமைக்கப் பட்டிருந்த அந்தப் படகின் படிகள் இப்போது தண்ணீருக்குள் மூழ்கி, உடல் முழுவதும் பாசியை அப்பிக் கொண்டு கிடந்தது.
கால்கள் வழுக்காமல் மெல்ல அதிலேறி அமர்ந்து கொண்டு, கடல் நீரினுள் கிடந்த கயிறுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துப் பார்த்தான் தமிழ்.

கயிறுகள் முழுவதும் கூடப் பாசியேறிக் கிடந்தது. அவன் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் கயிறுகளை நிதானமாக இழுத்து இழுத்துப் பார்த்தான்.
அவனை அதிகமாகச் சோதிக்காமல், ஒன்பதாவது தரத்திலேயே அவனது கைகளில் அந்தப் பச்சை வர்ணப் போத்தல் கிடைத்து விட்டது.

போத்தல் பாசியேறிக் கிடந்தாலும் கூட உள்ளே இருந்த ஓலை லேசாகத் தெரிந்தது. அதைக் கடல் நீரில் நன்கு கழுவி விட்டுப் பார்க்க, இப்போது உள்ளே எழுதப் பட்டிருந்த பெயர் தெளிவாகத் தெரிந்தது.

போத்தலினுள் கிடந்த ஓலைகளை எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டு எழுந்தவனுக்கு ஏதோ மனதில் பாரம் கொஞ்சம் குறைவது போல இருந்தது.

அதை உடனேயே தன் அம்பூவுக்குக் காட்ட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்.

நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த இசைக்குக் கவனம் முழுக்க தமையன் மீதே இருந்தது.
ஒரு வழியாக எல்லோருடனும் சிரித்துப் பேசி அவர்களை வழியனுப்பி விட்டுத் தமையனைத் தேடி வந்தான் அவன்.

"அண்ணா... என்ன விசயம்... என்ன புதையல் எடுத்தாய்... முகமெல்லாம் விளக்குப் போட்டது போல வெளிச்சமாகக் கிடக்கிறதே..."
எனச் சிரித்தபடி கேட்ட தம்பியின் தோளில் கை போட்டபடி
"அதெல்லாம் ஒன்றுமில்லை... வா... சுண்டல் வாங்கிச் சாப்பிடுவோம்..."
என்று சொல்லிக் கொண்டு சுண்டல் வண்டி நோக்கி நடக்கத் தொடங்கினான் தமிழ்பரிதி.

"சரி சரி... சொல்ல விருப்பம் இல்லாது போனால் விடு... சுண்டல் மட்டும் போதாது முறுக்கும் வாங்கிக் கொடு..."
என்று இசை பதில் பேசிக் கொண்டே தமையனோடு இணைந்து நடக்க, பதில் பேசாமல் புன்னகை ஒன்றை மட்டும் பரிசாக்கினான் அவன் அண்ணன்.

அவன் எண்ணம் எல்லாம் அந்தப் பெயர் எழுதிய ஓலையை வான்மதியிடம் காட்ட வேண்டும் என்பதிலும், இனிவரும் சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கூட அவளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதிலுமே இருந்தது.

"தொலைத்த சந்தோஷங்களும் தொலைந்த சந்தோஷங்களும் போனாலும், இனி வரப் போகும் சந்தோஷங்களையேனும் உன்னுடன் பகிர நான் காத்திருக்கிறேன் தோழி..."
 
Last edited:
Top