• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219

சிவன் கோவிலின் கருங்கல்லில் அமைக்கப்பட்ட கோபுரக் கலசத்தில் மாடப்புறாக்கள் இந்த இடம் நமக்கு மட்டும் தான் சொந்தமானது என்பது போல தலையை அங்குமிங்கும் ஆட்டியபடி நடை பயின்று கொண்டிருந்தன.

போதாக் குறைக்குக் காகங்களும் கிளிகளும் கூட எங்களுக்கும் இங்கே பங்குண்டு என்பது போலக் கோவில் கோபுரத்தைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன.

எந்த விதமான ஒப்பனைகளோ வர்ணப் பூச்சுக்களோ இல்லாமல் தனிக் கருங்கல்லில் நிறுவப் பட்டிருந்த சிவனாலயத்தின் கோபுரம் பறவைக் கூட்டத்தின் வருகையினால் அழகுக்கு அழகு சேர்த்தது போல அத்தனை அழகாக இருந்தது.

அந்தக் காட்சியை வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி இமைக்க மறந்து பார்த்திருந்தான் தமிழ்பரிதி. அவன் அவ்விதம் நின்று கோவில் கோபுரத்தை இரசித்த வேளையில் பக்கத்து வீட்டு மாமரத்தில் ஏதோ சலசலப்புக் கேட்கவே லேசாகத் திடுக்குற்றபடி மாமரத்தைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

அதற்குள் அவனைத் தேடி
"அண்ணா இங்கே தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்"
என்றபடி வந்தான் இசைவேந்தன்.

"இங்கே நின்று பார்க்கும் போது கோவில் கோபுரம் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கும் என்று சித்தி சொன்னார்கள் வேந்தா... அது தான் வந்தேன் நிஜமாகவே ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது..."
என்று தமிழ்பரிதி தன் தம்பிக்குச் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் பக்கத்து வீட்டு மாமரத்தில் சலசலப்புக் கேட்டது.

"என்ன அண்ணா இது சத்தம்..."
என்றவாறு தானும் பக்கத்து வீட்டில் நின்றிருந்த மாமரத்தைப் பார்த்தான் இசைவேந்தன்.

"நீ இங்கே வருவதற்கு முன்பும் சத்தம் கேட்டது..." என்றபடி கிட்டத்தட்ட மொட்டை மாடிக்குப் பக்கமாக நின்றிருந்த அந்த மாமரத்தின் அருகில் சென்று பார்த்தான் பரிதி.

சீதாவின் வீட்டுக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் வான்மதியின் வீட்டில் நிற்கும் பெரிய வைரக்கண்டி மாமரம் சீதா வீட்டு மொட்டைமாடிக்கு நேர் எதிராக ரொம்பப் பக்கத்தில் அமைந்திருந்தது. அதனால் மாமரத்தில் யார் ஏறினாலும் இறங்கினாலும் அப்படியே தெளிவாக மொட்டைமாடியில் நிற்பவர்களுக்குத் தெரியும்.

வான்மதி வீட்டு மாமரத்தின் உச்சிக் கிளையில் இரண்டு குருவிக் கூடுகள் இருந்தன. என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு கூடுகளுமே கீழே நிலத்தில் விழுந்திருந்தன. அதைப் பார்த்ததும் பதறிப் போன வான்மதியோ தேன்மதியிடம் நான் மரத்தில் ஏறுகிறேன்... நீ கீழே மேசையில் நின்று கூடுகளை ஒவ்வொன்றாக மேலே தூக்கிக் கொடு... என்று சைகையில் காட்டி விட்டு வேகமாக மாமரத்தில் ஏறத் தொடங்கி விட்டாள்... அந்த நேரத்தில் தான் மொட்டைமாடியில் நின்றிருந்த தமிழ்பரிதிக்கு மாமரத்தில் சலசலப்புச் சத்தம் கேட்டது.

அண்ணன் தம்பி இருவரும் மாமரத்தின் பக்கமாக நின்று பார்த்த போது வான்மதி ஒரு குருவிக் கூட்டைக் கிளையில் மூன்று கொப்புகள் சேரும் இடத்தில் பக்குவமாக வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் லாவகமாக மரத்தில் நின்று கூட்டை வைத்த விதம் சுவாரஷ்யமாக இருக்கவே... அதையே வேடிக்கை பார்த்திருந்த தமிழ்பரிதிக்கு வான்மதியின் முகம் சரியாகத் தெரியவில்லை...

"யாரிந்தப் பெண்... ஒரு வேளை நேற்றைக்கு நாய்க்குட்டியோடு பேசிக் கொண்டிருந்த பெண்ணாக இருப்பாளோ... அவளாகத் தான் இருக்க வேண்டும் ஏனென்றால் அவள் இந்த வீட்டினுள் தான் நுழைந்தாள்..."
என்று தனக்குத் தானே சொல்லியபடி மாமரத்தை உற்றுப் பார்த்த தமையனின் அருகில் வந்த இசைவேந்தன்
"அண்ணா இப்படித் தானே அம்புஜமும் அடிக்கடி மரத்தில் ஏறி நின்று கொண்டு உங்களுக்குக் கடுப்பு ஏற்றுவது போலப் பழிப்புக் காட்டுவாள்..."
என்று சொல்லியபடி தானும் மாமரத்தையே பார்த்தான்.

இசை வேந்தன் அம்புஜம் என்ற பெயரை உச்சரித்த வினாடியே தமிழ்பரிதியின் முகத்தில் ஒருவித மாற்றம் வந்து போனது... அம்புஜம் என்பது அவனது சிறு வயதுத் தோழிக்கு அவன் வைத்த பட்டப் பெயர்...

"இப்போதெல்லாம் இனிமேல் அவளைப் பார்க்கவே முடியாமல் போய் விடுமோ என்று தோன்றுகிறது வேந்தா..."
என்று மெல்லச் சொன்ன தமையனின் தோளை ஆதுரத்துடன் தொட்ட சின்னவனோ
"அண்ணா... ஏன் இப்படி எதிர்மறையாகவே எண்ணுகிறாய்? எப்போதுமே நேர்மறையாக எண்ண வேண்டும் நேர்மறையாகவே பேச வேண்டும்... அப்போது தான் எல்லாமே நல்லதாக நடக்கும்... இந்த முறை நிச்சயமாக நாங்கள் அவர்களை எல்லாம் பார்த்து விடுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது அண்ணா..."
என்று ஆறுதல் சொன்னான்.

அப்போதும் எதையோ யோசித்துக் கொண்டு நின்றிருந்த தமையனை இலகு நிலைக்குக் கொண்டு வர வேண்டி
"அண்ணா... பொன்னியின் செல்வனில் வருமே ஒரு அத்தியாயம் மரத்தில் ஒரு மங்கை என்று... எனக்கு இப்போது அந்தப் பக்கம் தான் நினைவுக்கு வருகிறது உனக்கு அந்த நினைவு வரவில்லையா?"
என்று பேச்சுக் கொடுத்தான் இசை.

அவன் நினைத்தது போலவே சட்டென்று கலகலப்பாகப் பேசத் தொடங்கி விட்டிருந்தான் தமிழ்பரிதி... கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பற்றிப் பேசுவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது தமிழ்பரிதி மட்டும் விதிவிலக்கா என்ன?

மாமரத்தின் உச்சிக் கொப்பில் இரண்டு குருவிக் கூடுகளையும் வைத்த வான்மதி அதன் பிறகே மரத்தை விட்டு இறங்குவற்காகக் கீழே பார்த்தாள். அவள் நின்றிருந்த கொப்பில் இருந்து அடுத்த கொப்பு சற்றே கீழே இறக்கமாக இருந்தது. ஏறும் போது வேகமாக ஏறி விட்டிருந்தவளுக்கு இறங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கவே சீதாமாமியின் வீட்டு மொட்டைமாடிப் பக்கமாக நீட்டிக் கொண்டிருந்த கொப்பின் வழியாக இறங்குவதே சரியாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

அதே எண்ணத்தில் கொஞ்சம் திரும்பி அடுத்த பக்கத்துக் கிளையில் காலை வைக்கப் போனவள் அப்போது அங்கே மாடியில் நின்றிருந்த ஆண்கள் இருவரையும் பார்த்து விட்டுச் சங்கடத்துடன் லேசாகத் தயங்கி நின்றாள்.

மரத்தில் இருந்து மெல்ல இறங்கத் தொடங்கியிருந்த பெண்ணின் முகம் மரக் கிளைகளின் ஊடாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவள் தங்களைப் பார்த்ததும் தயங்கி நிற்பதைப் பார்த்த தமிழ்பரிதி உடனே புரிந்து கொண்டு தம்பியை அழைத்துக் கொண்டு அடுத்த பக்கம் போய் விட்டான். அதன் பிறகே வான்மதி சங்கடம் இல்லாமல் கீழே இறங்கினாள்.

மரத்தில் இருந்து வேகவேகமாக இறங்கிய மூத்தவளை என்னவென்பது போலப் பார்த்தாள் சின்னவள் தேன்மதி. அதற்குப் பதிலாக ஒன்றுமில்லை நான் சமையல் வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று சைகையில் காட்டி விட்டு உள்ளே போய் விட்டாள் பெரியவள்.

சீதாவின் வீட்டு முன் கூடத்தில் சீதாவும் அவரின் ஒன்று விட்ட அக்கா அமுதாவும் அமர்ந்து ஊர் நடப்புகள் பற்றி அலசிக் கொண்டிருந்தனர். அமுதாவின் அன்னை அம்பிகையும் வந்து அவர்களோடு இணைந்து கொண்டார்.

"சீதா... உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று இருந்தேன்... நீ எப்போது இருந்து இத்தனை அருமையாகவும் பாரம்பரிய முறைமாறாமலும் சமைக்கக் கற்றுக் கொண்டாய்? ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு ருசி... இவ்வளவு அருமையாகச் சமைத்துப் போட்ட உன் கைகளுக்கு வைர வளையல் போட்டாலும் அது குறைவான பரிசு தான்..."
என்று தன் பெறாமகளைப் பார்த்து மெச்சுதலுடன் கேட்டார் அம்பிகை.

"பெரியம்மா... நீங்கள் இப்படிக் கேட்கும் போது ஆமாம் அது என் கைகளில் இருக்கும் வித்தை தான் என்று சொல்ல ஆசையாகத் தான் இருக்கிறது... ஆனால் பாருங்கள் பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது என்பார்கள்... அந்த ஒரு காரணத்துக்காக உண்மையைச் சொல்லி விடுகிறேன்.... உங்களுக்குக் கொடுத்த உணவுகளை நான் சமைக்கவில்லை... பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பிள்ளை தான் மொத்தச் சமையலையும் கவனித்துக் கொள்ளுகிறாள்..."
என்று அசடு வழிந்தபடி பதில் சொன்னார் சீதா.

"என்னடி சொல்கிறாய் நிஜமாகவா... அவ்வளவு அருமையான சுவையில் இத்தனை நபர்களுக்கு ஒரு பிள்ளையால் எளிதாகச் சமைக்க முடிகிறதா என்ன? ஒரு வேளை ரொம்ப வருஷ அனுபவமாக இருக்கும் போல... உன்னை விடவும் வயதில் மூத்தவளா?"
என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டார் அம்பிகை.

தன் பெரியம்மா கேட்ட கேள்விக்கு உடனே பதில் ஒன்றும் சொல்லாத சீதா
"என்னோடு கொஞ்சம் வெளியே வாருங்கள்..." என்றபடி அம்பிகையையும் அமுதாவையும் அழைத்துக் கொண்டு தங்களின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் வான்மதியின் வீட்டுக்குச் சென்றார்.

தங்கள் வீட்டு முற்றத்தில் வேப்பம் பூ வடகம் செய்வதற்காகக் கொத்துக் கொத்தாகப் பறித்திருந்த வேப்பம் பூவைப் பனையோலைப் பாயில் காயப் போட்டிருந்தாள் வான்மதி.

"சீதா... இது யாருடைய வீடு கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறதே... ஒரு வேளை இங்கே இருந்து தான் வேப்பம் பூ வடகம் வாங்குகிறாயா?"
என்று ஆர்வத்துடன் கேட்டார் அம்பிகை.

"எல்லாவற்றிற்கும் பதில் சொல்கிறேன் பெரியம்மா... முதலில் இருவரும் இங்கே அமருங்கள்..."
என்றபடி முற்றத்தில் நின்ற வேப்பமரத்துக்குக் கீழே போடப் பட்டிருந்த வாங்கைக் காட்டி விட்டு வீட்டின் உள்ளே போய் விட்டார் சீதா.

"அமுதா... யாருடைய வீடு இது என்று கேட்டால் பதில் சொல்லாமல் உன் தங்கை எங்கே போகிறாள்..."
என்று கேட்டபடியே வாங்கில் அமர்ந்து கொண்டு வீட்டின் முன்னால் வைக்கப் பட்டிருந்த செடி கொடிகளைப் பார்வையால் அளந்தார் அமுதாவின் அன்னை அம்பிகை.

"அது தான் எனக்கும் தெரியவில்லை அம்மா..."
என்றபடி தானும் தாய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார் அமுதா.

வீட்டின் முன் பக்கக் கதவையே இருவரும் பார்த்துக் கொண்டு இருக்க வீட்டினுள் இருந்து வான்மதியை அழைத்துக் கொண்டு இருவரையும் நோக்கி வந்தார் சீதா.

"பெரியம்மா... உங்கள் பாராட்டுகள் புகழாரங்கள் எல்லாம் சேர வேண்டிய ஜீவன் இதோ இவள் தான்..."
என்று வான்மதியை அம்பிகையின் முன்பாக நிறுத்தியபடி சொன்னார் சீதா.

முற்றத்தில் நின்றிருந்த வேப்பமரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த தூதுவளைச் செடி மெல்லிய ஊதாநிறப் பூக்களாலும், சிவப்புநிற உருண்டை வடிவப் பழங்களாலும் நிறைந்து இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமுதவாணி அப்போது தான் வான்மதியின் முகத்தை முழுவதுமாகப் பார்த்தார்.

ஏற்கனவே வாசற்பக்கம் பார்த்துக் கொண்டிருந்த அம்பிகை
"உண்மையாகவா? நீ கொடுத்த உணவுகள் எல்லாமே ரொம்ப அருமையாகத் தான் இருந்தது. நீ மிகவும் கெட்டிக்காரி என்று நினைக்கிறேன். உன் பெயர் என்னம்மா? இத்தனை அருமையாகச் சமைப்பதற்கு யாரிடம் கற்றுக் கொண்டாய்?"
என்று ஆர்வத்துடன் வான்மதியைப் பார்த்துக் கேட்டார்.

மரத்தருகில் நின்றிருந்த அமுதவாணி வான்மதியை யோசனையாகப் பார்த்தபடியே அவளருகில் வந்து அவளது கைகளைப் பற்றியபடி அவளது முகத்தை ஆராய்வது போலப் பார்த்தார்.

யார் இவர் எதற்காக என்னை இப்படிப் பார்க்கிறார் என்று சங்கடத்துடன் நெளிந்த வான்மதி அமுதவாணியின் முகத்தைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள்.

அவளது மனது பரபரத்தது தான் காண்பது கனவா நனவா என்பதை அவளது மூளை உள்வாங்கச் சில நொடிகள் எடுத்துக் கொண்டது.

அது நனவு தான் என்பதை உணர்ந்ததும் அவளுள் ஏதோ ஒரு உணர்வு தோன்றி அவளது விழியோரம் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

தொண்டை வரை வேகமாக வந்த வார்த்தைகள் வெளி வரத் துடித்தன. அப்போது தான் தன்னால் பேச முடியாது என்பதை உணர்ந்த வான்மதி வேகமாகச் சீதாவைத் திரும்பிப் பார்த்து வீட்டின் பக்கம் கையைக் காட்டி உள்ளே இருக்கும் தேன்மதியை வரச் சொல்லுங்கள் என்று சைகையில் காட்டினாள்.

எதற்காக இவள் இப்படிப் பரபரக்கிறாள் என யோசித்தவாறே தேன்மதியைச் சத்தமாக அழைத்தார் சீதா.
சீதா இரண்டு மூன்று முறை அழைத்த பின்னரே வெளியே எட்டிப் பார்த்து
"என்ன மாமி... என்ன விஷயம்?"
என்று கேட்டவாறு மெதுவாக நடந்து வந்தாள் தேன்மதி.

அதற்குள் வான்மதியின் கையைப் பற்றியிருந்த அமுதாவோ
"உன்னைப் பார்த்தால் எனக்குத் தெரிந்த ஒரு பிள்ளையைப் பார்ப்பது போல இருக்கிறது உன் பெயர் என்னம்மா?"
என இரண்டு தடவைகள் கேட்டு விட்டார்.

அவரது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மெல்ல நடந்து வந்து கொண்டிருக்கும் தன் தங்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள் வான்மதி.

அப்போது தான் சீதாவுக்குமே
"ஐயோ இவளால் பேச முடியாதல்லவா அதனால் தான் தங்கையை அழைக்கச் சொன்னாள் போல... ஆனால் தேனுவால் தான் வேகமாக நடக்க முடியாதே..."
என்ற எண்ணம் தோன்றியது.

"அமுதாக்கா... இந்தப் பிள்ளையின் பெயர் மதி... எனக்குமே இவளை ஆரம்பத்தில் பார்த்த போது எங்கோ எப்போதோ பார்த்தது போன்ற உணர்வு வரத்தான் செய்தது."
என்று விளக்கம் கொடுத்தார் சீதா.

"யார் இவர்கள் ஒருவேளை சீதாமாமி வீட்டுக்குக் கொழும்பில் இருந்து வந்த சொந்தக்காரர்களாக இருக்குமோ..."
என யோசித்தவாறே நால்வரும் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தாள் தேன்மதி.

அமுதாவிற்கு மனதினுள்
"இவளைப் பார்த்தால் நந்தன் அண்ணாவின் மகள் போலவும் இருக்கிறது ஆனால் என்னால் உறுதியாகவும் அவள் தான் என்ற முடிவுக்கு வரவும் முடியவில்லை... அவளைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகி விட்டது... ஒருவேளை அவளைப் போன்ற சாயல் இந்தப் பிள்ளைக்கும் இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் எல்லோரும் இங்கே எப்படி...? இந்தப் பிள்ளை ஏன் வாயைத் திறந்து ஒரு பதிலும் சொல்ல மாட்டேன் என்கிறாள்..."
என ஏதேதோ கேள்விகள் எழுந்தன.

"என்ன சீதாமாமி ஏன் அழைத்தீர்கள்?"
என்ற கேள்வியைக் கேட்டவாறே அம்பிகை அமர்ந்திருந்த வாங்கின் ஓரத்தில் சாய்ந்து நின்று வலிக்கத் தொடங்கிய வலது காலைப் பிடித்து விட்டுக் கொண்டபடி புதிதாக வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள் தேன்மதி.

தங்கை வரும் வரை பொறுமை பொறுமை என்று நின்றிருந்த வான்மதி ஒரு எட்டில் தங்கையின் கையைப் பிடித்து அமுதாவைக் காட்டினாள்.

தமக்கையின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்த சின்னவள் அமுதாவை அப்போது தான் பார்த்தாள். தமக்கை பரபரப்புடன் ஒருவரைக் கை காட்டுகிறாள் என்றால் நிச்சயமாக மிகவும் வேண்டப்பட்ட நபராகத் தான் இருக்கும் என்பதை உணர்ந்த சின்னவள் அமுதவாணியை ஆராய்ச்சிப் பார்வையுடன் தான் பார்த்தாள்.

அவளது ஆராய்ச்சிப் பார்வை ரொம்ப நேரம் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவள் அமுதவாணியை அடையாளங் கண்டு கொண்டாள். தேன்மதிக்குக் கூடத் தான் காண்பது கனவா நனவா என்பது ஒரு கணம் புரியவில்லை.

உடனே வாங்கில் தன்னருகில் அமர்ந்திருந்த அம்பிகையைத் திரும்பிப் பார்த்த சின்னவளுக்குத் தான் காண்பது நனவு தான் என்பது சட்டென்று புரிந்தது.

தேன்மதிக்கு ஒரு நொடி என்ன பேசுவது எதைச் செய்வது என்பதே புரியவில்லை. தன்னுடைய நிலையே இப்படி இருக்கிறதே பாவம் அக்காவுக்கு எப்படி இருந்திருக்கும் என யோசித்தவள் தமக்கையின் வலது கரத்தை இறுகப் பற்றி அவளுக்குப் பார்வையால் ஆறுதல் சொன்னவள் அமுதவாணியின் பக்கம் திரும்பி
"அமுதமாமி... எப்படி இருக்கிறீர்கள் எங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?"
என்று அழுதபடியே அமுதவாணியை இறுக அணைத்துக் கொண்டாள்.

தங்களை நோக்கி வந்த புதிய பெண் தன்னை 'அமுதமாமி' என்று சொல்லியபடி கட்டியணைத்ததும் திகைத்த அமுதவாணிக்கு ஆழ் மனதில் ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோ என்று ஏதோ தோன்றவே தேன்மதியைத் தன்னிடம் இருந்து விலக்கி அவள் முகத்தைப் பார்த்து
"நீ நந்தன் அண்ணாவின் மகள் தேனு தானே..."
என்று கேட்டே விட்டார்.

அவரது கன்னங்களைப் பிடித்து ஆட்டியபடி
"ஆமாம் ஆமாம் நானே தான் மாமி... இதோ இது தான் உங்களின் தங்கமான வானத்து நிலவு..."
என்றவள் தமக்கையை இழுத்து முன்னே நிறுத்தினாள்.

இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பிகை எப்படித்தான் சற்றே உயரமாக இருந்த அந்த வாங்கில் இருந்து குதித்து இறங்கினாரோ தெரியவில்லை. வேகமாக வந்து தேன்மதியையும் வான்மதியையும் ஒன்றாக அணைத்துக் கொண்டார்.

அருகில் நின்றிருந்த அமுதா பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வான்மதியை மார்போடு அணைத்துக் கொண்டு
"எல்லோரும் இனிமேல் தாய் நாட்டுக்குப் போகலாம் என்றதுமே நான் ஓடி வந்ததே உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான்... தெரிந்த ஒரு சிலர் மூலம் விசாரித்ததில் நீங்கள் எல்லாம் கிளிநொச்சி உட்பட அங்கே சுற்று வட்டாரத்தில் எங்கேயும் இல்லை என்றும் எங்கே சென்றீர்கள் என்று தெரியாது என்றும் சொன்னார்கள்... நாங்களும் உங்களைப் பற்றி விசாரிக்காத இடமில்லை... ஒரு வழியாக எங்கள் மீது நல்லூரான் தன் கருணையைக் காட்டி விட்டான். அதனால் தான் இப்போதாவது உங்களைக் கண்ணில் காட்டி இருக்கிறான்..."
என்று குரல் தடுமாறச் சொன்னார்.

இவர்களையே பார்த்திருந்த சீதா
"என்னதான் நடக்கிறது இங்கே... மதியை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா அக்கா..."
என்று கேட்டு வைத்தார்.

சீதாவின் தலையில் லேசாகக் கொட்டியபடி
"அடி அசடு தெரியாத பிள்ளைகளையா நானும் உன் அக்காவும் மாற்றி மாற்றிக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறோம்..."
என்று கேட்டார் அம்பிகை.

பின்னர் வான்மதியின் பக்கம் திரும்பி
"உன்னை எனக்கு அடையாளமே தெரியவில்லை நிலா... எவ்வளவு வளர்ந்து விட்டாய் நீ... இவள் தேனுவும் நன்றாக வளர்ந்து விட்டாள்... நீங்களாகச் சொல்லி இருக்காது விட்டால் எங்களுக்கு உங்களை அடையாளமே தெரிந்து இருக்காது..."
என்று சொன்ன அம்பிகைக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

அதைப் பார்த்த தேன்மதி அவரது கண்களைத் துடைத்தபடியே
"நீங்கள் அழுதால் அழகு தான் அதற்காக இப்படியா அழுவது அம்மம்மா..."
என்று சொல்லி விட்டு அம்பிகையை அணைத்துக் கொண்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் மற்ற மூவரும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.

"தொலைந்து போன ஒன்று
இனிமேல் பார்க்கவே முடியாதா
எனத் தவித்திருந்த ஒன்று
மீண்டும் கண் முன்னே
தோன்றும் போது
இந்த மனம் தான் எப்படிக்

குதியாட்டம் போடுகிறது..."
 

Attachments

  • IMG_20211008_111009_931.jpg
    IMG_20211008_111009_931.jpg
    88.8 KB · Views: 20

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
Nice
 
Top