• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 29(End).

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai

பகுதி – 29.

ப்ரதிக் வாசல் கதவை தட்டவே, அவனுக்கு கதவைத் திறந்துவிட்டவன், திடுமென தள்ளாடி விழ, ப்ரதிக் பதறிப் போனான்.

“ஆகாஷ்...” தன் கையில் இருந்த தட்டை தரையில் வைத்தவன், அவனைத் தாங்கிக் கொள்ள, வேகமாக அவனைத் தடுத்தவன், பின் படிக்கட்டுவழியாக இறங்கி ஓடினான்.

“அண்ணா... என்ன?” உள்ளே இருந்து பூமிகாவின் குரல் கேட்கவே,

“ஒன்னும் இல்லம்மா... ஆகாஷ்க்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்...” சொன்னவன் அதை உள்ளே கொண்டு வைத்துவிட்டு, அவள் மேலே எதுவும் கேட்கும் முன்பு, ஆகாஷைத் தேடி ஓடினான்.

அவன் அங்கே தென்னந்தோப்புக்குள் செல்கையிலேயே, ஆகாஷின் அலறல் சத்தமும், சிவாவின் குரலும் ஒருங்கே கேட்க, உள்ளுக்குள் ஓடினான்.

அவன் அவர்களைக் காண்கையில், “ஆ...” அலறிக் கொண்டிருந்த ஆகாஷ், தன் வாயில் துணியை வைத்து அழுத்தமாக கட்டிக் கொள்ள, இப்பொழுது அவனது அலறல் குறைந்தாலும், அவன் வலியில் துடிப்பது தெரிய, வேகமாக அவனை நெருங்கினான்.

“சிவா... என்னடா...?” ப்ரதிக் அவனிடம் கேட்க,

“உனக்குத் தெரியாதா?” கேட்டவன், தன் நண்பனை இறுக கட்டிக்கொண்டு அவனை அடக்கினான். அப்படியும் ஆகாஷ் தலையைப் பற்றிக்கொண்டு துள்ளி துடிக்க, அவன் காதில் இருந்து வழிந்த ஒற்றைத்துளி ரத்தம் மற்றவர்களை பதறச் செய்தது.

“சிவா... ரத்தம்டா...” ப்ரதிக் கத்த,

“உடனே ஹாஸ்பிடல் போயாகணும், ஆம்புலன்சுக்கு தூக்கு...” சிவா அவசரப்படுத்த, ப்ரதிக் அவனைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

மறு நிமிடத்தின் துவக்கத்தில் அவன் ஆம்புலன்சில் இருக்க, சிவாவோ... வீட்டுக்குள் பாய்ந்து சில ஃபயில்களோடும், அலைபேசியில் யாரிடமோ உரையாடியவாறு ஆம்புலன்சில் வந்து ஏறினான்.

ஆம்புலன்ஸ் கிளம்பும் ஓசையில் அனைவரும் வெளியே வந்து பார்க்க, “தேனு... பூமி... பூமி...” வலியில் கதறிக் கொண்டிருந்தவன், வாய் கட்டை அவிழ்த்து, அவளிடம் சொல்ல, அவளோ ஸ்தம்பித்து போயிருந்தாள்.

‘என்ன...?’ என்ற விளக்கமோ, கேள்வியோ கேட்கும் முன்பு ஆம்புலஸ் கிளம்பி இருக்க,

“நானும் ஹாஸ்பிடல் போறேன்...” சொன்ன நித்யானந்தம் காருக்கு ஓட, காவேரி படியிலேயே அமர்ந்து அழத் துவங்கி இருந்தார்.

பிரபாவை தேன்மொழி பார்க்க, “நீ அவளைப் போய் பாரு... போ...” சொன்னவர், தானும் காவேரியின் அருகே அமர்ந்தார்.

“நாம ஒன்னு நினைச்சா, கடவுள் ஒன்னு நினைக்கறார்...” அவர் சொல்ல, காவேரி புடவைத் தலைப்பை வாயில் திணித்துக் கொண்டார்.

தேன்மொழிக்கோ எதுவும் புரியாத குழப்பத்தில் அறைக்குச் செல்ல, அவளைப் பார்த்த பூமிகாவின் கண்கள், தன்னவனைத்தான் எங்கே எனத் தேடியது.

‘அவரை எங்கே?’ பூமிகா கேட்க, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

“எங்கேயோ வெளியே போயிருக்காங்க... வந்துடுவாங்க...” அவள் சொல்ல,

‘இப்போவா? என்னை விட்டுட்டா? இருக்காதே...’ என எண்ணியவள், இமைகளை மூட, அதன் பிறகு பூமிகா கண் விழிக்கவே இல்லை.

***அடுத்த இரண்டு நாட்கள்... ஆகாஷ் கோமாவுக்கு சென்றுவிட்டான் என்ற செய்தி, பூமிகாவை எட்ட, வென்டிலேட்டரின் உதவியோடு சுவாசித்திருந்தவளுக்கு எதுவும் ஏறவில்லை.

ஆகாஷின் பெற்றவர்கள், உடன்பிறந்தவன் என அனைவரும் அங்கே வந்திருக்க, அவர்கள் மூலமாக உண்மைகளைத் தெரிந்துகொண்ட தேன்மொழிக்கு உச்ச அதிர்ச்சியே.

ஆகாஷ் என்பவன்... ஆகாஷே இல்லை... ‘விஷ்வா’ என்பதும், பிரபலமான இளம் வயது எடிட்டர் என்ற பெயரும், திறமைசாலியும், பல விருதுகளைப் பெற்றவனும் என்ற செய்தியும், அவனுக்கு மூளைக்கட்டி என்ற உண்மையும், இது அவனது இறுதி உறக்கமாக கூட இருக்கலாம் என்ற சேதியும் கிடைக்க, அவள் தோழிக்காக பார்க்கவா? அவனுக்காக பார்க்கவா?

“அறிவு... என் புள்ளை இப்படி கிடக்கானேடா... இதைப் பார்க்கவா வந்தேன்?” வடிவு அழ,

“அம்மா, அண்ணா சந்தோஷமா இருந்திருக்கானே... அது போதாதா? சும்மா இருங்க. இப்படியே நீங்க அழுதுட்டு இருந்தா, இங்கே இருந்து கூட்டி போய்டுவேன்...” அவன் மிரட்ட, அது சரியாக வேலை செய்தது.

சிவாவும், காவேரியும், ஆகாஷின் (விஷ்வா)வின் வருகை, அவனது கோரிக்கை, பிடிவாதம், விளையாட்டு, கூடவே பூமிகாவைப் பற்றி என அத்தனையையும் சொல்ல, சில மாதங்களாக காணாமல் போயிருந்த மகனின் வாழ்க்கையில், சிறு சந்தோஷமும், நிம்மதியும் பூமிகாவால் இருந்திருக்கிறது எனத் தெரிந்தவருக்கு பெருத்த நிம்மதி.

விஷ்வாவின் கதையைக் கேட்டு அனைவருக்குமே வருத்தம்தான். ஆனாலும் அவனைப் பார்த்த அன்றே ப்ரதிக்கிற்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அவனைப்பற்றி அறிய முயன்று, அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு முன்பே தெரிய வந்திருந்தது.

‘விஷ்வா’ என்னும் எடிட்டர், திரையுலகில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் மொத்தமாக கண்காணாமல் போய்விட்டான்’ என்பது சினிமா வட்டத்தில் செய்தியாக இருக்க, ப்ரதிக்கோ நேராக அவனது ஸ்டுடியோவில் சென்று நின்றான்.

அங்கே அவன் வாசுதேவனையும், முருகனையும் சந்தித்து ஆகாஷ் என்னும் விஷ்வாவைப் பற்றி கேட்க, முதலில் தயங்கினாலும், பிறகு அவனது உடல்நிலையைக் குறித்து சொல்லியிருக்க, அதை அப்படியே தன்னைப் பெற்றவர்களிடம் வந்து சொல்லிவிட்டான்.

அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்றாலும், ‘இதுதான் விதியோ?’ என எண்ணி தங்களை தேற்றிக் கொண்டார்கள். அதன்பிறகே அவர்களுக்குள் இருந்த குற்றவுணர்வும், தயக்கமும் அவர்களை விட்டு அகன்று இருந்தது.

விஷ்வா கோமாவுக்கு சென்றுவிட்டான் எனத் தெரியவே, ‘அவன் கண் விழிப்பானா?’ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

பூமிக்கு பன்னிரண்டு மணிநேரம்தான்.... என மருத்துவர் சொல்லியிருந்த பூமிகாவோ, தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உயிர் இழையோட காத்திருப்பது அதிர்வாக இருந்தது.

இரு குடும்பமும் சென்று நின்றது மருத்துவரிடம்தான்... அங்கே இருந்த இதய நிபுணரும் சரி, நியூரோ ஸ்பெஷலிஸ்ட்டும் சரி, சொன்ன விஷயம் ஒன்றுதான்...

‘கடவுள் ஏதாவது அதிசயம் செய்தால் இருவரும் கண் விழிக்கலாம். இல்லையா, அவன் கோமாவிலேயே இறுதி பயணத்தை துவங்கலாம், அவளது வெண்டிலேட்டர் நீக்கப்பட்டவுடன் அவளது இதயத்துடிப்பு நிற்கலாம்’.

அவர்களது இந்த பதிலைக் கேட்ட பிறகு, இருவரையும் மேலே சிகிச்சைக்கென எங்கேயும் கொண்டுசெல்ல கூட அவர்களால் நினைக்க முடியவில்லை.

அனைவரும் அமைதியாக இருக்கவே, “டாக்டர், அண்ணாவோட இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இதுக்கு முன்னாடியும் ஒரு வாரம் கோமாவில் இருந்து அண்ணா ரெக்கவர் ஆகி இருக்காரே” அறிவு தன் சந்தேகத்தை அவரிடம் கேட்க, அனைவரின் பார்வையும் ஒரு எதிர்பார்ப்போடு அவரை ஏறிட்டது.

“சாரி டூ சே திஸ்... உங்க அண்ணாவோட டியூமர் பாதி வெடிச்சிருச்சு... ஆனா அவர் எப்படி சர்வைவ் ஆகறார் என்பதுதான் எங்களுக்கு ஆச்சரியமே. மிச்சமும் முழுசா...” அவர் சொல்ல முயல,

“போதும் டாக்டர்...” சொன்னவன் வெளியே வர, சிவா அவனை எதிர்கொண்டான்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்... இந்த நாலு மாசமா என் அண்ணாவை நீங்க பார்த்துகிட்டதுக்கு, தேங்க்ஸ்ங்கற வார்த்தை போதாது, ஆனாலும் என்னால் இப்போ அதை மட்டும்தான் சொல்ல முடியும்” நெகிழ்ந்து கிடந்தவன், சிவாவின் கரத்தைப் பற்றி நெற்றியில் வைத்துக் கொண்டான்.

“உங்க அண்ணாவுக்காக இல்ல... என் ஃப்ரண்ட்டுக்காக நான் செய்தேன். நானும் அவனும் ஒரே காலேஜ்... ரெண்டு வருஷம் கூட முழுசா படிக்கலைன்னாலும், நாங்க அப்போவே கொஞ்சம் திக் ப்ரண்ட்ஸ் தான்.

“பல வருஷத்துக்கு பிறகு, திடீர்ன்னு ஒரு நாள் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன்ல அவனைப் பார்த்தப்போ, எனக்கு சுத்தமா அடையாளமே தெரியலை. ஒரு சந்தேகத்தில் பேசினா, அவன்தான்னு தெரிஞ்சது...

“அவன்கிட்டே பேசிப் பார்த்த பிறகு, அவன் எல்லா விஷயத்தையும் சொல்லவே, அவனை அங்கே தனியா விட்டு வர என்னால் முடியலை. பிடிவாதமா அவனை நான் என் வீட்டுக்கு கூப்ட்டப்போ, அவன் தயங்கவே, அவனை புது மனுஷனா மாத்த நான் அவனுக்கு வச்ச பேர் தான் ‘ஆகாஷ்...’.

“இப்படி இருக்கறவங்களுக்கு இரக்கப்பட்டா பிடிக்காதுன்னு எனக்கு கொஞ்சம் தெரியும். சோ... நானும் அம்மாவும் அவனைப்பத்தி பெருசா எதையும் நினைக்காமல், காட்டிக்காமல் அவனோட இருந்தோம்.

“அப்படியும் சில முறை அவனோட இந்த வலி, வேதனை எல்லாம் அதிகமாகும்போது, ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகச் சொல்லி சத்தம் போடுவேன். அப்போ எல்லாம், பூமிகாவை காரணம் காட்டி அவன் மறுக்கும்போது ரொம்ப கோபம் வரும்.

“கொஞ்ச நாள் முன்னாடி கூட, அவன் காணாமல் போயிருந்தது இந்த வலியால் தான். தொடர்ந்து தாங்கவே முடியாத வலி... இங்கேதான் வந்து அட்மிட் ஆகி இருந்தான்” சிவா சொல்லச் சொல்ல, அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள்.

“எங்க பூமியை பார்த்துக்க முடியாதுன்னு அப்போ சொன்னீங்க. உங்க ப்ரண்ட்டுன்ன உடனே அவருக்காக பாத்தீங்களா?” தேன்மொழி பட்டென அவனிடம் கேட்க, அவனோ மெல்லியதாக புன்னகைத்தான்.

“விஷ்வாவை ஒன்னும் என் பொண்டாட்டியா இங்கே கூட்டி வரலை. அதே மாதிரி, இருபத்திநாலு மணி நேரமும் நான் அவனை பார்த்துகிட்டேவும் இருக்கலை. உங்களுக்கே தெரியும்...” அவன் சொல்ல, அதில் இருந்த உண்மை புரியவே அமைதியானாள்.

“இப்போ இதுக்கு என்னதான் முடிவு...?” அறிவு கேட்க,

“முதல்ல அவங்களை இப்படி தனித்தனி இடத்துல வைச்சிருக்கறத்தை மாத்தணும். அவங்களை ஒண்ணா விடுங்க... எனக்கென்னவோ அதுதான் தோணுது” தேன்மொழி சொல்ல, அனைவருக்கும் அதுதான் சரியெனத் தோன்றியது.

அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்தில், இருவரையும் ஒரே ஐசியூவுக்கு மாற்ற, அடுத்ததாக அதிசயம் நேர காத்திருந்தார்கள்.

இங்கேயும் ஒரு அதிசயம் நேரவே செய்தது... வழக்கமாக வென்டிலேட்டரில் இருக்கையில், பூமிகா எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டுவது இல்லை.

ஆனால் இப்பொழுது... முதல் முறையாக அவனோடு அறைக்கு மாற்றிய பிறகு, அவளது கடைவிழியோரம் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க, தேன்மொழி அவளது கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டாள்.

“பூமி, அழாத... அவர் உன் கூடத்தான் இருக்கார்...” அவள் சொல்ல, பூமிகாவிடம் சிறு அசைவு தெரிந்தது.

‘என்னை தனியா விட்டு போய்டாத...’ ஆகாஷின் (விஷ்வாவின்) குரல் தன் காதுக்குள் ஒலிக்கும் உணர்வு. அந்த குரல்தான் அவளை இந்த உலகின் பயணத்தில் இருந்து செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க... அனைவரின் நம்பிக்கையும் கரையத் துவங்கி இருந்தது.

பூமிகாவின் பெற்றவர்களைத் தேடி வந்த மருத்துவரோ... “நீங்க என்ன முடிவு செய்து இருக்கீங்க? அவங்களுக்காக அந்த ‘வென்ட்’ தான் சுவாசிக்குது. அதை ரிமூவ் பண்ணா அவங்க... சர்வைவ் ஆக மாட்டாங்க... சோ...” முடிவை சீக்கிரம் எடுங்கள் என சொல்லாமல் சொல்லிச் செல்ல, தேன்மொழிதான் கதறித் தடுத்தாள்.

“இல்ல... பூமி உயிரோடதான் இருக்கா... அவளை கொல்ல நான் விட மாட்டேன். அவங்க ரெண்டுபேரும் இப்படியே இருந்து போக மாட்டாங்க..” அவள் அழுது கரைய, ப்ரதிக் அவளைத் தாங்கிக் கொண்டான்.

“இது நாம அவளுக்கு செய்யற கொடுமை மொழி...” தங்கையை நாளுக்குநாள் கஷ்டப்படுத்துவது அவனுக்குப் புரிகிறதே.

“இல்ல... அவ சந்தோஷமா சாகணும், இப்படி அழுதுட்டே இல்ல” அவள் கத்த, அனைவரின் கண்களும் கலங்கியது.

“இப்போ என்னதான் செய்யணும்னு சொல்ற?” அவன் கேட்க,

“அவர் இருக்கற வரைக்கும் அவ இருக்கட்டும்... அவளே போய்ட்டா எப்படியோ, ஆனா... இதுக்கு நான் விட மாட்டேன்” அவள் பிடிவாதம் பிடிக்க, யாரும் எதுவும் செய்யவில்லை.

சில பல நிமிடங்கள் கடக்க, ஐசியூவிற்கு சென்றவள், நேராக சென்று நின்றது விஷ்வாவிடம் தான்.

“ஹல்லோ... நீங்க உங்க மனசுக்குள்ள என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க? அவளை கஷ்டப்படுத்த விட மாட்டேன்னீங்க, இப்போ... அவளை அழ வச்சு பார்க்கறீங்களா? அவ அழுதுட்டே இருக்கா, நான் சொல்றது உங்களுக்கு கேக்குதா?

“அவ அழறான்னு சொன்னேன், ஒழுங்கா அவகிட்டே பேசுங்க... இப்போ நீங்க பேசலன்னா, கண்ணு முழிச்சா உங்களை நீங்களே கூட மன்னிக்க மாட்டீங்க” அமைதியாக உணர்வற்று படுத்திருந்த அவனிடம் அத்தனையாக கோபம் காட்டிவிட்டு வெளியேறி இருந்தாள்.

அங்கே இருந்த செவிலி அவளைத் தடுக்க முயன்றதை எல்லாம் அவள் கணக்கில் கொள்ளவே இல்லை.

அந்த நேசம் கொண்ட நெஞ்சங்களை மிக அருகே இருந்து பார்த்து இருக்கிறாள். இப்படியான ஒரு பிரியாவிடையை அவர்கள் வாங்குவதை அவளால் ஏற்க முடியாமல் திண்டாடிப் போயிருந்தாள்.

மறுநாள் மருத்துவர் ஒருவர் பூமிகாவின் உடல்நிலையை பரிசோதிக்க வர, மெதுவாக கண் விழித்தவள், தன் வெண்டிலேட்டரை அகற்றச் சொல்லி செய்கை செய்ய, அவர் பயிற்சி மருத்துவர் என்பதால் செவிலியைப் பார்க்க, அவள் மருத்துவரை அழைத்துவர ஓடினாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
மருத்துவரிடம் விஷயத்தை சொல்லி அவள் அழைத்துவர, அவளது வீட்டினர் அனைவரும் அவரோடு உள்ளே விரைந்தார்கள்.

மருத்துவர் அவளைப் பரிசோதித்து, அவளது வெண்டிலேட்டரை அகற்ற, “டாக்டர்... இதெப்படி சாத்தியம்?” பூமிகா சற்று தெளிவாக இருப்பதுபோல் தெரியவே, ப்ரதிக் அவரிடம் கேட்டான்.

‘வாங்க...’ என்பதுபோல் வெளியே அழைத்து வந்தவர், “அவங்க ஹார்ட் பீட் நிக்கற வரைக்கும்தான் டைம்... அணையப்போற விளக்குன்னு சொல்வாங்களே...” ப்ரதிக்கின் தோளைத் தட்டிவிட்டு சென்றுவிட, தேன்மொழியும், அவனைப் பெற்றவர்களும் அவனைத் தேடி வந்தார்கள்.

அவன் விஷயத்தைச் சொல்ல, “இல்ல... அவ அப்படி எல்லாம் போக மாட்டா” அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, விஷ்வாவை கவனிக்கும் செவிலி வெளியே ஓட, அனைவரும் உள்ளே விரைந்தார்கள்.

உள்ளே சென்றவர்களுக்கு அவர்கள் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. விஷ்வாவும் கண் விழித்திருக்க, அவனைப் பெற்றவர்களும், தம்பியும் அவனைச் சுற்றி நின்றிருக்க, பூமிகாவோ அவனைப் பார்க்க தவித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவளது உடலோடு பொருத்தி இருந்த மெஷின், அவளது இதயத்துடிப்பு மெதுவாக குறைந்து கொண்டிருப்பதை தெரிவிக்க, பூமிகாவுக்கான நேரம் குறைந்துகொண்டே வருவது தெரிந்தது.

விஷ்வாவை கவனிக்க வந்த மருத்துவரும், இறுதி நொடிகள்... ஆனால் கண் விழித்தது அதிசயம் எனச் சொல்லிச் செல்ல, “அவங்களை கொஞ்சம் தனியா விடுங்களேன்...” தேன்மொழி குரல் கொடுக்க, இரு செவிலியரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.

ஆனால் அனைவரின் முகங்களிலும் ஒரு நிம்மதியும், சிறு சந்தோஷமும் அந்த நொடி தெரிந்தது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

“ஆண்டவா... என் பொண்ணுக்கு நிம்மதியைக் கொடு...” பிரபா முதல்முறையாக உடைந்து அழ, நித்யானந்தம் விலகி நிற்க, தேன்மொழி ஓடிபோய் அவரைக் கட்டிக் கொண்டாள்.

“அத்த... என்ன இது? இவ்வளவுநாள் தைரியமா இருந்துட்டு, இப்போ...” சமாதானப்படுத்த முயன்றவளுமே அழுதுகொண்டுதான் இருந்தாள்.

“அவங்க நிம்மதியா இருக்கட்டும்...” தேன்மொழி சொல்ல, அனைவரும் துக்க செய்தியை கேட்க காத்திருந்தார்களா? இல்லையென்றால் நிம்மதியை, ஆசுவாசத்தைக் கொடுக்கும் செய்தியைக் கேட்க காத்திருந்தார்களா? அது அவர்களுக்கே தெரியவில்லை.

“சிஸ்டர்...” விஷ்வா அழைக்கவே, அவன் செய்கையில் இரு படுக்கையையும் சேர்த்து போடச் சொல்ல, அவன் கேட்டதை செய்த இரு செவிலியரும் விலகி நின்றுகொண்டார்கள்.

தன் கரத்தில் இறங்கிக் கொண்டிருந்த குளுக்கோஸ் பட்டையை தானாகவே உருவி எறிந்தவன், தன் கரத்தை நகர்த்தி, பூமிகாவின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

அவளோ அசையக்கூட சக்தியற்று, உயிரைக் கண்களில் தாங்கி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களிலோ ஆயிரம் வினாவும், பரிதவிப்பும், ஒருவித பாவனையும் தெரிய, “கோபமா?” அவன் மெல்லியதாக கேட்க, கண்களை மூடித் திறந்து, தலையை மறுப்பாக அசைத்தாள்.

அங்கே அவளுக்கு பொருத்தியிருந்த மெஷினின் ஓசை மட்டுமே சில நொடிகள் கேட்க, முயன்று எழுந்தவன், அவளது படுக்கைக்கு இடம் மாற, “சார்...” செவிலி ஓடி வந்து அவனுக்கு உதவ, அவன் இப்பொழுது பூமிகாவோடு அவள் படுக்கையில் இருந்தான்.

அவனது பார்வை அவளது மெஷினில் பதிய... தன்னவளின் துடிப்பு அடங்கிக் கொண்டிருப்பதை அது காட்ட, முயன்று தன் சக்தியை அனைத்தும் திரட்டினான்.

பூமிகாவால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் பரிதவித்தவள், ‘உங்களுக்கு என்ன?’ என பார்வையில் வினவ, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அவளது ஆக்ஸிஜன் மாஸ்க்கை அவளே முயன்று அகற்ற... அவளைத் தடுக்க முயன்றவன் என்ன நினைத்தானோ அதை விடுத்தான்.

“நான் உனக்கு என்னைப்பத்தி நிறைய சொல்லணும்... ஆனா நமக்கு நேரமில்லை... சோ... சுருக்கமா சொல்றேன்... நான் விஷ்வா, பிலிம் எடிட்டர், எனக்கு ப்ரெயின் டியூமர்... உன்னை மாதிரியே நானும் நாட்களை எண்ணிட்டு இருந்தேன்...” அவன் நிதானமாக சொல்ல, அவள் கண்களில் கண்ணீர்.

‘ஏன் சொல்லலை...?’ அவள் கண்ணீர் அவனிடம் கேள்வி கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.

“நம்ம கஷ்டத்தை நான் நினைக்கவே கூடாதுன்னு நினைச்சேன்...” சொன்னவன், அவளை இடையோடு கையிட்டு தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொள்ள, தன்னால் முடிந்த அளவு அவனோடு ஒட்டிக்கொள்ள முயன்றாள்.

அவள் மொத்தமாக தளர்ந்திருக்க, பேசக்கூட அவளுக்கு தெம்பிருக்கவில்லை.

“என்னடா...?” அவள் அத்தனை அமைதியாக இருக்க, நேரம் கடக்கவே, மென்மையாக கேட்டான்.

“நீ...ங்க... சாக வேண்...டாம்...” தன் மனதுக்கு இனியவனின் மரணத்தை அவளால் ஏற்க முடியாமல் கலங்கினாள்.

“நான் இல்லாமல் நீ மட்டும் இந்த உலகத்தில் இருந்துடுவியா?” அவன் கேட்க, அழுத்தமாக முனகி மறுத்தாள்.

“அப்போ, நான் மட்டும் எப்படி இருப்பேனாம்? எனக்கு என் பூமியோட இருக்கணும். அந்த ஆகாயமும் பூமியும் வேணா சேராமல் போகலாம், இந்த விஷ்வாவும், பூமியும் எங்கே போனாலும் சேர்ந்தேதான் இருப்போம்.

“இப்போ சொல்லு... என்னை தனியா இங்கே போராட விட்டு போய்டுவியா?” அவன் கேட்க, மறுப்பாக தலை அசைத்து அமைதியானாள்.

சில நிமிடங்கள் கடக்கவே, “ஏதாவது பேசு... பயமா இருக்கா?” அவன் கேட்க, கண்களில் ஒருவித பளபளப்போடு மறுப்பாக தலை அசைத்தாள்.

‘நீங்க என்னோட இருக்கும்போது பயமா?’ அவள் இதழ்கள் முனகி, அவன் இதழில் படிந்து மீண்டது. இப்பொழுது அவளிடம் ஒரு பெருத்த அமைதி வந்திருக்க, அவனையே பார்த்தாள்.

“உங்க கஷ்ட்டத்தில்... நானும்...” அவள் தன்னைத் திரட்டி பேச,

“கஷ்டமா? என்னோட எந்த கஷ்டத்தையும் தெரியவே விடாம பாத்திருக்க பூமி. என் வலி, கவலை, தனிமை எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட ஞாபகமே வராத மாதிரி என் வாழ்க்கையை ரசிக்க வச்ச. வாழ்ந்த நாளை எல்லாம் எனக்கு அழகாக்கி கொடுத்தவ நீதான்...” அவன் சொல்லச் சொல்ல, அவள் இதழ்களில் ஒரு புன்னகை.

அவன் அவளைப் பார்த்து சரிந்து படுத்திருக்க, அவன் காதில் இருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தம், தன் தலையணையில் படிந்து உறைய, அதைப் பார்த்தவள், அசைய மறுத்த தன் கரத்தை நகர்த்தி, அவன் முகம் வருடினாள்.

“ம்..ம்... எனக்கு எதுவும் தெரியல பூமி... இந்த டியூமரால, என்னால் சில நேரம் நேரா நடக்க முடியாது, பேச முடியாது... கலர் எல்லாம் சுத்தமா தெரியாமலே போச்சு... அப்போ கூட... உன் நிழல் கூட எனக்கு கலராத்தான் தெரிஞ்சது...” அவன் கண்ணை சிமிட்டி சொல்லி, அவளை சுருட்டிக்கொள்ளும் பார்வை பார்க்க, அந்த பார்வையில் கட்டுண்டாள்.

“என்னை கல்...யாணம் பண்ணி...க்கறீங்களா?” அந்த வார்த்தைகளைக் கூட முடிக்க முடியாமல் அவள் திணற,

“நான் உன் பொண்டாட்டி தானே... பிறகென்ன...? இப்போ உனக்கு தாலி கட்டணுமா?” கேட்டவன், செவிலியை கையசைத்து அழைக்க, அவளோ விரைந்து ஓடி வந்தாள்.

“இதை கழட்டி என் கையில் கொடுங்க...” தன் கையில் அவள் கட்டிய கயிற்றைக் காட்டி அவன் கேட்க, நடுங்கும் கரத்தால் அதை கழட்டி அவன் கரத்தில் கொடுத்தாள்.

தினமும் இல்லை என்றாலும், அவளது வேலையில் எத்தனையோ சாவைக் கண்டவள்தான்... ஆனாலும்... வாழவேண்டிய இரு உள்ளங்கள், இப்படி பாதியில், கொஞ்சம் கொஞ்சமாக செல்வதைப் பார்க்க அவர்களால் முடியவில்லை.

தள்ளாடி தடுமாறி, அந்த கையிற்றை அவள் கழுத்தில் கட்டியவன், அவள் பின்னந்தலையைத் தாங்கி, அவள் இதழில் அழுத்தமாக முத்தம் வைக்க, தன் இமைகளை அகலத் திறந்து அவனையே பார்த்திருந்தாள்.

“ஸ்பெஷல் கிஸ் கேட்டல்ல? தரவா?” அவன் கிசுகிசுக்க, உயிர் வடியும் அந்த கண்களில் அத்தனை பிரகாசம் வந்தது.

“ஹோல்ட் ஆன்...” சொன்னவன், அவளை உருக்கும் பார்வை பார்த்தவாறே, அவளது கீழுதட்டை மெல்லியதாக கவ்வி சுவைக்க, அவளது நடுங்கும் கரங்கள் அவன் சிகைக்குள் அலைந்தது.

அந்த முத்தத்தை ரசிப்பதைவிட, அவன் மூக்கின் வழியாக வழிந்த ரத்தம், அவள் கன்னத்தில் வழிந்து, கழுத்தில் ஓட, அவனை இன்னும் தன்னோடு ஒட்டி வைத்துக் கொண்டாள்.

ஆனாலும்... தான் ரசிக்க முயன்ற ஒரு உணர்வு... அதை அவன் இதழ் வழியே கடத்த... அவள் உடலுக்குள் கொள்ளை பூக்கள் பூக்கும் உணர்வு. முதல்முறையாக தான் மலர்வதை அவள் உணர, தன் இதழ்களை கொள்ளையிடும் அவனை இமைகளை அகல விரித்து தனக்குள் அவன் உருவத்தை பதிய வைத்தாள்.

அவன் கரங்களின் இறுக்கம், அவள் தேகத்தில் சிறு வலியை பரப்ப, அந்த அவனது அணைப்பை ரசித்து சிலிர்த்தாள்.

அவளது இதயத்தில் இறுதி துடிப்புகள் செயல்பட, அவனுக்கோ உயிர் அவளுக்குள் கரைய துவங்கியது.

“ம்... என்...னங்க...” அவனது பாரம் தன்மேல் அழுத்த துவங்க, பயந்து போனாள்.

செவிலியர் இருவரும் ஓடி வந்து அவனை பரிசோதிக்க முயல, ஒரு வேக மூச்சோடு விலகி, அவள் அருகே படுத்தவன், தன்னவளை பலம் கொண்ட மட்டும் தூக்கி தன்மேல் போட்டுக் கொள்ள, “பயந்துட்டேன்...” அவன் இதழ் ஒற்றி முனகினாள்.

“அதை விடு... புடிச்சதா?” அவன் அந்த நிலையிலும் தன் குறும்பை விடாமல் தொடர, அவன் கீழுதட்டை மெல்லியதாக கடித்து வைத்து சிரித்தாள்.

“என் உடம்புதான் இதுவரை ஜெயிச்சு இருக்கு பூமி, முதல்முறையா மனசை ஜெயிக்க வச்சிருக்க...” சொன்னவன் ஒரு மாதிரி துடிக்க, அவன் முகத்தைக் காண முயன்றவளை, அதைச் செய்ய விடாமல் தடுத்து, தன் நெஞ்சில் அவள் முகத்தைப் புதைத்தான்.

அவன் மூளைக்குள் மின்னல் தெறிக்கும் வலி... அது அவனைத் திணறடிக்க, அவளை தன்னோடு இறுக்கி, அந்த வலியைக் கடக்க முயன்றான். அவனது பிடி வலித்தாலும், அவனிடம் முனகலாக கூட அதை வெளிப்படுத்தாமல், அதை உள்வாங்கிக் கொண்டாள்.

இப்பொழுது அவன் வாய்க்குள் இருந்தும் ரத்தம் கொப்பளிக்க, செவிலியோ ஒரு பேஸ்கட்டோடு அவனை நோக்கி ஓடிவந்து அவனிடம் நீட்ட, ரத்தம் கொப்பளிக்க, அதில் துப்பினான்.

சில பல நொடிகள் அது நடக்க, “உனக்கு முன்னாடி, உன்னை அழ விட்டு எல்லாம் போக மாட்டேன்” சொன்னவன், இன்னுமே தன்னவளை இறுக்க, பார்த்துக்கொண்டிருந்த செவிலியர் கண்ணீர் விட்டார்கள்.

“ஒரு தூய்மையான பாசம் எப்படி இருக்கும்? எதையுமே எதிர்பார்க்காத அன்பு எப்படி இருக்கும்னு எனக்கு காட்டின பூமி. மனசோட கிளர்ச்சி, காமத்தில் சேராத முத்தம், சாகற நிமிஷத்தை கூட ரசிக்க வச்சிருக்க...

“எனக்காக எமனோட அஞ்சு நாள் போராடி இருக்க... நீ இல்லாமல் எனக்கு ஒரு நிமிஷம் கூட வாழ வேண்டாம்... நாம சேர்ந்தே போகலாம்... இன்னொரு உலகத்தில் நாம சந்தோஷமா வாழலாம்... உனக்குள்ளே கூப்ட்டியே... அங்கே போய் போகலாம்...” இறுதியாக அவள் கேட்ட வார்த்தைகள் இதுவாக இருக்க, அவள் இதழ்களில் உறைந்துபோன ஒரு புன்னகை.

அவளில் பொருத்தி இருந்த கருவி இறுதி ‘பீப்... பீப்...’ ஒலியை நிறுத்தி, ‘பீ பீ பீ பீ பீ பீ பீ பீ....” என இசைத்து அவளது இறப்பை உறுதி செய்ய, கண்களும், வாயும் அகலத் திறந்து அசையாத அவனது உடல் அவனது முடிவை செவிலியருக்குச் சொன்னது.

இருவரும் ஒருவர் அணைப்பில் மற்றவர், பூரித்த முகத்தோடு, தங்கள் மறு உலக வாழ்க்கையை வாழப் போயிருந்தார்கள்.

அங்கிருந்த ஒரு செவிலி வெளியே ஓடிப்போய் விஷயத்தைச் சொல்ல, அனைவரும் உள்ளே ஓடினார்கள். அனைவரும் குரலெடுத்து அழ,

“ப்ளீஸ்... யாரும் அழாதீங்க... விஷ்வா இந்த லெட்டரை உங்ககிட்டே கொடுக்கச் சொன்னான்...” சிவா சொல்ல, அனைவரின் பார்வையும் அவனிடம் சென்றது.

‘அன்புள்ள சொந்தங்களுக்கு, நானும் பூமிகாவும் சேர்ந்து எழுதற கடிதம்.

நாங்க ரெண்டுபேரும் உங்களை விட்டு போய்ட்டோம்னு நீங்க எல்லாம் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது. சொல்லப்போனா நீங்க சந்தோஷப்படணும், என்னடா இப்படி சொல்றேனேன்னு நீங்க யோசிக்கலாம், ஆமா... சந்தோஷப்படணும்....

எங்களோட வலி, வேதனை, தாங்க முடியாத கஷ்டம்... இதில் இருந்தெல்லாம் விடுதலை. அதைவிட, இங்கே எங்களால் வாழ முடியாத வாழ்க்கையை, அடுத்த உலகத்தில் வாழப் போற எங்களை வாழ்த்தாம, நீங்க கண்ணீர் விட்டா?

“சோ... சந்தோஷமா வழியனுப்பி வைங்க... ஒரே ஒரு கோரிக்கைதான்... எங்க ரெண்டுபேரையும் பிரிச்சு எதையும் செஞ்சுடாதீங்க... சேர்த்தே வச்சுடுங்க... புரியும்னு நினைக்கறேன்.

“எல்லாத்துக்கும் நன்றி...

அன்புடன்,

ஆகாயபூமி....” அந்த கடிதம் முடிந்து போயிருக்க, இப்பொழுது அனைவரும் முயன்று தேறினார்கள்.

அந்த மருத்துவமனையின் காரிடாரின் வழியாக, பூமிகாவை கையில் ஏந்திய விஷ்வா... அத்தனை சந்தோஷமாக கதை பேசி நடக்க, அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சென்றவளின் முகத்தில் பெருத்த புன்னகை.

அவனது காதல் பார்வை அவளது முகத்திலேயே நிலைத்திருக்க, அவள் முகத்தில் ஒரு வெட்க புன்னகை வழிந்தது. இந்த உறவை இனி எந்த சக்தியாலும் பிரிக்கவே முடியாது.

நன்றி.
 

gomathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 16, 2022
128
23
28
chennai
Mudivu migavum arumai Writerji, sokathilum oru sugam. kathai awesome final epi perfect icing on the cake loved it so much😍😍😍
 
  • Like
Reactions: Infaa

Kothai Suresh

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
144
33
28
INDRANAGAR ADYAR
கண்ணீர் விட வைக்கும் முடி வென்றாலும், சாகா வரம் பெற்ற அவர்கள் காதல் அவர்கள் உலகத்தில் அவர்களை சந்தோஷமாக வாழ வைக்கும். போய் வாருங்கள் வாழுங்கள் ஆகாய பூமி 💞💞💞💞💞💞💞
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
கண்ணீர் விட வைக்கும் முடி வென்றாலும், சாகா வரம் பெற்ற அவர்கள் காதல் அவர்கள் உலகத்தில் அவர்களை சந்தோஷமாக வாழ வைக்கும். போய் வாருங்கள் வாழுங்கள் ஆகாய பூமி 💞💞💞💞💞💞💞

அவர்கள் வாழ்க்கை இனிமேல்தான் சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.

நன்றி!
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
எதிர்பார்த்த முடிவு தான் ஆனாலும் ஏற்றுக்கொள்ள மனசு இல்லை.
விஷ்வாவின் மனத்தையிரத்தை நினைத்து வியக்காத நாள் இல்லை.
பூமி இந்த ஆகாயத்துக்காக தான் பிறந்து இத்தனை வருடம் வாழ்ந்து இருக்காள், அதான் அவளின் ஆகாயத்தை கூட்டிக்கிட்டு பறந்து போனாளே.
கதை முழுக்க கண்ணீருடனும் வருத்தமாகவும் படித்த கதை😪
அடுத்த கதை நம்மள சிரிக்க வைக்கணும் ஆத்தரே..!❤️ சீக்கிரமா வாங்க💞
 

Kirupkale

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 12, 2022
4
0
1
New Jersey
கதை ரொம்ப intresting aa இருக்குனு ஆரம்பத்தில் நினச்சேன் . ஆனா, poga போக ஒரு magic நடுந்துறாதான்னு ஒரு ஆர்வம்.. விஷ்வா தான் இவருனு guess பண்ணும்போதே முடிவு இப்டி தான் னு மனச தேதிகிட்டேன் 😢😭 happyending ஏ பார்த்துட்டு கொஞ்சம் இல்ல ரொம்பவே அழுகாச்சி அழுகாச்சி ய வருது.., 😭acept பண்ணவே முடியல.. ஆடிசம் கதை (உங்க கதை) படிச்சேன்.. அதுவே better bu feel பண்ணவச்சுடீங்க..