Home Antiheroதளிர் – 44

தளிர் 44

என்னதான் தன் கவலையை மறைக்க பகலெல்லாம் வேலையில் தன்னை ஆழ்த்தி விட்டாலும், இரவானால் தொடரும் மனைவியின் ஞாபகங்களும் அவளது நினைவுகளும் செயல்களும், நரேனுக்கு ஒரு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்ததில்லை. அதிலிருந்து தப்பிக்கவே குடிக்க ஆரம்பித்தான்.

இதுவரை கெட்டப்பழக்கங்கள் என்று எதையுமே தன்னிடம் அண்டவிட்டதில்லை நரேன். முதன்முறையாக மனைவியின் ஞாபகங்களில் இருந்து, தப்பிக்க போதையைத் தேடி ஓடினான்.

ஏன் என்று கேட்கவும், கண்டிக்கவும் ஆள் இல்லாமல் போக, என்றைக்கோ என்று இருந்த குடிப்பழக்கம் தினமும் என்றாகிப் போனது. அப்படி ஒருநாளில் பாரில் அமர்ந்திருந்தவனின் ஃபோன் அலற, எடுத்துப் பார்த்தவனுக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு என்றதும், முதலில் அதை அப்படியே விட்டவன் மீண்டும் அதே எண் அழைக்கவும் யோசனையோடுதான் எடுத்தான்.

எடுத்தவன் அந்தப்பக்கம் கொடுத்த அதிர்ச்சியில் தன் மொத்த போதையும் தெளிந்து உறைந்து போய்விட்டான். அவர்கள் கொடுத்த செய்தியை சரியாகத்தான் கேட்டோமோ, இல்லை போதையில் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையா? என்று நினைத்து, மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்டு உறுதி செய்து கொண்டவனுக்கு யாருக்கு சொல்ல வேண்டும் என்று கூடத் தோன்றாமல், உடனே அவர்கள் சொன்ன இடத்திற்கு கிளம்பியிருந்தான்.

போகும் வழியிலேயே அந்த எண்ணுக்கு அழைத்து, “சார் நான் மேக்சிமம் ஏர்லி மார்னிங் அங்க ரீச்சாகிடுவேன். அதுவரைக்கும் நீங்க பார்த்துக்கோங்க, அவ… அவ எப்படி இருக்கா?” என்று கரகரப்பானக் குரலில் கேட்க,

“தம்பி இங்க சிச்சுவேஷன் கொஞ்சம் மோசம்தான், ஆனா நாங்க பார்த்துக்குறோம் தம்பி. ஹாஸ்பிடல்கு கொண்டு போக முடியல, டெத் கன்ஃபார்ம் ஆகி இங்க போலீஸ் அது இதுனு பிரச்சனையாகிடுச்சு. அதை சால்வ் செய்யவே டைம் எடுக்கும். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டா பெட்டர்.” என்றதும்,

“கண்டிப்பா சார், முடிஞ்சளவுக்கு நான் அங்க சீக்கிரம் வந்துடுவேன். அதுவரைக்கும் மட்டும் மேனேஜ் பண்ணுங்க ப்ளீஸ்.” என்று வைத்தவன், தன் காரை அசுர வேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தான்.

வேனுகோபாலின் ஆன்மா பிரிந்து சில நிமிடங்களே ஆகிருக்கும் என்று, அவரது உடலில் இருந்த வெப்பம் காட்டிக்கொடுக்க, அவரது கைகளை எடுத்து தன் இரு கைகளுக்கும் உள்ளே அழுத்திக் கொண்ட, நிசப்தியின் மூளை செயலிழந்து போயிருந்தது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்தவளை, “கண்ணும்மா…” என்ற பொன்னம்மாவின் அழைப்பு நிகழ்விற்கு கொண்டுவர, “பொன்னும்மா, அப்பா… அப்பா…” என வார்த்தைகளே வராமல் திணற,

“இன்னும் இன்னும் உனக்கு கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம்னு போயிட்டார்டா.” என அழுதவரை வெறித்துப் பார்த்தவள், அப்படி எல்லாம் இல்லை எனும் விதமாகத் தலையை மறுப்பாக ஆட்டினாள் நிசப்தி.

“கண்ணு, முதல்ல நீ நம்புடா. நல்லா பாரு, அப்பா நம்மளை விட்டு போயிட்டாரு.” என பொன்னம்மாள் அவளைப் பிடித்து உலுக்க அதில் நிதர்சனத்திற்கு வந்தவள்,

‘ஓ போயிட்டாரா? நான் கஷ்டப்படக்கூடாதுனு போயிட்டாரா? உனக்கு பாரமா இருந்தது போதும்னு போயிட்டாரா? அப்போ நான் என்ன செய்ய? எங்க போக? எனக்கு யார் இருக்கா? இதெல்லாம் அவருக்கு தெரியவே இல்லையா? அவர் இல்லைன்னா நான் கஷ்டப்படுவேன்னு அவருக்குத் தெரியாதா? அப்படி என்ன அவசரம், என்னை விட்டுட்டுப் போக? இனி நான் எப்படி இருப்பேன்? எல்லாம் எல்லாமே அவருக்குத்தானே…’ என்றவளின் மனம் ஊமையாய் உள்ளுக்குள் கதறியது.

அவள் நிலை அறிந்த பொன்னம்மாதான் மருத்துவருக்கும் கோகிலாவிற்கும் ஸ்வாதிக்கும் என மாறி மாறி, அழைத்துப் பார்த்து ஓய்ந்து போயிருந்தார். மூவரது ஃபோனுமே ஸ்விட்ச் ஆஃப் என்று வர, படுமோசமாக ஒரு சிறு பெண்ணை ஏமாற்றியது புரிந்து கொதித்து போனார். அதன்பிறகு பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்த நிசப்தியிடம் பேசி, நரேனின் எண்ணை வாங்கி கணவரிடம் கொடுத்தார்.

தந்தையின் உடலை வெறித்தபடி ஓரமாய் அமர்ந்தவள்தான், அடுத்து என்ன நடந்தது, யார் வந்தார்கள், போனார்கள் என்றெல்லாம் அறியவில்லை.

நேரமும் ஓடிக் கொண்டிருக்க, விடியலின் தொடக்கத்தில் பதட்டமும் பயமுமாக ஓடிவந்த நரேன், நிச்சயம் நிசப்தியை இப்படி ஒரு நிலையில் எதிர்பார்க்கவில்லை.

அவளைப் பார்த்து அதிர்ந்தது எல்லாம் நொடி நேரம்தான் அடுத்த நொடி, “நிசாம்மா…” எனக் கூவலுடன் அவளிடம் சென்று, தங்கையைத் தன் தோளோடு சாய்த்துக்கொண்டான் அண்ணன்.

“நிசாம்மா என்னடா? எங்கடா போனீங்க? ஏன்டா இப்படியெல்லாம்? என்னை நீ கடைசி வரைக்கும் நம்பவே இல்லையா? நம்ம அப்பாடா… நான் பார்க்கமாட்டேனா? ஏன்டா இப்படி…?” என்ற நரேன் கதறித் தீர்த்துவிட்டான்.

நரேனின் அணைப்பும் கதறலும்தான் நிசாவை நிகழ்வுக்கு கொண்டு வந்திருந்தது. அவனைப் பார்த்ததும் தானும் கதறியவள், “ண்ணா, ப்பா… ப்பா…” என்றவளுக்கு அதற்குமேல் எதுவும் பேச முடியவில்லை.

“ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல. இதோ அண்ணா வந்துட்டேன். நான் பார்த்துக்குறேன், எல்லாமே நான் பார்த்துப்பேன். நீ அமைதியா இரு, அழக்கூடாது ப்ளீஸ்டா. எனக்காக ப்ளீஸ்…” என்றவனுக்கு அப்போதுதான் அவள் நிலையேப் புரிய அவளை அதிர்ந்து பார்த்தான்.

‘என்ன இது? எப்படி? யார்? திருமணம் செய்து கொண்டாளோ? யாரை? இங்கிருக்கும் யாரையுமா? எனக் கேள்விகள் மூளையை வண்டாய் குடைய, பிறகு அவளிடம் தனியாக விசாரிக்கலாம் என்று தன்னை சமாளித்துக் கொண்டான்.

நிசப்தியை ஒருவழியாக சமாளித்து வெளிய வர, அவனுக்காகவே காந்திருந்தது போல, பொன்னம்மாவும் அவரது கணவரும் நின்றிருந்தனர். கூடவே காவல்துறை அதிகாரிகளும்.

அவர்களிடம் சென்றவன், “ஹலோ சார், நான் நரேன். சென்னை ஹைகோர்ட்ல லாயரா இருக்கேன். நீங்க? உங்களை நான் பார்த்துருக்கேன்…” என்று யோசனையானவன், சட்டென்று “பிஜூண்ணா…” என்றான்.

“ஹலோ நரேன், நான்தான். மறக்கவே இல்லையா என்னை?” என்றவனைக் கட்டிக் கொண்டவர், “இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் இங்கதான்.” என அவரும் அறிமுகம் செய்துகொண்டான் பிஜூ.

“என்ன ண்ணா நீங்க… உங்களை எப்படி மறக்க முடியும்? என்னாச்சு ண்ணா? என்ன பிரச்சனை சொல்லுங்க ண்ணா.” என நிசாவைப் பற்றி கேட்க,

“சாரி நரேன், இங்க ஒரு டெத், அதுல சில லீகல் ப்ராப்ளம்ஸ்னு கான்ஸ்டபிள் சொல்லவும்தான் வந்தேன். இங்க வந்து விசாரிச்சிட்டு பார்க்கும் போதுதான், அந்த பொண்ணைப் பார்த்தேன். அவளை எங்கயோ பார்த்துருக்கோம், எங்கனு யோசிச்சிட்டு இருந்தேன். பட் உன் ஞாபகம் வரல. இப்போ உன்னைப் பார்த்ததும்தான் ஸடனா ஐம் ரிமெம்பரிங். உங்கூட காலேஜ்ல பார்த்துருக்கேன்.” என்றான் மன்னிப்பான குரலில்.

“ம்ம்… எஸ் ண்ணா, நிசா அவ பேர். எங்க ஃபேமிலி இஸ்ஸுனால அப்பாதான் என்னையும் பார்த்துக்கிட்டார். அவங்க கூடத்தான் நான் இருந்தேன்.”

“ஓகே, அதை விடலாம். இப்போ ப்ராப்ளம் என்னன்னா உங்க அப்பா இறந்துட்டார். அடுத்து செய்ய வேண்டியதை எல்லாம் செய்யலாம்னு பார்க்கும் போது, அவர் ட்ரீட்மென்ட் எடுத்ததுக்கான எந்த டீடைல்சும் இல்ல. அண்ட் எந்த ஹாஸ்பிடல்? யார் டாக்டர்? எதுவுமே ப்ராப்பரா இல்லை. இங்க வந்ததுல இருந்து எந்த ஹாஸ்பிடலுக்கும் இவங்க போகல. எங்களுக்கு டவுட் வந்து விசாரிக்கும் போதுதான், இவங்களப் பத்தி தெரிஞ்சது. சரி சில ஃபேமிலி இஸ்ஸுனால இப்படி வந்து இருக்காங்க போலனுதான், என்னோட ஃபர்ஸ்ட் என்கொயிரி இருந்தது. பட்…” என பிஜு நிறுத்த,

“பட்…” என பதட்டமாக நரேன் கேட்க,

“உன் சிஸ்டர் ஒரு சரகஸி மதர், அது உனக்கு தெரியுமா?”

“வாட்…!” என நரேன் அதிர,

“Yes, this girl is a surrogate mother, and that too is illegal.” என பிஜூ கூற, நரேனுக்கு மேலும் மேலும் அதிர்ச்சி கூடியது.

“நோ ண்ணா! நிசா அப்படியெல்லாம் செய்ற பொண்ணே கிடையாது. எங்கையோ தப்பு நடந்துருக்கு. நான் கேட்குறேன், ஆனா அதுக்கும் இப்போ அப்பா இறந்ததுக்கும் என்ன சம்மந்தம்?”

“இருக்கு நரேன், இவரோட ட்ரீட்மெண்ட்காகத்தான் உங்க சிஸ்டர் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்காங்க. அவர் மேல வச்சிருந்த கண்மூடித்தனமான பாசத்தால, அவங்க வாழ்க்கைல மிகவும் மோசமா பாதிக்கப்பட்டுட்டாங்க.

லீகலா சரோகேட் ப்ரொசீட் பண்றவங்க என்ன செய்வாங்களோ, அந்த ப்ரசீயூஜர் எதுவுமே இவங்களுக்கு ஃபாலோவ் செய்யல. ஐ திங்க், இவங்களை யாரோ மிரட்டித்தான் இப்படியெல்லாம் செய்ய வச்சிருக்காங்கனு எனக்குத் தோனுது.”

“ஏன்… ஏன் அப்படி சொல்றீங்க ண்ணா? எதை வச்சு அப்படி சொல்றீங்க?” என நரேன் மீண்டும் அதே பதட்டத்துடனே கேட்க,

“எஸ் நரேன், எனக்கு இது டவுட்லாம் இல்லை, கன்ஃபார்ம்தான். ஏன் சொல்றேன்னா, இவர் இறந்ததுட்டாருனு டெத் சர்டிஃபிகேட் ரிஜிஸ்டர் செய்யும்போது, இவரோட டெத் சர்டிஃபிகேட் ஆல்ரெடி இருக்குற மாதிரி காட்டுது.”

“வாட்…?”

“எஸ், இவர் இறந்துட்டாருனு ஆறு மாசத்துக்கு முன்னாடியே சென்னைல ரிஜிஸ்டர் ஆகிருக்கு.”

“வாட்! நோ… நோ… என்னால நம்பவே முடில. என்ன நடக்குது எங்களைச் சுத்தி? எனக்கு சுத்தமா புரியல. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ஒருநாள் ஹாஸ்பிடல்ல இருந்து ரெண்டு பேரும், யாருக்கும் சொல்லாம எங்கேயோ போயிட்டாங்க. நானும் தேடாத இடமே இல்லை. ரொம்ப பயந்து போயிருந்தேன். எதுவும் தப்பான முடிவு எடுத்துடக்கூடாதேனு தினம் தினம் வேண்டிட்டு இருந்தேன். ஆனா இப்போ இது என்னால நம்பவே முடியல, ஏத்துக்கவும் முடியல.”

“நரேன் உங்களுக்கு நான் எந்த வகைல ஹெல்ப் செய்யணும்னாலும் சொல்லுங்க, செய்றேன். ஏற்கனவே உங்க சிஸ்டர் சூழல் பார்த்து, நான் அந்த முடிவுக்குத்தான் வந்தேன். இப்போ நீ என்னோட ஃப்ரெண்ட், கண்டிப்பா உனக்காக நான் செய்றேன். பட் இது லீகலி க்ரிமினல் அஃபன்ஸ். இந்த பிரச்சனையை அப்படியே விடமுடியாது. நீங்க எனக்கு சப்போர்ட் செஞ்சா நான் கண்டிப்பா கண்டுப்பிடிச்சிடுவேன், என்ன செய்யலாம் சொல்லு.”

“அண்ணா இப்போ அப்பாவை இங்க இருந்து சென்னை கொண்டுபோக முடியுமா?”

“பண்ணலாம் நரேன், பட் அது உங்க சிஸ்டருக்கு சேஃப் இல்ல. இங்க இருந்து வெளியே போறது சேஃப் இல்லனு தோனுது. சோ இங்கையே எல்லாம் முடிச்சிட்டு, பொறுமையா அவங்ககிட்ட உக்காந்து பேசுங்க. அப்புறமா நாம் எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். நான் அதுக்கான எல்லா ஏற்பாடும் செய்றேன்.”

“தேங்க்ஸ் அண்ணா, ஆனா அப்பாவோட ரிலேடிவ்ஸ் எல்லாம் திருச்சில இருக்காங்க. அவங்க எல்லாம் இதை எப்படி எடுத்துப்பாங்க தெரிலயே. அதிலும் நிசா இப்படி இருக்கானு தெரிஞ்சா, அவளை பேசிப்பேசியே மொத்தமா முடிச்சிடுவாங்க.”

“ஐ கேன் அன்டர்ஸ்டேண்ட் நரேன். பட் இப்போ நாம எது செஞ்சாலும் உன் சிஸ்டரைத்தான் பாதிக்கும். சோ, அதுக்கு ஏத்த மாதிரி செஞ்சிடலாம். நீ வேற என்ன எதிர்பார்க்குற? நான் முடிஞ்சா செய்றேன்.”

“நீங்க சொல்றதும் சரிதான். ரிஸ்க் எடுக்க வேண்டாம். எல்லாம் சரியா நடக்கட்டும், நிசாக்கிட்ட பேசி அடுத்து என்ன செய்றதுனு பார்க்கலாம்.” என்றவன், அடுத்தடுத்து நடக்க வேண்டிய நிகழ்வுகளை செய்து, வேனுகோபாலின் இறுதிக் காரியத்தை ஒரு மகனாக நல்லமுறையில் முடித்தவன், நிசாவை எப்படி சமாதானம் செய்வது, அவளிடம் பேசி எப்படி உண்மைகளைத் தெரிந்து கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

***

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு நள்ளிரவில், அபஸ்வரமாய் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது விக்ரமின் அலைபேசி.

யார் இந்த நேரத்தில் என்ற முகச்சுளிப்புடன் போனை எடுத்துப் பார்க்க, அதில் ரவியின் எண்.

ஏன் இந்த அர்த்தராத்திரியில் அழைக்கிறான்? ரித்திக்கு எதுவும் பிரச்சனையோ என்று வேகமாக எடுக்க, அதற்குள் அவனது அறைக்கதவும் படபடவென்று தட்டப்பட்டது.

“ஹலோ…” என்று காதுக்கு கொடுத்தபடியே கதவைத் திறந்தவன் பார்த்தது, பதட்டமும் பயமும் அழுகையும் சேர்ந்த முகத்துடன் நின்ற தன் தாயைத்தான்.

“ரவி என்னடா? என்னாச்சு? ரித்திக்கு என்ன?” என அண்ணனாகப் பதற,

“ரித்தி… ரித்திக்கு ஒன்னும் இல்ல. நீ உடனே கிளம்பி GH வந்துடு, ஒரு எமர்ஜென்ஸி. உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன், கொஞ்சம் குயிக்கா பதட்டப்படாம வந்துடு.” என்று ரவி வைத்துவிட,

ரித்திக்கா இருந்தா ப்ரைவேட் ஹாஸ்பிடலுக்கு தானே வரச்சொல்லுவான், GHன்னா கேஸ் விசயமா இருக்குமோ? என்ற யோசனை வந்தாலும், அம்மா ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கணும்?

“ம்மா, ரித்திக்கு ஒன்னும் இல்ல பயப்படாதீங்க, நான் போய் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்.”

“இல்ல இல்ல விக்ரம், நானும் வரேன். வேண்டாம் சொல்லாத வா. அம்மாவா நான் உன்கூட இப்ப இருக்கணும்.”

“ம்மா என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும்… ஸ்வாதி… ஸ்வாதிக்கு என்ன?” என அனைத்தும் விளங்க பட்டென்று கேட்க,

“ராஜா…” என்றவர் பெருங்குரலெடுத்து அழ, “ம்மா…” என்றவனுக்கு சட்டென்று சில யூகங்கள் தோன்ற, அடுத்த சில நிமிடங்களில் ரவியின் முன் நின்றிருந்தான்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 28, 2026 - 8:40 pm

இந்த ஸ்வாதியை சீக்கிரம் போட்டுத் தள்ள மாட்டிங்களா..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured