அகானா – 71
“எப்படி.. எப்படி அதுக்குள்ள வந்த?” என மைதிலி ஆத்திரமாக கேட்டபடி, அந்த நொடி யாருமே யோசித்திராத ஒன்றை செய்தாள்.. கீழே கிடந்த வினோத்தின் வயிற்றில் ஓங்கி மித்தித்தாள்..
யாருமே மைதிலியின் இந்த செயலை எதிர்பார்க்கவில்லை. வினோத்தின் பார்வை அத்தனை களேபரத்திலும் தன் பிள்ளைகளைத்தான் தீண்டியது.
எங்கே அவர்கள் பார்த்து, மிகவும் வருந்துவார்களோ, அவர்கள் முன் தனக்கு அவமானமாக போய்விடுமோ என பயந்து போனார்.
பிள்ளைகள் இன்னும் மயக்கத்திலேயே இருக்க, அப்போதுதான் அவரின் மூச்சே சீரானது.
“ஏய்..?” என அகானா ஆக்ரோசமாக முன்னே செல்ல, அவளைப் பிடித்து தனக்கு பின்னே விட்ட நவீன், மைதிலியைப் பிடித்து கீழேத் தள்ளியிருந்தான்.
“பொம்பளைய, அதுவும் வயசுல மூத்தவங்க மேல கை வைக்கக்கூடாதுனு என் அம்மா சொல்லி வளர்த்துருக்காங்க. அதுக்காக மட்டும் தான் உன்னை சும்மா விடுறேன். இல்லைன்னா இன்னேரம் நீ பாடையில இருந்திருப்ப..” என அகனாவுக்கு நிகரான ஆக்ரோசத்தில் கத்தினான் நவீன்.
“யாருக்கிட்ட வந்து, என்ன கத்திட்டு இருக்க? நான் ஒரு பொம்பள, உங்க அத்தனை பேரையும் ஓட விட்டுருக்கேன். உங்களால என்ன கிழிக்க முடிஞ்சது? இதுக்கு பிறகும் நீங்க தைரியமா என் மேல கை வைப்பீங்களா, என்ன?” என்றவள் அகானாவை பார்த்து நக்கலாக சிரித்தாள்.
மைதிலியை கொன்று விடும் அளவிற்கு வந்த கோபத்தை அடக்கி, வினோத்தை தூக்கி நன்றாக அமர்த்தினாள் அகானா.
அவர் முகம் அவமானத்தில் கருத்துப் போயிருந்தது. அகானாவின் முகத்தைக் கூட, நிமிர்ந்து பார்க்க முடியாமல், முகத்தை வேறுபக்கம் திருப்பி இருந்தார். ஆனாலும் அவர் விழியோரம் லேசாக நீர் உருள தொடங்கியிருந்ததை அகானா கவனித்து விட்டாள்.
அவரின் உணர்வை புரிந்து கொண்டவள், “வெளிய கார் இருக்கு.. நீங்க பசங்கள கூப்பிட்டு கிளம்புங்க..” என்றாள் வழக்கம்போல் வினோத்தின் முகத்தைப் பார்க்காமல்.
அந்த நொடி மொத்தமாக உடைந்தார் வினோத். அகானாவின் கைகளிலேயே தன் முகத்தைப் புதைத்து “உனக்கும், அண்ணிக்கும் நாங்க செஞ்ச பாவம் தான், இப்போ எங்களை இப்படி ஆட்டிப் படைக்குது.. நாங்க செஞ்ச பாவத்தை, உன்னால மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுடு பாப்பா..” என்றார் அழுகுரலில்.
வழக்கம்போல வெறித்த பார்வையுடன் அதைக் கேட்டுக் கொண்டவள், அவருக்கு பதிலேதும் கொடுக்கவில்லை. அதே நேரம் அவரை விட்டு தூரமாக தள்ளி வந்திருந்தாள்.
அதுவே சொன்னது, அவளால் எப்போதுமே அவர்களை மன்னிக்க முடியாது என்று..
அதுவரை இவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மைதிலி, அகானாவின் செயலில் வினோத்தைப் பார்த்து கிண்டலாக சிரித்தார்.
“என்னப்பா கொழுந்தனாரே..? செஞ்ச பாவத்துல இருந்து தப்பிக்கனும்னு நினைச்சியா? ஹான் நீ போட்ட நாடகத்தைப் பார்க்க சுவாரஸ்யமா இருந்தது. ஹ்ம்ம் சும்ம சொல்லக்கூடாது. சூப்பர்ஸ்டார்க்கே டஃப் கொடுப்ப போல..” என்று நக்கலாக பேசிய நேரம், அகானாவின் ஆள் ஒருவர், அவளின் கண் அசைவில் மைதிலியைப் பிடித்து, அவரின் திமிறலையும், கத்தலையும் பொருட்படுத்தாமல், ஒரு சேரில் அமர வைத்து கட்டி போட்டார்.
“என்னப்பா யோசிச்சிட்டே இருக்கீங்க..?” என வந்ததில் இருந்து அமைதியாகவே இருந்த வினோத்தைப் பார்த்து கவலையாக கேட்டாள் நித்யா.
“ஒன்னுமில்ல..” என முணுமுணுத்தவர், “நான் போய் அப்பாவை பார்த்துட்டு, அப்படியே ஹாஸ்பிடல் போறேன். நீ ரெண்டு நாளைக்கு எங்கேயும் போக வேண்டாம்..” என்றுவிட்டு கசங்கிய தன் முகத்தை அழுந்த துடைத்து சரி செய்து கொண்டார்.
“அதெல்லாம் சரி தான். ஆனா நீங்க ஏன் இவ்ளோ டல்லா இருக்கீங்க. அங்க என்ன நடந்தது? ஏன் இன்னும் அம்மு வரல? மாமா கூட பரோல்ல வந்துட்டதா குமரன் சொன்னானே.. அவரும் வரல, அங்க என்ன பிரச்சினை..?” சற்று பயமாகவே கேட்க,
“ம்ச் நித்தி.. சொல்றமாதிரி இருந்தா சொல்லிருக்கமாட்டேனா? இது வேற.. நான் அப்புறம் சொல்றேன். நீயும் என்னை டென்சன் பண்ணாத..” என சற்றே குரல் உயர்த்தி கூற, நித்யாவின் விழிகள் கலங்கிவிட்டது.
அதை கவனித்த வினோத், மனைவியை அனைத்து, அவரிடம் ஆறுதல் தேடியபடியே “அண்ணி நம்மளை மன்னிச்சா கூட, அம்மு நம்மளை மன்னிக்க மாட்டா..” என்றார் வேதனையாக.
‘என்ன நடந்தது?’ என்ற கேள்வியுடன் நித்யா கணவனை நிமிர்ந்து பார்க்க, இனி மறைக்க வேண்டாம் என நினைத்த வினோத்தும் அனைத்தையும் சொல்லி முடிக்க, நித்யாவின் விழிகளில் இருந்து கோடாக இறங்கியது கண்ணீர்.
“இனி அவ நம்மளை மன்னிக்காட்டியும் பரவாயில்லை. இதெல்லாம் யோசிச்சு கண்ணா கூட வாழாம போயிடுவாளோன்னு பயமா இருக்கு..” என்றார் வினோத் மீண்டும் கவலையாக.
“அது… அதெல்லாம் நடக்காது. கண்ணா அப்படியெல்லாம் விடமாட்டான். நீங்க கிளம்புங்க..” என தான் அழுது மேலும் வேதனைப்படுத்த வேண்டாம் என யோசித்து கணவனை அனுப்பிவிட்டு, உள்ளுக்குள் பொங்கிய ஆத்திரத்துடனே ரஞ்சனிக்கு அழைக்க ஆரம்பித்தார் நித்யா.
**
இங்கு காலில் விழுந்த தகப்பனை விழி தெறிக்க வெறித்த அகானா, அடுத்த நொடி ஆவேசமாக எழுந்தவள் “போதும் முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. உங்க நாடகத்தை நம்ப நான் ஒன்னும் பத்து வயசு அகானா கிடையாது.” என்றாள் ஆங்காரமாக.
“அம்மு.. நான்..” என ஆரம்பித்தவரை, ‘போதும்’ என நிறுத்தி “நீங்க எங்களுக்கு ஏதாவது செய்யனும்னு நினைச்சா என் அம்மாவுக்கு சர்ஜரி மட்டும் பண்ணுங்க போதும்.” என்றாள் தாயின் நினைவில் கலங்கியவளாக.
மகளின் பேச்சில் ரவி அதிர்ந்து நிற்க, “நீங்க எனக்கோ என் அம்மாவுக்கோ இதுவரை எதுவும் செஞ்சதா நிழலா கூட எனக்கு ஞாபகம் இல்ல. அதனால உங்ககிட்ட இதை கேட்ககூட எனக்கு பிடிக்கல. ஆனா என் அம்மான்னு வரும் போது, என்னால எல்லாத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியும். எனக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது. உங்களை அவ்ளோ வெறுக்குறேன். என் அம்மா முன்னாடி நிக்க கூட உங்களுக்கு தகுதி இல்லத்தான். ஆனா இப்போ எனக்கு அதெல்லாம் பெரிய விசயம் இல்ல. என் அம்மா எனக்கு வேனும். அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும். ஒரு கணவனா நீங்க அவங்களுக்கு எதுவும் செய்யவேண்டாம். ஒரு டாக்டரா அவங்களுக்கு அந்த சர்ஜரியை செஞ்சா போதும்..” என ஆத்திரமும் அழுகையும் மிஞ்சிய குரலில் பேசிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் தொய்ந்து விழ,
மகளின் பேச்சில் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத ஜடமாகி போனார் ரவி. அவரை உணர்ந்த நவீனும், மாலினியும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினர்.
இப்போது மைதிலியும், அகானாவும் மட்டும் அந்த அறையில் தனித்து விடப்பட்டனர்.
“உன்னை இப்படி பார்க்க எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா, கலெக்டரே..!” என்றபடியே தன் உடலை தளர்த்தி, மிகவும் கேசுவலாக அமர்ந்து அகானாவை சீண்டிக் கொண்டிருந்தாள் மைதிலி.
மைதிலியின் இந்த பேச்சைக் கேட்டாலும், பெரிதாக எந்த ரியாக்சனும் முகத்தில் காட்டாமல், பார்வையில் கூர்மையைத் தேக்கி, மைதிலியை பார்த்துக் கொண்டிருந்தாள் அகானா.
அகானாவின் கூர்பார்வையில் கடுப்பான மைதிலி “என்ன கலெக்டரம்மா? என்ன சொல்லுது உன்னோட போலிஸ் மூளை.? அப்போ சொன்ன மாதிரியே, இப்போவும் என்னை முடிச்சு விட சொல்லுதா?” என தன் பயத்தைக் காட்டாமல் கிண்டலாக கேட்க,
“ஹ்ம்ம்.. உன்கிட்ட என்ன பேசினாலும் அது வேஸ்ட்னு எனக்குத் தெரியும். எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் உன்கிட்ட கேட்கனும்..?” என்று கோபத்தைக் கட்டுப்படுத்திய நிதானமான குரலில் அகானா கேட்க,
‘என்ன..?’ என அலட்சியப் பார்வை பார்த்தாள் மைதிலி.
நானும், என் அம்மாவும் மறுபடியும் டாக்டர் லைஃப்ல வந்துடுவோம்னு உனக்கு ஆரம்பத்துல இருந்தே ஒரு பயம் இருந்தது. அந்த பயம் உன்னை தூங்க விடாம விரட்டிக்கிட்டே இருந்தது. ஒரு கட்டத்துல உன்னால அந்த பயத்துக்கிட்ட ஜெயிக்க முடியல. நாங்க இங்க வந்தோம். படுகேவலமா தோத்துப் போயிட்ட. அதுக்காக நீ எங்களை பழிவாங்கலாம். அதுல எந்த புடலங்க நியாயமும் இல்லைன்னாலும், உன் பக்கம் இருந்து யோசிக்கும் போதூ ஓக்கேதான். நீ செஞ்சதை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்.. ஆனா..” என அதுவரை தன் நிமிர்வும், தைரியமும் குறையாமல் கம்பீரமாக, அலட்சியமாக பேசிவந்த அகானாவிற்கு உரல் குடையத் தொடங்கியது.
“ஆனா..” என தன் குரலை சரி செய்ய நினைக்க,
“ஆனா..” என மைதிலி சுவாரஸ்யம் கூடிய கிண்டல் குரலில் கேட்க,
“ஆனா ஏன் ஆகனையும், மகியையும் டச் பண்ண. அவங்க ரெண்டு பேரும் நீ வளர்த்த பிள்ளைங்க தானே. அந்த பாசம் கூட உனக்கு இல்லையா? மனிதாபிமானமே இல்லாத ஒரு செயலை செஞ்சிருக்க..” என கேட்க,
“ஹோ.. லவ்.. அவன் மேல உனக்கு லவ்வு இல்ல. நான் அதை மறந்தே போய்ட்டேன் பாரேன்.. ஒருத்தன் உன்னோட காதல் புருசன், இன்னொருத்தி உன்னோட பாசமான அண்ணன் பொண்டாட்டி.. ஹாஹா… நீ இப்படி ஃஃபீல் பண்றது பார்க்க ஒரே ஜாலியா இருக்குப்பா.. ஹாஹா..” என வேண்டுமென்றே அகானாவின் உணர்வுகளை சீண்டிவிட்டு சிரிக்க, அவளை வெறித்தாள் அகானா.
கண்ணீர் வரும் வரை வெடித்து சிரித்த மைதிலி, ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்கி, “ஆக்சுவல்லி.. அவங்க என்னோட ப்ளான்லயே இல்ல. என்னோட டார்கெட் உன் அம்மா, உன் சித்தி மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டும் தான்..” என ‘மாயண்ணன் வந்துருக்காக’ மாடுலேசனின் கூறிவிட்டு சிரிக்க,
“ஏய்..” என அகானா வெகுண்டெழ,
“கூல்.. கூல்.. உன்னோட பிடி இன்னும் எங்கிட்ட இருக்கு. அதை மறந்திடாத, இன்னும் நீ கத்த வேண்டியது பாக்கி இருக்கு..” என தோளைக் குலுக்கி அலட்சியமாக கூற, அகானாவின் விழிகள் இடுங்கியது.
“அந்த கிழவன் இன்னும் இழுத்துட்டு இருக்கான் நியாபகம் இருக்கா? அவனை அம்போன்னு விட்டுட்டு எல்லாரும் எங்கப்பா போனீங்க..”
“ஹாஹா.. அந்த ஆளுக்காக நான் இறங்கி செய்வேண்னு நீ நினைச்சியா?”
“அட… உன் அப்பனையே ஏத்துக்காத, அவனை ஒரு ஆளா கூட மதிக்காத நீ, அந்த கிழவனுக்காக ஸ்பைடர்மேன் வேலையெல்லாம் பார்க்கமாட்டன்னு எனக்குத் தெரியாதா.?” என்றதும் அகானாவின் விழிகள் மூடி ‘வேறு யார்?’ என யோசிக்க,
“அந்த கிழவனை பார்த்துக்க உன் அண்ணி ராகினி தான் இருக்காளாம். அவ இப்போ மாசமா வேற இருக்கா போல..” என்றதும் அகானா அதிர்ந்து பார்க்க,
“அங்க வேலைக்கு இருக்கிறது என்னோட ஆளுங்க.. ஒன்னும் ஒன்னும் ரெண்டு, என்னைத் தெரிஞ்சி எல்லாத்தையும் கோட்டைவிட்ட நீ ஒரு மண்டு..” என நக்கலாக பாடியபடியே, அகனாவின் அதிர்ந்த முகத்தை, ஒரு குரூர வெற்றியுடன் உள்வாங்கிக் கொண்டிருந்தார் மைதிலி.
1 comment
வில்லி இவளே அவ்வளவு யோசிக்கும்போது, ஒரு ஜில்லாவுக்கே கலெக்டர்..
அதைவிட ட்ரிபள் பங்காத்தானே யோசிச்சு திட்டத்தை செயல்படுத்தணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797