• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நட பிரம்மம்- நடை -2

kkp6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
34
18
Tamil nadu

நட பிரம்மம்-
நடை -2

காலை வேளை.

மணி சரியாக 8.02 ஆகி இருந்தது.

வானை தொட முயற்சி செய்தபடி ,இருபத்தி ஐந்து தளங்கள் கொண்ட அந்த கட்டடத்தில், வேலை செய்துகொண்டு இருந்த அந்த மின் தூக்கி பதினெட்டாவது தளத்தில் அறிவிப்பு இல்லாமல் நின்றது .

நன்றாக உடை அணிந்த நான்கு நபர்கள் மின் தூக்கியின் உள்ளே நின்று இருந்தனர். நின்று இருந்தவர்கள் தங்களுக்குள் பதட்டமான பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.

பேசுவதற்கு ஒருவருக்கும் நா எழவில்லை..

காரணம், அவர்களுக்கு மத்தியில் ஐந்தாவதாய் நின்று கொண்டிருந்தான் அவன்.

அவன்- சத்தமில்லாமல் தோட்டாக்கள் நிறைக்கப்பட்ட ஒரு துப்பாக்கி என அனைவரும் அறிந்தே இருந்தனர்!

அவன் யார்?

மூச்சு கூட விடாத அவன் சிலை போல் நின்றிருந்தான். துளியும் உடலில் அசைவு இல்லை .கண்கள் நேராக நின்றபடி பதினெட்டு என மின்தூக்கியின் உள்ளே தெரிந்த இடத்தை பார்த்துக் கொண்டே கூறினான்.

“நா இங்க லேட்டா வர்றதுக்காக யாருக்கும் சம்பளம் கொடுக்கிறது இல்ல! நேரத்துக்கு வரணும்னா வரணும். வர முடியல்லன்னா, வேற எடத்த பாத்துட்டு போய்ட்டே இருக்கலாம்.” என அவன் கூறி முடிக்கவும் பாதியில் நின்றிருந்த மின்தூக்கி மீண்டும் உயிர் பெறவும் சரியாக இருந்தது.

தான் இருந்த பதினெட்டாவது தளத்தில் இருந்து கடைசி தளத்தில் போய் மின்தூக்கி நின்றவுடன் கதவு திறக்கப்பட்டது.

அதற்குள்ளாகவே அவனுடன் நின்றிருந்த நான்கு பேரில் மூவர் மூச்சு விடவே மறந்து இருந்தனர்.

இன்னொருவரோ வேர்வை குளத்தை தன் சட்டையின் கழுத்துப்பட்டையில் மறைத்து வைத்திருந்தார்.!

அவன் தன் ஆஜானுபாகுவான உடலை நகர்த்தியபடி மின்தூக்கியில் இருந்து வெளியேறினான்.

தன் கையில் மிளிர்ந்த ரோலக்சை பார்த்தான். அது அவனுக்காக பிரத்தியேகமாக செய்யப்பட்ட ஒன்று என்பது அங்கு வேலை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

கையில் கடிகாரத்தை பார்த்தவன் அடுத்த வார்த்தை எதுவும் பேசாமல் எட்டி நடந்தான்.

அவன் இருக்கும் உயரத்திற்கு தான் அடைய வேண்டிய அறையை நான்கே அடியில் அடைந்திருந்தான்.

மின்தூக்கில் இருந்து அவன் வெளியேறும் ஓசை கேட்டதுமே ,அந்த அலுவலகமே ஸ்தம்பித்து இருந்தது. சிங்கத்தின் கர்ஜனையை கேட்டதும் தெறித்து ஓடும் விலங்குகளை போல , அங்கே வேலை பார்ப்பவர்கள் விலகிச் சென்று அவன் நடப்பதற்கு ஏதுவாய் வழி அமைத்தனர்.

அங்கே பணி செய்பவர்கள், மேளாலர்கள்,அவ்வளவு ஏன், அலுவலக நிர்வாகிகள் கூட அவனது தோரணையில் சற்று விதிர்த்து தான் போவார்கள் . கண்கள் கூட அவனை ஏறெடுத்து பார்க்க பயப்படும்!

இத்தனைக்கும் அவன் அந்த அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூட இல்லை ! அப்படி இருக்கவும் அவனுக்கு ஆசை இல்லை ! ஆனால் அந்த அலுவலகம் அவனுடைய தாளத்திற்கு ஏற்றவாறு தான் ஆடியது !

எட்டி நடந்தவன் நேரே நுழைந்தது அங்கே குளுமை நிறைந்த கலந்துரையாடல் அறையில் !

அவனுக்கு தேவையில்லாத எந்த இடத்திலும் அவன் நுழைவதில்லை ! அப்படி நுழையாத இடங்களை எப்படியேனும் அவன் தன்னுடையதாக ஆக்கி விடுவான்!

“குட் மார்னிங் சார்!” என அவன் வருவதை பார்த்து, அங்கு வந்திருந்த புது அலுவலகர் ஒருவர் அவனுக்கு ஒரு நாற்காலியை கொடுத்தார்.

“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நான் உட்கார மாட்டேன்!” எனக் கூறியவன் தான் அணிந்திருந்த ஆடையின் மேல் உடுப்பை அவிழ்த்து அங்கிருந்த நாற்காலியில் தூக்கி எறிந்தான்.

“கேக்கறதுக்கு ஏதாவது உருப்படியா இருக்கட்டும்.ஆரம்பிங்க!” என கூறி எதிலும் ஆர்வம் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

அங்கு குழுமியிருந்த ஆட்களின் குழுத்தலைவர் மாதாந்திர வியாபாரத்தை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.

அவனோ அங்கு இருந்த கணினியின் திரையில் ஒரு நொடி கூட தன் கண்களை செலுத்தவில்லை! மாறாக அவனது மொத்த பார்வையும் அங்கு அமர்ந்திருந்த மக்களின் மீது தான் இருந்தது!

கண்கள் அவர்களை அளந்து கொண்டிருந்தன.

அவர்களை மதிப்பீடு செய்து கொண்டிருந்தன.

இன்னும் சொன்னால் சொல்லப்போனால் கூறு போட்டுக் கொண்டிருந்தன!


“சோ வழக்கமான டார்கெட்ட விட 8.4% கம்மியாயிடுச்சு! கரெக்ட் ?” என்றான் அவன் முன்னால் இருந்த மாதாந்திர பட்ஜெட்டை பார்த்தபடி .

அனைவரும் அதற்கு பதில் இல்லாமல் கல்லை விழுங்கியது போல அமர்ந்திருந்தனர்.

“சொல்லுங்க!! உங்களுக்கெல்லாம் போனஸ் கொடுக்கிறது இந்த மாதிரி ஏனோதானோன்னு வேலை செய்றதுக்கா?” என்று கர்ஜித்தான்.

“அது வந்து… சார்… மார்க்கெட்…” என ஒருவர் ஆரம்பிக்கும் முன்னரே ,

“நா உங்ககிட்ட இதுக்கான சாக்கு போக்க கேக்கல மிஸ்டர். எதுக்காக நா என்னோட காசை தேவையில்லாத இடத்துல கொட்டி வேஸ்ட் பண்ணனும்??” என அவன் கேட்ட கேள்விக்கும் அங்கு ஒருவரிடமும் பதில் இல்லை.

நிசப்தம் அனைவரின் காதையும் அடைந்தது.

கசப்பானதாய்…. எரிவதாய் இருந்தது….

குழுவில் ஒருவராக அமர்ந்திருந்த மனிதவள மேலாளர் நடுவில் இடைமறித்தார்.

“ஒருவேளை…. சார் நம்ம நம்மளோட ஸ்ட்ராட்டஜிய ரீவி விசிட் பண்ணா…!” என கேட்ட அவரையும் பேசவிடாமல் இடைமறித்தான் அவன்.

“அது சரியா வராது…. ஐ திங்க்… நீ உன்னோட கேரியர் சாய்ஸ நீ திங்க் பண்ணலாம்!” என கூறி முடித்து எழுந்தவன், சட்டையை நேராக்கிக் கொண்டான்.

விரல்களால் டக் டக் என சொடக்கு போட்டவன்

“உங்க எல்லாருக்கும் ஒரு மாசம் டைம் தரேன்! அதுக்குள்ள இது மாறலனா,எல்லாரையும் எனக்கு தோணுற மாதிரி ஃபயர் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்! என்னோட இன்ஸ்டிங்க்ட் எப்பவுமே தப்பானது இல்ல!” என்று கூறி வெளியேற எத்தனித்தான் .

நான்கு அடிகள் எடுத்து வைத்தவன் ஒரு நிமிடம் நின்றான்.

திரும்பிப் பார்த்து கூறினான் :”முக்கியமா வெளியில இருக்கிற மோட்டிவேஷனல் போஸ்டர் எல்லாம் எவன் ஓட்டுனானோ அவனையே அதை எல்லாம் கிழிச்சு தூக்கி போட சொல்லுங்க ! வேலை செய்யறதுக்கு உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் இல்லனா பேப்பர் ஓட்டுறதுனால மட்டும் இன்ஸ்பிரேஷன் வந்துடாது !காட் இட்?” எனக் கூறிவிட்டு என வெளியேறினான்.

*****
அன்று மாலை , பக்கத்தில் இருந்த ஒரு பெரிய உணவகத்திற்கு சென்றவன் உணவகத்தின் மொட்டை மாடிக்கு செறான்.அங்கே செடிகளுக்கு நடுவே மேஜைகள் அமைத்து இருந்தனர்.

அவன் என்றுமே தனக்காக ஒரு உணவு மேஜையை முன் பதிவு செய்ததே இல்லை. இப்போதும் அப்படியே!

அங்கிருந்த மேலாளர் ஓடி வந்தார்.

“சார் டேபிள்ஸ் எல்லாம் ஃபுல்லா புக் ஆயிடுச்சு. நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணீங்கன்னா…….” என முடிப்பதற்குள், எப்பொழுது போல் அவரையும் பேசவிடவில்லை.

“எனக்கு வெயிட் பண்ற பழக்கம் எல்லாம் கிடையாது மிஸ்டர் ! யாரையாவது வேற டேபிளுக்கு மாத்துங்க!” என ஆணையிட்டான்.

மேலாளர் தத்தளித்தார்!

“சார் அது வந்து…”

“சாரு.. மோரு..எல்லாம் எனக்கு தேவையில்லை ! ஒன்னு எனக்கு ஒரு டேபிள குடுங்க ! இல்ல உங்க ஓனர் நம்பர் குடுங்க! எது பெட்டர்னு நீங்களே யோசிச்சுக்கோங்க!" என்று அவன் மிரட்டிய அடுத்த இரு நிமிடங்களில், பாவமாக அங்கே அமர்ந்திருந்த ஒரு தம்பதியினர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சூப்பை கூட குடிக்க முடியாமல் பக்கத்து மேஜைக்கு நகர்த்தி அமர வைக்கப்பட்டனர்.

அவர்கள் முன்பு அமர்ந்திருந்த மேஜையில் இவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான்.பத்து நிமிடங்கள் கழித்தும் ஒன்றும் கொண்டு வர சொல்லாமல் அமர்ந்து இருந்தான்.என்ன செய்வது என்று தெரியாமல் உணவக மேலாளர் தத்தளித்தார் .அவனது கண்களோ வெற்றிடமாய் இருந்த வானத்தை பார்த்துக் கொண்டு இருந்தது.பற்களை கடித்துக்கொண்டு இருக்கிறான் என்பதை இறுக்கமாக இருந்த அவனின் தாடை எலும்புகள் சுட்டிக்காட்டின.

சிறிது நேரம் கழித்து வேறு வழி இல்லாமல் அங்கே வந்த நபர் அவனிடம் உணவு பட்டியலை கொடுத்தார். அதை பிரித்துக் கூட பார்க்காமல்

“எனக்கு அமைதியையும் தனிமையையும் மட்டும் கொண்டு வாங்க ! “ என கூறியவனை வித்தியாசமாக பார்த்தனர் அங்கு இருந்தவர்கள்.

தன் தோரணையால் அனைவரும் நடுநடுங்க வைத்தவன் கடைசியாக வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு பதியோன்றரையை தொட்டிருந்தது.

அவன் வீடே ஏதோ ஒரு குளிர்சாதன பெட்டியை போல் சில்லென்று இருந்தது. ஒரு திரைச்சீலையோ,செடிகளோ, மென்மையோ இல்லாமல் வெறும் செங்கல், சிமிட்டி, கண்ணாடி என பொருட்களால் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

உள்ளே நுழைந்ததுமே தனது மணி பரிசை எடுத்து அங்கே இருந்த மேஜையில் தூக்கி எறிந்தவன், வெறுங்காலுடன் நேரே நடந்து சென்றது வீட்டிற்குள்ளேயே அவன் வைத்திருந்த மதுபான அறைக்கு தான்!

ஐஸ் கட்டிகள் போடாமல் கோப்பையில் வெறும் விஸ்கியை ஊற்றி குடித்தான்.

தரை முதல் தளம் வரை நெடுநெடு என உயர்ந்திருந்த அந்த ஜன்னலின் வழியே இருண்டு கிடந்திருந்த அந்த நகரத்தை கூட முறைத்துக் கொண்டிருந்தான்!

“எங்கே எனக்கு முன் நீ உன் கண்ணை சிமிட்டு விடு பார்க்கலாம்” என்று நகரத்திடம் அவன் வாதாடுவதாக இருந்தது.

அங்கு பணி செய்யும் பெண் கூட கிளம்பி இருந்து பல மணி நேரங்கள் ஆகியிருந்தன. அவளை கூட தான் வருவதற்கு முன்பாகவே கிளம்பி இருக்க வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தான். மனித மூச்சுக்காற்று தன்னுடைய பிரத்யேக இடத்தில் இருப்பதை அவன் என்றுமே விரும்பியதில்லை…தேவையான இடங்களை தவிர !

குடித்து முடித்தவனின் கைபேசி அலறியது.

எடுத்துப் பார்த்தான்.

ஒரு குறுங்செய்தி வந்திருந்தது. அதுவும் ஒரு சேமிக்கப்படாத எண்ணில் இருந்து!

குறுஞ்செய்தியை திறந்து படித்தான்!

“அரசர்கள் கூட ஒரு நாள் விழுந்து விடுவார்கள்! நீ விழும் பொழுது எந்த அரியணையும் உன்னை பிடிக்கப் போவது இல்லை !”என்று அந்த குறுஞ்செய்தி கூறியிருந்தது.

அதற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் அந்த எண்ணை மட்டும் சேமித்துக் கொண்டான் .

சில மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு எண்ணில் இருந்து அவனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து அவனை தொந்தரவு செய்தது!

“நீ இன்னும் இந்த உலகத்த சரியா புரிஞ்சிக்கல! “என அந்த குறுஞ்செய்தி அவனை சாடியது.

நெடுநேரம் அவன் அதை பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு பதிலையும் தட்டினான். ஆனால் அனுப்புவதற்கு முன்பாகவே அதை அழித்து இருந்தான்.

“நான் புனைக்கதைகளை விரும்புவதில்லை ;அது எவ்வளவு அழகானதாக இருந்தாலும் கூட!” என்று தட்டச்சு செய்த அதை அழித்துவிட்டு கைபேசியை தூக்கி எறிந்தான்.

மீண்டும் ஒரு கிளாஸ் விஸ்கி அவனுக்கு இறையானது.

அங்கே இருந்த மேஜையின் ஒரு அறையில் இருந்தது அந்த புகைப்படம் !

அந்தப் புகைப்படம் அங்கு இருப்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் .அது யாருடைய புகைப்படம் என்பதும் தெரியும்! இருந்தும் கூட ஒருமுறை கூட அவன் அதை எடுத்துப் பார்த்தது இல்லை . மேஜை அறையை திறந்து அதை எடுக்க போனான் !எடுக்கப் போனவன் தன் கையை தானே இழுத்துக் கொண்டு மீண்டும் அதை மூடினான், பட்டென!

மதுபான அறையின் விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினான் .

அவன் எவரின் சொல்லுக்கும் கட்டுப்படாதவன்!

யாரிடமும் மன்னிப்பு கேட்காதவன்!

எவருடைய சகவாசத்தையும் எதிர்பார்க்காதவன்.

திமிரின் மொத்த உருவம் அவன் - தமிழமுதன்.

தொடரும்
 

Mrs Karuppiah

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 15, 2025
2
2
3
Chennai
The way you penned this masculine character thamizhamudhan is extraordinary.Im just waiting how your Tamil is going to play with this Tamizhamudhan and Thendral...... beautiful....
 
  • Like
Reactions: kkp6

kkp6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
34
18
Tamil nadu
நன்றி சகி.
கற்பனை குதிரைக்கு
கடிவாளம் போடாமல்
கண்டிப்பாக -கதையின்
காயை நகர்த்த முயற்சிக்கிறேன்.