• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 3

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
53
70
18
Thanavur
துளி துளியாய் துரோகம் 3

வர்ஷா இன்றளவும் தன் வாழ்க்கையில் வரமாய் கருதுவது சிந்து மற்றும் பைரவியை. வெளி ஆட்கள் அவர்களை வேலையாள் போலக் கருதினாலும் , வர்ஷா என்றுமே அவர்களை அந்த கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை.

வர்ஷாவிற்கு அவ்விருவரும் உயிர்த் தோழிகள். தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக அவர்களிடம் பகிர்வாள். சிந்து அடக்கமான பெண். எதையும் நிதானமாகச் சிந்தித்து செயல்படுவாள். பைரவி எல்லாவற்றிலும் தடாலடி.

வர்ஷா மறக்க முடியாத நிகழ்வு அவர்களின் முதல் சந்திப்பு. அது வாழ்க்கை முழுவதும் மூவரையும் ஒன்றாக பயணிக்க வைத்தது. சிந்து பைரவிக்கும் கூட அது இனிமையான நிகழ்வு ஏனெனில் தங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஆயிற்றே.

வர்ஷாவின் இரு தோழிகளான சிந்து மற்றும் பைரவி. இந்த பெயர்களை அவர்களுக்குப் பெற்றோர் நல்ல நாள்ப் பார்த்து தொட்டிலிட்டுச் சூட்டவில்லை.

அவர்கள் வசிக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் சிந்து பைரவி படத்தைப் பார்த்து அதன் தாக்கத்தால் தாங்களே தங்களுக்குப் பெயர் சூட்டிக் கொண்டனர்.

அங்கு வசிக்கையில் அவர்களுக்கு ஆதரவற்ற இல்லத்தின் தலைவி வேறொரு பெயரை வைத்தார். ஏனோ அந்த பெயர் இருவருக்கும் பிடித்தமாக இல்லை. விவரம் தெரிந்த வயதில் பெயரை மாற்றிக் கொண்டனர். இல்லமும் சம்மதித்தது.

இருவரும் வளர்ந்தது ஆதரவற்றோர் இல்லத்தில்தான். யாரோ இருவரின் காம இட்சைக்கு இவர்கள் பலி. பெரும்பாலும் தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை கிட்டுவதில்லை. அதே போலத்தான் இவர்கள் எந்த தவறும் இழைக்காமல் தண்டனையை அனுபவிக்கின்றனர். பிறந்த சில நாட்களிலேயே ஆதரவற்றோர் இல்லத்தின் வாயிலில் வெவ்வேறு தினங்களில் கிடந்தனர். ஆதரவற்றோர் இல்லத்தில் பெரும்பாலானவர் கதையும் ஒன்றாகவே காணப்பட்டது.

இருவரும் ஒரே இடத்தில் வளர்ந்தனர் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இருவருக்கும் இல்லை. எப்படியோ சிந்தும் பைரவியும் ஏதோ ஒரு ஈர்ப்பு விசையின் காரணமாக நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.

அப்போது தான் வாழ்க்கை மாற்றத்திற்கான முக்கிய நிகழ்வு நடந்தேறியது. இருவருக்கும் பன்னிரண்டு வயது இருக்கும். இல்லத்தின் முன்னே வேறு சில நண்பர்களுடன் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சட்டென சிறுப்பென் பெரும் குரலெடுத்து அழும் சப்தம் கேட்டது.

இருவரும் நண்பர்களுடன் வெளியே வந்து காண அங்குப் படகை போன்ற பெரிய கார் நின்றிருந்தது. அதன் அருகில் அவர்கள் வயதையொத்த சிறுமி அழுதபடி நின்றிருந்தாள். அவளை சுற்றி இரண்டு தெருநாய்கள் வெறியுடன் குலைத்துக் கொண்டிருந்தன. எந்த நொடியும் அவளை கடித்துவிடும் நிலை.

மதிய நேரம் என்பதால் தெருவிலும் ஆட்களின் நடமாட்டம் இல்லை. சிந்து பைரவியின் நண்பர்கள் திகைத்து நின்றனர்.

ஆனால் இந்த காட்சியைக் கண்ட சிந்து மற்றும் பைரவி கீழேயிருந்து சில கற்களைப் பொறுக்கி நாயின் மீது வீசினர். “ஷீ .. ஷீ” என விரட்டியும் விட்டனர்.

அந்த நாய்களும் ஓட்டம் பிடித்தன. மற்ற நண்பர்கள் மீண்டும் இல்லத்தினுள் சென்று தாங்கள் விட்ட இடத்திலிருந்து விளையாட்டைத் தொடர்ந்தனர்.

சிந்து சிறுமியிடம் ஆதரவாக “அழாத நாய் போயிடுச்சி .. இனி வராது” என்றாள். மிகவும் அருகே செல்லாமல் எட்ட நின்று பேசினாள். தாங்களும் அவளும் ஒன்றல்ல என அந்த வயதிலேயே அவளுக்கு புரிந்தது. பைரவி அருகில் நின்று காரை அதிசயமாகப் பார்த்தபடி நின்றாள்.

கார் அருகில் நின்ற சிறுப்பென் வர்ஷா என நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

கண்களைத் துடைத்துச் சிறு விசும்பலுடன் “தேங்க்ஸ்” என்றாள் வர்ஷா.

“வெல்கம்” என சிந்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தைப் பிரயோகித்து “நான் சிந்து .. இவ பைரவி” என அறிமுகம் செய்து வைத்தாள்.

“என் பேர் வர்ஷா .. கார் ரிப்பேர் .. டிரைவர் பக்கத்துல மெக்கானிக்க கூடிட்டு வர போயிருக்கார்” வர்ஷா சொல்ல

“உன் காரா?” பைரவி காரை சுற்றி வந்து கேட்டாள்.

“ஆமா”

“சூப்பரா இருக்கு”

“தேங்க்ஸ்”

அதற்குள் டிரைவர் வேர்வை வழிய ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தான். அதே நொடி வேறொரு காரும் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து வர்ஷாவின் தாயான சுந்தரி இறங்கினார்.

“அம்மா” என அணைத்த வர்ஷா மீண்டும் அழத் தொடங்கினாள். அப்படியே நடந்ததைக் கூறினாள்.

அவளை ஆதரவாக அணைத்து முத்தமிட்ட சுந்தரி டிரைவரைச் சீற்றத்துடன் முறைத்து “மெக்கானிக் போன் பண்ணா வரமாட்டானா? நேர்ல போயி ஆர்த்தி எடுத்து கூடிட்டு வரணுமா? பாப்பாவைத் தனியா விடாதானு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்” என டிரைவரை வசைபாடினார்.

“இல்ல மேடம் மெக்கானிக் போன் ரீசார்ஜ் பண்ணலை போல முதல்ல போன்தான் போட்டேன் ஆனா போன் போகல அதான் நாலு கட தள்ளித்தான் இருக்கான்னு ... பாப்பாவை காருக்குள்ள உட்கார வெச்சிட்டுதான் போனேன் மேடம்” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தான் டிரைவர்.

“மம்மி காருக்குள்ள உட்காரவே முடியலை” வர்ஷா சிணுங்கினாள்.

அதற்குள் மெல்ல மனித தலைகள் நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கினர். நடுரோட்டில் நின்று மற்றவர்களுக்குக் காட்சிப் பொருள் ஆக வேண்டாம் எனச் சுந்தரி “சரி காரை சரி செய்து எடுத்துட்டு வா .. நான் பாப்பாவ கூடிட்டு போறேன். நல்லவேளை எனக்கு போன் பண்ணனும் தோணிச்சே” என அலுத்துக் கொண்டு மகளுடன் கிளம்ப தயாரானார்.

இவற்றை சிந்து மற்றும் பைரவி பார்த்துக் கொண்டிருந்தனர். சுந்தரி இருவரிடமும் புன்னகையுடன் “ரொம்ப தேங்க்ஸ் மா ..”என்றார்.

இருவரும் என்ன பேசுவதென்றே தெரியாமல் முழித்தனர். இத்தனை பெரிய கார் பணக்கார வீட்டு மனிதர்கள் இதுவரை அவர்கள் கண்டிராத காட்சிகள்.

உடனே வர்ஷா “இவங்க என் அம்மா” என இருவருக்கும் அறிமுகப்படுத்தினாள்.

சிந்து பைரவி மிரட்சியுடன் “வணக்கம்” என்றனர்.

அவர்களின் மனதைப் படித்தவராகச் சுந்தரி “எந்த கிளாஸ் .. எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்க?” என பொதுவாகக் கேட்டார்.

“கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறோம். செவன்த் ஸ்டாண்டாட்” என சிந்து கூறினாள்.

“வீடு எங்க? அம்மா அப்பா?” என சுற்றும் முற்றும் பார்த்தபடி வினவினார்.

சிந்து “நாங்க இல்லத்துல இருக்கோம். அம்மா அப்பா இல்ல…” எனத் தங்கள் இல்லத்தைச் சுட்டிக்காட்டினாள். அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.

சுந்தரிக்குப் புரிந்துவிட்டது.

“மம்மி ரெண்டு பேரும் சோ போல்ட் .. நாயைத் துரத்தி என்னை காப்பாத்திட்டாங்க” எனச் சிந்து பைரவியின் வீர தீரப் பராக்கிரமத்தை வர்ஷா சற்றே மிகைப்படுத்திக் கூறினாள்.

சிந்து பைரவி தாங்கள் இத்தனை செய்தோமா? என வர்ஷாவை வாயைப் பிளந்து பார்த்தனர்.

சுந்தரி வர்ஷாவுடன் கிளம்பினாள். ஏனோ வர்ஷா சிந்துவையும் பைரவியையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி கிளம்பினாள். “பை பை” எனப் பல முறை கூறினாள்.

சிந்துவும் பைரவியும் கூட கார் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகியும் வர்ஷா அவர்கள் நினைவாக இருந்தாள் “சிந்துவும் பைரவியும் பாவம் இல்ல ம்மமி. அங்க எப்படித் தான் அங்க இருக்காங்க?” என அம்மாவைக் கேட்டாள்.

கொசுக்கடி, பெருச்சாளி, துர்நாற்றம் இவையெல்லாம் பழகிப் போன வாழ்க்கையில் தழைத்து வளர்ந்த சிந்து பைரவி வர்ஷாவின் நினைவில் இருந்தனர்.

அடுத்த பத்து நாட்களில் வர்ஷா இரண்டு முறை அடம்பிடித்து தன் தாயுடன் இல்லத்திற்கு வந்து தன் தோழிகளைப் பார்த்தாள். அவர்களும் வர்ஷாவை கண்டதும் அகமும் முகமும் மலர ஓடிவந்தனர்.

வர்ஷா சாக்லேட் பிஸ்கட் என தன் தோழிகளுக்குக் கொண்டு வந்துக் கொடுத்தாள். அவை இல்லத்தின் மேலிடத்திற்குச் சென்றுவிடுகின்றன. இவை சுந்தரிக்குப் புரிந்தது ஆனால் வர்ஷா சிறுபிள்ளைதானே அவளுக்கு இந்த அரசியல் எட்டவில்லை.

சுந்தரிக்கு தன் மகள் இப்படியான ஒரு இடத்திற்கு அடிக்கடி வருவது பிடித்தமாய் இல்லை. பயமறியாத சிந்து பைரவியைச் சுந்தரிக்கும் பிடித்திருந்தது.

வர்ஷாவின் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நுனிநாக்கு ஆங்கிலமும் வறட்டு கௌரவமுமாய் சுற்றித் திரிந்தனர். உண்மையான நட்பு வர்ஷாவுக்குக் கிட்டவில்லை. கிட்டிய நட்புகளும் உண்மையாக இல்லை.

சிந்துவும் பைரவியும் தன் மகளுடன் இருந்தால் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் எனச் சுந்தரி எண்ணினார். அதற்காக சில முடிவுகளை எடுத்தார்.

இல்லத்தில் பேசி சில லட்சங்களை நன்கொடையாகக் கொடுத்து சட்டப்படி சிந்து பைரவியை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்களைச் சகல வசதிகளுடன் தனி வீட்டில் தங்க வைத்தார். அனைத்து வேலைக்கும் ஆட்களை அமர்த்தினார்.

“வர்ஷா இனி உன் பிரெண்ட்ஸ் உன் பக்கத்திலே இருக்கப் போறாங்க” எனச் சொல்லவும்

அன்னையிடம் “தேங்க்ஸ் மாம்” என்றபடி மகிழ்ச்சியில் குதித்தாள் வர்ஷா.

“வர்ஷா அவங்க இனி உன் ஸ்கூல்லதான் படிக்கப் போறாங்க” எனச் சுந்தரி கூறியதும் … துக்கமும் சந்தோஷமும் ஒருசேர வர்ஷா முகத்தில் பிரதிபலித்தது.

“அவங்களால சமாளிக்க முடியுமா?” சந்தேகமாக வர்ஷா கேட்டாள்.

ஏனெனில் அங்குப் பணக்கார தோரணையுடன் பழகுவது சகஜமான ஒன்று. விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பது, கௌரவம் பார்ப்பது, ஏற்ற தாழ்வுகளை சுட்டிக் காட்டுவது என்பதெல்லாம் பள்ளி குழந்தைகள் மனதில் தலைவிரித்தாடுவதை வர்ஷா நன்கு அறிவாள்.

தன் தோழிகள் யார் முன்னிலையிலும் இறங்கிவிடக் கூடாது என வர்ஷா எண்ணினாள்.

சுந்தரி தன் மகள் இத்தனை சிந்திக்குமளவு பெரியவள் ஆகிவிட்டாளா? என புருவம் உயர்த்தி மகிழ்ச்சியாக வாஞ்சையுடன் பார்த்தவர் “டீச்சர் அப்பாயிண்ட் பண்ணிருக்கேன். அவங்க மூணு மாசம் சிந்து பைரவிக்கு டிரைனிங் கொடுப்பாங்க” என்றாள்.

“வாவ் தேங்க்ஸ் மாம்” என அன்னைக்கு முத்தமழை பொழிந்தாள் வர்ஷா. தன் மகளின் சந்தோஷமே தன் சந்தோஷம் என வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர் ஆயிற்றே சுந்தரி. மகளின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு அடியையும் சிந்தித்துச் செயல்படுத்தினார்.

தொடக்கத்தில் சிந்து பைரவிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. புது வீடு புது நட்பு என அனைத்தும் சொல்ல முடியா வண்ணம் அளவற்ற மகிழ்ச்சியை அள்ளித் தெளித்தது.

முதலில் சற்று அச்சமாக இருந்தாலும் காலப் போக்கில் மாற்றங்களை ஏற்றுக் கொண்டனர். வர்ஷா மற்றும் சுந்தரியின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்தனர்.

சுந்தரி இருவரையும் அழகு நிலையம் அழைத்துச் சென்று இருவருக்கும் தேவையானதை செய்வித்தார். பின்பு நடை உடை என அனைத்திலும் எப்படி நடக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தார்.

ஒரு நாளில் எல்லாம் மாறிவிடாது எனப் புரிய வைத்தார். அவர்களுக்கான ஆசிரியரை அறிமுகம் செய்தார். அந்த ஆசிரியை மைனா இனிமையாக பழகினார். அனைத்தையும் நிதானமாக கற்றுக் கொடுத்தார்.

தினமும் வர்ஷா அவர்களுடன் வந்து பேசி சிரித்து விளையாடினாள். ஒரு மாதத்திற்குப் பிறகு ஆசிரியை அவர்கள் படிக்கப் போகும் பள்ளிக்கு வெளியே நின்று பார்க்க வைத்தார்.

மாணவர்களின் பேச்சு நடை உடை பார்த்து சிந்துவும் பைரவியும் கலங்கிப் போயினர். தமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை எனத் தோன்றியது.

“மேம் இந்த விளையாட்டே வேண்டாம். நாங்க இல்லத்துக்கே கிளம்பி போயிடுறோம்” என மைனாவிடம் பைரவி அழாத குறையாக கேட்டு கொண்டாள்.

சிந்து “எனக்கும் சமாளிக்க முடியும்னு தோணல .. உருவத்தை மாத்திடலாம் ஆன உள்ளம்” எனச் சோர்ந்துவிட்டாள்.

ஆனால் மைனாவும் இருவரிடமும் “எப்பவும் மாற்றம் நமக்குள்ள இருந்து வரவேண்டும். இதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல” எனத் தேற்றிப் புரிய வைத்தார்.

மூன்று மாதம் முடிவடையும் தறுவாயில் சிந்து மற்றும் பைரவி மேற்கத்திய நாகரிகம் கொண்டவர்கள் பேசி பழகுவது போல முற்றிலும் மாறிவிட்டனர்.

வர்ஷா பள்ளியில் சிந்துவும் பைரவியும் நுழைவுத் தேர்வு எழுதி சேர்க்கப்பட்டனர். அவர்களின் பெற்றோர் சிங்கப்பூரில் இருப்பதாக மற்ற மாணவர்கள் இடையே பரவச் செய்தாள் வர்ஷா. ஆனால் பள்ளி தாளாளருக்கு மட்டும் உண்மைத் தெரியும். சுந்தரியின் லட்சங்கள் அவர் வாயை பசை போட்டு மூடிவிட்டது. அந்த பள்ளியே சுந்தரி கட்டுப்பாட்டில் உள்ளது பிறகென்ன?

“நல்லவேளை சிங்கப்பூர்னு சொன்னாங்க … துபாய் குறுக்குத் தெருனு சொல்ல வேண்டியதில்லை” என பைரவி சொன்னாள்.

“நீயே உண்மையை உளறிடுவ போலியே .. சும்மா இரு” என வர்ஷா செல்லமாக அதட்டுவாள். மூவரும் சிரித்தபடி பள்ளிச் சென்றனர்.

மோகனுக்குத் தொழில் ரீதியாகப் பல எதிரிகள் உண்டு. எதிரிகளால் தன் செல்ல மகளுக்கு ஆபத்து நேரும் என்ற அச்சம் சுந்தரிக்கு எப்பொழுதும் இருக்கும்.

என்னதான் பாடிகாட் இருந்தாலும் வகுப்பறையில் அவர்கள் நுழைய முடியாது. தன் மகளின் சுதந்திரம் அவர்களால் பறிபோகும் என எண்ணியவருக்குச் சிந்து பைரவி பதிலானார்கள்.

வர்ஷாவின் இருபக்கமும் சிந்து பைரவி அரணாக நின்றனர். பள்ளி கல்லூரி என அனைத்து இடத்திலும் கூடவே நின்றனர்.

சிந்து பைரவி இருவருக்கும் தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பது மனதில் நன்றாக பதிந்திருந்த காரணத்தால் தேவைக்கு அதிகமாக எங்கும் எதுவும் கேட்கவில்லை. அதனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி இருந்தனர்.

விளையாட்டில் வர்ஷாவை வெற்றிப் பெற வைத்தனர். அவளுக்காக வீட்டுப்பாடம் எழுதினர்.

தங்களுக்கு இந்த சுகமான வாழ்வு நிலைக்க வேண்டும் என்றால் தகுதி இருந்தாலும் இல்லை என்றாலும் வர்ஷா எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும். வர்ஷா நினைத்ததை அடைய வேண்டும்.

அது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை வர்ஷா அடைந்தே தீர வேண்டும்.

அப்படி அனைத்திற்கும் உதவியவர்கள் காதலிலும் உதவினர். ஆனால் வர்ஷா அதில் மட்டும் தோல்வி அடைந்தாள்.



துளிகள் தெறிக்கும் …





















 
  • Like
  • Love
Reactions: Vathani and ADC

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
13
13
3
Bangalore
Azhagana friendship 🤩🤩 and Sindhu Bairavi vasadhi vaippu vandhalum thangal ellai miramal irupadhu super 👍🏼 Amma konjam suyanalavathi yaga irupangalo?? Varsha kaga ready to do anything.
Sundari seitha thavaru enavaga irukum?? Idhu thanakana thandanainu en feel pandranga?
Mohan oru aalu nu ivarai namburangale.haiyo haiyo 😁😁😁 swiss la appadi ye pottu thalidunga 🤣🤣

Interesting update sis 👏🏼👏🏼👏🏼 Parkalam indha payana indha thozhigaluku kuduka pogum thirupathai.

Thank you.
 
  • Love
Reactions: kkp5