• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலராத அல்லி மடல் -02

rihari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 15, 2025
2
3
3
Chennai
View attachment 1520



.



1750708766041.jpeg







மடல் -2




மேற்கு தொடர்ச்சி மலையின் தொலைவில் அமைந்துள்ள அரக்கு பள்ளத்தாக்கு என்ற அழகிய கிராமம்.காப்பு காடெங்கும் காட்டு மலர்கள் காயா தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் நல்ல பொன்னைப் போன்ற மலர்களைக் கொட்ட, தாழைமடல் குவிந்த மொட்டுக்களிருந்து அழகிய கைகளைப் போல் அவிழ, பெரும் இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல பூத்துக் குலூங்கின. மனிதர்களின் காலடித்தடம் படாததால் காடெங்கும் மூலிகை வாசம் காற்றோடு கலந்து வீசியது. காடும் காடு சார்ந்த இடம் ஆதலாலால் அடந்த மரங்களை தன்னுள் கொண்டிருந்தது. கார்காலத்தின் தொடக்கத்தின் தாக்கத்தால் பகல் பொழுது கருமையாக இருந்தது.


கரும்பச்சையும், இளம் பச்சையும் கலந்த நெடுக உயர்ந்த பாக்கு மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி. வெண்மை நிறமேகங்கள் சில நேரங்களில் பாக்கு மரத்தை தொட்டுவிட்டு செல்லும். பச்சையும், ஆரஞ்சு நிறமும் கலந்த பாக்கு கொத்துகள் காய்த்துக் குலுங்கின. என்னால் பாரம் தாங்க முடியவில்லை என்று பழுத்த பாக்கு கனிகள் மண்ணில் கொட்டி கிடந்தன. பாக்கு மரத்தை அரவம் சுற்றியது போல் மிளகும், வெற்றிலை கொடிகளும் பின்னிக் கிடந்தன. மிளகுவிதைகள் அபார வளர்ச்சியுடன் பருவம் அடைதிருந்தன.

கோஸ்தானி நதியால் வடிகட்டப்படும் அலை அலையான நீர், நீர்வீழ்ச்சியாக இந்த அரக்கு பள்ளத்தாக்கை வருடம் முழுவதும் பசுமையாகவே வைத்து இருக்கிறது. அப்படி இயற்கையாகவே உருவான குளங்கள் பல உள்ளன.

காற்று வீசத்தொடங்கியது சில்லென்ற மழைதுளிகள் குளத்தில் விழ ஆரம்பித்தது. பெரிய பெரிய ஆம்பல் இலைகள்களுக்கு நடுவே இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த அல்லி பூக்கள் தலைகவிழ்ந்து இருந்தன. அதில் கிளக்... கிளக்கென்று சப்தத்துடன் நிறைய கெண்டைகள் குதித்துக் கொண்டிருந்தன. அமைதியான தடாகத்தின் நடுவிழிருந்து ஒரு அல்லி மலர் தலை நீட்டியது.

அல்லி மலரின் மேல் ஒரு கயல் குதித்தது,மழைதுளிகள் வேகமெடுத்தது,

அல்லி மலர் கரை ஒதுங்கியது.
கரை தட்டியது மலர் அல்ல
அல்லியவள் "மடல் "ஆவாள்....!!
கயல் துள்ளியது பெண்ணவள்
குவளை மலர் இமைகளை கண்டு
மண் தொட்டது மைவிழியின்
கார்குழல் அலை அலையாய்....!!
வன மோகினியாய் காரிகை
நின்றாள் அல்லி தடாகத்தில்....!!


நித்திலநீர் முகத்தில் வழிந்தது. பால்நிலவின் வண்ணத்தில் வதனம் வரைந்து,கருங்குவளையின் வண்ணத்தில் கயல்கள் தீட்டி,பிறைநெற்றியில் பிம்பம் செதுக்கி,மயில்இறகின் தோகையாக கார்குழல்கள் பாதம் தொட, வனத்தின் பேரழகியை கண்டு யாராக இருந்தாழும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தே நிற்பார்கள்.

ஈரத்துடன் வெளியே வந்தவள் தன் ஆடையை பிழிந்து கொண்டே நடந்தாள். தன்னுடைய மூங்கிள் கூடையை எடுத்துக் கொண்டே தோப்பை நோக்கி நடந்தாள் மடல்.

வழியில் சந்தன நிற காட்டு ரோஜாக்கள் மழையில் குளித்து தன்னை அழகியாக்கிக் கொண்டு நீயா.... நானா...என்ற போட்டிக்கு இவளை அழைத்தது. அவசரமாக பூக்களை கொய்த்து கூடையில் இட்டவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்ததது.

மழைவிட்டு செங்கதிர் வெளிச்சம் லேசாக வர தொடங்கியது.தோப்பிற்குள் பலாமரங்கள்களிருந்து வீசும் வாசனை, மாமரத்திலிருந்து வீசும் மாவின் வாசனை எந்த மனிதனுக்கும் நாக்கில் உமிழ்நீரை சுரக்க வைக்கும்.



ஜல்...ஜல்... என்ற சப்தம் கேட்டவுடன் பலாமரத்தின் மேல் உட்காந்து பலாசுளைகள் உண்டு கொண்டிருந்த ஒருவர் திரும்பி பார்த்தார்.

இம்.... திரும்பி பார்த்து விட்டு தன் கடமையில் கண்ணும் கருத்துமாக,வேறு கிளைக்கு தாவி இன்னொரு பலாவை ருசி பார்க்க ஆரம்பித்தார்.

துளு..... துளு.... எங்க இருக்க நீ என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள் மடல்.பலா மரத்தின் அருகே வந்தவுடன் நிமிர்ந்து பார்த்தாள் இவளுக்கு தெரியும் துளு எங்கே இருப்பான், என்ன செய்து கொண்டு இருப்பான் என்று.


மரத்தின் மேலே உள்ள இடைவெளியில் மஞ்சள் நிற வெளிச்சம் முகத்தில் பிரதிபலித்தது. தாழம்பூ நிறத்தில் இருந்த வதனம் சூரிய ஒளி பட்டதும் அல்லி மலராய் மாறியது.

துளு கிழே வா என்ற சப்தத்தில் கீழே பார்த்த துளு தாவி குதித்து மடலின் மேலே அமர்ந்தது.
கடவாய் முழுதும் பலாசுளைகளை நிரப்பிக் கொண்டு கைகளில் வேறு நிறைய சுளைகளை வைத்துக் கொண்டிருந்த துளு,இவளுடைய வாயில் ஒரு சுளையை திணித்தது.

ஹேய் துளு என்னடா பண்ற என்று கேட்டவள். (துளு என்பவர் நமது வானரம் மடலின் அன்பு தோழன்.ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அன்பம், பாசமும் ஆறுஅறிவு ஜீவராசிகளுக்கு இன்று இல்லை.) அன்பாக தடவி கொடுத்து வா... வா..... வேலையை பார்க்கலாம் துளு என்று மான் போல் ஓடினாள்.

மடலின் பின்னே ஒடியது துளு.துளு பாக்கு எடுக்கலாம் வந்து உதவி பண்ணு என்று மடல் அழைத்ததுதும் துளு ஓடிச்சென்று ஒவ்வோரு மரத்தின் அருகே கொட்டி இருந்த பாக்குகளை எடுந்து வந்து மூங்கில் கூடையில் போட்டது. இருவரும் ஒருவழியாக கூடையை நிரப்பியதும் தனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். துளு இவளுடையை கைகளை பற்றிக் கொண்டு நடந்தது.



மடல் அரக்கு கிராமத்தின் பழங்குடியின பெண். இவர்களின் ஆடைகள் வண்ணம் மயமான நிறத்தில் இருக்கும். இவர்களே இந்த ஆடைகளை பின்னி கொள்வார்கள்.வயது முதிர்ந்த பெண்கள் தலையில் இருந்து கால்வரை மூடிய உடையுடன் இருப்பார்கள். முகத்தை தன் கணவன் மட்டுமே பார்க்க அனுமதிப்பார்கள். மற்ற ஆண்கள் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். சிறிய பெண்களுக்கும் இதே கட்டுப்பாடுகள் தான்

பழங்குடியினரின் வகைகள் பல உள்ளன. அதில் பகதா, கடபா, கொண்டடோரா, வால்மீகி, மற்றும் பலர். இந்த பழங்குடியினர் இனம், மொழி மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள், அவை இப்பகுதியின் கலாச்சாரத்தை வளப்படுத்தும் அம்சங்களாகும்.


இந்த பழங்குடியினர் விவசாயம், கைவினைப்பொருட்கள் மற்றும் இயற்கை வளங்களை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர், இந்த பழங்குடியினரின் மக்கள் பல நூற்றாண்டுகளாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்துள்ளனர்.


தினை, மஞ்சள் மற்றும் உளுந்து போன்ற வகைகள் பயிரிடப்பட்டு, தனிப்பட்ட அளவில் இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. கூடுதலாக, அவை மூங்கில் மற்றும் அலங்கார பழங்குடி நகைகளுடன் நன்றாக வேலை செய்கின்றன, அவற்றை அவர்கள் சந்தைகளில் விற்கிறார்கள்.இவர்களின் தொழிலே காடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்கள்களை விற்பது மற்றும் விவசாயம் ஆகும்.

அரக்கு பள்ளத்தாக்கு பழங்குடிப் பகுதிகளில் உள்ள வீட்டுக் கட்டமைப்புகள் பச்சை இலைகளுக்கு மத்தியில் கட்டப்பட்ட எளிய மண் குடில்கள் ஆகும்.சுட்ட செம்மண்ணால் கட்டப்பட்டு, பெரும் காட்டு கோரை புற்களினால் வேயப்பட்ட குடிகள் இருந்தன. இந்த குடில்களின் சிறப்பு என்ன வென்றால் அரக்கு மரங்களில் மேல் படியும் பட்டை அரக்கை தீயில் உருக்கி மேல்பகுதியை கடினமான ஓட்டுபகுதியாக தயார் செய்வார்கள்.


மேலும் இங்கே உள்ள குகைகளிலிருந்து எடுக்கப்படும் சுண்ணாம்பு துகள்களை கொண்டே சுவர்களை அமைத்திருப்பார்கள்.
இதனால் எவ்வளவு மழை, புயல்காற்று அடித்தாழும் இந்த குடில்கள் எந்தவித சேதாரம் இல்லாமல் காப்பாற்றிக் கொள்வார்கள் இந்தமக்கள்.


வனத்தை கடந்து குடிலை அடைந்தனர்.துளுவும், மடலும் குடிலை நெருங்க நெருங்க மறுபடியும் கார்மழை பெய்ய தொடங்கியது. தீடிரென்று மையிருட்டை அப்பிக் கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

துளு குடிலுக்குள் வாசம் பிடித்துக் கொண்டே ஓடிச்சென்றது. உள்ளே மடலின் அம்மா சங்டி அடுப்பில் ரொட்டி வாட்டிக் கொண்டிருந்தாள். துளு சங்டியிடம் ஓடிச்சென்று அடுப்பை எட்டி எட்டி பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியில் நடனம் ஆடியது.
இச்... இச்... என்று சப்பு கொட்டியது.

உள்ளே ஓடிவந்த மடல்,அம்மா... அம்மா....எனக்கு முதலில் கொடு...கொடு... என்று அம்மாவின் அருகே அமர்ந்தாள்.

இருவருக்கும் நடுவே துளு வந்து நுழைந்தது. சுட..... சுட....அடையை எடுத்து வாழை இலையில் வைத்துக் கொடுத்தாள் சங்டி.

வெய்யில் காலங்களில் அரக்கில் அதிகம் விளையும் சிகப்பு கீரையில் உள்ள விதைகளை சேகரிப்பார்கள்.பின்பு அதை உலர்த்தி புடைத்து மாவாக்கி கொள்வார்கள். இதனுடன் கருப்பட்டி, தேங்காய்பூ பசும்நெய் சேர்த்து அடை வார்ப்பார்கள்.
ஊரெங்கும் வீசும் இதன் வாசம், ரூசியும் அபாரமாக இருக்கும். மழை காலங்களில் இந்த பண்டத்தை செய்வார்கள்.


மடலும், துளுவும் சண்டை போட்டுக் கொண்ட சாப்பிட்டார்கள். மடலிற்கு இந்த அடை என்றால் மிகவும் பிடிக்கும்.கூடவே கெட்டியான பசுங்கருப்பட்டி பானம் வேறு.

வாடை குளிர் காற்று ஊசியாய் குத்தியது. அடுப்பின் கனலால் குளிர் மட்டு பட்டது. சூடான பண்டம் ருசியாக இருந்ததால் துளுவிற்கு கொண்டாட்டம் தாங்க இயலவில்லை. சங்டி மடியில் படுத்துக் கொண்டு விளையாட்டு காட்டியது.

சங்டி மடலை அழைத்து ஈரம் துடைத்தார். தலையின் கூந்தல் கீழே விசிறி வாழையாய் படர்ந்தது. அதை பார்த்த சங்டிக்கு தன் குலதெய்வம் "திம்சா" ஞாபகம் வந்தது.அம்மனே தனக்கு பெண்ணாகவே பிறந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைவதா, இல்லை கவலை படுவதா என்பதை நினைத்தாள்.

பத்து தலைமுறைக்கு முன் சங்டியின் வழியில் பிறந்த பெண் திம்சா. பெரிய மூப்பரின் ஓரே மகள், தங்கத்தால் இழைக்கப்பட்ட செல்வமகள்.தேவலோக ரம்பை போல் இருந்த மகளை சீரும் சிறப்புமாக வளர்த்தார்.அன்றைய கால கட்டத்தில தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கே செல்ல வேண்டும்.

வயது வந்த பெண்பிள்ளைகள் கூத்தும் கும்மாளமுமாக தங்களின் பொழுதை ஆற்றங்கரையிலும், சமையல் அறையிலும் கழிப்பார்கள்.

ஒரு நாள் தண்ணீர் எடுத்துக் கெண்டு பெண்கள் சிரிப்பும் பாட்டுமாக தெருவில் வந்து கொண்டிருந்தார்கள். மூப்பரின் திண்ணையில் பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது.

தோழிகளுடன் பாடிக்கொண்டு வந்த திம்சா சந்தோச மிகுதியில் தன் மோதிர விரல்களால் தண்ணீர் குடத்தில் தாளம் தட்டிக் கொண்டே வீட்டினுள் சென்றாள்.அங்கிருந்த ஆண்கள் எல்லோரும் மூப்பரை பார்த்தவர்கள்.

என்ன இது.... ஒரு பெண் ஆண்களுக்கு மரியாதை இல்லாமல் செல்வதா.இப்படியா வளர்ப்பது என்று பேசிக் கொண்டார்கள். அந்த கால ஆண்கள் பெண்கள் சிரித்தாலே தங்களுக்கு அவமரியாதை என்ற தீவிர சிந்தனையுடன் இருந்தவர்கள்.

அப்படிப்பட்ட கால கட்டத்தில் அழகான ஒரு பெண் பாடுவதா....?அதைவிட தாளம் தட்டுவதா.....?ஏளனமாக பேச ஆரப்பித்து கூட்டத்தில் சலசலப்பு அதிகமாகியது.

நமது மூப்பரும் ஆண் அல்லவா.அவ்வளவுதான் சரசரவென வீட்டினுள் சென்றவர் நிலை வாசலில் நின்று கொண்டே மகளை அழைத்தார். கலைமான் ஒன்று துள்ளி குடித்து ஓடி வருவது போல் ஓடிவந்தாள் மகள்.

அப்பா என்றாள் ஆசைஆக தன் தந்தையை போல ஒரு தந்தை இந்த மூன்று உலகில் இல்லை என்ற இறுமாப்புடன் நின்றாள்.

மூப்பர் சிறிது நேரத்திற்கு முன்தான் தந்தையிலிருந்து,ஒரு ஆணாக மாறி இருக்கிறார் என்று திம்சாவிற்கு தெரியவில்லை.


மகளே எங்கே உன் விரல்களை காட்டு தங்க மோதிரங்கள் பார்க்கலாம், இங்கே கையை வை என்றார் மூப்பர்.

புன்சிரிப்புடன் இதோ அப்பா என்று கைகளை நிலை வாசப்படியல் வைத்தாள் செல்ல மகள்.

தன் இடுப்பில் இருந்து உறுவிய கத்தியை எடுத்து ஒரே வீசாக விசிறினார் மூப்பர். பத்து விரல்களும் மூலைக்கு ஓன்றாக தெரித்தது.

அப்பா.... என்று இரத்தம் சொட்ட சொட்ட துடித்தாள் பெண்.
ஒவ்வொரு விரல்களும் மீன்களை போல துடிதுடித்தது.

ஓடிவந்த திம்சாவின் அம்மா கதறினார். ஏன் இப்படி செய்தார் என்று தெரியாமல் இருவரும் கேட்டனர் மூப்பரிடம். அதுவரை பிரம்மை பிடித்து நின்றவர் கதற ஆரம்பித்தார்.


அய்யோ.... அய்யோ.... நான் என்ன செய்து விட்டேன் என் செல்வ மகளை என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.சப்தம் கேட்டு ள்ளே ஓடி வந்த ஊர்காரர்கள் ஸ்தம்பித்து நின்றார்கள். மனைவியிடமும், மகளிடமும் நடந்த காரணத்தை சொன்னார் மூப்பர்.

வலி தாங்காமல் இருந்தவள் சட்டென்று தன் தந்தையிடம் நான் ஒன்றும் தவறே செய்யவில்லையே, என்ன செய்தேன் பாடியது, தாளமிட்டது குற்றமா, அதை ஒரு பெண் செய்தது மாபெரும் தவறா.

எனக்கு எதற்கு இந்த தண்டனை....?

நீ ஆணாக பிறந்து ஆண்திமிரில் என் விரல்களை வெட்டியதால் உன் வம்சத்தில் பிறக்கும் ஆண்கள் எல்லோருக்கும் நான் பட்ட வேதனையை அவர்களின் மகள்களின் மூலமே அனுபவித்து துடிதுடித்தே இறப்பார்கள். நான் இந்த பரம்பரை பெண்களை கன்னி தெய்வமாக இருந்து காப்பேன்.இது என் சாபம் என்று சொல்லிக்
கொண்டே அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள் திம்சா.

சிறிது காலத்தில் அந்த கிராமமே வறண்ட பாலை வனமாகியது. அதன்பிறகே அந்த மக்கள் திம்சாவிடம் மன்னிப்பு கோரி சுமைதாங்கி கல்லை நட்டு கிராம தெய்வமாக வழிபட தொடங்கினர். இருந்தாழும் கன்னி பெண்ணின் சாபம் அல்லவா இன்று வரை தொடர்கிறது.


பத்து தலைமுறைகள் பெண் வாரிசுகள் இல்லாமல் வேறு விதத்தில் ஆண்கள் படாதபாடு பட்டே உயிர் துறக்கிறார்கள். இந்த தலைமுறையில்" திம்சாவின் பிம்பமே "மடலாக" உருவெடுத்துள்ளது என்பதை இந்த மக்கள் நம்புகிறார்கள்.

நாளை மடலின் பதின்ம வயது தொடக்க நாள். ஓவ்வொரு வருடமும் கன்னிக் கோவிழுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.



மடலின் தலையை கோதிக் கொண்டிருந்த சங்டி கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தாயே தயவு செய்த்து என் மகளை நீயே காக்க வேண்டும் என்று வேண்டினாள்.

மடியில் படுத்திருந்த துளு சங்டியின் கண்களில் வழிந்த நீரை துடைத்தது. உஷ்... உஷ்... என்று பாசத்துடன் துளு கட்டிக் கொண்டது கூடவே மடலின் கூந்தலை இழுத்துக் கொண்டு விளையாடியது

விதியை மதி வெல்லுமா...... இல்லை மதியை விதி வெல்லுமா....... சாபம் உண்மையா..... பொய்யா..... காலம் மட்டுமே பதில் சொல்லும். அதற்கு காத்திருக்க வேண்டும்.



மடல் (தொடரும்)
 
Last edited:
  • Love
Reactions: Vathani