துளி துளியாய் துரோகம் 2
வாழ்க்கை என்பது புரியாத புதிராக உள்ளது என இருபத்தைந்து வயது வர்ஷா தனக்குள் சிரித்தபடி கண்ணாடி முன் நின்றாள். தந்தையின் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது.
தன் பிரதிபிம்பத்தைக் கண்டு அளவிட்டாள் நல்ல உயரம், உருண்டை முகம், தோள்களைத் தாண்டி சுருட்டை முடி, மெச்சும்படியான அழகு. எதை நினைத்தாலும் அதை தன் காலில் விழச் செய்யும் பொருட்டு செல்வாக்கு அந்தஸ்து என இந்த வயதில் அனைத்தும் தன்னிடம் உள்ளது.
ஆனால் காதலை வாங்க முடியவில்லை. காதலன் தன் அருகில் உள்ளான். ஆனால் காதல் இல்லை. அவள் உதடுகள் தன்னை மறந்து மந்திரத்தைப் போல துஷ்யந்த் என சொல்லியது. பின்பு ஏமாற்றத்தைப் பெருமூச்சாக வெளியிட்டாள்.
“வர்ஷா” சிந்து அறைக்குள் பிரவேசித்தாள். அவள் உடன் பைரவி.
சிந்து வெறும் காரியதரிசி மட்டுமல்ல வர்ஷாவின் தோழி. இன்னுமொரு தோழியும் உள்ளாள் பைரவி. இன்றுவரை வர்ஷா உயிரோட்டத்துடன் இருக்கக் காரணமே இவ்விரண்டு தோழிகள்தான்.
” மேடத்தைப் பார்க்க ஹாஸ்பெட்டல் போகணும்” சிந்து நினைவூட்டினாள்.
“அம்மாவை எப்படி எதிர்கொள்ள போறேன் தெரியல சிந்து” வர்ஷா அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள். பல சதுரடி கொண்ட தனது பிரத்தியேக அறையில் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை எனத் தோன்றியது.
வர்ஷா மனதை நன்கு அறிவாள் சிந்து அதனால் பதிலளிக்கவில்லை.
பைரவி எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.
“என்ன பைரவி?” முகமே சரியில்ல வர்ஷா கேட்க
“இவளுக்கு வேற வேலை இல்ல விடு நாம கிளம்பலாம் நேரம் ஆகுது” எனச் சிந்து அவசரப்படுத்தினாள்.
வர்ஷா நிதானமாகப் பைரவி அருகில் சென்றாள் “என்ன?” என்பதாய் தோளைத் தொட
பைரவி “அந்த பக்கி இருக்கானே …” எனத் தொடர்ந்தாள்
“பைரவி” எனச் சிந்து அதட்ட
”பைரவி நீ சொல்லு” இது வர்ஷா
“நேத்து நைட் அந்த பக்கி அதான் ராகேஷ் கல்பனா மேடம் தம்பி என்னை ரூமுக்குக் கூப்பிட்டான்” பொரிந்தாள் பைரவி
அதிர்ந்த வர்ஷா சீற்றமும் ஆதங்கமும் மேலிட “வாட்?” என்றாள்
“நீ டென்ஷன் ஆகாத வர்ஷா … அவன் கூப்பிட்ட நான் சும்மா விடுவேனா .. பெரிய டிராமா பண்ணிட்டேன் …” எனப் பைரவி நடந்ததை விளக்கினாள்.
“வர்ஷாக்கு வேலைகாரினா எனக்கும் வேலைக்காரி .. ரூமுக்கு வா .. நான் சொல்றத செய்யணும்” என ராகேஷ் எகத்தாளமாக அவளை ஒரு மாதிரி பார்த்துச் சிரித்தான்.
பைரவி பதிலுக்கு அவனைப் பார்த்துச் சிரித்தாள் “அப்படியா எசமான் வாங்கப் போகலாம்.”
“அப்ப உனக்கு ஓகே வா?” காமம் தலைக்கேற ராகேஷ் அவளை தினுசாக பார்த்து வைத்தான்.
“நான் நர்சிங் படிச்சிருக்கேன் உனக்கு அபரேஷன் செய்துவிடத் தான் கூப்பிட்டேன் … வா போலாம்” என்றாள்.
ராகேஷ் எச்சிலை விழுங்கி அச்சம் அடைந்தாலும் வெளிக்காட்டாமல் அவளிடம் “இதை நான் நம்பணுமா?“
“நம்பாத .. சீக்கிரம் வா” என அவசரப்படுத்தினாள்.
அவளின் வேகம் கலவரப்படுத்தியது.
“இரு மயக்க மருந்து இருக்கா பாத்துக்கிறேன் … செல்லத்துக்கு வலிக்க கூடாதுல” அவனை ஒரு மார்க்கமாக பார்த்தாள்.
பின்பு தன் ஹேண்ட்பேக்கில் எதையே தேடுவது போலப் பாவனை செய்தாள். “ஆஹா நிறையவே இருக்கு .. வா .. இந்த ரூமா?” என அவனைச் சட்டையே செய்யாமல் முன்னே நடந்தாள்.
“போடி” என்றுவிட்டு வேகமாக வேறு பக்கம் நடந்தான்
“ராகேசு” எனப் பைரவி நக்கலாகக் கூவ
அவன் நடையில் வேகம் கூடியது.
“மாமோய்” என வேண்டுமென்றே மீண்டும் சத்தமாக அழைத்தாள். அவன் தலைதெறிக்க ஓடிவிட்டான்.
இதைக் கேட்டு வர்ஷாவும் சிந்துவும் சிரித்துவிட்டனர்.
பைரவி கடகடவென பேசும் ரகம். சூழ்நிலையை தனக்கேற்றபடி மாற்றிவிடுவாள். காரணம் அவள் வளர்ந்தது அப்படி.
“வர்ஷா டைம் ஆச்சு மேம்மை பார்க்க போகணும்” சிந்து நினைவூட்ட .. மூவரும் காரில் கிளம்பினர்.
மருத்துவமனையில் வர்ஷா மட்டும் தன் அன்னையைக் காணச் சென்றாள்.
வர்ஷா மருத்துவமனையின் வளாகத்தினுள் மெல்ல நடந்தாள்.
இந்த மருத்துவமனை அவளின் அன்னை சுந்தரி ஆசை ஆசையாகக் கட்டியது. குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதியினருக்குச் சிகிச்சை அளிக்க முதலில் தொடங்கியது. அதன் பின்னர் இதயம் சிறுநீரகம் என பல்வேறு பிரிவுகளுக்காகத் தனியாகக் கட்டிடங்கள் எழுப்பி விரிவடைந்தது.
இன்று இந்த மருத்துவமனையில் ஒரு கேன்சர் நோயாளியாக அவர் படுத்திருப்பதை வர்ஷாவினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிரித்த முகத்துடன் கழுத்தில் மாலையைப் போல ஸ்டெத்ஸ்கோப் அணிந்து கம்பீரமாக வலம் வரும் தன் அன்னையின் தோற்றம் செதுக்கி வைத்த சிற்பமாய் உள்ளத்தில் தோன்றி மறைந்தது.
ஆனால் இன்று ஒரு நோயாளியாகப் படுத்த படுக்கையாய் கருவளையம், இளைத்து கருத்தத் தேகம் என அவரை பார்க்கையில் அழுகை பீரிட்டு அடிவயிற்றிலிருந்து மேலெழும்பியது.
ஊனாகி உயிராகி தன்னுள் கலந்த தன் தாய் மருந்தின் தாக்கத்தால் பெரும்பாலும் உறக்கமும் மயக்கமுமாய் கழித்தார். தாயை இக்கோலத்தில் காணச் சக்தியற்று கையறு நிலைக்குத் தள்ளப்பட்டாள் வர்ஷா.
சுந்தரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் வர்ஷாவும் மோகனும் பார்த்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் இங்குத் தொடர்ந்து இருந்ததால் தொழிலில் சரிவு ஏற்பட்டது.
அப்போது சுந்தரியின் தங்கை கமலா “நான் இருக்கேன் வர்ஷா. நீங்க ரெண்டு பேரும் பிசினசை பாருங்க. அதுவும் முக்கியம் இல்லையா?” எனத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார். தினமும் சுந்தரியின் சிகிச்சை மற்றும் அவரின் செயல்பாடுகள் பற்றி வாட்சப்பில் அனுப்பினார்.
கமலாவும் மருத்துவர். வர்ஷா தன் தாயைக் காண அவ்வப்பொழுது வருவாள். மோகன் தொடக்கத்தில் சுந்தரி உடன் இருந்தார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவரிடம் மாற்றம் ஏற்பட்டது.
கல்பனா உடன் சந்திப்பு நிகழ்ந்த பின்னர் சுந்தரியைக் காண வருவது அரிதிலும் அரிதானது.
ஒரு நாள் மோகன் சுந்தரியை மருத்துவமனையில் கண்டு கண்கலங்கினார்.
“ அழாதீங்க எனக்கு சரியாகிடும்” எனக் கணவனின் கண்ணீரைக் காண முடியாமல் சுந்தரி ஈனஸ்வரத்தில் பதறினார். அது உண்மையான கண்ணீர் என நினைத்துவிட்டார் பாவம்.
“சுந்தரி வீடு வீடாவே இல்ல” எனச் சொல்லி மௌனமானார்.
“வர்ஷா வீட்டை பார்த்துப்பா .. நான் சொல்றேன்” சுந்தரி சொல்லவும்
“சுந்தரி நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும் …” என மிடறு விழுங்கினார்.
“சொல்லுங்க என்கிட்ட என்ன தயக்கம் ..” கணவனின் கையை ஆதரவாக பிடித்தாள்.
“நான் நடிகை கல்பனாவைக் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என மோகன் தயக்கமாகச் சொல்லி .. சுந்தரியை நேருக்கு நேர் சந்திக்க இயலாமல் தடுமாறினார்.
சட்டெனக் கையை விடுவித்தார் சுந்தரி மனம் இறுகிப் போனது. ஓரிரு நொடிகள் அமைதி பின்பு “எங்க கையெழுத்து போடணும்?” என்று மிடுக்குடன் கேட்டார்.
உடனே சில தாள்களை அவசரமாகக் காண்பித்தார் மோகன். அவற்றைப் படித்த சுந்தரி “உங்க சொத்துல நான் சொல்வதை எல்லாம் வர்ஷா பேரில் மாத்திடுங்க. அந்த பத்திரத்தை நான் பார்க்கணும். அடுத்த செகண்ட் இதுல கையெழுத்து போடறேன்” என இயந்திர கதியில் சொத்து விவரங்களைச் சொன்னார்.
“இதைப் பத்தி ..” மோகன் தயங்க
“வர்ஷாகிட்ட சொல்ல மாட்டேன்”
மறுநாளே வர்ஷா பெயரில் சுந்தரி குறிப்பிட்ட பல கோடி சொத்துகளை சட்டப்படி எழுதி வைக்கும் வேலையைத் தொடங்கினார். மோகன் இரண்டு நாட்கள் கழித்து சொத்து பத்திரத்தைச் சுந்தரியிடம் காண்பித்தார். சுந்தரியும் தனக்கு மோகன் வேறொரு திருமணம் செய்வதில் ஆட்சேபம் இல்லை எனக் கையெழுத்திட்டார்.
இது வர்ஷாவிற்குத் தெரிந்தால் அன்றே பூகம்பம் வெடித்திருக்கும். அதனால் சுந்தரி மறைத்தார். தன் கணவன் இனி தனக்கு இல்லை. அதுவுமில்லாமல் பிச்சை கேட்டு அன்பைப் பெறுவதில் சுந்தரிக்கு விருப்பமில்லை. அவனை உரிமை கொண்டாட வேறொருத்தி வந்துவிட்டாள் என நினைக்க நினைக்க கொதித்தது. இவ்வளவுதானா காதல் என்றிருந்தது.
விவாகரத்து செய்தால் கண்டிப்பாக அது தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவுமில்லாமல் வர்ஷா தன் அப்பாவுடன் இருந்தால் அவளுக்குப் பாதுகாப்பு எனப் பலவாறு எண்ணி விவாகரத்து எண்ணத்தை கைவிட்டார்.
இது ஒரு வகையில் தனக்குக் கிடைக்கும் தண்டனை. தான் செய்த செயல்கள் அப்படிப்பட்டவை ஆயிற்றே எனக் கண்ணீரைக் கூட துடைக்க மனமில்லாமல் இருந்தார். வர்ஷாவிடம் தன் மனத்தாங்கலைச் சொல்லவில்லை.
மோகன் வர்ஷாவிடம் தன் திருமணத்தைப் பற்றிச் சொன்னதும் அவள் தன் அன்னையிடம் கேட்க வந்தாள். ஆனால் அடுத்த பத்து நாட்கள் சுந்தரியின் உடல்நிலை ஏற்ற இரக்கத்துடன் இருந்தது. அதனால் இதைக் கேட்டு அன்னையை நோகடிக்க வேண்டாம் என வர்ஷா விட்டுவிட்டாள்.
கதவைத் திறந்து சுந்தரி படுத்திருந்த அறைக்குள் பிரவேசித்தாள் வர்ஷா. தந்தையின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்தது என்று எப்படிச் சொல்வது என சிந்தித்தபடி வந்தவளுக்கு அன்னையின் உறக்கம் இன்றும் உதவியது.
நிம்மதியாகச் சுந்தரி உறங்கிக் கொண்டிருந்தார். வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி வர்ஷா வெளியேறினாள். சுந்தரியைக் கண்டு பேசும் சக்தி ஏனோ அவளுக்கு இல்லை.
வர்ஷா காரின் பின்னே அமர்ந்திருக்க அருகில் சிந்து முன்னே பைரவி வண்டியை ஓட்டினாள். சென்னையின் வாகன நெரிசலுக்குக் காரை நிதானமாக ஓட்ட வேண்டியிருந்தது. ஏதோ மாப்பிள்ளை அழைப்பிற்கு வண்டியோட்டுவது போலப் பைரவி காரை செலுத்தினாள்.
வர்ஷா மனம் அலைபாய்ந்தபடி இருந்தது. தன் அப்பாவை தொட்டே அவை இருந்தன.
தன் அப்பா மோகனின் திருமணம் முடிந்தது. கல்பனாவும் அவள் தம்பியும் அனைத்திலும் தங்கள் உரிமையை நிலைநாட்ட வெகுவாக பாடுபடுவது நன்றாகவே புரிந்தது.
இன்னும் பத்து நாட்களுக்கு மோகன் அலுவலகம் சென்று அன்றாட வேலைகளைக் கவனிக்க மாட்டார். அதற்கென தனியே ஆட்களை நியமித்திருந்தார். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதற்கு மோகன் விதிவிலக்கா என்ன?
இனி கல்பனாவின் தம்பி அவர்களோடுதான் வசிக்கப் போகிறான் என்பதை நினைக்கவே கசப்பாக இருந்தது. அவர்களுடன் சேர்ந்து தானும் அங்கு வசிப்பது முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதிலும் அன்று நடந்த நிகழ்வில் உள்ளம் ரணமாகிப் போனது.
ஒரு முக்கியமான பிசினஸ் தொடர்பான தகவலை அப்பாவிடம் சொல்ல அவர் அறையை நோக்கிச் சென்றாள். அப்போது கல்பனா எதிர்ப்படச் சிறுப் புன்னகையுடன் கடந்து போனாள் வர்ஷா.
“எங்க போற வர்ஷா?”
“அப்பாவ பாக்க”
“எதுக்கு?”
“முக்கியமான டென்டர் விஷயத்தைச் சொல்ல”
”அப்பா ரெஸ்ட் எடுக்கரார்”
“இந்த நேரத்துலயா?” சந்தேகமாக வர்ஷா வினவ
“என்ன வர்ஷா இப்பதான் புதுசா கல்யாணம் ஆகி இருக்கு .. இதுகூட உனக்குப் புரியலையா?” என பதினாறு வயது பெண்ணை போல நாணி கோணி கல்பனா அலம்பல் செய்தாள்.
”இது பல கோடிக்கான டென்டர் ரொம்பவே முக்கியமானது .. ப்ளீஸ் கொஞ்சம் அப்பாவ கூப்பிடுங்க”
“அதுக்கென்ன என் தம்பி ராகேஷ் இருக்கானே அவன்கிட்ட சொல்லு அவனுக்கும் எல்லாம் தெரியணும்ல. இனி அவன் தான எல்லாம்” எனக் கடைசி சில வார்த்தைகளில் கல்பனா அழுத்தம் கொடுத்தாள்.
தன் கோபத்தை வெளிக் காட்டாமல் “இல்ல பரவாயில்ல” என வர்ஷா செல்லத் திரும்பினாள். தன் அப்பாவை காண இவளிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை புகைச்சலை ஏற்படுத்தியது.
அது கல்பனாவிற்கு ஏமாற்றம் ஆனது. தன் தம்பியிடம் பேச இவளுக்கு விருப்பம் இல்லையா எனச் சீற்றம் எழ
அப்போது “கல்பனா என்ன விஷயம்?” என மோகன் அங்கே வந்தார் கண்களைச் சரிசெய்து கண்ணாடி அணிந்தார்.
“அப்பா எம். எஸ். ரியல் எஸ்டேட் சேர்ந்த டென்டர் விஷயமா …” என வர்ஷா தொடங்குகையில்
“வர்ஷா இந்த கம்பெனி இப்ப ராகேஷ் பேருக்கு மாத்திட்டேன். இனி இதெல்லாம் அவன் பார்த்துப்பான்” என்றார்.
வர்ஷா உறைந்து போனாள். இந்த கம்பெனி தன் தந்தைக்கு ராசியானது மற்றும் மனதிற்கு மிகவும் நெருக்கம் அதனால் அனைத்தையும் விட அதில் அதிக கவனம் செலுத்துவார். அப்படி இருக்க அதை ஒன்றுமே தெரியாத ராகேஷ் பெயரில் மாற்றியது வியப்பை அளித்தது.
“ராகேஷ்” என மோகன் அழைக்கவும் மிகவும் பவ்யமாக இருப்பதைப் போன்ற பாவனையுடன் வந்து நின்று “சொல்லுங்க மாமா”என்றான்.
”உன் கம்பெனி டென்டர் நீயே பார்த்துக்க .. ” என்றவர் வர்ஷாவை பார்க்க .. அவள் மௌனமாக பையிலை அவனிடம் நீட்டினாள்.
”வர்ஷா இன்னிக்கு ராத்திரி நாங்க ஹனிமூனுக்கு சிவிஸ் கிளம்புறோம். நாளைக்கு இந்த கம்பெனி போர்ட் மீட்டிங் இருக்கு நீ ராகேசுக்கு உதவியா போகணும்.” என மோகன் தொடங்கி
“சாரி டாட் எனக்கு வேலை இருக்கு. நான் எனக்கான ப்ராக்சி முன்னமே அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்” என்றாள்.
மோகன் “திஸ் இஸ் நாட் பேர் வர்ஷா. ராகேஷ்க்கு எதுவும் தெரியது.” என ராகேசுக்காக வரிந்துப் பேச
“டென்டர் கோட் பண்ணத் தெரியும் போது இதுவும் தெரியணும் .. சாரி டாட் .. ஹப்பி ஜேர்னி” எனத் தோளைக் குலுக்கி நகர்ந்துவிட்டாள்.
“உங்க பொண்ணுக்கு என்னையும் என் தம்பியையும் பிடிக்கல்ல” என கிசுகிசுப்பான குரலில் அழுது வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கல்பனா.
“ஆமா எனக்கு உன்னை பிடிக்கலை”என வர்ஷாவிற்குக் கத்த வேண்டும் போல் இருந்தது.
தன் புது மனைவி கண்ணீரைச் சகிக்க இயலாமல் “அப்படியெல்லாம் இல்ல டியர். நான் அவளுக்குப் புரிய வைக்கிறேன். நீ கவலைப்படாத” என மோகன் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அத்தனையும் காதில் துல்லியமாகக் கேட்டது.
தன் அப்பாவை எண்ணி கோபமாக வந்தது. இனி இவர்களுடன் தான் வசிக்க கூடாது என வர்ஷா முடிவெடுத்தாள். உடனே அதை செய்தால் கண்டிப்பாகச் சந்தேகம் எழும். ஆதலால் நிதானமாகச் செயலில் இறங்க வேண்டும் என தன் திட்டத்தை வகுத்தாள்.
இந்த நிகழ்விற்கு வடிகாலாக …
“நாம மூணு பேரும் எங்கேயாவது ஒரு டிரிப் போகலாமா … ஐ நீட் எ பிரேக்” என வர்ஷா கூற
“வாவ் .. கிரேட்” எனக் காரை செலுத்திய பைரவி தன் விருப்பத்தைச் சொல்லிவிட
“எங்க போகணும் சொல்லு ஏற்பாடு செய்திடறேன்” கருமமே கண்ணாக சிந்து பதில்
நக்கலாக “கைலாச போகலாம் .. யாருக்குமே தெரியாது” என்றாள் பைரவி
சிரித்த வர்ஷா “ நம்மோட இன்னொருத்தர் வரப் போறார்” என்றாள் தனக்குள்.
இந்த பயணம் அவர்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைக்கப் போவதை மூவரும் அந்த நான்காம் நபரும் அறியவில்லை பாவம்.
துளிகள் தெறிக்கும் …