• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அகானா - 29

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 29

“நித்தி நீ என்ன செஞ்சாலும் மாப்பிள்ளையை மனசுல வச்சிக்கிட்டு பண்ணுடி.. நாளைக்கு அவருக்கு எந்த பிரச்சினையும் வந்துடக்கூடாது பாரு..” என நித்யாவின் அம்மா கூற,

“ம்மா.. அப்படியெல்லாம் வர வாய்ப்பில்ல. அம்மு அப்படி வரவும் விடமாட்டா.. நீங்க இதெல்லாம் யோசிக்காதீங்க..” என்றபடியே சாம்பாரில் உப்பை போட,

“எனக்கு என்ன சொல்லேன்னே தெரிலடி.. ஒரு பக்கம் அந்த பொண்ணு செய்றது சரின்னு தோணுது. இன்னொரு பக்கம் மாப்பிள்ளையை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாவும் இருக்குடி..” என்றார் நித்யாவின் அம்மா.

“ம்ம.. நான்தான் சொல்றேன்ல அம்மு எல்லாம் யோசிச்சுத்தான் செய்றா.? அதோட உங்களுக்கு ஓக்கேவான்னு கேட்டு, நான் சரின்னு சொன்ன பிறகுதான் செய்றா.. நீ அவளை நம்ம ஹரினி மாதிரி நினைம்மா.. அப்போதான் அவ செய்றது உனக்கு தப்பா தோணாது..” என்றார் நித்யா.

“ம்ம் என்னமோ நீ சொல்ற.. எதுக்கும் கவனமாவே இருடி..” என்றவருக்கு, ஏனோ அகானா செய்யப்போகும் இந்த செயலில் அவருக்கு விருப்பமே இல்லை. ஆனாலும் மகள் சரியென்று சொன்ன பிறகும், அந்த சரஸ்வதிக்கும், மைதிலிக்கும் நல்ல பாடம் கற்பிக்க ஒரு வழி கிடைக்கப் போகும் நிம்மதியிலும் அமைதியாகி விட்டார்.

“ம்மா.. மஞ்சரி அக்கா மூணார் போயிட்டாங்களாம். இன்னைக்கு நைட் அம்முவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, நானும் பசங்களும் அங்க இருந்துட்டு நாளைக்கு வரோம். நாளைக்கு பசங்களுக்கு லீவ்தான..” எனவும்,

“நித்தி அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாம எதையும் செய்யாதடி. அது பாட்டுக்கு கத்த போகுது.. எதுக்கும் அந்த பொண்ணுக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ. அப்புறம் இதெல்லாம் தெரிஞ்சா உன் மாமியாரு, அந்த மைதிலி, அப்புறம் முக்கியமா உன் நாத்தானாரு எல்லாம் உன்கூட சண்டைக்கு வரப்போறாங்க.. தேவையில்லாத பிரச்சினைல மாட்டிக்காத..” என்றவருக்கு நிஜமாகவே பயமாகத்தான் இருந்தது.

எந்த வயதானாலும், திருமணம் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் மகள் வாழ்க்கையில் பிரச்சினை வரப் போகிறது என்றால் பெற்றவர்கள் பதட்டப்படத்தானே செய்வார்கள். அதேதான் நித்யாவின் அம்மாவிற்கும்.

“ம்மா.. அவங்களைப் பத்தி பேச வேண்டாம். இந்த பிரச்சினை நடந்து இன்னையோட மூனு நாளாச்சு. அங்க இருந்து யாராவது வந்து பார்த்தாங்களா? இதுக்காகவே இவங்களை சும்மா விடக்கூடாது..” என்ற நித்யா ரசத்தை தாளித்து இறக்கினார்.

“ம்மா.. இந்த சிக்கன்ல கொஞ்சம் பெப்பர் பொடி போட்டு, மல்லித்தழை தூவி மூடிருங்க. நான் குளிச்சிட்டு வந்துடுறேன்..” என்ற நேரம் வீட்டுக்குள் ரஞ்சனியும், ஆகனும் வந்தனர்
.
வந்தவர்களை யோசனையாக பார்த்தபடியே “வாங்க..” என நித்யா கூற, அவளின் அம்மாவோ தண்ணீர் கொடுத்தார்.

“அத்தை எப்படி இருக்கீங்க..? நீங்க இப்போ ஓக்கேதான..” என ஆகன் கேட்க,

“எனக்கென்ன கண்ணா.. நல்லாத்தான் இருக்கேன்..” என சலிப்பாக கூற, அவர் கோபம் வந்தவர்களுக்கு புரியாமல் இல்லை.

“அது நித்யா மகியை காணோம்ன்ற பயத்துலயே நான் இருந்ததால, இதை என்னால யோசிக்கவே முடிலம்மா. நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத..” என்றதும்,

“அண்ணி.. இதெல்லாம் நீங்க சொல்லனுமா? சொல்லப்போனா நானே உங்ககூட இருந்துருக்கனும். ஆனா இந்த பிரச்சினையில என்னால அங்க இருக்க முடியல. அதனாலத்தான் வந்துட்டேன். நீங்க என்னை தப்பா நினச்சுக்காதீங்க..” என நித்யாவும் பதில் கூற,

“நித்யா எனக்கு தெரியும்மா.. அதனாலத்தான் நான் இதைப்பத்தி பேசவே இல்ல. அங்க வீட்டுலயும் அம்மாவுக்கும் அண்ணிக்கும் ஏதோ வாக்குவாதம் போல. அம்மா கோபமா பேசிட்டாங்களாம். அண்ணி போன் செஞ்சு சொல்லி ரொம்ப கவலைப்பட்டாங்க. நீயும் அவங்களை தப்பாதான் நினைச்சிட்டு இருக்கன்னு சொன்னாங்க. நான்தான் அப்படியெல்லாம் நித்யா இருக்கமாட்டான்னு சொல்லி சமாதானம் செஞ்சேன். அவங்களுக்கு ரொம்ப பயம் நித்யா.. எங்க அந்த ஓடுகாளிங்க ரெண்டும் மறுபடியும் அண்ணன்கிட்ட வந்துடுவாங்களோன்னு, அந்த பயத்துலதான் இதெல்லாம் பண்றாங்க. மைதிலி அண்ணி பேசுனதையும் மனசுல வச்சுக்காத. அவங்களைப் பத்தி உனக்குத் தெரியும்ல..” என முடிக்கும் முன்னே,

“ம்மா நீங்க இப்போ எதுக்கு இங்க வந்தீங்க. மைதிலி அத்தைக்காக பேச வந்தீங்களா? இல்ல நித்யா அத்தையை விசாரிக்க வந்தீங்களா.? இப்போ எதுக்கு மஞ்சரி அத்தையைப்பத்தி பேசுறீங்க?” என ஆகன் எரிச்சலாக கேட்க,

“ம்ச் கண்ணா.. எதுக்கு இவ்ளோ கோபம். அதுவும் அம்மாக்கிட்ட, எனக்கு அண்ணியோட சூழல் தெரியும். அதனாலத்தான் நான் எதுவும் பேசவே இல்ல. அதோட அவங்களுக்கு மைதிலி அக்கா எவ்ளோ முக்கியம்னு எனக்குத்தான் தெரியுமே..” என நக்கலாக நிறுத்த,

“என்ன நித்யா நக்கலா பேசுற? இன்னைக்கு இந்த குடும்பம் இந்தளவுக்கு வளர்ந்து நிற்க காரணம் மைதிலி அண்ணிதான். அவங்க பணத்தாலதான். அதை மறந்துட சொல்றியா?” என ரஞ்சனியும் கேட்க,

“ம்மா என்ன பேசுறீங்க.?” என ஆகன் அதட்ட,

“என்னம்மா பேசுறீங்க.? அப்போ உங்க வீட்டுக்காரரும் உங்க அண்ணி பணத்துல தான் பொழைக்கிறார்னு சொல்றீங்களா? இல்ல என் மாப்பிள்ளைதான் அந்த பணத்துல பொழைக்கிறார்னு சொல்றீங்களா?” என நித்யாவின் அம்மாவும் கோபமாக கேட்க,

“இல்ல.. அது அப்படி சொல்ல வரல..” என ரஞ்சனி வார்த்தையை விட்டு விட்டோம் என புரிந்து திணற,

“ம்மா அவங்க சொன்னது சரிதான். ரவி மாமாவோட காசுலதான அந்த பார்மசி நடக்குது. அப்போ அது அவங்க பணம்தானே. என்னதான் நாம அதுல பணம் கொட்டி கொட்டி போட்டாலும், ஆரம்பம் அவங்கதுதானே. அதை மனசுல வச்சி சொல்றாங்க அண்ணி..” என நிதானமாக பேச,

“நான்தான் அதை ஆரம்பிக்கும் போதே சொன்னேன்லடி, என் நகை அப்படியே இருக்கு, உன் நகையில பாதி எடுத்துக்கோ. ரெண்டையும் வச்சு செய். அவங்க பணம் வேண்டாம்னு சொன்னேன்ல.. இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்திருக்காங்க பாரு..” என நித்யாவின் அம்மா மகளை சாட,

“அம்மா இதுக்குத்தான் நீங்க வந்தீங்களா? நீங்க கிளம்புங்க.. நாம போகலாம்.” என்று ரஞ்சனியை அதட்டிய ஆகன், “சாரி த்த.. எவ்ளோ பட்டாலும் இவங்க திருந்தமாட்டாங்க..” என வருத்தமாக பேசியவன் தாயிடம் “ம்மா மைதிலி அத்தைக்கு எவ்ளோ வேனும்னாலும் கூஜா தூக்கலாம், தப்பில்ல. ஆனா ஒவ்வொரு முறையும் அவங்க பணம்னு சொல்லும் போது அப்பாவை மனசுல வச்சு சொல்லுங்க. நீங்க பேசினது அப்பாவுக்கு தெரிஞ்சா அவர் என்ன செய்வாருன்னு யோசிச்சுக்கோங்க..” என்றவன் “இதுதான் நீங்க மஞ்சரி அத்தையைப் பத்தி பேசுறது கடைசியா இருக்கனும்..” என இறுக்கமாக கூறி வெளியில் நடக்க,

“கண்ணா இரு சாப்பிட்டு போகலாம். எல்லாம் ரெடியா இருக்கு, நம்மா வீட்டுக்கு வந்துட்டு நீ இப்படி போகவே கூடாது..” என நித்யா ஆகனை அதட்ட,

“ம்ச் விடுங்க அத்த.. இவங்களுக்கு இன்னும் என்னதான் வேணுமோ தெரில..” என்றவன் “நிஜமாவே இப்போ சாப்பிடுற மூட் இல்லத்த.. இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிடுவேன்..” என கிளம்ப, ரஞ்சனியும் மகன் பேச்சில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் உர்ரென்றே கிளம்பினார்.

ரஞ்சனியை முறைத்துக்கொண்டெ நின்றிருந்த நித்யாவின் அம்மா “நீ சொல்லும் போது எனக்கு கூட கொஞ்சம் வருத்தமா இருந்ததுடி.. ஆனா இப்போ சுத்தமா இல்ல. அந்த பொண்ணு என்ன சொல்லுதோ அதை செய். இவங்களுக்காக எதுக்கு நாம பார்க்கனும்.. மஞ்சரி பொண்ணு இவங்க பக்கம் திரும்பி கூஅ பார்க்காது.. ஆனா இவங்க பயத்தை பாரு.. இந்த பயம் இதுங்க கட்டைல போற வரை விடாது. இந்த பயத்தோடவே காலத்தைக் கழிக்கட்டும். அதுதான் மஞ்சரியோட கஷ்டத்துக்கான பலன்..” என்ற நித்யாவின் அம்மா புலம்பியபடியே கிச்சன் செல்ல, நித்யாவிற்கு ஆகனை நினைத்துதான் கவலை.

இவர்களால் பாதிக்கப் படப் போவது பிள்ளைகள் தானே.

காரில் ஏறியதும் “நான் என்ன சொல்லிம்மா கூப்பிட்டு வந்தேன்.. நீங்க என்ன செஞ்சிட்டு வந்துருக்கீங்க. இதெல்லாம் வினோ மாமாவுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க. ஏன் அதெல்லாம் யோசிக்கமாட்டேங்குறீங்க..” என எரிச்சலாக பேச,

“டேய்.. என்ன விட்டா பேசிட்டே இருக்க. நான் பேசினதுல தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல. நான் இப்படித்தான். அது வினோத்துக்கே தெரியும்.. சும்மா எனக்கு அட்வைஸ் பண்னாம கிளம்பு..” என மகனிடம் காய்ந்த ரஞ்சனியை எரிச்சலாக பார்த்தான் ஆகன்.

அப்போது சங்கரிடமிருந்து அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி வர, குழப்பமும் பதட்டமும் வந்துவிட்டது.

செய்தியை மீண்டும் வாசித்தவன், அவர் சொன்ன நேரத்திற்காக எல்லாம் காத்திருக்க முடியவில்லை. அதோடு இது மகிழினி சம்மந்தப்பட்டது என்றும் யோசிக்கவில்லை. தொழில் எதிரிகள் யாராவது இருப்பார்களோ? அவரை சந்திக்கத்தான் போயிருக்கிறாரோ என்றுதான் நினைத்தான். அதனால் “ம்மா.. நான் பெரியகுளம் வரை போறேன்.. நீங்க கால்டாக்சில போறீங்களா?” என்றதும்,

“ஹான்.. என்னை போற வழில இறக்கிவிட்டுட்டு போ.. நான் டேக்ஸி புக் பண்ணிக்கிறேன்..” என்றார் மகனின் பதட்டத்தில் வேறு பேசாமல்..

“சரி..” என்றவன் சட்டென தன் ஹாஸ்பிடலில் இருக்கும் ட்ரைவருக்கு அழைத்து “முருகா கார் எடுத்துட்டு புதுர் பிரிவுக்கு வந்துடுங்க.. அம்மா வெய்ட் பண்றாங்க.. வீட்டுல விட்டுடுங்க..” என்றுவிட்டு, “ம்மா முருகன் கூட போயிடுங்க..” என அவன் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டு பெரியகுளம் நோக்கி பறந்தான் ஆகன்.

அதே நேரம் வினோத்தும் ஆகனுக்கு அழைத்து செய்தி வந்ததை கூற, “மாமா நான் அங்கதான் போய்ட்டு இருக்கேன்.. நீங்களும் வந்துடுங்க. வரும் போது முடிஞ்சா ஒரு மீடியா ஆளை கூப்பிட்டு வாங்க..” எனவும்,

“ஏன் கண்ணா.. பிரச்சினையை நாமளே பெருசு பண்ண வேண்டாம்..” என வினோத் கூற,

“இல்ல மாமா.. இது அப்பாவை மிரட்டத்தான் வர வச்சிருக்காங்க. என்னதான் நாம பிரச்சினையை முடிச்சாலும், மீடியா இருந்தா கொஞ்சம் பயப்படுவானுங்க.. அதுக்காகத்தான் சொல்றேன்..” என்றதும், வினோத்தும் தனக்கு தெரிந்த ஒரு மீடியா ஆளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

இங்கு “ஆரி..” என்றவள், “உங்க சீனியரும் வரார் போல.. கூடவே மீடியாவும்..” என சிரிக்க

“வாட் என அதிர்ந்தவன் “மகி அவங்க அப்பாக்கிட்ட மட்டும்தானே சொன்னா..?” என யோசனையானவன், அடுத்து என்ன நடந்திருக்கும் என யூகித்து “ப்ச்.. இப்ப என்ன செய்ய? நீ கிளம்பு.. நீ இங்க இருந்தா ப்ரெஸ்க்கு நியூஸ் போனா வேற மாதிரி ஆகிடும்..” என படபடக்க..

“ம்ச்.. அதெல்லாம் பார்த்துக்கலாம்.. இப்போ நீ என்ன செய்ய போற? உன்னை ஃபோகஸ் பண்ணுவாங்க..” என சாவகாசமாக கேட்க,

“நானா நான் என்ன செய்ய..?” என சிரித்தவன், “இவங்க வீட்டளுங்க எல்லாம் வரதை பார்த்து அவளே ஏதாவது செய்வான்னு தோணுது..” என மேலும் சிரிக்க, அகானாவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“ஓக்கே.. நான் கிளம்பறேன்.. நீ மேனேஜ் பண்ணிக்கோ.. உன் சீனியர்தான் உன்னை என்ன செய்வானோ தெரியல..” என சிரிக்க,

“அவர் என்ன செய்ய போறார்.. ஆனா மகி செய்வா.. தரமா செய்வா? அந்த நம்பிக்கை இருக்கு..” என்றதும்,

“டேய்… அந்த குடும்பத்தை அப்படியே நம்பாத.. நம்ப வச்சு ஏமாத்துறது அவங்களுக்கு கை வந்த கலை..” என்ற அகானாவின் முகம் நொடியில் இறுகிப் போனது..

“ம்ச்.. விடு.. விடு.. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீ கிளம்பு..” என அகானாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டு மகியின் அறைக்குள் நுழைந்தான் ஆரியன்.