• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 31

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மொழி:
இருள் பாணி
அறத்துப்பால்
துறவறவியல்

வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென். (௩௱௧ - 301)


தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன? (௩௱௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன? (௩௱௧)
—மு. வரதராசன்

எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன? (௩௱௧)
—சாலமன் பாப்பையா

தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? (௩௱௧)
—மு. கருணாநிதி

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. (௩௱௨ - 302)


செல்லாத இடத்தில் சினம் கொள்வதனால் தீமை வரும் (௩௱௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை. (௩௱௨)
—மு. வரதராசன்

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை. (௩௱௨)
—சாலமன் பாப்பையா

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை (௩௱௨)
—மு. கருணாநிதி

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். (௩௱௩ - 303)


எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும் (௩௱௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும். (௩௱௩)
—மு. வரதராசன்

தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக. (௩௱௩)
—சாலமன் பாப்பையா

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும் (௩௱௩)
—மு. கருணாநிதி

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (௩௱௪ - 304)


முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ? (௩௱௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ? (௩௱௪)
—மு. வரதராசன்

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ? (௩௱௪)
—சாலமன் பாப்பையா

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும் (௩௱௪)
—மு. கருணாநிதி

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். (௩௱௫ - 305)


ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்று விடும் (௩௱௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும். (௩௱௫)
—மு. வரதராசன்

தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும். (௩௱௫)
—சாலமன் பாப்பையா

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும் (௩௱௫)
—மு. கருணாநிதி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (௩௱௬ - 306)


சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, ‘தன் இனத்தார்’ என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும் (௩௱௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். (௩௱௬)
—மு. வரதராசன்

சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும். (௩௱௬)
—சாலமன் பாப்பையா

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும் (௩௱௬)
—மு. கருணாநிதி

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (௩௱௭ - 307)


சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல் உறுதியாகும் (௩௱௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும். (௩௱௭)
—மு. வரதராசன்

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது. (௩௱௭)
—சாலமன் பாப்பையா

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும் (௩௱௭)
—மு. கருணாநிதி

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (௩௱௮ - 308)


பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன் பால் வெகுளாமையே நன்று (௩௱௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது. (௩௱௮)
—மு. வரதராசன்

பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது. (௩௱௮)
—சாலமன் பாப்பையா

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது (௩௱௮)
—மு. கருணாநிதி

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (௩௱௯ - 309)


ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும் (௩௱௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான். (௩௱௯)
—மு. வரதராசன்

உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான். (௩௱௯)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும் (௩௱௯)
—மு. கருணாநிதி

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (௩௱௰ - 310)


அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர் (௩௱௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். (௩௱௰)
—மு. வரதராசன்

பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே. (௩௱௰)
—சாலமன் பாப்பையா

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார் (௩௱௰)
—மு. கருணாநிதி.