• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 45

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
முகப்பு பொருட்பால்
அரசியல்

பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (௪௱௪௰௧ - 441)


அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். (௪௱௪௰௧)
—மு. வரதராசன்

அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக. (௪௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் (௪௱௪௰௧)
—மு. கருணாநிதி

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். (௪௱௪௰௨ - 442)


நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டில் துன்பம் வராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும். (௪௱௪௰௨)
—மு. வரதராசன்

வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக. (௪௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் (௪௱௪௰௨)
—மு. கருணாநிதி

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (௪௱௪௰௩ - 443)


பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும் (௪௱௪௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். (௪௱௪௰௩)
—மு. வரதராசன்

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது. (௪௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் (௪௱௪௰௩)
—மு. கருணாநிதி

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் த (௪௱௪௰௪ - 444)


தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்து வருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும் (௪௱௪௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். (௪௱௪௰௪)
—மு. வரதராசன்

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும். (௪௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும் (௪௱௪௰௪)
—மு. கருணாநிதி

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (௪௱௪௰௫ - 445)


தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும். (௪௱௪௰௫)
—மு. வரதராசன்

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க. (௪௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும் (௪௱௪௰௫)
—மு. கருணாநிதி

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். (௪௱௪௰௬ - 446)


தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை (௪௱௪௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை. (௪௱௪௰௬)
—மு. வரதராசன்

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது. (௪௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது (௪௱௪௰௬)
—மு. கருணாநிதி

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். (௪௱௪௰௭ - 447)


இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்? (௪௱௪௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர். (௪௱௪௰௭)
—மு. வரதராசன்

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்? (௪௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? (௪௱௪௰௭)
—மு. கருணாநிதி

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (௪௱௪௰௮ - 448)


இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான் (௪௱௪௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். (௪௱௪௰௮)
—மு. வரதராசன்

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும். (௪௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும் (௪௱௪௰௮)
—மு. கருணாநிதி

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. (௪௱௪௰௯ - 449)


முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை (௪௱௪௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. (௪௱௪௰௯)
—மு. வரதராசன்

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை. (௪௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும் (௪௱௪௰௯)
—மு. கருணாநிதி

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். (௪௱௫௰ - 450)


பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும் (௪௱௫௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். (௪௱௫௰)
—மு. வரதராசன்

துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும். (௪௱௫௰)
—சாலமன் பாப்பையா

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும் (௪௱௫௰)
—மு. கருணாநிதி.