• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 56

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல் கொடுங்கோன்மை

கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேண்டும். (௫௱௫௧ - 551)


குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான் (௫௱௫௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன். (௫௱௫௧)
-மு. வரதராசன்

குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது. (௫௱௫௧)
—சாலமன் பாப்பையா

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் (௫௱௫௰௧)
-மு. கருணாநிதி

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (௫௦௫ - 552)


அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், 'எல்லாவற்றையும் தந்துவிடு' என்று கேட்பதைப் போன்றதாகும் (௫௱௫௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆட்சிக்குறிய கொலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. (௫௱௫௨)
-மு. வரதராசன்

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். (௫௱௫௨)
—சாலமன் பாப்பையா

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது (௫௱௫௨)
-மு. கருணாநிதி

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். (௫௱௫௩ - 553)


நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான் (௫௱௫௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான். (௫௱௫௰௩)
-மு. வரதராசன்

நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியையும் இழப்பான். (௫௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும் (௫௱௫௰௩)
-மு. கருணாநிதி

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கொடிச்
சூழாது செய்யும் அரசு. (௫௱௫௪ - 554)


மேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான் (௫௱௫௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி எதையும் ஆராயாமல் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான். (௫௱௫௪)
-மு. வரதராசன்

மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான். (௫௱௫௪)
—சாலமன் பாப்பையா

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும் (௫௱௫௪)
-மு. கருணாநிதி

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்ன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. (௫௫௫ - 555)


கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் (௫௱௫௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. (௫௱௫௫)
-மு. வரதராசன்

தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். (௫௱௫௫)
—சாலமன் பாப்பையா

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும் (௫௱௫௰௫)
-மு. கருணாநிதி

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொல்லி. (௫௱௫௬ - 556)


செங்கோன்மையால் தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது (௫௱௫௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும். (௫௱௫௬)
-மு. வரதராசன்

ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது. (௫௱௫௬)
—சாலமன் பாப்பையா

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும் (௫௱௫௰௬)
-மு. கருணாநிதி

துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. (௫௱௫௭ - 557)


மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும் (௫௱௫௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.(௫௱௫௰௭)
-மு. வரதராசன்

மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள். (௫௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள் (௫௱௫௰௭)
-மு. கருணாநிதி

இன்மையின் இந்த உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். (௫௱௫௮ - 558)


முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும் (௫௱௫௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத நிலையை வறுமைவிடச் செல்வநிலை துன்பமானதாகும். (௫௱௫௰௮)
-மு. வரதராசன்

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம். (௫௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது (௫௱௫௰௮)
-மு. கருணாநிதி

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (௫௫௫ - 559)


ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும் (௫௱௫௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும். (௫௱௫௰௯)
-மு. வரதராசன்

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும். (௫௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெற இயலாது (௫௱௫௰௯)
-மு. கருணாநிதி

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (௫௬௦ - 560)


காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளம் குன்றும்; அறு தொழிலோரும் மறைநூல்களை மறப்பார்கள் (௫௱௬௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர். (௫௱௬௰)
-மு. வரதராசன்

காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர். (௫௱௬௰)
—சாலமன் பாப்பையா

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும் (௫௱௬௰)
-மு. கருணாநிதி.