• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 60

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல்

ஊக்கம் உடைமை

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. (௫௱௯௧ - 591)


ஊக்கம் உடைமையே 'உடையவர்' என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர் (௫௱௯௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ. (௫௱௯௧)
-மு. வரதராசன்

ஊக்கம் உடையவரே அனைத்தையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே? (௫௱௯௧)
—சாலமன் பாப்பையா

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார் (௫௱௯௰௧)
-மு. கருணாநிதி

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். (௫௦௯௨ - 592)


ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும் (௫௱௯௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவருக்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும். (௫௦௯௨)
-மு. வரதராசன்

மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும். (௫௦௯௨)
—சாலமன் பாப்பையா

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது (௫௱௯௨)
-மு. கருணாநிதி

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். (௫௱௩ - 593)


உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள் (௫௱௯௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார். (௫௱௯௩)
-மு. வரதராசன்

ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார். (௫௱௯௩)
—சாலமன் பாப்பையா

ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள் (௫௱௯௰௩)
-மு. கருணாநிதி

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடைய நுழை. (௫௦௪ - 594)


தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும் (௫௱௯௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும். (௫௱௯௪)
-மு. வரதராசன்

தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும். (௫௱௯௪)
—சாலமன் பாப்பையா

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும் (௫௱௯௰௪)
-மு. கருணாநிதி

வெள்ளத் தனய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனயது உயர்வு. (௫௱௯௫ - 595)


நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும் (௫௱௯௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு. (௫௱௯௫)
-மு. வரதராசன்

நீர்ப்பூக்களின் அடிக்கம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே. (௫௱௯௫)
—சாலமன் பாப்பையா

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவு இருக்கும் அதுபோல மனிதனின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும் (௫௱௯௰௫)
-மு. கருணாநிதி

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (௫௱௯௬ - 596)


உயர்ந்த நிலைகளையே நினைவில் வைத்து எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது (௫௱௯௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. (௫௱௯௬)
-மு. வரதராசன்

நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும். (௫௱௯௬)
—சாலமன் பாப்பையா

நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது (௫௱௯௰௬)
-மு. கருணாநிதி

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. (௫௱௯௭ - 597)


தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள் (௫௱௯௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார். (௫௱௯௭)
-மு. வரதராசன்

தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்காமல் தம் பெருமையை நிலைநிறுத்துவர். (௫௱௯௭)
—சாலமன் பாப்பையா

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள் (௫௱௯௰௭)
-மு. கருணாநிதி

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. (௫௱௯௮ - 598)


'யாம் வல்லன்மை உடையோம்' என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள் (௫௱௯௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்று தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடார். (௫௱௯௮)
-மு. வரதராசன்

ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார். (௫௱௯௮)
—சாலமன் பாப்பையா

அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை (௫௱௯௰௮)
-மு. கருணாநிதி

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (௫௱௯௯ - 599)


பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும் (௫௱௯௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும். (௫௱௯௯)
-மு. வரதராசன்

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும். (௫௱௯௯)
—சாலமன் பாப்பையா

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான் (௫௱௯௰௯)
-மு. கருணாநிதி

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. (௬௱ - 600)


ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே! அந்த ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே! (௬௱)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு. (௬௱)
-மு. வரதராசன்

ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே. (௬௱)
—சாலமன் பாப்பையா

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை (௬௱)
-மு. கருணாநிதி.