• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 61

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல் மடியின்மை

மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். (௬௦௧ - 601)

ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்து போய்விடும் (௬௱௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும். (௬௱௧)
-மு. வரதராசன்

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும். (௬௱௧)
—சாலமன் பாப்பையா

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும் (௬௱௧)
-மு. கருணாநிதி

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். (௬௦௨ - 602)


தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புபவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும் (௬௱௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும். (௬௦௨)
-மு. வரதராசன்

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க. (௬௦௨)
—சாலமன் பாப்பையா

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (௬௱௨)
-மு. கருணாநிதி

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தது
குடிமடியும் தன்னினும் முந்து. (௬௦௩ - 603)


விலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும் (௬௱௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும். (௬௱௩)
-மு. வரதராசன்

விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும். (௬௱௩)
—சாலமன் பாப்பையா

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய்விடும் (௬௱௩)
-மு. கருணாநிதி

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. (௬௦௪ - 604)


சோம்பலிலே ஆழ்ந்துவிட்டுச் சிறந்த முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும் (௬௱௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும். (௬௦௪)
-மு. வரதராசன்

சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும். (௬௦௪)
—சாலமன் பாப்பையா

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும் (௬௱௪)
-மு. கருணாநிதி

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (௬௦௫ - 605)


சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம் (௬௱௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். (௬௱௫)
-மு. வரதராசன்

காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படாகும். (௬௱௫)
—சாலமன் பாப்பையா

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்! (௬௱௫)
-மு. கருணாநிதி

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. (௬௦௬ - 606)


நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்த ஒரு சிறந்த பயனையும் அடைவதில்லை (௬௱௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது. (௬௱௬)
-மு. வரதராசன்

நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது. (௬௱௬)
—சாலமன் பாப்பையா

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும் (௬௱௬)
-மு. கருணாநிதி

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். (௬௦௭ - 607)


சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுபவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள் (௬௱௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர். (௬௱௭)
-மு. வரதராசன்

சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பார். (௬௱௭)
—சாலமன் பாப்பையா

முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள் (௬௱௭)
-மு. கருணாநிதி

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். (௬௱௮ - 608)


நல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும் (௬௱௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும். (௬௱௮)
-மு. வரதராசன்

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும். (௬௱௮)
—சாலமன் பாப்பையா

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும் (௬௱௮)
-மு. கருணாநிதி

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். (௬௦௯ - 609)


ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும் (௬௱௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும். (௬௱௯)
-மு. வரதராசன்

ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும். (௬௱௯)
—சாலமன் பாப்பையா

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும் (௬௱௯)
-மு. கருணாநிதி

மடியில மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (௬௱௰ - 610)


சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான் (௬௱௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு அனைத்தையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். (௬௱௰)
-மு. வரதராசன்

தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும். (௬௱௰)
—சாலமன் பாப்பையா

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும் (௬௱௰)
-மு. கருணாநிதி.