• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 64

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்

அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. (௬௱௩௰௧ - 631)


ஒரு செயலைச் செய்ய வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். (௬௱௩௰௧)
-மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருட்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி அமைச்சர் எண்ணுபவரே. (௬௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன் (௬௱௩௰௧)
-மு. கருணாநிதி

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. (௬௦௩௨ - 632)


மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலன்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன் (௬௱௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன். (௬௱௩௰௨)
-மு. வரதராசன்

செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர். (௬௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும் (௬௱௩௰௨)
-மு. கருணாநிதி

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. (௬௱௩௰௩ - 633)


பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போனவரை முயன்று மீண்டும் சேர்த்தாலும் வல்லவனே, அமைச்சன் (௬௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் வல்லவன் அமைச்சன். (௬௱௩௰௩)
-மு. வரதராசன்

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர். (௬௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும் (௬௱௩௰௩)
-மு. கருணாநிதி

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. (௬௱௩௰௪ - 634)


எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்கான வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன். (௬௱௩௰௪)
-மு. வரதராசன்

ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர். (௬௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குச் சிறப்பாகச் செயல்படும் (௬௱௩௰௪)
-மு. கருணாநிதி

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. (௬௱௩௰௫ - 635)


நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய், இருப்பவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான். (௬௱௩௰௫)
-மு. வரதராசன்

அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார். (௬௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும் (௬௱௩௰௫)
-மு. கருணாநிதி

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. (௬௱௩௰௬ - 636)


இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களுக்கு எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும் (௬௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன. (௬௱௩௰௬)
-மு. வரதராசன்

இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் எவை நிற்கமுடியும்? (௬௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது (௬௱௩௰௬)
-மு. கருணாநிதி

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். (௬௱௩௰௭ - 637)


செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்தால் போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும் (௬௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் செய்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும். (௬௱௩௰௭)
-மு. வரதராசன்

பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்த, தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு பற்றி அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க. (௬௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும் (௬௱௩௰௭)
-மு. கருணாநிதி

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். (௬௱௩௰௮ - 638)


அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும் (௬௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும். (௬௱௩௰௮)
-மு. வரதராசன்

அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும். (௬௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவு இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும் (௬௱௩௰௮)
-மு. கருணாநிதி

பழுதெண்ணும் மந்திரியின் பக்கதுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். (௬௱௩௰௯ - 639)


அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசனைப் பொறுத்துக் கொள்ளலாம் (௬௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுவது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும். (௬௱௩௰௯)
-மு. வரதராசன்

தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம். (௬௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும் (௬௱௩௰௯)
-மு. கருணாநிதி

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். (௬௦௪௰ - 640)


முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள் (௬௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(செயல்களைச் செய்யும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளைச் செய்வர். (௬௱௪௰)
-மு. வரதராசன்

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார். (௬௱௪௰)
—சாலமன் பாப்பையா

முறைப்படித் திட்டமிடப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாக முடங்கித்தான் கிடக்கும் (௬௱௪௰)
-மு. கருணாநிதி.