• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 66

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அமைச்சியல் வினைத்தூய்மை

வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். (௬௫௫௧ - 651)


துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே தரும்; செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பிய எல்லாவற்றையுமே தரும் (௬௱௫௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய அனைத்தையும் கொடுக்கும். (௬௱௫௧)
-மு. வரதராசன்

நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய அனைத்தையும் தரும். (௬௱௫௧)
—சாலமன் பாப்பையா

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும் (௬௱௫௰௧)
-மு. கருணாநிதி

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (௬௦௫௨ - 652)


புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக் காலத்திலும், ஒருவன் செய்யாமல் நீக்கி விட வேண்டும் (௬௱௫௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும். (௬௱௫௨)
-மு. வரதராசன்

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும். (௬௱௫௨)
—சாலமன் பாப்பையா

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் (௬௱௫௰௨)
-மு. கருணாநிதி

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆதும் என்னு மவர். (௬௱௫௰௩ - 653)


மேலே உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும் (௬௱௫௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும். (௬௱௫௰௩)
-மு. வரதராசன்

உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். (௬௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும் (௬௱௫௰௩)
-மு. கருணாநிதி

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (௬௦௫௪ - 654)


கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள் (௬௱௫௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அசைவற்ற ’தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார். (௬௱௫௪)
-மு. வரதராசன்

தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார். (௬௱௫௪)
—சாலமன் பாப்பையா

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள் (௬௱௫௰௪)
-மு. கருணாநிதி

ஏற்றென்று இரங்குவ செய்யச் செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (௬௦௫௫ - 655)


'என்ன செய்தோம்' என்று பின்னர் வருந்தக் கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது; செய்துவிட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமலிருப்பது நன்று (௬௱௫௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது. (௬௱௫௫)
-மு. வரதராசன்

என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது. (௬௱௫௫)
—சாலமன் பாப்பையா

`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செய்தி மீண்டும் தொடராதிருப்பதே நான்
-மு. கருணாநிதி

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (௬௱௫௬ - 656)


தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவர் செய்யவே கூடாது (௬௱௫௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது. (௬௱௫௰௬)
-மு. வரதராசன்

தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக. (௬௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது (௬௱௫௰௬)
-மு. கருணாநிதி

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (௬௱௫௰௭ - 657)


பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும் (௬௱௫௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது. (௬௱௫௰௭)
-மு. வரதராசன்

பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது. (௬௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாக வாழ்வதே மேலானதாகும் (௬௱௫௰௭)
-மு. கருணாநிதி

கடிந்த கடிந்தோரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (௬௱௫௰௮ - 658)


செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும் (௬௱௫௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும். (௬௱௫௰௮)
-மு. வரதராசன்

வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர், அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும். (௬௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும் (௬௱௫௰௮)
-மு. கருணாநிதி

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (௬௫௫௯ - 659)


பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்; நல்ல வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின்னர் பயன் தரும் (௬௱௫௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழந்தாலும் பிறகு பயன் தரும் (௬௱௫௰௯)
-மு. வரதராசன்

பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும். (௬௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும் (௬௱௫௰௯)
-மு. கருணாநிதி

சலத்தால் பொருள்செய்தே மாறுதல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. (௬௱௬௰ - 660)


தீய வழிகளாலே பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது, பசுமண் கலத்தினுள் நீரைப்பெய்து அதைக் கசியாமல் காப்பாற்றுவது போன்றதாகும் (௬௱௬௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது. (௬௱௬௰)
-மு. வரதராசன்

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போல. (௬௱௬௰)
—சாலமன் பாப்பையா

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான் (௬௱௬௰)
-மு. கருணாநிதி.