• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 69

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அமைச்சில் தூது

தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (௬௱௮௰௧ - 681)


தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள் (௬௱௮௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள். (௬௱௮௰௧)
-மு. வரதராசன்

நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பு கொண்டிருப்பவரே தூதர். (௬௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும் (௬௱௮௰௧)
-மு. கருணாநிதி

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. (௬௱௮௨ - 682)


தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும், தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள் (௬௱௮௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும். (௬௱௮௰௨)
-மு. வரதராசன்

அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்களுக்கு இன்றியமையாதன. (௬௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை (௬௱௮௰௨)
-மு. கருணாநிதி

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. (௬௱௮௰௩ - 683)


அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள் (௬௱௮௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும். (௬௱௮௰௩)
-மு. வரதராசன்

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும். (௬௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௩)
-மு. கருணாநிதி

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. (௬௱௮௪ - 684)


இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவர்ச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான் (௬௱௮௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம். (௬௱௮௰௪)
-மு. வரதராசன்

இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க. (௬௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௪)
-மு. கருணாநிதி

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. (௬௱௮௰௫ - 685)


விரிக்காமல் தொகுத்துச் சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுவைபடச் சொல்லியும், தன் நாட்டுக்கு நன்மை விளைவிப்பவனே தூதன் (௬௮௮௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன். (௬௱௮௰௫)
-மு. வரதராசன்

அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடித் தரவேண்டியது தூதரின் பண்பாகும். (௬௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும் (௬௱௮௰௫)
-மு. கருணாநிதி

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. (௬௱௮௰௬ - 686)


கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிவவனே தூதன் (௬௱௮௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன். (௬௱௮௰௬)
-மு. வரதராசன்

அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும். (௬௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்வவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான் (௬௱௮௰௬)
-மு. கருணாநிதி

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (௬௱௮௰௭ - 687)


தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற் கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன் (௬௱௮௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன். (௬௱௮௰௭)
-மு. வரதராசன்

தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன். (௬௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதை தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான் (௬௱௮௰௭)
-மு. கருணாநிதி

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. (௬௱௮௰௮ - 688)


நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு (௬௱௮௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணி உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருந்தாலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும். (௬௱௮௰௮)
-மு. வரதராசன்

பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு. (௬௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும் (௬௱௮௰௮)
-மு. கருணாநிதி

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன். (௬௱௮௰௯ - 689)


தன் அரசன் சொல்லியனுப்பியதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய் சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும் (௬௱௮௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன். (௬௱௮௰௯)
-மு. வரதராசன்

தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். (௬௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

அரசின் ஓர் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௯)
-மு. கருணாநிதி

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (௬௱௯௰ - 690)


தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவுபடாது; தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்து முடிப்பவனே தூதன் (௬௱௯௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன். (௬௱௯௰)
-மு. வரதராசன்

தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர். (௬௱௯௰)
—சாலமன் பாப்பையா

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான் (௬௱௯௰)
-மு. கருணாநிதி