• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 71

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அமைச்சில்

குறிப்பறிதல்

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கனி. (௭௦௧ - 701)


ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான் (௭௱௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான். (௭௱௧)
-மு. வரதராசன்

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்துகொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன். (௭௱௧)
—சாலமன் பாப்பையா

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான் (௭௱௧)
-மு. கருணாநிதி

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். (௭௦௨ - 702)


கொஞ்சமும் ஐயப்படாத வகையிலே, பிறர் உள்ளத்திலுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனைத் தெய்வத்தோடு சமமாகக் கொள்ள வேண்டும் (௭௱௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஐயப்படாமல் மனதில் உள்ளத்தை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும். (௭௱)
-மு. வரதராசன்

அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும். (௭௱)
—சாலமன் பாப்பையா

ஒருவன் மனத்தில் உள்ளத்தைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம் (௭௱௨)
-மு. கருணாநிதி

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். (௭௱௩ - 703)


ஒருவரது முகக்குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ள வேண்டும் (௭௱௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாகப் பெற வேண்டும். (௭௱௩)
-மு. வரதராசன்

தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். (௭௱௩)
—சாலமன் பாப்பையா

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும் (௭௱௩)
-மு. கருணாநிதி

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. (௭௦௪ - 704)


தாம் செய்வதற்குக் குறித்த ஒரு செயலைச் சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார் (௭௱௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார். (௭௱௪)
-மு. வரதராசன்

ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியும் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர். (௭௱௪)
—சாலமன் பாப்பையா

உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனதில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள் (௭௱௪)
-மு. கருணாநிதி

குறிப்பிற் குறிப்புணர வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். (௭௦௫ - 705)


ஒருவர் தம் கருத்தைக் குறிப்பால் காட்டிய போது, அதனை உணராமலிருந்தால், உடலுறுப்புக்களுள் கண் என்பது என்ன பயனைச் செய்வதாகுமோ? (௭௱௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும். (௭௱௫)
-மு. வரதராசன்

ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை? (௭௱௫)
—சாலமன் பாப்பையா

ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் போது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்? (௭௱௫)
-மு. கருணாநிதி

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். (௭௬ - 706)


தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப் போல, ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும் (௭௱௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும். (௭௱௬)
-மு. வரதராசன்

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும். (௭௱௬)
—சாலமன் பாப்பையா

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும் (௭௱௬)
-மு. கருணாநிதி

முகத்தின் முதுகுறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முன் துறும். (௭௱௭ - 707)


முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதை வெளியே காட்டிவிடும் (௭௱௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்றுப்புள்ளி அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ. (௭௱௭)
-மு. வரதராசன்

ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ? (௭௱௭)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை (௭௱௭)
-மு. கருணாநிதி

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். (௭௱௮ - 708)


முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்வவரைத் துணையாக அடைந்தால், அவர் எதிரே நின்றாலே போதும், எதுவுமே சொல்ல வேண்டாம் (௭௱௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவனுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும். (௭௱௮)
-மு. வரதராசன்

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றாள், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும். (௭௱௮)
—சாலமன் பாப்பையா

அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது (௭௱௮)
-மு. கருணாநிதி

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். (௭௱௯ - 709)


கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும், நட்பையும் அவரது கண்களே நமக்குச் சொல்லிவிடும் (௭௱௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும். (௭௱௯)
-மு. வரதராசன்

அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர், பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும். (௭௱௯)
—சாலமன் பாப்பையா

பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனதில் இருப்பது நட்பா, பகையா எனக் கூறிவிட (௭௱௯)
-மு. கருணாநிதி

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. (௭௱௰ - 710)


நுண்ணறிவு உடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப் பிறது கண் அல்லாமல் பிற உறுப்புகள் யாதும் இல்லை (௭௱௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாம் நுட்பமான அறிவுடையேம் என்ற பிறர் கருத்தை அறிவவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை. (௭௱௰)
-மு. வரதராசன்

நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை. (௭௱௰)
—சாலமன் பாப்பையா

நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளத்தை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை (௭௱௰)
-மு. கருணாநிதி