• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 77

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
படையியல்

படைமாட்சி

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. (௭௱௬௧ - 761)


நால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம் (௭௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லா உறுப்புகளும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாதாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். (௭௱௬௰௧)
-மு. வரதராசன்

தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும். (௭௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும் (௭௱௬௰௧)
-மு. கருணாநிதி

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. (௭௱௬௨ - 762)


போரில் நேரிட்ட அழிவுக்கு அஞ்சாமல் பகைவர் மேற் செல்லும் ஆண்மை, வழிவழிப் புகழோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வதாகும் (௭௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது. (௭௱௬௨)
-மு. வரதராசன்

தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்களுக்கு வருவது கடினம். (௭௱௬௨)
—சாலமன் பாப்பையா

போரில் சேதமுற்று வலிமை குன்றும்போதும், எந்த இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது (௭௱௬௨)
-மு. கருணாநிதி

ஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (௭௱௬௩ - 763)


பகைப்படைகள் எலிகளைப் போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம் (௭௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு விளைவிக்கும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும். (௭௱௬௰௩)
-மு. வரதராசன்

பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும். (௭௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள் (௭௱௬௰௩)
-மு. கருணாநிதி

அழிவின்றி அறைபோக தாகி வழிவந்த
வன்க ண்டுவே படை. (௭௱௬௪ - 764)


மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை (௭௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாதாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும். (௭௱௬௰௪)
-மு. வரதராசன்

போரில் தோற்கமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை. (௭௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும் (௭௱௬௰௪)
-மு. கருணாநிதி

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. (௭௱௬௫ - 765)


கூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும் (௭௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும். (௭௱௬௫)
-மு. வரதராசன்

எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை. (௭௱௬௫)
—சாலமன் பாப்பையா

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும் (௭௱௬௰௫)
-மு. கருணாநிதி

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. (௭௱௬௬ - 766)


மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும், படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும் (௭௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும், தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும். (௭௱௬௰௬)
-மு. வரதராசன்

வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும். (௭௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் (௭௱௬௰௬)
-மு. கருணாநிதி

தர்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. (௭௱௬௰௭ - 767)


மேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே, படை ஆகும் (௭௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும். (௭௱௬௰௭)
-மு. வரதராசன்

தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை. (௭௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும் (௭௱௬௰௭)
-மு. கருணாநிதி

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். (௭௱௬௮ - 768)


போரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒரு படை தனது அணிவகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்துவிடும் (௭௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும். (௭௱௬௰௮)
-மு. வரதராசன்

பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும். (௭௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும் (௭௱௬௰௮)
-மு. கருணாநிதி

சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும்
இல்லையின் வெல்லும் படை. (௭௱௬௯ - 769)


தேய்ந்து சிறுகுதலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்! (௭௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும். (௭௱௬௰௯)
-மு. வரதராசன்

எண்ணிக்கையில் சிறுமை, அரசின் மீது மனதை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும். (௭௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும் (௭௱௬௰௯)
-மு. கருணாநிதி

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். (௭௱௭௰ - 770)


நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும் (௭௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லை. (௭௱௭௰)
-மு. வரதராசன்

சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது. (௭௱௭௰)
—சாலமன் பாப்பையா

உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது (௭௱௭௰)
-மு. கருணாநிதி