• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 78

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
படையியல் படைச்செருக்கு

படைச்செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். (௭௱௭௧ - 771)


பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர் (௭௱௭௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர். (௭௱௭௧)
-மு. வரதராசன்

பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர். (௭௱௭௧)
—சாலமன் பாப்பையா

போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான் (௭௱௭௰௧)
-மு. கருணாநிதி

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (௭௱௭௨ - 772)


காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும் (௭௱௭௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. (௭௱௭௨)
-மு. வரதராசன்

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது. (௭௱௭௨)
—சாலமன் பாப்பையா

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது (௭௱௭௨)
-மு. கருணாநிதி

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. (௭௱௭௰௩ - 773)


'பேராண்மை' என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும் (௭௱௭௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்தால் பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர். (௭௱௭௰௩)
-மு. வரதராசன்

பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும். (௭௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும் (௭௱௭௰௩)
-மு. கருணாநிதி

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (௭௱௭௪ - 774)


தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்துவிட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்! (௭௱௭௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். (௭௱௭௪)
-மு. வரதராசன்

தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்து வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகின்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான். (௭௱௭௪)
—சாலமன் பாப்பையா

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் பொரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான் (௭௱௭௪)
-மு. கருணாநிதி

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. (௭௱௭௫ - 775)


பகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவுதரும் அல்லவோ! (௭௱௭௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ. (௭௱௭௫)
-மு. வரதராசன்

பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் ஏறிய வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்களுக்கு அதுவே புறங் கொடுத்தலாகும். (௭௱௭௫)
—சாலமன் பாப்பையா

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும் (௭௱௭௰௫)
-மு. கருணாநிதி

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. (௭௱௭௬ - 776)


கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான் (௭௱௭௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான். (௭௱௭௬)
-மு. வரதராசன்

ஒரு வீரன் தன் கடந்த நாட்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாளாகக் கருதுவான் (௭௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான் (௭௱௭௰௬)
-மு. கருணாநிதி

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (௭௱௭௭ - 777)


உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும் (௭௱௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும். (௭௱௭௰௭)
-மு. வரதராசன்

தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவருக்கு அழகே. (௭௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

சூழ்ந்து பரவும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றி கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும் (௭௱௭௰௭)
-மு. கருணாநிதி

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். (௭௱௭௮ - 778)


போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள் (௭௱௭௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர். (௭௱௭௰௮)
-மு. வரதராசன்

போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார். (௭௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர் (௭௱௭௰௮)
-மு. கருணாநிதி

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒருக்கிற் பவர். (௭௱௭௯ - 779)


தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடம் சாகிறவரை, எவர்தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்! (௭௱௭௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்த பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார். (௭௱௭௰௯)
-மு. வரதராசன்

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்? (௭௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது (௭௱௭௰௯)
-மு. கருணாநிதி

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரண்டுகோள் தக்கது உடைத்து. (௭௱௮௰ - 780)


தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும் (௭௱௮௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும். (௭௱௮௰)
-மு. வரதராசன்

வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது. (௭௱௮௰)
—சாலமன் பாப்பையா

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு (௭௱௮௰)
-மு. கருணாநிதி