• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 82

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்

தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. (௮௱௰௧ - 811)


நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது (௮௱௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. (௮௱௰௧)
-மு. வரதராசன்

உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது. (௮௱௰௧)
—சாலமன் பாப்பையா

நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது (௮௱௰௧)
-மு. கருணாநிதி

உறின்நட்டு அறியங்ருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என். (௮௦௰௨ - 812)


செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற, ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும், இழந்தாலும் ஒன்றுதான். (௮௱௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன். (௮௱௰௨)
-மு. வரதராசன்

தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தேன்? (௮௱௰௨)
—சாலமன் பாப்பையா

தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? (௮௱௰௨)
-மு. கருணாநிதி

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். (௮௱௰௩ - 813)


தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே! (௮௱௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர். (௮௱௰௩)
-மு. வரதராசன்

இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பு, தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் சமமானவர்களே. (௮௱௰௩)
—சாலமன் பாப்பையா

பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள் (௮௱௰௩)
-மு. கருணாநிதி

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. (௮௦௰௪ - 814)


போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப்போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது (௮௱௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது. (௮௱௰௪)
-மு. வரதராசன்

போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது. (௮௱௰௪)
—சாலமன் பாப்பையா

போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பி ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும் (௮௱௰௪)
-மு. கருணாநிதி

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. (௮௱௰௫ - 815)


நமக்குத் துன்பம் வரும் போது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலைவிட, அடையாததே நன்மையாகும் (௮௱௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும். (௮௱௰௫)
-மு. வரதராசன்

நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது. (௮௱௰௫)
—சாலமன் பாப்பையா

கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம் (௮௱௰௫)
-மு. கருணாநிதி

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். (௮௬ - 816)


பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும் (௮௱௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். (௮௱௰௬)
-மு. வரதராசன்

அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மை. (௮௱௰௬)
—சாலமன் பாப்பையா

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும் (௮௱௰௬)
-மு. கருணாநிதி

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். (௮௱௰௭ - 817)


வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே, பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும் (௮௱௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும். (௮௱௰௭)
-மு. வரதராசன்

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம். (௮௱௰௭)
—சாலமன் பாப்பையா

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கொடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும் (௮௱௰௭)
-மு. கருணாநிதி

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். (௮௱௰௮ - 818)


நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும் (௮௱௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முடியும் செயலையும் செய்ய முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். (௮௱௰௮)
-மு. வரதராசன்

தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுங்கள். (௮௱௰௮)
—சாலமன் பாப்பையா

நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும் (௮௱௰௮)
-மு. கருணாநிதி

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. (௮௱௰௯ - 819)


தம் செயல்கள் வேறாகவும், தம் பேச்சுக்கள் வேறாகவும் நடப்பவரின் தொடர்பானது, நனவில் மட்டுமே அல்லாமல், கனவிலும் கூடத் துன்பமானதாகும் (௮௱௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகவும். (௮௱௰௯)
-மு. வரதராசன்

சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும். (௮௱௰௯)
—சாலமன் பாப்பையா

சொல்லும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும் (௮௱௰௯)
-மு. கருணாநிதி

எனையும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. (௮௨௦ - 820)


வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழகிப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும், நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும் (௮௱௨௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழகி பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும். (௮௱௨)
-மு. வரதராசன்

நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா. (௮௱௨)
—சாலமன் பாப்பையா

தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழகிப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் (௮௱௨௰)
-மு. கருணாநிதி